வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..
எல்லாரும் எப்படி இருக்கீங்க ? நம்ம எழுத்தாளர்கள் கூட பயணம் இன்னிக்கி மறுபடியும் போலாம் ..
இவங்கள பத்தி சொல்லணும்னா இவங்க நம்ம நண்பன் படத்துல வர்ற விருமாண்டி சந்தனம் மாதிரி .. எதுக்குமே டைம் வேஸ்ட் பண்ணாமா கதை எழுதறது ஒண்ணு தான் 23 மணி நேரமும் பண்றாங்க ..
ஒரே நேரத்துல 3 கதை , அதுக்கும் தினம் 2 அத்தியாயம் எல்லா கதைக்கும் போடுவாங்க .. நான் அவங்க வேகம் பார்த்து என்னமா இப்படி பண்றீங்களே மா ன்னு அலறி இருக்கேன் .. நான் வாரத்துக்கே 3 அத்தியாயம் போடறது பெருசு , இவங்க 3 கதைக்கும் தினம் அத்தியாயம் போடுவாங்க ..
ரொம்ப குறைஞ்ச நேரத்துல நிறைய கதைகள் எழுதி இருக்காங்க .. ஸ்வரஸ்யமான கதை போக்கும் , எதிர் பாராத திருப்பங்களும் னு இவங்க கதைகள் ல விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது ..
யாருன்னு தெரிஞ்சதா ? வாங்க உள்ள போய் பாக்கலாம் ..
எழுத்துப்பயணத்தில் நம்முடன் இன்று….
1. புனைபெயர் – ரம்யா சந்திரன்
(வீட்டுக்காரர் பெயர் சிவசந்திரன். அதுல இருக்குற சந்திரனை சேர்த்துக்கிட்டேன் )
2. இயற்பெயர் – ரம்யா.
3. படிப்பு – பி.ஏ ஹிஸ்ட்ரி டிஸ்கன்டினியூ.
4. தொழில் –
டைலரிங். தோணுறப்ப கவிதை, கதைன்னு கிறுக்குவேன்.
5. பிடித்த வழக்கங்கள் –
படிக்க ரொம்ப பிடிக்கும். பாடல் கேட்கவும் பிடிக்கும். ரொம்ப மன அழுத்தமா இருந்தா வரைய பிடிக்கும்.
6. கனவு –
இப்போதைக்கு என் எழுத்தில் உருவான குழந்தைகளை புத்தகமா கையில வாங்குறது தான்.
7. உங்களுக்கு ஏற்பட்ட எழுத்தின் மீதான தாக்கம் என்ன?
நான் ஸ்கூல் படிக்கும் போதே கவிதைகள் எழுதுவேன். நெறைய நோட் இருக்கு. என்னோட உணர்வுகளை, அது சந்தோஷமா இருக்கட்டும் சோகமா இருக்கட்டும் நோட்ல எழுதி வைப்பேன். அதனால கூட நான் எழுத ஆரம்பிச்சுருக்கலாம்.
8. உங்களின் வாசிப்பு அனுபவம் பற்றி –
பள்ளி காலத்துல என் பொழுதுபோக்கு நாவல்கள் படிக்கிறது தான். எப்பவுமே நூலகமே கதின்னு கெடப்பேன். கல்லூரியிலையும் அப்படி தான். இப்பவும் அப்படி தான்.
9. உங்களை எழுத தூண்டியது எது?
நாம எழுத நெனச்சாலும் தூண்டுதல் இல்லன்னா அதை தொடர முடியாது.
நானும் எழுத ஆரம்பிச்சு தடுமாறும் போது ஷாலினி தங்கபாண்டியனுங்குற ஒரு பொண்ணு ஊக்கப்படுத்துனாங்க. அவங்களோட வார்த்தைகள் தான் நான் தொடர்ந்து எழுத ஊக்கமாக இருந்துச்சு. நன்றி மா.
10. எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்?
மார்ச் 11,2019
11. உங்களது எழுத்தை படித்தவரிடம் அதன் தாக்கத்தை உணர்ந்தது உண்டா?
அவர்களது உணர்வுப்பூர்வமான வார்த்தைகள் வாயிலாக உணர்ந்திருக்கிறேன்.
12 . எழுத்தால் எதையும் மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா ?
நிச்சயமாக. அனைவரும் எழுத்துக்களின் வரிவடிவை உணர்ந்து படித்து, அதன் உடனே பயணிக்கையில் நிச்சியமாக அவ்வெழுத்துக்களின் தாக்கம் எதாவது ஒரு மாற்றத்தை , அதை படிப்பவர்களின் மனதில் விதைக்கும்.
13 . மின்னூல் , பதிப்பு புத்தகம் . இவற்றினைப் பற்றி உங்கள் கருத்து என்ன ?
மின்னூல் இப்போது அந்த எழுத்தாளர்களே பதிப்பித்துக் கொள்ள முடியும்.ஆனால் புத்தகம் என்பது சற்று சிரமம் தான். அனைத்தும் ஆன்லைன் மயமாக மாறி வருகையில் நாவல்களும் மின்நூலாக கிடைக்கின்றன. ஆனால் அது ஒரு புத்தகத்தை கையில் எடுத்து படிக்கும் உணர்வை தராது என்பதே உண்மை. புத்தகம் என்பது பக்கங்கள் மட்டும் இல்லை, அவற்றை தொட்டு, புரட்டி படிப்பது திகட்டாத தேனைப்போன்றது. புத்தகம் வாயிலாக படிக்கையில் சுவாரஷ்யம் குறைவதில்லை.
14. நீங்கள் பதிபித்த பதிப்பு புத்தகங்கள் எத்தனை ? (அவற்றை பெற தொடர்பு கொள்ள ) –
இரண்டு புத்தகங்கள் அஜு தெய்வானை பதிப்பகத்தின் வாயிலாக வெளியாகியுள்ளன.
1.உள்ளம் கொள்ளை போன தருணம்
2.கானல் நீராய் மறைந்திடும் தாரகையே
அஜூ தெய்வானை பதிப்பகம்.
இந்த போன் நம்பருக்கு கால் பண்ணி ஆர்டர் பண்ணிக்கலாம்.
( +91 9080515206 )
15. ஆடியோ புத்தகங்கள் மீதான உங்கள் பார்வை என்ன ?
படிக்க முடியாதவர்களுக்கான உருவாக்கம். சில பேருக்கு படிக்கிறதை விட கேட்குறதுக்கு பிடிக்கும். சில நேரம் நானுமே பாட்டு கேட்டுக்கிட்டே சமையல் செய்வேன். அது போல சிலருக்கு கதைகள் படிக்கிறதை விட கேட்குறது பிடிக்கலாம் இல்லையா?
16 . எழுத்தாளரின் வெற்றி என்பது எதன் அடிப்படையில் இருக்கிறது ?
ஒரு எழுத்தாளரின் வெற்றி என்பது வாசகர்களின் கருத்தும், நமது கதைக்கருவின் மையப்புள்ளியும் ஒன்றிணைய வேண்டும். நாம சொல்ல நெனச்சதை தெளிவா சொல்லணும். அதே போல நாம சொன்னதை வாசகர்கள் தெளிவாக புரிஞ்சிக்கணும். அவங்களுக்கு கொண்டு சேர்க்க விரும்பியதை கொண்டு சேர்க்குறதே ஒரு வெற்றி தானே. அதுக்கப்புறம் வரும் பாராட்டும். பரிசுகளும் போனஸ் தான்.
17 . உங்கள் படைப்பில் எதையாவது எழுதி இருக்க வேண்டாம் என்று எண்ணியதுண்டா ?
இதுவரை அப்படி இல்லை.
18 . உங்களின் படைப்புகளில் எது உங்களுக்கான அங்கீகாரத்தை பெற்று கொடுத்ததாக நினைக்கிறீர்கள் ?
எனது இரண்டாவது நாவல் மறுமணம் பற்றியது.
“வரமாய் வந்த வான்முகிலே“
இப்பவும் இந்த நாவலுக்கான
பாராட்டுக்கள் தொடருது.
அதுக்கப்புறம் ஒவ்வொரு நாவலும் ஒவ்வொரு விதத்துல அங்கீகாரத்தை இப்ப வாங்கி தருது. ஒரு அம்மாவுக்கு எல்லா குழந்தையும் ஒண்ணு தானே.
19 . கதை கரு மற்றும் கதா பத்திரங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள் ? அதற்கான மெனக்கெடல் எந்த அளவிற்கு கொடுப்பீர்கள் ?
கதைக்கருவை தேர்ந்தெடுத்ததும் அதுக்கேத்த மாதிரி வித்தியாசமான கதைமாந்தர் பெயர்களை தேடி எடுப்பேன்.
நோட் போட்டு எல்லாத்தையும் எழுதி வெப்பேன். முக்கியமான சில லைன்ஸ் கூட இருக்கும்.
அதுக்கப்புறம் கடைசியா தான் கதையோட தலைப்பை வைப்பேன். வித்தியாசமாவும் இருக்கணும், அதே நேரம் கதைக்கருவுக்கு ஏத்த மாதிரியும் இருக்கணும்னு ரொம்ப யோசிச்சு தான் தலைப்பையே தேர்ந்தெடுப்பேன்.
20 . நீங்கள் பெற்ற போட்டி பரிசுகள் –
பிரதிலிபில நடைபெற்ற கதைத்திருவிழா போட்டியில
“புதைக்குழியில் சிறைப்பட்ட உயிர்கள்”.
“சுழலில் சிக்கிய பூந்தளிரை” என்ற இரு கதைகளும் முதல் 100 குள்ள தேர்வாகியிருந்தது.
செப்டம்பர் மாதம் நடைபெற்ற ‘ஆசான்’ கதைப்போட்டியில் வெற்றி பெற்றமைக்காக, “செப்டம்பர் மாதத்தின் சிறந்த எழுத்தாளர்” என்ற சான்றிதழ் கிடைத்தது.
21. எதிர்வினை கருத்துக்களை எப்படி கையாள்கிறீர்கள்?
ரொம்ப மனவருத்தமா இருக்கும். ஆரம்பத்துல அழுதுருக்கேன். ஆனா இப்ப அதை பக்குவமா கையாள பழகிக்கிட்டேன். எதிர்மறை கருத்துக்கள் ஏற்புடையதா இருந்தா ஏத்துக்குறேன்.
22 . நீங்கள் அதிகம் எழுத விரும்புவது எது ? (கதை , கவிதை, தொடர்கதை, நாவல் , சிறுகதை) ஏன் ?
எல்லாமே தான்.
பெரும்பாலும் கவிதை, தொடர்கதைகள் தான் எழுதியிருக்கேன். நாவலும், சிறுகதையும் எழுத பழகியிருக்கேன். ஒவ்வொன்னும் ஒவ்வொரு விதத்துல என்னை செதுக்க, எனக்கு உதவியா இருக்கும்னு தோணுது.
23 . ஏன் மாறுபட்ட கதைக்கரு கொண்ட கதைகள் வாசகர்களை அதிகமாக சென்றடைவதில்லை?
ஏன்னா யாரும் அதிகளவு மன அழுத்தத்தை ஏத்துக்க விரும்பல. சும்மா ஜோவியலா படிச்சுட்டு போகவே விரும்புறாங்க. ஆனா ஒரு சிலர் இப்படிப்பட்ட கதைகளையும் விரும்புறாங்க. நாம மாறுபட்ட கதைக்கரு எடுக்கும் போது வாசகர்களோட பதில், “நிஜத்துல தான் இப்படியெல்லாம் நடக்குது, கதைகள்லையும் ஏன் இப்படியே எழுதுறீங்க கஷ்டமா இருக்கு, இது போல எழுதாதீங்க” என்பது தான்.
24 . குடும்பம் காதல் சாராத கதைகளை நீங்கள் எழுதியது உண்டா? (படைப்பின் தலைப்பு)
குடும்பம் காதலைத் தவிர்த்து இந்த சமூகம் உண்டா?
அஞ்சலை – சிறுகதை
25 .அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்களாக நீங்கள் கருதுவது என்ன என்ன?
அந்தளவுக்கு என் அறிவு இன்னும் விரிவாகவில்லை. பொன்னியின் செல்வன், வேள்பாரி இரண்டும் நானே வாசிக்கவில்லை. வாசித்ததும் சொல்கிறேன்.
பிறர் கூற கேட்டது இவை இரண்டும் தான். கூடவே கடல் புறா.
26 . ஓர் படைப்பின் வார்த்தை அளவுகள் பற்றி உங்களது கருத்து என்ன? கற்பனைக்கு எல்லையில்லாத போது வார்த்தைகளுக்கு மட்டும் எல்லையுண்டா என்ன?
கற்பனைகள் நமது ரசனைக்கேற்ப மாறுபடுகையில், வார்த்தை அளவுகளும் மாற்றம் பெறத்தானே செய்யும்.
27 . எழுதுபவர்கள் பெரும்பாலும் பயன் அடைவதில்லை. அவர்கள் பயன்பெற நீங்கள் கூறும் சில யோசனைகள் என்ன?
அமேசான், புஸ்தகா, இன்னும் சில தளங்கள் இணைத்தில் இருக்கின்றன. பிரதிலிபியில் கூட இப்போது சிறிதளவு பணம் கிடைக்கிறது. அதிகமாக எதிர்பார்க்க முடியாது.
28 . உங்கள் தனி தன்மை என்று தாங்கள் கருதுவது என்ன ?
வாசகர்களின் கருத்தில் தெரிந்து கொண்டவை. நான் எழுத்தின் வாயிலாக விவரிக்கும் காட்சிகள் கண்முன்னே பிம்ப காட்சிகளாக இருப்பை போல் உணர்வதாக சொல்லியிருக்காங்க. கூடவே எனக்கு ஒன்றை கவிதை வரிகளாக சொல்ல ரொம்ப பிடிக்கும். ஒரு அத்தியாயத்தில் கவிதையில்லாமல் எழுத வராது. தற்போது அதை மாற்றிக் கொள்ள நினைக்கிறேன். ஆனால் அதை ரொம்ப மிஸ் பண்றோம்னு வாசகர்கள் சொல்றாங்க.
29 . உங்களது கவிதை , பிடித்த வாக்கியம் , பழமொழி (பைனல் பஞ்ச்).
பிறரது முகமூடியைக்
கிழித்து உண்மையை
உணர்த்துவேன் என்று
நினைப்பவர்கள்..
தன் செயலால்
தன் முகத்திரையும்
கிழிபட்டு தானும்
கீழ்த்தனமான நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளோம்
என்ற நிதர்சனமான
உண்மையை ஏனோ
ஏற்க மறுப்பது
கூட மடமைத்தனமாகத்
தான் எண்ணத்
தோன்றுகிறது .
வழி பல இருந்தாலும்
மனதளவில் ‘பெயர்
அறியா வலி இருக்கு
என்னால் இயலாது’
என்ற எண்ணத்தில்
உழல்வதென்பது
தனது முன்னேற்ற
பாதைக்கு தானே
முயன்று இட்டுக்
கொண்ட முட்டுக்கட்டை
போல் தான்..
முயலாதே.!!!
என்பதை விட
பிறர் சொல்லை
செவி வழியே
உள்நுழைத்து
மனவலியை
வாங்காதே..!
என்பதே சில வலிகள்
வலிக்க வலிக்கத்
தந்த போதனைகள்
(இதுவும் கடந்து போகும்
நிரந்தரமில்லா வாழ்க்கை)
எதுவோ நகர்கையில்
எதுவோ விழுந்திட,
எதையுமே செய்திடாத
என் மீதேனோ?
அழித்திட இயலா
சேற்றை வாரியிறைத்து
வேடிக்கை பார்த்திடும்
விதியை எங்கனம்
வென்றிடுவேன்?
ஆற்றாமையோடு
ஆயுதங்களை
ஏந்தும் முன்பு
ஆர்ப்பரித்து
ஆளை வீழ்த்துகிறது
வார்த்தை என்ற
அளப்பரிய ஆயுதம்…
அடி நாக்கில் நஞ்சு, நுனிநாக்கில் அம்ருதம்
A smooth tongue and an evil heart
30. உங்கள் படைப்புகள் (லிங்க்குகளுடன்) (Youtube also ):
Amazon kindle :
https://amazon.com/author/ramyachandan
பிரதிலிபி :
https://tamil.pratilipi.com/user/090v7robz5?utm_source=android&utm_campaign=myprofile_share
@writer_ramya_chandran. Install the app to follow my photos and videos. https://www.instagram.com/invites/contact/?i=16ur5xdyvsb3k&utm_content=alp7dex
https://www.facebook.com/groups/392054821837881/?ref=share
எனக்கு இப்படியொரு வாய்ப்பு கொடுத்தமைக்கு ரொம்ப நன்றி ஆலோன் மகரி அக்கா..
இவங்க கதைக்கு அத்தியாயம் குடுக்கறது போல இந்த நேர்காணலும் சீக்கிரமே குடுத்துட்டாங்க , நான் தான் இதை உங்க பார்வைக்கு வைக்க தாமதம் பண்ணிட்டேன் .
இவங்க எழுதறத தான் முழு நேரமா பண்ணிட்டு இருக்காங்க . இவங்களுக்கு அதுல இருக்க ஆர்வமும் , அதுக்கு குடுக்கற உழைப்பும் நிஜமா வியக்க வைக்குது.
அப்பப்போ இதனால அவங்க உடல் நிலையும் கொஞ்சம் பாதிக்கப்படுதுன்னு நான் கேள்வி பட்டேன் . அதனால ரம்யா சந்திரன் அவர்களே , நீங்க ரொம்ப காலம் ஓடணும் , அதனால உங்க ஆரோக்கியத்துல கொஞ்சம் கவனம் எடுத்துக்கோங்க ..
இவங்க செந்தமிழ் எழுத்து நடை ரொம்ப அருமையா இருக்கும் . இவங்களுக்கு வழக்கு மொழியை விட செந்தமிழ் ரொம்ப நல்லா வரும்ன்னு தோணுது .
இவங்களோட சில கதைகள் நான் படிச்சி இருக்கேன் . கரு தேர்வுகள் முதல் பெயர் தேர்வுகள்ன்னு எல்லாமே ரொம்ப நல்லா இருக்கும் . ஆனா தலைப்பு மட்டும் கொஞ்சம் பெருசா தான் வைப்பாங்க , ஆனா அந்த கதை கதா பாத்திரங்கள் நம்ம மனசுல கண்டிப்பா நீக்கும் . அப்படிபட்ட உணர்வுகளை கடத்தும் எழுத்து இவங்களுக்கு வசம் ஆகி இருக்கு .
உங்க எழுத்து மேலும் மேலும் மெருகேறி நீங்க பெரிய உயரங்களை அடைய எங்க எல்லாரோட வாழ்த்துகள் ..
மதி கதைல நீங்க குடுத்த தாக்கமும் ,அதோட கதை அமைப்பும் இப்போவும் மனசுல நிக்குது ரம்யா . நிறைய அருமையான படைப்புகளை நீங்க குடுக்கணும் . உங்க கனவுகள் எல்லாமே நிறைவேற எங்க எல்லாரோட மனமார்ந்த வாழ்த்துகள் ..
இன்னிக்கி நம்ம பயணம் உங்களுக்கு பிடிச்சி இருக்கும்னு நினைக்கறேன் . சீக்கிரமே அடுத்து ஒரு அருமையான எழுத்தாளரோட வரேன் ..