10 – மீள்நுழை நெஞ்சே
துவாரகா அப்படி சொன்னதும் அவளின் மனதில் இருக்கும் வேதனையை நன்றாகப் புரிந்துக் கொள்ள முடிந்தது. இத்தனை வலிகளும் உள்ளுக்குள்ளே வைத்துக்கொண்டு வெளியே அவள் சகஜமாக இருக்க முடியாமல் தடுமாறும் காரணமும் புரிய ஆரம்பித்தது.
“இல்ல ராகா.. உன் விருப்பம்ன்னு சொல்ல சொன்னாரு..”, என அவளின் முகம் பார்த்தபடிக் கூறினார் அன்பரசி.
வன்சோகம் இழைந்த மென்னகை அவளிடம் இருந்து வெளிவந்தது. அவளுக்கு நன்றாகத் தெரியும்.. அங்கே நடக்கும் பிரச்சனைகளும், அங்கிருப்பவர்களின் எண்ணமும். அதில் சிறிது தனக்கு ஆசுவாசம் கொடுக்க எண்ணும் ஜீவன்கள் தனது பெற்றவர்கள் தான். ஆனால் அவர்களையும் சூழ்நிலைக் கைதியாக்கி அவர்களின் சொற்கள் கொண்டே தன்னை வதைக்கவும் செய்பவர்கள் அங்கே சுற்றிலும் உள்ளனர்.
“அம்மா பேசினாங்களா ஆண்ட்டி?”, என அடுத்த கேள்விக்குத் தாவியபடித் தனது மனதைச் சமன்படுத்த ஆரம்பித்தாள்.
“ம்ம்.. உன்மேல கோவமா தான் இருக்காங்க.. நீ சொல்லாம கெளம்பி வந்துட்டல்ல?”, என மெல்ல அவளுக்கு நோகக்கூடாது என்ற அக்கறையுடன் வார்த்தையைத் தேர்ந்தெடுத்துப் பேசினார்.
“அன்னிக்கி நான் இருந்த சூழ்நிலை அப்படி ஆண்ட்டி.. எனக்கு மறுபடியும் கல்யாணம் பண்ண விருப்பம் இல்ல.. அதான் சொல்லாம கெளம்பி வந்துட்டேன்..”, எனக் கூறிவிட்டு உள்ளே ஏற்படும் உள்ளக்கொதிப்பைக் கட்டுபடுத்த இன்னுமே முயன்றுக் கொண்டு தான் இருக்கிறாள்.
“என்னாச்சி ராகா? சொல்ல விருப்பம் இருந்தா சொல்லு.. மனசுக்குள்ள ரொம்ப திணிக்காத .. கொஞ்சம் பாரம் கொறையட்டும் ..”, அவள் தனது உள்ளத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கையாளச் சிரமப்படுவதுக் கண்டு அன்பரசி கேட்டார்.
துவாரகா கண்களை மூடி ஆழமாக மூச்சிழுத்துக் கொண்டுத் தனது வாழ்க்கைத் தொலைந்துப் போன நாட்களுக்கு பின்னோக்கிச் சென்றாள்.
நான்கு வருடங்களுக்கு முன் ..
அன்று..
துவாரகா வெளிநாட்டில் இருந்து வீட்டிற்கு வந்திறங்கினாள். வாசலில் நிற்க வைத்து அவளின் தாய் ஆரத்திச் சுற்றித் திருஷ்டிக் கழித்து உள்ளே அழைத்துச் சென்றார்.
“எப்படி டா ராகா இருக்க?”, என அருணாச்சலம் துவாரகாவை அணைத்தபடிக் கேட்டார்.
“நல்லா இருக்கேன் ப்பா.. நீங்க எப்படி இருக்கீங்க?”, என அவரது மடியில் படுத்துக் கொண்டாள்.
“வந்ததும் மடியில் படுத்தாச்சா?”, எனச் செல்லமாகத் திட்டியபடி அம்மா பவானியும் அவள் அருகில் அமர்ந்துக் கொண்டார்.
இரண்டு வருடங்கள் கழித்து இன்று தான் வீடு வந்துச் சேர்ந்திருக்கிறாள். கல்லூரியில் படிக்கும் பொழுதே வேலைக் கிடைத்துவிட்டது. அருணாச்சலம் மறுத்தும் அடம்பிடித்து அந்த வேலையில் சென்றுச் சேர்ந்தாள்.
அவளின் சுறுசுறுப்பும், சிரித்த முகமும், அனைவரையும் அவளுடன் நட்போடு பழக வைத்தது. அங்கே சேர்ந்த ஒரு வருடத்தில் வெளிநாடு செல்லும் வாய்ப்பும் கிடைக்க, திருமண பேச்சு எடுக்கும் பெற்றோரை மீறி தான் வெளிநாடு செல்ல கம்பெனியில் ஒப்புக் கொண்டாள்.
“வீட்ல இருக்க வேண்டிய சிறுக்கிய வேலைக்கு அனுப்பறதே தப்பு.. இதுல வெளிநாடு போய் கெட்டு சீரழிய போறாளா அவ?”, என அப்பத்தா கிழவி ஆரம்பித்தது.
“நீ இந்த ஊர தாண்டலங்கரத்துக்காக நானும் இங்கயே அடஞ்சி கெடக்கணுமா அப்பத்தா ? நான் வெளிநாடு போகத்தான் போறேன்.. நீ இங்கயே பாக்கு இடிச்சிக்கிட்டு இரு”, என வம்பு பேசிவிட்டுத் தாயிடம் சென்றாள்.
“பவானி..”
“எடு வெளக்குமாற .. என்னடி திமிரு பண்ணிட்டு இருக்கறதும் இல்லாம என் பேர சொல்லி கூப்பிடுற ?”, என அவள் கையில் வாழைப்பூவைக் கொடுத்தார்.
“இப்ப எதுக்கு நீ இவ்ளோ டென்ஷன் ஆகற பவானி.. சொல்லு உனக்கு அங்க இருந்து என்ன வாங்கிட்டு வரட்டும் ?”, என வாழைப்பூவில் இருந்து நரம்பை எடுத்தபடிக் கேட்டாள்.
“எனக்கு ஒண்ணும் வேணாம்.. நீ எங்கயும் போகவும் வேணாம் ..”, எனக் கூறினார்.
“இதுக்கு மேல நிறுத்த முடியாது பவானி.. என் வேலைய பாத்து இந்த வாய்ப்ப எனக்கு குடுத்து இருக்காங்க.. நீ தானே சொல்லுவ செய்யற வேலைல எப்பவும் கெட்டிக்காரத்தனமா இருக்கணும்ன்னு.. இன்னிக்கி நீயே இப்படி பேசினா என்ன அர்த்தம்? அப்பறம் எதுக்கு என்னைய படி படி-ன்னு அப்புடி அடிச்ச?”
“சின்னதுல படிக்கறத தவிர என்ன வேல உனக்கு?”
“அப்ப படிச்ச படிப்புக்கு தகுந்த வேலை பாக்க போறேன்னு சொன்னா விடணும்.. இன்னும் நான் கடல மிட்டாய்க்கு உங்கிட்டயே காசு வாங்கிட்டு இருக்க முடியுமா?”, எனச் சிரிப்புடன் கேட்டாள்.
“இன்னும் கடலமிட்டாய், நெல்லிக்கா, சீதாபழம்ன்னு சுத்து.. என்ன வயசு ஆகுது உனக்கு இப்ப ? படிச்சதும் கல்யாணம் பண்ணி இருந்தா ..” , என அவர் ஆரம்பித்ததும், “இந்நேரம் ஒரு கொழந்தை பொறந்து இருக்கும் அதானே? சும்மா ஏன்மா கல்யாணம் கொழந்தைன்னு அதயே சொல்ற ?”
“ஒரு பொட்ட புள்ளைக்கு அது தான்டி வாழ்க்கை..”
“அம்மா.. கல்யாணம் செஞ்சா மட்டும் தான் வாழ்க்கை-ன்னு இல்ல.. கல்யாணம் பண்ணாம எவ்வளவோ சாதிச்ச ஆளுங்களும் இருக்காங்க…”
“கல்யாணம் பண்ணிட்டு சாதிச்ச ஆளுங்களும் இருக்காங்க..”, எனக் கூறியபடி அவளின் அப்பா அங்கே வந்தார்.
“அப்பா.. இப்ப கெடச்சி இருக்க வாய்ப்ப நான் தவற விட விரும்பல.. ரெண்டு வருஷம் என் வாழ்க்கைய எனக்கு பிடிச்சமாறி வாழ ஆசைப்படுறேன்”, எனப் பிடிவாதமாகக் கூறினாள்.
“உன் இஷ்டம்னா என்னடி அது?”, என வெளியே இருந்து அப்பத்தா கிழவி கத்தியது.
“உன் இம்சை இல்லாம இருக்க போறேன் .. “, என அங்கே பதில் கூறிவிட்டு பெற்றவர்களிடம் திரும்பினாள், “அப்பா .. அம்மா.. எனக்கு இப்ப கல்யாணம் வேணாம் .. நான் சொந்த கால்ல நிக்க ஆசைப்படறேன்.. கல்யாணம் மட்டுமே ஒரு பொண்ணுக்கு வாழ்க்கையும் இல்ல.. இத நீங்க தான் சொல்லி வளத்தீங்க.. போய்ட்டு வரேன்.. சந்தோஷமா அனுப்பிவிடுங்க ..”, எனக் கூறிவிட்டு சமையலை அவளே செய்ய ஆரம்பித்தாள்.
அவளை வளர்த்தது அப்படித்தான். இன்று சமூகத்திற்கு பதில் சொல்லத் தயங்கி, அதே கல்யாணக் குளத்தில் தள்ளிவிட நினைக்கின்றனர் அவள் பெற்றோர். ஆணோ பெண்ணோ அனைத்து வேலைகளையும் செய்துப் பழக வேண்டும் என்பது அந்த வீட்டின் எழுதப்படாத கட்டளை. திருமணம் என்பது வாழ்வின் துணையாக இருக்க வேண்டுமே தவிர, அதை அடிமைத்தனமாகப் பார்க்கக்கூடாது என்றும் போதித்து இருந்தனர்.
அதை உருவாக்கியது அருணாச்சலமும், பவானியும் தான். அவர்கள் சிறுவயதில் கடந்தப் பாதைகள் அவர்களுக்கு ஒரு சில முற்போக்குச் சிந்தனைகளைக் கொடுத்திருந்தது. அதனை அவர்கள் அந்த இல்லத்திலும் செயல்படுத்தி இருந்தனர்.
சிறுவயது முதல் துறுதுறுப்பு அதிகமான துவாரகா நிறையவே தந்தையுடன் சுற்றியுள்ளாள். சில தலைமுறைகளுக்கு பின் பிறந்திருக்கும் பெண் குழந்தை என்பதால் அவளை அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
அவள் வீடு தங்காமல் சுற்றுவது அவளின் அப்பத்தாவிற்கு மட்டும் பிடிக்காது. தவிர தன் மகள் வயிற்று பிள்ளைகளை விட மகன் வயிற்று பிள்ளைகள் படிப்பிலும், அழகிலும், திறமையிலும் அதிகமாக இருப்பது இன்னுமே பிடிக்காமல் போனது.
இவளை தன் மகள் வயிற்றுப் பேரனுக்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் அந்த பேரன் வேண்டாத செயல்களை மட்டுமே முதலில் பயின்று வந்தான். படிப்பும் வரவில்லை, ஒழுக்கமும் போதவில்லை.
இப்படியாக இருப்பவனுக்கு தனது மகளைக் கொடுக்க மகன் ஒப்புக்கொள்ளமாட்டான் என்று இவளை மட்டம் தட்டிப் பேச ஆரம்பித்தார். இவள் வயதிற்கு வந்ததும் அந்த பேரனுக்கு மட்டுமே இவள் என்ற எண்ணத்தை விதைக்க நினைத்தார்.
“உன் அத்த மகனுக்கு தான் உன்ன கட்டி வைக்க போறோம்.. அவனுக்கு தகுந்தமாறி நீ நடந்தா போதும் டி.. இனிமே படிக்காத..”, என ஒரு நாள் அந்த கிழவி கூறியதும், துவாரகா நேராக தந்தையிடம் சென்று அப்படியே ஒப்பிக்க அவர் தனது தாயை நன்றாக அன்று கவனித்துவிட்டார்.
“ஊர்மேயர பயலுக்கு என் பொண்ண என்னிக்கும் கட்டி குடுக்க மாட்டேன்.. தேவ இல்லாத பேச்ச பேசிக்கிட்டு இருந்தா நடக்கறதே வேற பாத்துக்க.. நீ வாடி ராசாத்தி உனக்கு மெத்த படிச்சவன தான் கட்டி வைப்பேன்.. நீயும் மெத்த படிக்கணும்.. அப்பத்தா சொல்றத எல்லாம் காதுல வாங்காத ..”, எனப் பேசியபடி மகளை அழைத்துக் கொண்டுச் சென்றார்.
அன்றில் இருந்து அவளின் மேல் அவருக்கு இருந்த வெறுப்புத் தடையில்லாமல் வெளிவர தொடங்கியது. அவள் எது செய்தாலும் குற்றம், என்ன பேசினாலும் தவறு என்று பேச ஆரம்பித்தார். ஏனோ அவருக்கு அவளும் தன் வயிற்று வழி வந்த ரத்தம் என்பது தான் நினைவே இல்லாமல் போய்விட்டது.
பல முறை உடைந்து அமர்ந்து அழும் பிள்ளையை பவானி தான் யாரும் குற்றம் கூற முடியாதபடிச் செயல்படு என்று ஊக்கம் கொடுப்பார். பேச்சில் நிதானமும், பரந்த யோசனையும் கற்றுக்கொடுக்க தந்தை இருந்தார். இருவரின் வளர்பில் அவளும் நன்றாக தன் திறமைகளுக்குத் தீனிப் போட்டுக்கொண்டு, தன்னை உயர்த்திக்கொள்ளத் தேவையானத் தகுதிகளை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தாள்.
இப்படியாக வளர்த்த பிள்ளை இன்று உயர்ந்து வந்து தான் நிற்கிறது. ஆனால் இவர்களை முழுதாக சந்தோஷப்பட விடாமல் சில விஷயங்கள் தடுத்தது.
“என்னங்க பண்றது?”, என பவானி கணவரைக் கேட்டார்.
“எனக்கு என்பொண்ணு வெளிநாடு போய் வேலை பாக்கறது சந்தோஷம் தான் பவானி.. அவ போகட்டும்.. வாழ்க்கைய அவளும் தனியா வாழ்ந்து கத்துக்கட்டும்.. “, எனக் கூறி மனைவியின் முகம் பார்த்தார்.
“எனக்கும் சந்தோஷம் தாங்க.. ஆனா அத்தைய நெனைச்சா தான்..”, என இழுத்தார்.
“அவ என்ன பண்ணாலும் அவங்களுக்கு அது தப்பு தான்.. விடு பவானி.. நம்ம பொண்ணு என்ன ஆசை படறாளோ அத பண்ணட்டும்..”, எனக் கூறிவிட்டு வெளியே வந்தார்.
“அவ ஆசை மட்டும் படல அண்ணி.. அதுக்காக உழைச்சி இருக்கா.. அவ உழைப்ப நம்ம வீணாக்க வேணாம்.. நான் மாப்ள வீட்டுல பேசிக்கறேன்.. புள்ளைய ஊருக்கு சந்தோஷமா அனுப்பி வைப்போம்.. “, என மனோகரன் கூறினார்.
“ஆமாக்கா.. நம்ம சுத்து வட்டாரத்துல மொத வெளிநாடு போய் வேல பாக்க போறது நம்ம பொண்ணு தான்.. இத வச்சி இன்னும் நெறைய பொம்பள புள்ளைங்க படிச்சி நல்ல வேலைக்கு போகும்.. இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சி கல்யாணத்த பண்ணிடலாம்.. பையனுக்கும் இவளுக்கும் ஒரு வருஷம் தானே வித்தியாசம்.. அவனுக்கும் இப்ப அவசரம் ஒண்ணும் இல்ல..”, மாதவி தன் பங்கிற்கு பவானியை சமாதானம் செய்தார்.
“அத்தை அவள கரிச்சி கொட்டுறத தான் என்னால தாங்க முடியல மாதவி.. வாழவேண்டிய புள்ளைய என்ன என்ன பேச்சு பேசறாங்க .. எனக்கு மனசே அறுக்குது பல சமயம்..” , எனத் தன் மனக்கவலையைக் கூறினார்.
“ஏண்ணே.. கம்முன்னு அம்மாவ கொஞ்ச நாள் அக்கா வீட்டுக்கு அனுப்பி வச்சிடலாமா ?”, என மனோகரன் கேட்டார்.
“உங்கம்மா போயிட்டாலும் .. இங்க மதியம் சாப்டுட்டு அங்க போறாங்க.. ராத்திரி ஒம்பது மணிக்கு வந்தாலும் இங்க தான் சாப்பிடறாங்க .. அவங்க எங்க அங்க போய் தங்க போறாங்க ?”, என மாதவி நொடித்துக் கொண்டார்.
“சரி சரி.. புள்ள கெளம்ப நீங்க போய் ஒத்தாச பண்ணுங்க “, என அருணாச்சலம் அவர்களை அவ்விடம் விட்டு அனுப்பினார்.
“ம்மக்கும் .. உங்க அம்மாவ சொன்னா ஒடனே வந்துடுமே “, என பவானியும் கழுத்தை வெட்டிக்கொண்டு உள்ளே சென்றார்.
“என்ன அம்மாங்களா .. உங்க வட்டமேஜை மாநாடு முடிஞ்சதா ?”, எனக் கேட்டபடிச் செய்து முடித்தப் பதார்த்தங்களைக் கொண்டு வந்து சாப்பாட்டு மேஜையில் வைத்தாள்.
“எல்லாம் முடிஞ்சது மகளே.. நீ சமையல் முடிச்சிட்ட போல ?”, எனச் சாப்பாட்டு மேஜையில் இருந்து வரும் வாசனையை முகர்ந்தபடிக் கேட்டார் மாதவி.
“அதுலாம் பக்காவா முடிஞ்சது. இனிமே ரெண்டு பேரும் என் பாக்கிங் பக்காவா பண்ணுங்க..”, எனக் கூறிவிட்டு கனிமொழிக்கு வாழைப்பூ பொரியல் எடுத்துக்கொண்டு சென்றாள்.
“சீக்கிரம் வா டி.. அங்கயே உக்காந்துக்காத ..”, என பவானி குரல் கொடுக்கும் முன் கனிமொழி வீடு இருக்கும் தெருவிற்குள் ஓடி விட்டாள்.