58 – ருத்ராதித்யன்
ஆருத்ரா ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில் அனைவரும் ஒரு மணிநேரத்தில் தேனி சென்று, அங்கிருந்து இரண்டு ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி நோக்கி பறந்தனர்.
முன்பு நானிலன் தனியாக வந்து கடற்கரையில் நின்று பார்த்துக் கொண்டிருந்த திசையில் இவர்களும் பயணித்தனர். அன்று தனியாளாக வந்து கடலில் சென்று பார்க்க எண்ணிய இடத்தை இன்று ஒரு குழுவாக சேர்ந்து, தங்களின் நோக்கம் அறிந்து சென்று கொண்டிருந்தான்.
ஆதி ஆருத்ரா கூறியபடி, கன்னியாகுமரியில் இறங்கியதும், சொகுசு படகின் உரிமையாளர் எண்ணிற்கு அழைத்து பேசினான்.
ஊருக்கு ஒதுக்குபுறமான கடற்கரை ஓரத்தில் நிழல் தரும் இடத்தில் அனைவரையும் அழைத்து வந்து நிறுத்தி, “பத்துநிமிஷத்துல வரேன்னு சொல்லியிருக்காரு… நீங்க எல்லாரும் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க…..”, எனக் கூறி அர்ஜுனுடன் ஒரு இடத்தில் அமர்ந்தான்.
“ஏன் இவளோ டென்ஷன் ஆதி?”
“தெரியல அஜ்ஜு…. மதியம் இருந்து தலை எல்லாம் ஒரு மாறி இருக்கு…. கோவம் அதிகமா வருது. கை பரபரங்குது… இன்னமும் எனக்கு நாம பண்ற விசயம் புரியல டா…. “
“உங்க மனச தாண்டி உங்க ஆன்மாவ கவனிங்க ஆதி சார்….”, என கூறியபடி வல்லகி அவர்கள் அருகே வந்து அமர்ந்தாள்.
“நீ என் கைய பிடிச்சதுல இருந்து தான் அதிகமா கொழம்புது…. என்ன பண்ண என்னைய?”, ஆதியின் குரலில் உஷ்ணம் நன்றாக தெரிந்தது.
“ஆதி..”, அர்ஜுன் அவன் தோளில் கைவைத்து அமைதிப்படுத்தினான்.
“சாரி வல்லகி.. .என்னால என்னை கன்ட்ரோல் பண்ண முடியல…. எனக்கு என்னாகுது?”
“உங்க நினைவுகள் மேல வருது…. நல்லது தான். அப்போதான் நீங்க முழுபலத்த வெளிப்படுத்துவீங்க….. ஆருத்ரா மேடம் அவன் கைக்கு போனாலும் நீங்க தெளிவா இருந்தா இந்த தடவை நம்ம தோக்கமாட்டோம்…. “, என கூறிவிட்டு ஆதியின் உள்ளங்கைகளை பிடித்து மர்மபுள்ளிகளை அழுத்திவிட்டு, உச்சந்தலையில் அழுத்தியபடி முதுகுத் தண்டில், அடிபாகத்தில் இருந்த மூலாதார சக்கரத்தில் ஒரு தட்டு தட்ட ஆதியின் உடல் வெட்டி எழுந்தது.
அதன்பின் ஆதியின் உடலில் சில மாறுதல்கள் ஏற்படத் தொடங்க, அவன் மெல்ல மெல்ல மயக்க நிலைக்கு சென்றான்.
“அர்ஜுன் சார்… இவர அந்த தீவுல கால் நிறுத்தின அப்பறம் எழுப்பினா போதும். அதுவரைக்கும்…..”, என மென்னகை புரிய அர்ஜுன் தலையசைத்து பொறுப்பெடுத்துக் கொண்டான்.
ஆருத்ரா ஏற்பாடு செய்திருந்த சொகுசு படகு வந்ததும் அனைவரும் அதில் ஏறிக் கொண்டனர். அர்ஜுன் ஆதியை சிறு குழந்தையை போல தூக்கிக் கொண்டு உள்ளே இருந்த ஒரு அறையில் படுக்க வைத்தான்.
இரண்டு அடுக்குகள் கொண்டிருந்த அந்த படகில் மற்றவர்களும் ஆளுக்கொரு அறையை எடுத்துக் கொண்டு உள்ளே சென்று உடமைகளை வைத்துவிட்டு வந்தனர்.
அவர்களுக்காக சூடாக உணவு தயாரித்து பரிமாறப்பட்டது. வல்லகி நன்றாகவே சாப்பிட்டு சிறிது நேரத்தில் தனக்கு பிறைசூடன் கொடுத்த சிலம்ப குச்சியை எடுத்து சுற்றத் தொடங்கினாள்.
மற்றவர்கள் சாப்பிட்டபடி அவளை பார்த்துக் கொண்டிருக்க, அர்ஜுன் அவள் அருகில் சென்று அவள் சூழற்றும் விதத்தை கவனித்துக் கொண்டிருந்தான். தனக்கும் சுற்ற தெரிந்தாலும் வல்லகி சுற்றுவது இன்னும் நுணுக்கமாக இருப்பதுடன், நிறைய வித்தியாசங்கள் இருப்பதை புரிந்து கொண்டு அவளிடம் விளக்கம் கேட்டான்.
அவளும் வர்மத்தை கலந்த இந்த சிலம்ப சுற்றதலை அவனுக்கு விவரிக்க, அர்ஜுன் சட்டென அதன் மூல கருவை பிடித்து அவளை போலவே சுற்றி காட்டினான்.
“வாவ் அர்ஜுன் சார்…. செம்ம …. எப்படி ஒரு தடவைல பாயிண்ட் பிடிச்சீங்க?”
“தெரியல வல்லகி…. நீ சொல்ல சொல்ல எனக்கு இது இப்படி தான்னு ஒரு புரிதல் தோணுச்சு அதான் அத வச்சி செயல்முறை செஞ்சி பாத்தேன். வர்மக்கலை உனக்கு நல்லா தெரியும்ன்னு தர்மதீரன் சொன்னாரு. எனக்கு சொல்லி தர முடியுமா இப்ப?”
“சிலது மட்டும் இப்ப சொல்றேன் … மிச்சம் எல்லாம் யாத்ரவையும் வச்சிட்டு சொல்லி தரேன்..”, என கூறிவிட்டு சில மர்ம புள்ளிகளையும் அங்கே எப்படி அடித்தால், என்ன ஆகுமென்று கூறினாள்.
“இத பாதி கத்துக்கிட்டாலே அசால்ட்டா எந்த எடத்துல இருந்தாலும் தப்பிக்கலாம் போலவே…. இத நம்ம பசங்க எல்லாருக்கும் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு பண்ணனும்..”, அர்ஜுன் அவள் சொல்லிக் கொடுத்தவற்றை வைத்துக் கூறினான்.
“உண்மை தான் அர்ஜுன் சார்….”
“என்னை பேரு சொல்லியே கூப்பிடு வல்லகி… சார் சொன்னா நல்லாவே இல்ல…..”, என கூறிவிட்டு அவன் சாப்பிட சென்றான்.
அவன் உடலில் ஏற்பட்டுவரும் மாறுதல்கள் எல்லாம் அவனை மனதளவில் பாதித்துக் கொண்டிருக்கிறது என்பது வல்லகிக்கு தெளிவாக புரிந்தது. அவனை பலமாக உணர செய்தே ஆகவேண்டும் என்றும் புரிந்தது. யாத்ராவை நினைத்து அதிகம் வருந்திக் கொண்டிருக்கிறான். ஆனால் இது காலத்தின் கட்டளை, யாரும் மீற முடியாதல்லவா?
“என்ன வல்லா? அவரு ஓக்கே தானே?”, நாச்சியார் அருகில் வந்து கேட்டாள் .
“இல்ல நாச்சி… இவங்க யாருமே ரெடியும் இல்ல, அவன எதுக்கர அளவுக்கு பலமாவும் இல்ல….. கண்மயா ஒருபக்கம் அவ கஸ்ஸின் நினைச்சி அழுதுட்டு இருக்காங்க, அர்ஜுன் யாத்ராவ நினைச்சி கவலைல இருக்காரு, அதோட அவர் குடும்பத்தை சுத்தி இருக்கிற ஆபத்த நெனைச்சும் வருத்தத்துல இருக்காரு. ஆதிக்கு என்னன்னே இன்னும் பிடிபடல…. எல்லாரும் போறாங்க நானும் பின்னாடி பாதுகாப்புக்கு போறேன-ன்னு வந்துட்டாரு…. ஆருதராவுக்கு ஓரளவு விசயம் புரிஞ்சதால அவங்களால் முடிஞ்ச உதவிய செஞ்சிட்டு இருக்காங்க….. ஆனா இது எதுவுமே அவன் முன்னாடி தூசி தான்…. எப்படி இந்த வேலைய முடிப்போம்ன்னு தெரியல….”, வல்லகி கூறிவிட்டு கீழே கால் நீட்டி அமர்ந்தாள்.
“எனக்கும் ஒன்னும் புரியல வல்லா…..”, அவள் அருகில் அமர்ந்து அவளை தன் மடியில் படுக்கவைத்து கொண்டாள்.
“எனக்கு தெரிஞ்சாலும் அதை நான் முழுசா சொல்ல முடியாது நாச்சி….உன் உதவி இன்னிக்கி ரொம்ப அவசியம்…. சின்ன விசயத்த கூட நீ விடாம கவனிச்சு எங்கள கூட்டிட்டு போகணும். ….”
“என்னால முடிஞ்ச எல்லாமே நான் செய்வேன் வல்லா…ஆனா உனக்கு ஒரு ஆபத்து வந்தா நான் உன் பேச்சை கேக்கறது கஷ்டம்… உன்னை நீ பத்திரமா பாத்துக்கணும்… பிராமிஸ் பண்ணு….”
“எனக்கு இந்த விஷயத்துல ஒன்னும் ஆகாது
நாச்சி… என்னை தேடி பல கும்பல் வரும். அது கிட்ட இருந்து நான் தப்பிக்கணும் . அது தான் கொஞ்சம் கஷ்டமான வேலையா இருக்கும்… ஆனாலும் இந்த மாற்றம் எனக்கு பிடிச்சி இருக்கு. வாழ்க்கையோட போக்குல போறது நல்லா இருக்கு. நமக்கு நல்லதும் கூட…… “, என கூறி சிறிதுநேரம் கண் மூடி தூங்கினாள்.
நடு இரவில் தான் அந்ததீவில் இறங்க வேண்டும் என்பதால் அனைவரும் சற்று உறங்கி எழுந்தனர். நாச்சியார் நானிலன் மற்றும் நுவலியின் உதவியுடன், அந்த தீவை சரியாக அடையாளம் கண்டு, படகை செலுத்துபவரிடம் இடத்தின் குறியீட்டை கொடுத்தாள்.
“இந்த தீவா? இங்க மனுஷங்க போகவே முடியாது மேடம்…. நிறைய மிருகங்க தான் காடு முழுக்க சுத்திட்டு இருக்கு…. போனா உயிரோட கொஞ்ச தூரம் கூட நடக்க முடியாது. ஏற்கனவே இங்க அரசாங்கம் பல தடவை முயற்சி பண்ணி பல நூறு பேர பலி குடுத்துட்டு, இப்போ இங்க யாரும் போக கூடாதுன்னு தடை பண்ணிட்டாங்க….. “
“எங்களுக்கு ஒன்னும் ஆகாது கபாலி….. நீங்க அந்த தீவுக்கு எவ்ளோ பக்கம் போக முடியுமோ போங்க …. சின்ன படக வச்சி நாங்க அங்க போறோம்… நாளைக்கு காலைல வந்துடுவோம்….”, என கூறியபடி ஆதி அங்கே வந்தான்.
அவன் முகத்தில் எப்போதும் இல்லாத ஒரு தெளிவும் நிதானமும் குடிவந்திருந்தது. உடலும் முறுக்கேறி எப்போதும் தாக்க தயார் என்பது போல இருந்தது. அர்ஜுன் அவன் பின்னோடு வந்து அவனை தூக்கி சுற்றினான்.
“டேய்.. போதும் இறக்கி விடு டா…”, என கூறிவிட்டு, அனைவரும் அணிந்துக்கொள்ள யாழனும் கண்மயாவும் தயாரித்திருந்த பாதுகாப்பு கவசம் போன்ற ஆடையை அணிந்து கொண்டனர். அர்ஜுன் மகதன் கொடுத்த நகத்தை கழுத்தில் கட்டிக்கொண்டான். கண்மயா தான் கொண்டு வந்திருந்த திரவத்தை அனைவரின் மேலும் தெளித்துவிட்டு, காயம் ஏற்பட்டால் தடவிக்கொள்ள ஒரு மருந்து குப்பியும் கொடுத்தாள் .
அவர்கள் வந்திருப்பது பல நூறு வருடங்களாக மனிதர்களின் காலடித் தடம்படாத ஒரு தனி தீவு. அங்கே எந்த மாதிரியான பூச்சிகள், விலங்குகள் இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. அவைகள் இடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள இவர்களுக்கு சில உபகரணங்கள் தேவை தானே? கண்மயாவும் யாழனும் ரிஷித் செய்து வைத்திருந்த தற்காப்பு திரவத்தினை முதன்மையாக வைத்து, யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இதனை தயாரித்து இருந்தனர்.
நுவலி தன் குலதெய்வமான வனயட்சி தேவியிடம் அனுமதி பெற சிறு பூஜையினை செய்து, உத்தரவிற்காக காத்திருந்தாள்.
பதினைந்து நிமிடங்கள் கழித்து ஒருபெரிய மயில் இறகு அவள் மஞ்சள் குங்குமம் வைத்திருந்த தட்டில் விழுந்தது.
அனைவரும் அதிர்வுடன் இங்கே மயிலா என்று வியந்து சுற்றும் முற்றும் பார்த்தனர். ஒரு பெரிய ஆண் மயில், கனத்த தோகையுடன் அவர்களின் சொகுசு படகின் விளிம்பில் நின்று கூவியது. நுவலி அதீத சந்தோசத்துடன், “ தேவி அனுமதி குடுத்துட்டா…. இந்த மயில் போற பக்கம் போகலாம் வல்லகிக்கா….”, என கூறினாள்.
அவர்கள் சிறிய இரண்டு படகுகளை இறக்கி தீவை நோக்கி சென்றனர். மயில் அவர்களுக்கு முன் பறந்து தீவின் தெற்கு பக்கம் சென்று அமர்ந்தது. அவர்களும் படகைத் திருப்பிக் கொண்டு மயிலை பின்பற்ற, எந்த இடைஞ்சலும் இன்றி தீவின் கரை பக்கமாக நெருங்கினர்.
ஆதி முதலில் இறங்கி நாச்சி, நுவலி இருவரையும் கைக்கொடுத்து இறக்கி விட்டான். அர்ஜுன் நானிலன் கண்மயாவை இறக்கி விட, வல்லகி படகில் இருந்தபடியே ஆழ மூச்சை உள்ளே இழுத்தாள்.
அந்த தீவில் சுத்தமான காற்று இருப்பது தீவின் பக்கம் வர வரவே அவளுக்கு தெரிந்தது. எந்த வகையான நச்சும் அந்த காற்றில் கலந்திருக்கவில்லை. மிகவும் சுத்தமாக இருந்தது.
உள்ளே பல விதமான மிருங்கள் இருப்பதை வாசனைகள் மூலம் உணர்ந்தாள். தீவின் வடகிழக்கில் தான் அதீதமான மல்லியின் வாசனை வருகிறது. அங்கே தான் அம்மன் சிலை இருக்க வேண்டும் என்று நினைத்து அவள் மண்ணில் கால் வைத்ததும், உள்ளிருந்து பலமான உறுமல் சத்தம் இவர்களுக்கு கேட்டது.
அது….