1 – ரெட்டைக் குன்றுக்கோட்டை
“வணக்கம் மக்களே.. இன்னைக்கு நம்ம போகப்போறது எங்களோட ஜமீன் கோட்டை மாளிகைக்கு.. நான் சின்ன புள்ளையா இருந்தப்போ ஒரு தடவை இங்க வந்திருக்கேன் அதுக்கப்பறம் இப்போதான் மறுபடியும் அங்க போறேன்.. நீங்களும் என்கூட வந்து எங்க கோட்டை மாளிகைய பாருங்க என்ஜாய் பண்ணுங்க.. மறக்காம இந்த வீடியோவ லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க, என் சேனல சப்ஸ்க்ரைப் பண்ணுங்க..” என உற்சாகமான குரலில் ஒருவன் காரின் சன்ரூஃப் வழியாக நின்றபடி செல்லும் பாதையை காட்டி பேசினான்.
அது ஓர் அழகான மலைப்பாதை. இரண்டு பக்கமும் டீ எஸ்டேட் தங்களது டீ செடிகளை பயிரிட்டு பராமரித்து வந்தனர். பெரிய மலைகளில் மண் சரியாமல் இருக்க மரங்கள் தான் பெரும் உதவியாக இருக்கும். மரங்களின் வேர்கள் மண்ணில் பல நூறு அடிகளுக்கு விரிந்து பரவி மண்னை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு மழை வந்தால் சரியாமல் பாதுகாக்கும். ஆனால் நமது மலைகளில் இன்று பெரும் மரங்களை எல்லாம் வெட்டி வெளிநாடுகளுக்கு திருட்டுத்தனமாக விற்றுவிட்டு, சாதாரண மழை வந்தாலே மண் சரிந்து உயிர்களை பலி கொடுப்பது தான் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.
முன்பு வெளிநாட்டவர்கள் நம் நாட்டினை அடிமைப்படுத்தி வளங்களை கொள்ளை அடித்தனர். இப்போது நம் தலையில் நாமே மண்ணையள்ளி போட்டுக் கொள்வதைப் போல, நமது வளங்களை சொந்த வீட்டிலிருந்து திருடி மற்றவருக்கு கொடுத்துவிட்டு, நம் வீட்டை விற்கும் பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறோம்.
வணிகம் என்ற பெயரில் இங்கே நடக்கும் கொள்ளையும், அதனை சார்ந்த விளைவுகளும் இன்னும் வெகு சில வருடங்களிலேயே பெரும் பிரச்சினையாக விஸ்வரூபம் எடுக்கும். அன்று இயற்கை நமக்கு அளிக்கும் தண்டனையில் இருந்து நாம் தப்பிக்கவே முடியாது என்பதையும் மறுக்கமுடியாது.
இப்படியாக சிந்தித்தபடி முப்பது வயதை கடந்த ஒருவன் வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்தான்.
“டேய் கீழ இறங்கு டா.. கொரங்கு மாதிரி மேலயே தொத்திட்டு வர.. அடுத்து பிரேக் அடிச்சா பல்லத்துல போய் விழுவ..” என சன்ரூஃப்பில் நின்று கொண்டிருந்தவனைக் கடிந்தான்.
“இரு டா.. ரெண்டு பக்கமும் பசுமையா பாக்கவே எவ்ளோ நல்லா இருக்கு. நீ ஜன்னல இறக்குவியா சொல்லு கீழ வரேன்..”
“இப்ப நீ உள்ள உக்காந்தா நாளைக்கு கோட்டைக்கு கூட்டிட்டு போவேன் இல்லைன்னா இங்கயே உன்னை இறக்கி விட்டுடுவேன். நீ 20 கிலோமீட்டர் நடந்தா தான் ஊரு வரும்.”
“சரியான இம்சை அரசன்.. வந்து வாச்சிருக்கான் பாரு எனக்கு அண்ணன்னு.. முசுடு பிடிச்சவன். இவனுக்கு பேரு மட்டும் கவிநேச பாரதி பாண்டியன். நேசங்கறது ஊறுகாய் அளவுக்கு கூட காட்ட தெரியாத ரோபோ..” என வாயிற்குள் முணுமுணுத்தபடி காரின் உள்ளே அமர்ந்தான்.
“ஜிப் பண்ணிட்டு இருந்தா ஹோட்டல் வரை கார்ல வரலாம்..” என கவிநேசன் கூறவும் மொபைலில் படம் பிடித்தபடி அமைதியாக அமர்ந்து வந்தான்.
அடுத்த இரண்டு மணி நேரத்தில் அந்த மலை பாதையில் இருந்த ஒரு ஊருக்குச் சென்று சேர்ந்தனர். அங்கே ஏற்கனவே ஒரு ரிசார்டில் அறையை முன்பதிவு செய்திருந்ததால் இருவரும் ஆளுக்கு ஒரு அறையில் சென்று புகுந்துக் கொண்டனர்.
“அம்மா.. ரூமுக்கு வந்துட்டோம்.. ஏன்மா இவன பெத்த நீ? கொஞ்சம் கூட சிரிக்க மாட்டேங்கறான். உராங்குடான் மாறி மூஞ்ச வச்சிட்டு என்னைய ப்ளாக்மெயில் பண்றான் மா.. நான் என் சேனல்காக வீடியோ எடுத்து பேசினதுக்கு வழில இறக்கி விட்டுட்டு போயிருவேன்னு சொல்றான் மா.. இனிமே இவன்கூட என்னை நீங்க எங்கயும் அனுப்பக்கூடாது சொல்லிட்டேன். நீங்க எப்போ வரீங்க?” என மூச்சு விடாமல் பேசினான்.
“குலசேகரா.. எங்களையும் கொஞ்சம் பேசவிடு டா.. அவன் பேசாம கொன்னா நீ பேசியே எங்கள கொல்ற டா.. உங்கம்மாவுக்கு ஹார்ட் படபடக்குதுன்னு தண்ணி குடிக்க போயிருக்கா..” என அவன் தந்தை பரஞ்சோதி பாண்டியன் சிரித்தபடி கூறினார்.
“நீங்க எப்ப மொபைல் வாங்கினீங்க?”
“நீ என்னை ஹலோ சொல்ல விட்டாதானே யாரு பேசறாங்கன்னு உனக்கு தெரியும்.. நீ தான் எனக்கு அந்த கேப் கூட தரலியே டா மகனே..” என அவனை கிண்டல் செய்தார்.
“அம்மா ஃபோன் நீங்க எதுக்கு எடுக்கறீங்க? இதுலாம் மேனர்ஸ் இல்ல தெரியுமா? மொத ஃபோன அம்மாகிட்ட குடுங்க..” என தனக்கு ஏற்பட்ட அவமானத்தை மறைக்கும் பொருட்டு உருட்டினான்.
“நீ உருட்டு மகனே.. இத நாலு பொண்ணுங்ககிட்ட உருட்டியிருந்தா இந்நேரம் உனக்கு புள்ளை வந்திருக்கும். ஆனா நீ என்கிட்ட மட்டும் தான் உருட்டுற.. நானா உன்ன கல்யாணம் பண்ணிக்க முடியும்?”
“உங்கள எல்லாம் எங்கம்மா கல்யாணம் பண்ணதே பெருசு நான் வேற பண்ணுவேனா? நான் மட்டும் அம்மாவோட தம்பியா பொறந்திருந்தா உங்களுக்கு கல்யாணம் செஞ்சி குடுத்திருக்கவே மாட்டேன். இப்போ உங்ககிட்ட இப்படி சிக்கி சின்னாபின்னமும் ஆகிட்டு இருக்கமாட்டேன்.”
“லூசு பயலே.. உங்கம்மாவுக்கு தம்பியா பொறந்திருந்தா எனக்கு மறுபடியும் எப்படிடா புள்ளையா வருவ?” என அவர் மீண்டும் அவனை கலாய்த்தார்.
“அவன கிண்டல் பண்ணாம இருக்கமாட்டீங்களா நீங்க? ஃபோன் குடுங்க.. உங்கள பாக்க ராஜு வந்திருக்காரு போய் பாருங்க..” என அவரிடம் இருந்து மொபைல் வாங்கிக் கொண்டார்.
“நீயும் உங்கப்பாகிட்ட மல்லுக்கட்டிக்கிட்டே தான் இருப்பியா சேகர்?” என மகனையும் கண்டித்தார்.
“அத அவருகிட்ட சொல்லுங்க. என்னை எப்பவும் வாரிக்கிட்டே இருக்காரு.. அவருக்கு வயசாகிரிச்சின்னு நெனைப்பே இல்லாம என்கிட்ட வாயடிக்கறாரு..” அவனும் விடுவதாக இல்லை என்பது போல தந்தையின் மேலே புகார் வாசித்தான்.
அவர் பொன்னிழை அம்மை, பரஞ்சோதி பாண்டியரின் மனைவி. வழி வழியாக வரும் ஜமீன் பரம்பரைகள் ஒன்றின் வாரிசு. பரஞ்சோதி பாண்டியனும் ஒரு ஜமீனின் வாரிசு தான். ஒரு காலத்தில் சிற்றரசுகளாக இருந்தவர்கள் தான் காலப்போக்கில் ஜமீனாக மாறினர். பல ஜமீன்கள் அழிந்து போயிருந்தாலும் இன்றும் சிலர் தங்கள் சொத்துக்களை சரியாக முதலீடு செய்து தொழில் ஸ்தானங்களை பெருக்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.
அப்படியான ஒரு ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் தான் பரஞ்சோதி பாண்டியன். பொன்னிழை அம்மையாருக்கு உடன்பிறந்தவர்கள் யாரும் இல்லை. அவரின் தந்தைக்கு தொழிலில் பெரும் சறுக்கல் ஏற்பட்டதில் பல நில சொத்துக்களை விற்றுவிட்டார். தற்சமயம் தொழில் எதுவும் செய்யவில்லை என்றாலும் சில கோடிகளையும், ஜமீன் என்ற அந்தஸ்த்தையும் வைத்து படோடபமாக தான் வாழ்ந்து வருகிறார்.
“சொல்லு ராஜு என்ன விஷயம்?” என பரஞ்சோதி பாண்டியன் மகனிடம் பேசிய இலகுத்தன்மை மாறி கம்பீரமாகக் கேட்டார்.
“ஐயா.. நம்ம பஞ்சு மில்லுல நடந்த திருட்டுத்தனம் என்னனு கண்டு பிடிச்சாச்சி. டிரான்ஸ்போர்ட்ல இருந்த ஒருத்தன் தான் நமக்கு வந்த பஞ்சு மூட்டை கணக்கை தப்பா எழுதியிருக்கான். இருவது மூட்டை நம்ம மில்லு வண்டில போட்டு வச்சிருக்கான். அதையும் எடுத்து ஏற்கனவே வந்த லோடு கூட சரி பாத்தாச்சி. அவன போலீஸ்ல ஒப்படைக்கலாமா ஐயா?” என பணிவுடன் கேட்டார்.
“அவனை பண்ணை வீட்டுக்கு அனுப்பி வை. நான் சொன்ன விஷயம் என்னாச்சி?” என ராஜுவை துளைக்கும் பார்வைப் பார்த்தார்.
“தேடிட்டு இருக்காங்க ஐயா.. கூடிய சீக்கிரம் கெடச்சிடும்..” எனக் கூறினார். சரியென தலையசைத்து அவரை செல்ல கூறிவிட்டு தனது பண்ணை வீட்டிற்கு கிளம்பினார்.
“அந்த பையனை என்ன பண்ண போறீங்க?” என பொன்னிழை கேட்டார்.
“தப்புக்கு தண்டனை உண்டுன்னு உணர வைக்க போறேன். 7 மணிக்கு வந்துடுவேன். சேர்ந்தே சாப்பிடலாம். பசங்க இருந்தா உன்கூட தனியா நேரம் செலவழிக்கவே விடமாட்டேங்கறாங்க. அதுவும் நீ பெத்து வச்சிருக்கியே ரெண்டாவதா ஒருத்தன.. அவன் இன்னும் உன் இடுப்புல இருந்து இறங்கல. எனக்கு ஒரு பொண்ணு பெத்து குடுத்திருந்தா நான் அவளை வச்சி அவனை ஒரு வழி செஞ்சிருப்பேன். ஆனா நீ தான் ஒத்துக்கவே இல்ல..” என மனைவியிடம் கொஞ்சியபடி அணைத்தார்.
“ஐயாவுக்கு வயசு திரும்புதோ? நம்ம பெரியவனுக்கு கல்யாணம் ஆகியிருந்தா இந்நேரம் ரெண்டு பேரப்பசங்க இருப்பாங்க..”
“அதான் அவன் கல்யாணமே வேணாம்னு இருக்கானே.. நம்ம மறுபடியும் கல்யாணம் செஞ்சி ஹனிமூன் போலாமா பொன்னிம்மா?” என கிறக்கமாக அவர் கேட்கவும் பொன்னிழை வெட்கம் கொண்டு அவரின் தோளில் அடித்து விரைவில் வீட்டிற்கு வந்து விடும்படி கூறியனுப்பினார்.
“கோசலை.. ராத்திரிக்கு நான் சொன்னது எல்லாம் செஞ்சி வச்சிட்டு நீ வீட்டுக்கு கிளம்பிக்க.. பாத்திரம் எல்லாம் நாளைக்கு வந்து கழுவிக்கலாம். உன் பையன மறக்காம ஹாஸ்பிடல் கூட்டிட்டு போ. இந்தா மருந்து வாங்க பணம் வச்சிக்க..” என சில இருநூறு ரூபாய் தாள்களை அவரிடம் கொடுத்தார்.
“சரிங்கம்மா.. ஐயாவுக்கு சூடா இருந்தா தான் சாப்பிட பிடிக்கும். நான் முன்னவே செஞ்சி வச்சா ஆறிடுமே..”
“நான் சூடு பண்ணி குடுத்துக்கறேன். நீ சீக்கிரம் கிளம்பி போனா தான் டாக்டர பாக்கமுடியும்..”
“சரிங்கம்மா..” எனக் கூறியவர் வேகமாக இரவுணவை தயார் செய்ய ஆரம்பித்தார்.
“அம்மா.. பெரியம்மா பேசறாங்க..” என மற்றொரு வேலையாள் லாண்ட்லைன் கார்ட்லெஸ் போனை அவரிடம் கொண்டு வந்து கொடுத்தார்.
“சொல்லும்மா.. எந்த ஊர்ல இருக்கீங்க?” என தனது தாயார் செந்தமிழரசியிடம் கேட்டார்.
“மதுரால இருக்கோம் பொன்னி. இங்க கிருஷ்ணர் பொறந்த ஜெயில் இருக்குல்ல. அங்க போயிட்டு வந்தோம். எங்க போனாலும் துப்பாக்கியோட ஆளுங்க நிக்கறத பாத்தா தான் திக்கு திக்குன்னு இருக்கு. கோவிலுக்கு மனசு லேசாக போலாம்னு வந்தா இங்க பாக்க பாக்க நெஞ்சு வலி வந்துடும் போல. கோவிலுக்கு இவ்ளோ ஆபத்து இருக்கான்னு ஆச்சரியமா இருக்கு. நம்ம ஊர்ல ஏக்கர் கணக்குல இருக்கற கோவிலுக்கு ஒரு பூட்டு கூட பெருசா போடறது இல்ல. இங்கயா உள்ள வரப்பவும் செக் பண்றாங்க. வெளிய போனாலும் அவளோ பாத்து கவனிக்கறாங்க. இந்த தீவிரவாதிங்க எல்லாம் ஒழிஞ்சா தான் இந்த பக்கம் நிம்மதியா கோவிலுக்கு வரமுடியும் போல..”
“ஹாஹாஹா.. என்ன செய்ய நம்ம நாட்டோட நிலைமை அப்படி மாறிட்டு வருது. அப்பா என்ன பண்றாங்க? உடம்பு பரவாலையா?”
“உங்கப்பா வாய் கட்டினா தானே உடம்பு சரி வரும். இங்க வந்ததுல இருந்து ஏதாவது வாயில போட்டுட்டே இருக்காரு. இங்கயா திரும்புன பக்கமெல்லாம் ஸ்வீட் கடையா வேற இருக்கு. சுகர் 500 தொட்டாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்ல.. நாளைக்கு ஊருக்கு வந்தா தான் தெரியும்..” என அவரின் கணவர் மகேந்திரபூபதி பற்றி கூறினார்.
“சரி நல்லபடியா ஊருக்கு வாங்க.. நாளைக்கு பாக்கலாம்..”
“அம்மாடி பொன்னி.. அந்த பொண்ணு போட்டோ கவி பாத்தானா? எதுவும் சொன்னானா?” என ஏக்கத்துடன் கேட்டார்.
“அவன் எதுவும் பாக்கலம்மா.. நீங்க மொதல் ஊருக்கு வாங்க அப்பறம் பேசிக்கலாம்..” என அவரும் மனதில் எழுந்த வருத்தத்தை மறைத்துக் கொண்டு பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.

