57 – ருத்ராதித்யன்
“ரிஷி……”, என ராஜ் கர்ணா அவனை கண்டதும் சென்று கட்டிக்கொண்டான்.
“உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன் ராஜ்..”, என ரிஷித்தும் அவனை தழுவிக்கொண்டான்.
“அங்க என்னை எப்படி எல்லாம் டார்ச்சர் பண்ணாங்க தெரியுமா…..? நாம அவங்கள்ள ஒருத்தர கூட சும்மா விடவே கூடாது ரிஷி…. அதுவும் அந்த புலிய பார்ட் பார்ட்டா கழட்டி எடுக்கணும்….”, என கண்களில் பழி வெறி மின்ன கூறினான்.
“நீ சொல்லவே வேணாம் ராஜ்… அவங்களுக்கான ஸ்கெட்ச் நான் போட்டுட்டேன்… அதோட முதல் படியா உன்னை கொண்டு வந்துட்டேன். அடுத்து என் மாயா டார்லிங் அண்ட் அந்த ஆருத்ராவ நாம இங்க கொண்டு வந்துட்டா நம்மளோட ஆயிர வருஷ கனவு நிறைவேறிடும். நீ நினைச்ச மாதிரி நாம உருவாக்கர உயிரினங்கள் மட்டும் தான் இந்த பூமில வாழும் இனி… மத்த எல்லாரையும் அப்படியே மாத்திடலாம்…”, என ராஜ் கர்ணாவிற்கு தனது திட்டத்தை விளக்கினான்.
“சூப்பர் ரிஷி…. இனிமே நம்ம பேச்ச எதிர்க்கணும்ன்னு கூட எவனும் நினைக்க முடியாது…. உனக்கு வேணுங்கற அத்தனை விசயமும் இனிமே நான் உனக்கு கொண்டு வந்து சேத்தறேன்….”
“ருதஜித் பக்கத்துல வச்சுக்கோ…. எனக்கு இன்னும் சில விஷயங்கள் தேடனும்.. நான் விநாயக் கூட்டிட்டு கிளம்பறேன்…. நான் சொன்னதுக்கு மேல ஒரு பேக்-அப் ரெடி பண்ணிக்கோ….. “
“சரி நீ கிளம்பு….. நான் மத்த ஏற்பாடு பார்த்துக்கறேன்….”, என நண்பனை கட்டியணைத்து விடை கொடுத்தான்.
மேகமலை ஆச்சியின் குடிசையில்………
“ஆச்சி…. அவன் மலைகாட்ட நோக்கி கிளம்பி இருப்பான்….. நீங்க என்ன பண்ண போறீங்க?”, வல்லகி கேட்டாள்.
“உங்களுக்காகவும் என் சிங்கம்மாவுக்காகவும் தவம் பண்ண போறேன்… இன்னிக்கி போயிட்டு நீங்க அம்மன் சிலையோட வரணும்….. நாளைக்கு ராத்திரி அவங்க கல்யாணம் நடக்கணும்…. இதுல எந்த தடையும் வந்துட கூடாதுன்னு உபவாசம் இருக்க போறேன்….”
“ஹ்ம்ம்…… சரி… நாங்க கிளம்ப வேண்டிய நேரம் வந்துரிச்சி…… இந்த தடவை உங்க மனசும் புத்தியும் மாறாம இருந்தா எல்லாருக்கும் நல்லது…..”, என கூறி அவர் கொடுத்த மண் குடுவைகளை எடுத்துக் கொண்டு சென்றாள்.
“அர்ஜுன் சார்….. ஆதி சார் எங்க?”
“அவன் அண்ணி கூட பேசிட்டு இருக்கான். இது போதுமா பாரு?”, என சில மூலிகை இலைகளை எடுத்து காட்டினான்.
“நம்ம எல்லாருக்கும் இதுல மூணு மடங்கு அளவுக்கு கைல இருக்கணும் சார்….. அந்த இடம் எந்த வரமுறைக்கும் அடங்காத ஒன்னு…. அங்க நாம சமாளிக்க கொஞ்சமா மூலிகை உதவியும், நிறைய மனதைரியமும் தான் வேணும்….”
“அந்த அளவுக்கு இங்க கிடைக்குமா? நீ சொன்ன எடத்துல இவ்ளோ தான் இருந்தது….”
“தீரன் கிட்ட இத காட்டி எங்க இருக்குன்னு கேளுங்க… அவனுக்கு தெரியும்.. பைரவனுக்கும் தெரியும்….”
அர்ஜுன் மற்றும் யாத்ரா இருவரும் தீரணை தேடிச் சென்றனர்.
ரணதேவ் மனகலக்கத்துடன் அமர்ந்து இருக்க, அவரிடம் சென்றாள்.
“ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கீங்க சார்?”
“இங்க நடக்கற விசயங்கள நினைச்சி தான் மா… இந்த தப்பு என்னால தானே?”, சிறு குழந்தையைப் போல கேட்டார்.
“ஒருவகைல நீங்களும் இப்ப சூழ்ந்து இருக்கற கடினமான நிலைக்கு காரணம் தான், ஆனா நீங்க மட்டுமே காரணம் இல்ல…. உங்க மனசை இனிமே தான் ரொம்ப திடமா வச்சிக்கணும்…. நாங்க நாளைக்கு மதியம் வந்துடுவோம்….. அதுவரை ஆச்சிய நீங்க தான் கூர்மையா கவனிக்கணும்….”
“எனக்கு புரியல ம்மா… ஆச்சிய ஏன் கவனிக்கணும்?”
“அவங்க மனசும் புத்தியும் மாறிடக்கூடாது. அத மாத்த நிறைய முயற்சிகள் நடக்கும்…. அவங்க இந்த கிராம எல்லையை தாண்டிடவே கூடாது அதுக்கு நீங்க தான் பொறுப்பு…. அவங்க பலமா உங்கள தாக்கலாம்.. கொல்லவும் வரலாம்.. .ஆனா அவங்க இந்த எல்லைய தாண்டவே கூடாது… நீங்க அந்த பொறுப்ப எடுத்துப்பீங்களா?”
“நீ சொல்றது கேக்க கேக்க பயமா இருக்கு வல்லகி… அவங்க ஏன் மாறப் போறாங்க? அவங்களால தானே இப்போ நாம இந்த விஷயத்தையே கைல எடுத்து இருக்கோம்…. “
“விதி எப்படி வேணாலும் மாறும் சார்…. உங்க பேத்தி இப்போ உங்கள விட இந்த பூமிக்கு ரொம்ப முக்கியம். அவங்கள பத்திரமா பாத்துக்கணும். அதே போல ஆச்சியும் இங்க இருந்து வெளியேறக்கூடாது… இது ரெண்டும் உங்க பொறுப்புல விடறோம்…. முடியுமா?”
“மனசு பதறுது வல்லகி.. முழுசா சொல்லு…”
“தனுப்பா…..”, என அழைத்தபடி ஆருத்ரா அங்கே வந்தாள்.
“வல்லகி…. டென்ட்க்கு வரீங்களா?”, ஆதி கேட்டான்.
“இருப்பா.. அந்த பொண்ணு என்ன என்னமோ சொல்லுது.. என் சிங்கம்மாவுக்கு என்ன ஆபத்து வரும்? ஆச்சிய ஏன் நாம கண்காணிக்கனும்? என்ன தான் நடக்குது இங்க?”, பதற்றத்துடன் கேட்டார்.
ஆருத்ராவும், ஆதியும் வல்லகியை ஏன் கூறினாய் என்பது போல பார்த்தனர்.
“நீங்க மறைக்கறதால நமக்கு தான் லாஸ் ஆகும் ஆதி சார்….. உங்களுக்கு தெரிஞ்சவரை இவருக்கு சொல்லி திடமா இருக்க சொல்லுங்க…. இந்த பதினெட்டு மணி நேரத்துல என்ன வேணா நடக்கும்.. எல்லாத்துக்கும் நாம மட்டும் இல்ல நம்மள சுத்தி இருக்கறவங்களும் தயாரா இருக்கணும்….. நான் நமக்கு தேவைபடற பொருள் எல்லாம் எடுத்து வச்சிட்டு இருக்கேன்…. “
“வல்லகி… நீங்க ஒரு மணிநேரத்துல தேனி போகணும்…. ஹெலிகாப்டர் ரெடியா இருக்கும்…”, என ஆருத்ரா கூறினாள்.
“உங்க பொறுப்புகள்ல இருந்து நீங்க தவறுறதே இல்ல ஆருத்ரா…. அதனாலேயே எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சு இருக்கு…. “, என கூறிவிட்டு சென்றாள்.
“சிங்கம்மா.. என்னடா நடக்குது இங்க? அந்த பொண்ணு சொல்றது கேட்டா பயமா இருக்கு….. “, ரணதேவ் பதற்றத்துடன் கேட்டார்.
“தனுப்பா….. நம்ம அறிவுக்கு எட்டாத விசயங்கள் நெறைய நடக்குது… அதுல இதுவும் ஒன்னு…. நம்மளால இந்த பூமிக்கு ஓர் நல்லது நடிக்கணும்னு விதி இருக்கு. ஆனா அத தடுக்கவும் ஒரு கூட்டமும் இருக்கு. அந்த கூட்டத்த எதுத்து நம்ம வேலைய முடிக்கணும். இதுல கொஞ்சம் ஆபத்து அதிகம் தான். ஆனா இது நம்ம கடமை. நம்ம தான் செய்யணும் எவ்ளோ கஸ்டமாதனா அது இருந்தாலும்…. நம்ம கடமைகள்ள இருந்து நாம எப்போவும் தவறக்கூடாது தானே தனுப்பா?”, அவரின் கைபற்றி கேட்டாள்.
“ம்..”, என தலையசைத்தார்.
“என்ன பண்ணுடுவாங்கன்னு பாத்துடுவோம்…. நம்ம இங்க தான் இருக்க போறோம்… ஆனா இப்போ கெளம்பறவங்க போக போற இடம் மனுஷன் கால்தடம் பட்டு பல ஆயிரம் வருஷம் ஆகுது… அங்க என்ன நடக்கும்னு தெரியாது. அவங்க பத்திரமா போயிட்டு வரணும்ன்னு நாம பிரார்த்தனை பண்ணலாம்….. வாங்க….”, என அவரை அழைத்துக் கொண்டு டென்ட் உள்ளே சென்று அவருக்கு இதுவரை அவர்கள் அறிந்துகொண்ட விசயங்களை விளக்கினாள். ஆதியும் தன் பெற்றோர்களை அழைத்து விவரித்து கொண்டிருந்தான். இதழியும், சிரஞ்சீவியும் கூட குழந்தையுடன் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.
“இதென்னப்பா இவளோ கொடூரமான ஒருத்தனா அவன் இருக்கான்.. அவன நாம தோக்கடிக்க முடியுமா?”,தமிழன்பன் கேட்டார்.
“தெரியலப்பா… ஆனா இது நம்ம தான் செய்யணும்… நமக்கு பூமி குடுத்த வாழ்க்கைக்கு நம்ம செய்யப் போற கைமாறு இதுதான்…. தவிர இது செஞ்சா தான் அர்ஜுன் யாத்ரா மாற ஒரு வாய்ப்பு இருக்கு… “, என கூறிமுடித்துவிட்டு அவர்கள் முகங்களை பார்த்தான்.
“அண்ணா…. இவன சும்மா விட்டுட கூடாது…. இவரையும் கூட்டிட்டு போ… உங்களுக்கு உதவியாக இருப்பாரு…”, இதழ் கூரியதும் அவளை அணைத்துக்கொண்டான் ஆதி.
“அவர் இங்க இருக்கட்டும்.. அவரோட தங்கச்சிங்க ரெண்டு பேரையும் பாதுகாத்து எங்களுக்கு கட்டி வைக்க சொல்லு…. நீயும் பத்திரம் எங்க மருமகனும் பத்திரம்….”
“ஆதி…. இவன ரொம்பவே கேர் ஃபுல்லா தான் கையாலனும்…. அந்த ராஜ் கர்ணா வுக்கு இந்த உலகத்தோடு எல்லா டார்க் நெட்வொர்க்லயும் கண்டாக்ட்ஸ் இருக்கு…. சீனியர் கொஞ்ச நேரம் முன்ன கால் பண்ணாரு…. அருணாச்சலப் பிரதேசம்ல இருந்து ரெண்டு கன்டெய்னர் ரொம்ப செக்யூர்டா வந்துட்டு இருக்காம். எங்கேயும் நிக்காம எந்த செக்கிங்க் செய்யவும் முடியாத அளவுக்கு தமிழ்நாடு பக்கம் வந்திருக்காம். நமக்கு இன்னும் செக்யூரிட்டி அதிகம் வேணும்ன்னு சொன்னாரு…. நந்து இந்த டிஸ்டிரிக்ட் போலீஸ் கிட்ட பேசினதுக்கு மாநாடு நடக்குது, போர்ஸ் இல்லன்னு சொல்லிட்டாங்களாம்…..”
“மனுஷங்க தானே இல்ல…. இந்த இயற்கைக்காக தானே நாம்ம போராடறோம்… அதுவே நமக்கு காவலா இருக்கும் சிவி… யாரும் இந்த கிராமத்த தாண்டிற கூடாது. யாத்ரா காட்டுக்குள்ள இருப்பா…. ஆருத்ரா ஆச்சி ரெண்டு பேரும் ரொம்ப முக்கியம்…. தர்மதீரன் பாலாவும் இங்க தான் இருப்பாங்க…. பாத்துக்கோங்க…..”, அன்னையை இறுக்கமாக அணைத்து அவரின் நெற்றியில் இதழ் பதித்தான்..
“ஏன் மா எதுவும் பேசாம இருக்கீங்க?”
“எனக்கு பெருமையாவும் இருக்கு, பயமாவும் இருக்குப்பா…. நம்ம மூளைக்கு எட்டாத பெரிய விஷயம். இத செஞ்சி முடிக்கற தகுதி உங்களுக்கு இருக்கு…. ஜாக்கிரதை டா ப்பா…. அர்ஜுன் கூட சண்டை போடாம போயிட்டு வாங்க… ஒருத்தருக்கொருத்தர் ஆதரவா இருக்கணும்…. எல்லாரும் பத்திரமா திரும்பி வரணும். அம்மா காத்திருப்பேன்…”, என கண்களில் நீர் திரள கூறி மகனை அனைத்துக் கொண்டார்.
“இது தான் என் டார்லிங் அத்தை…. பாத்தியா செழியன் எவ்ளோ தைரியமானவங்கன்னு … உங்க தைரியம் எல்லாம் இங்க இருந்து தான் வந்திருக்கு…. ஐ லவ் யூ அத்தை…. “, என யாத்ரா அவரை கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டாள்.
சுடரெழில் நாச்சியார் அந்த தீவின் தற்போதைய பெயரை கண்டுபிடித்து இந்திய வரைபடத்தில் கண்டுபிடித்து அந்த இடத்தின் latitude longitude கண்டுபிடித்து கூறினாள்.
“சூப்பர்… எல்லாரும் பேக் பண்ணிக்கோங்க…. நமக்கு தேவையான எல்லாமே எடுத்துக்கோங்க…. தற்காப்பு சாதனங்கள் ரொம்ப அவசியம். கிளம்பலாம்….”, என வல்லகி முன்னே செல்ல மற்றவர்கள் அவளை தொடர்ந்து சென்று வாகனத்தில் ஏறினர்.
பைரவன் முதல் அனைத்து மிருகமும் பறவைகளும் அவர்களை கண்களில் அன்பு மற்றும் ஏக்கம் வழிய விடகொடுக்க அந்த கிராம எல்லையில் நின்றனர். மகதன் அர்ஜுன் அருகில் வந்து தனது ஒரு நகத்தை உடைத்து கொடுத்தான். தீரன் ஆதி அருகில் வந்து முகத்தை அவன் முகத்தில் உராய்ந்தான். பைரவ் வல்லகி அருகில் வந்து கண்மயாவை காட்டியது, கண்மயா அருகில் வந்ததும் தன் முகத்தின் கனமான மீசைமுடியை காட்டி இழுக்க கூறியது.
அவர்களும் ஒரு முடியை இழுக்க, கையுடன் வந்த முடியை கண்மயா பையில் இருந்த திரவத்தில் போட சொல்லி கையை நீட்டியது. கண்மயா தவிப்புடன், “ பைரவா… இதுல எல்லாம் போட கூடாது….”, கூறினாள்.
கொம்பன் அருகில் வந்து கண்மயா தோளில் கால் வைக்க கண்மயா அரைமனதுடன் அந்த குப்பியில் போட்டதும் , அதுவரை சிகப்பாக இருந்த திரவம் வெள்ளையாக மாறியது.
மற்றவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருக்க ஆருத்ரா பைரவனை தூக்கி கொஞ்சினாள்.
“இப்போ இந்த திரவம் சரியா வேலை செய்யும் கண்மயா…. இவங்களோட அடையாளம் வாசணைய நம்ம கூட இவங்க அனுப்பறாங்க…. இவங்க மாதிரியான காவல் மிருகங்கள் அங்கேயும் இருக்கும் போல…. “, என வல்லகி கூறியதும் பஞ்சவர்ணகிளி , “ஆமா” என்றது.
முற்றிலும் இது மனிதர்களுக்கு புரியாத மிருகங்களின் அதீத உணர்வறிவின் பரிபாஷைகள் தான்… மனிதன் தான் இயற்கையை விட்டு வெகு தொலைவு சென்றுவிட்டான். ஆனால் மற்ற உயிரினங்கள் எதுவும் நன்றி மறக்கவில்லை…. ஆம் தானே?