55 – ருத்ராதித்யன்
“என்னால தான் ஒவ்வொரு தடவையும் சிங்கன் வெளிய வரது தடைபடுதுல்ல நானிலா?”, ஆச்சி வருத்தத்துடன் கூறினார்.
“அமரபுசங்கன் உங்கள கவனமா பாத்துக்கணும்ன்னு நெனைக்கராரு பாட்டி…. அதனால தான்…”, நானிலன் அவர் வருத்தம் கண்டு அவரின் கைப்பிடித்து கூறினான்.
“அவன் சொன்னா சரி…. அவனோட இந்த நிலமைக்கும் நான் தானே காரணம்……”, என மீண்டும் வருத்தம் கொண்டார்.
“அடடே… என்னா பாட்டி நீங்க? எனக்கு நல்லா சமைச்சி குடுத்து என்னை தெளிவாக்குவீங்கன்னு நினைச்சி நான் வந்தா நீங்க இப்படி அழுறீங்க….. “, வல்லகி அவரை மெல்ல கைப்பிடித்து தூக்கி நிறுத்தினாள்.
“வா ராசாத்தி… உன்னால என்னோட ரொம்ப பெரிய பாரம் கொறைய போகுது… என் நினைவுகளை உனக்கு தரேன்… நீ இவங்களுக்கு சொல்லு… அத நானே சொல்ல எனக்கு தெம்பு இல்ல… தைரியமும் இல்ல….”, என வல்லகியின் உள்ளங்கையில் தனது உள்ளங்கையை அழுந்த வைத்தார்.
வல்லகி அவர் கையை பிடித்தபடி அவரின் மூச்சு காற்றை ஆழமாக உள்ளிழுத்தாள்.
சில நிமிடங்களில் ஆச்சியின் 100 பிறவிகள் அவளுக்கு கண்முன்னால் வந்து சென்றது.
நடுங்கிய உடலும், வேகமான மூச்சும் வல்லகியிடம் இருந்து வெளிவந்தது. ஒட்டுமொத்தமாக அவளது வலிமை எல்லாம் இழந்தது போல உடல் சட்டென கீழே விழ, அவளை யாத்ரா தாங்கிப்பிடித்தாள். சில நொடிகளில் மயக்கமும் அடைந்தாள்.
என்னாச்சி? வல்லகி… எழுந்திரி…. என அங்கிருந்தவர்கள் பரபரப்புடன் அவளை எழுப்ப முயற்சித்தனர். அவள் எழவில்லை. தர்மதீரன் பயம் கொண்டு அவளது கன்னத்தில் பலமாக அடித்தான். எந்த அசைவும் இல்லை. அர்ஜுனும், யாத்ராவும் அவளை எழுப்ப முயன்றனர். யாரின் முதலுதவியும் அவளுக்கு உதவவில்லை.
“தூக்குங்க … என் குடிசைக்கு கொண்டு போங்க…..”, என ஆச்சி கூறினார்.
பைரவனும், கொம்பனும் அவள் அருகில் வந்து நின்று அவளை முகர்ந்து பார்த்தனர். அவளின் இதயத்துடிப்பை உணர, அவள் மார்பினில் தாடையை வைத்து சோதித்தனர். வேகமாக, மிக வேகமாக அவளது இதயம் துடித்துக்கொண்டிருந்தது. அதனால் அவளது மூக்கில் இருந்து உதிரம் வழிய தொடங்கியது.
“அச்சோ இரத்தம்…. ஆச்சி..”, நுவலி கூறினாள்.
“வவ்…. ர்ர்ரீர்….”, பைரவனும், கொம்பனும் பேசிக்கொண்டனர்.
பைரவன் வல்லகியின் வயிற்றில் தனது முன்னங்காலை வைத்து ஏறி நிற்க, கொம்பன் அவளது காதுக்கருகே குனிந்து அடிவயிற்றில் இருந்து ஒரு வித சப்தத்தை வெளியிட்டான். இரண்டு மூன்று நான்கு முறை அதே போல இருவரும் செய்ய மெல்ல மெல்ல வல்லகியின் வயிற்றில் தங்கி இருந்த அதீத அழுத்தம் காற்றாக மாறி வெளியேறியது. அவளது இதய துடிப்பும் சீராக தொடங்கியது.
அங்கிருந்த அனைவரும் அந்த காட்சியை கண்டு திகைத்து நின்றனர்.
“செழியன்….இவங்க ரெண்டு பேரும் சாதாரணமான நாய் இனம் இல்ல….”, யாத்ரா மெல்ல கூறினாள்.
“ஆமா… இன்னிக்கி கன்பார்ம் ஆகிரிச்சி ரதும்மா….”, அவனும் அவர்களின் உடல் மொழி முதல் அனைத்தையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.
வல்லகி மெல்ல கண் விழித்து, நீர் கேட்டாள். நானிலன் அவள் அருகில் சென்று அவள் நீர் குடிக்க உதவினான். தர்மதீரன் அவளை உட்காரவைத்து பிடித்துக் கொண்டான்.
“என்னாச்சி கண்ணு?”, ஆச்சி வாஞ்சையுடன் கேட்டார்.
“ஏன் இப்படி செஞ்சீங்க ஆச்சி?”, வல்லகி கோபமாக கேட்டாள்.
“நான் உள்ள மயங்கி கடந்ததும் இதனால தான் கண்ணு…. உனக்கு எல்லாத்தையும் காட்டிட்டேன்.. இனி நீ தான் இத நல்லபடியா முடிச்சி வைக்கணும்…”
“பாரத்தை என்மேல போட்டுட்டு நீங்க எங்க போகலாம்னு இருக்கீங்க?”
“இந்த வேலை முடியரவரைக்கும் எங்கேயும் போகமாட்டேன் கண்ணு…. “
“அப்போ முடிஞ்சப்பறம்?”
“அத அப்ப பேசிக்கலாம் தாயி… வா…. உனக்கு ஏற்கனவே சமைச்சி வச்சிட்டு தான் நான் தேவிய பாக்கவே வந்தேன்… யாத்ராம்மா… இவள தூக்கிக்க மா….”, எனக் கூறிவிட்டு மெல்ல முன்னே நடந்தார்.
மகதனை அவன் இடத்திற்கு செல்ல கூறிவிட்டு மற்றவர்கள் கிராமம் திரும்பினர்.
“என் வெயிட் உங்களுக்கு தெரியுதா யாத்ரா மேடம்?”
“நல்லா தெரியுது வல்லகி… ஆனா சமமா எல்லாமே பரவி இருக்கு…. ரொம்ப பசி எடுக்குதா?”
“ஆமா மேடம்…”
“சும்மா பேர் சொல்லியே கூப்பிடு வல்லகி…”
“சரிங்க யாத்ரா…. உங்களுக்கும் ரொம்ப பசிக்குமா?”
“ஆமா … முன்னவே நான் நல்லா சாப்பிடுவேன். இப்போ அரைமணிக்கு ஒரு தடவ பசிக்குது…. அர்ஜுன் தான் வேட்டையாடி கறி சுட்டு குடுப்பான். அது கொஞ்சம் கூட தாங்கும்”, என கண்ணடித்து கூறினாள் .
இவர்களின் சம்பாசனையை கேட்டு மற்றவர்கள் சிரித்துக்கொண்டே வந்தனர்.
அஜகரன் எல்லையில் தங்கிவிட, மற்றவர்கள் ஆச்சி வீட்டிற்கு சென்றனர்.
“வகி… என்னாச்சி டி?”, பாலா அவளை கண்டதும் ஓடிவந்தாள்.
“ஒன்னும் இல்ல…. கால் வலிக்ககுதுண்ணு யாத்ரா தூக்கிட்டு வராங்க அவ்ளோ தான்…”
“உனக்கு கால் வலியா?”, பாலா சந்தேகமாக பார்த்தாள்.
“நம்பு டி…. “, வல்லகி சிரிப்புடன் கூறினாள்.
“நீ காத்த படிக்கலாம்.. நான் உன் மூஞ்ச வச்சே கண்டுபிடிச்சிருவேன் டி…. முகம் எல்லாம் செவந்து இருக்கு…. இது என்ன மூக்குல இரத்தம்…”, என பதற்றமாக அவள் அருகில் வந்து அவளது உடலை தொட்டுப்பார்த்தாள்.
“என்ன இப்படி நெருப்பா கொதிக்குது… என்ன நடந்தது சீனியர்?”, தர்மதீரணை பிடித்தாள்.
“மயங்கிட்டா பாலா…. மடகாஸ்கர்ல மயங்கின மாதிரி…. இந்த ரெண்டு நல்லவங்க தான் அவள முழிக்க வச்சாங்க..”, என பைரவனையும், கொம்பனையும் காட்டினான்.
“மறுபடியும் என்ன பயங்கரமான விசயத்தை நீ உணர்ந்த வகி?”, கூர்மையாக கேட்டாள்.
“எல்லாருக்கும் ஒண்ணா சொல்றேன் பாலா… இதுக்கு மேல எதுவும் கேட்காத…. “, என கூறி கண்களை மூடிக்கொண்டாள்.
“பயங்கரமான விசயம்-ன்னா இப்படி தான் மயக்கமாவாங்களா தர்மா?”, அர்ஜுன் கேட்டான்..
“நாங்க மடகாஸ்கர் போனப்போ அப்படி தான் ஆச்சி….. சில மணிநேரம் அவள எழுப்பவே முடியல…. அப்பறம் அவளாவே எழுந்தா… அழுதா… அந்த குகைக்கு போகமாட்டேண்ணு பொலம்பினா… ஆனா நாங்க எல்லாரும் அங்க கைதிகள் தான். அவன் சொல்றது மட்டும் தான் கேக்கணும்… எல்லாருமே அந்த அதி அபாயகரமான இடத்துக்கு போனோம்.. எப்படியோ இன்னிக்கி இங்க இருக்கோம். அங்க நடந்தது எல்லாம் நினைச்சா இன்னும் எனக்கு கனவு மாதிரி தான் இருக்கு அர்ஜுன் சார்… ஒருத்தன் இவளோ குரூரமாக இருக்க முடியுமான்னு தான் தோணுச்சு…”, தர்மதீரன் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூறினான்.
ஆச்சி வல்லகி, யாத்ரா இருவருக்கும் வித விதமான உணவுகளை பரிமாறினார். சிறிது நேரத்தில் அர்ஜுனும் அங்கே கலந்து கொண்டான்.
மற்றவர்கள் எல்லாம் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட குடிசையில் குளித்து தயாராகி ஏரன் வீட்டிற்கு சாப்பிட வந்தனர்.
இந்த இடைப்பட்ட நேரத்தில் நாச்சியார் அங்கு நடக்கும் விசயங்களை ஓரளவு கிரகித்து இருந்தாள். நானிலன் மற்றும் நுவலி இருவரும் அவளுக்கு தேவையான விளக்கங்களை கொடுத்திருந்தனர்.
“சோ…. நாம இப்போ லட்சத்தீவு பக்கம் இருக்கற ஒரு குகைய இப்போ கண்டுபிடிச்சு இன்னிக்கி கிளம்பணும் ….. ஆனா இன்னும் உங்களுக்கு முழுசா எந்த விவரமும் கிடைக்கல…”, நாச்சியார் அவர்கள் கூறியது வைத்து கேட்டாள்.
“ஆமா மேடம்…. நம்ம இன்னிக்கி அங்க போனா மட்டும் தான் அம்மன் சிலைய எடுக்க முடியும்… இன்னிக்கி விட்டா பல ஆயிரம் உயிர்கள் மறுபடியும் பலியாகும்…”, நானிலன் தொலைவில் பார்வையைப் பதித்தபடிக் கூறினான்.
“உங்ககிட்ட இருக்கறது ஒரே ஒரு சுவடி தான் நானிலன். அதுல இந்த சிலை விசயம் மட்டும் தான் இருக்கு…. பைரவகாட்ட பத்தி வெறும் முன்னுரை தான் இருக்கு… இத நம்பி எப்படி நீங்க கெளம்ப முடியும்?”
“அக்கா…. இங்க நடக்கற விசயங்கள் எல்லாம் நீங்களும் வந்ததுல இருந்து கவனிக்கறீங்க …. இன்னுமா நம்பிக்கை வரல?”, நுவலி நாச்சியார் முகம் பார்த்து கேட்டாள்.
“அவ அவ்ளோ சீக்கிரம் எதையும் யாரையும் நம்பமாட்டா நுவலி….. நீ போய் சாப்பிடு.. உங்கப்பா வந்துட்டாரு…”, என பேசியபடி வல்லகி அங்கே அமர்ந்தாள்.
“வல்லா ….. உனக்கு விசயம் முழுசா தெரியுமா?”, நாச்சியார் கூர்மையாக பார்த்தபடி கேட்டாள்.
“தெரியும் நாச்சி….. இவங்க எல்லாரையும் விட அதிகமா தெரியும்… இதோட ஆரம்பம் இருந்து…. எப்படி முடியணுங்கற வர எல்லாமே தெரியும்…. “, வல்லகி கூறிவிட்டு பெருமூச்சு விட்டாள்.
“அப்போ நீ எனக்கு முழுசா சொல்லு.. அப்போ தான் நான் ஒரு முடிவுக்கு வர முடியும் வல்லா…”
“நீ இத முழுசா தெரிஞ்சிக்க முடியாது நாச்சி…. இங்க உன்னோட வேல இடத்த கண்டுப்பிடிக்கறது மட்டும் தான்…. இதுக்கு மேல இதுல நீ எதுவும் தெரிஞ்சிக்க வேணாம்… நீ மட்டும் இல்ல, இதுல சம்பந்தம் படற எல்லாருமே அவகவங்க வேலைய மட்டும் தெரிஞ்சிகிட்டா போதும்…. “, வல்லகி கண்டிப்புடன் கூறினாள்.
“நாங்களும் முழுசா தெரிஞ்சிக்க கூடாதா?”, என கேட்டபடி ஆதி, ஆருத்ரா இருவரும் வந்தனர்.
“நீங்க…. அது தெரிஞ்சா உங்களால ஆகவேண்டிய காரியம் எதுவும் நடக்காது ஆதி சார்… ஆருத்ரா மேம்.. தனியா எங்கேயும் இனிமே போகாதீங்க…. ”, வல்லகி ஆருத்ரா கையை பிடித்தாள்.
ஆருத்ராவின் உணர்வுகள் முதல் நினைவுகள் வரை அனைத்தும் ஒரு முறை ஆழ மூச்செடுத்ததில் வல்லகிக்கு தெரிந்தது.
ஆதியின் கைகளை அதே போல அவன் அனுமதி கேட்டு உள்ளங்கையில் வைத்து பார்க்க அவனின் முற்பிறவிகளும் அவளுக்கு தெளிவாக தெரிந்தன.
“வாவ்…. ஆதி சார்…. நீங்க வேற லெவல்…”, என அவனது கையை பவ்யமாக கீழே வைத்தாள்.
“என்ன வல்லகி எல்லாரோட மூச்சையும் பிரிச்சி ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கீங்க போல?”, என கேட்டபடி அர்ஜுன் வந்தான்.
“வாங்க அர்ஜுன் சார்…. இங்க உக்காருங்க…. யாத்ரா மேடம் எங்க?”, அவன் உள்ளகையை திருப்பி பார்க்க, மனிதனும் மிருகமும் சரி சமமாக கலந்த கலவையாக அவன் கையும் மாறத் தொடங்கி இருந்தது.
“வருத்தம் படாதீங்க சார்…. உங்கள பழையபடி முழு மனுஷனா மாத்திடலாம்… அந்த மருந்த ரொம்ப தீவிரமா ஒருத்தன் தேடிட்டு இருக்கான்….”, என கூறியபடி அவன் இதயம் இருக்கும் பகுதியில் தனது உள்ளங்கையை அழுத்தி அவனது மொத்த வாழ்வையும் உள்வாங்கினாள்.
“ஹேய்….. என்னை எல்லாம் நீ ஸ்கேன் பண்ண மாட்டியா வல்லகி?”, என யாத்ரா அங்கே வந்து சேர்ந்தாள்.
“நீங்க இல்லாம இவங்க யாருமே ஒன்னு சேர்ந்து இருக்க மாட்டாங்க யாத்ரா …. நீங்க தான் அத்தனை பேரையும் இணைக்கற ஒரே புள்ளி….. “, என வல்லகி கூறியதும் ஆதி அவளை கூர்ந்து பார்த்தான்.
“ஆதி சார்… அவங்கள நான் சாப்பிட்டுற மாட்டேன்.. அங்க நாச்சி சொல்றது கவனிங்க…. “, என வல்லகி திரும்பி பார்க்காமலே கூறினாள்.
“அத்தனை ரோலும் நீயே செஞ்சா எங்களுக்கு என்ன தான் வேலை வகி?”, பாலா சலிப்புடன் கேட்டுக்கொண்டு வந்தாள்.
“இங்க உனக்கு தெரியாம எதுவும் நான் சொல்லல பாலா…. மொத கைய முழுசா கழுவிட்டு வந்து இந்த பக்கம் உக்காரு…”, அவளை பார்க்காமலே கூறினாள்.
“ஆனாலும் உனக்கு இந்த சூப்பர் பவர் வச்சி எங்களுக்கு ஒரு பிரைவசி இல்லாம போச்சி…. நாச்சிக்கா… இவ சென்ஸ்ஸ் ரொம்ப அதிகமா இங்க வந்ததுல இருந்து வேலை செய்யுது… நான் அந்த கடைசில நினைச்சது இவளுக்கு இங்க தெரியுது…. இது சுத்தமா நல்லா இல்ல….”, என கோபமாக கூறிவிட்டு கைகழுவி வர சென்றாள்.
அனைவருக்கும் சிரிப்பு ஒருபுறமும், கலக்கம் ஒரு புறமும் எழுந்தது.