59 – ருத்ராதித்யன்
வல்லகி சின்ன சிரிப்புடன் மண்ணில் அழுந்த கால் பதித்து, தன் குச்சியை முதுகில் மடக்கி மாட்டிக் கொண்டாள்.
“நாச்சியார்….. “, ஆதி அழைக்கவும் அவள் காட்டினையும், தீவினையும் ஒருமுறைப் பார்த்து மனதிற்குள் நமஸ்கரித்து விட்டு, முன்னே நடந்தாள்.
“அர்ஜுன்… நீங்க நாச்சியா பின்னாடி போங்க…. நான் கடைசியா வரேன்.. நமக்கு நடுவுல தான் இவங்க வரணும்….”, வல்லகி கீழிருந்த மண்ணை எடுத்து நுகர்ந்தபடிக் கூறினாள்.
“நான் கடைசியில் வரேன் வல்லகி….”, ஆதி.
“இல்ல ஆதி… நீங்க முன்ன போனா தான் நம்மளால காட்டுக்குள்ள போகமுடியும்.. நீங்களும், அர்ஜுனும் தான் இந்த தீவோட சாவி….”, எனக் கூறி முன்னே அவர்களை அனுப்பினாள்.
மனம் தடக் தடக் என அடித்துக் கொள்ள அனைவரும் மெல்ல மெல்ல சருகையும் சலனப்படுத்தாமல் நடந்துச் சென்றனர்.
நுவலி காட்டிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் இந்த தீவுக்காடு அவளைப் பயம் கொள்ளவைத்தது. நானிலன் மேகமலையில் ஜனங்களின் மத்தியில் இருந்த போதே இரவு பயத்துடன் தான் படுத்திருப்பான், இப்போது அவனது இதயத்துடிப்பு அதிகமாக அடிப்பது அவனுக்கே கேட்டது என்று தான் கூற வேண்டும்.
கண்மயா இதுபோன்ற அடர்ந்த வனங்களுக்கு இதுவரை சென்றதில்லை என்பதால் ஆச்சர்யமும், பயமும் கலந்த உணர்வுடன் சென்றாள்.
கடந்த சில மாதங்களாக நாச்சியார் தன் குழுவுடன் அடர்காடுகளில் தான் பயணம் செய்தால் என்பதால் பயம் இல்லை என்றாலும் மனதில் எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டே இருந்தது. மிருகங்களின் வாசனை அவர்கள் காட்டிற்குள் நுழையும் போதே அனைவருக்கும் மூக்கில் ஏறியது.
வல்லகியும் எச்சரிக்கையுடன் பின்னாலும் பக்கவாட்டில் பார்வையைச் சுழற்றியபடி நடந்தாள்.
இவர்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட உணர்வுகளோடு ஆதியும், அர்ஜுனும் நடந்துக் கொண்டிருந்தனர். அவர்கள் மனதில் பயம் இல்லை, ஆச்சர்யம் இல்லை, எதிர்பார்ப்பும் இல்லை, தன் பலநூறாண்டு கால கடமையை செவ்வனே செய்யவேண்டும் என்ற மனத்தீர்வுடன் மிருகங்களின் வரவை எதிர்பார்த்தபடிப் பார்வையைச் சுழற்றிக் கொண்டு நடந்தனர்.
“நம்ம போற வழில மிருகம் இல்லாம இருந்தா ஈசியா எடுத்துட்டு போலாம்ல நுவலி?”, நானிலன் மெல்லக் கூறினான்.
அனைவரும் காட்டின் முதல் பகுதிக்குள் இருந்தனர். அந்த தீவு பார்க்க வட்டமாக இருப்பது போல தெரிந்தாலும், அந்த நிலம் ஐந்து பாகமாகப் பிரிந்திருந்தது. மேலே நிலப்பகுதி ஒட்டியது போல தோற்றம் கொண்டிருந்தாலும், கால் வைத்தால் கடலில் தான் மூழ்க வேண்டும். மெல்லிய கோடாக தான் நிலம் இணைந்து இருந்தது.
ஒவ்வொரு பகுதியிலும் ஜிக்-ஜாக் (இக்கடைசியில் இருந்து அக்கடைசி வரை ஒவ்வொரு பகுதியையும் நடுமையத்தை தொட்டே கடக்க வேண்டும்) ஆக தான் நடந்துக் கடக்க வேண்டும். ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு மிருகங்கள் இருக்கின்றன.
முதல் பகுதியின் உள்ளே காலடி எடுத்து வைத்து இருபது அடிகள் உள்ளே சென்றனர். எங்கிருந்தோ இரண்டு ஓநாய் ஓடி வந்தது. வல்லகி தன் வலப்பக்கம் வருவதைப் பார்த்துவிட்டு, “ஓடுங்க..”, எனக் கத்தினாள்.
அந்த ஓநாய் அவளை தான் சரியாகக் குறிவைத்து வந்து அவளின் மேல் தாவியது. அவள் நொடியில் தன் குச்சியை எடுத்து ஓநாய்யை தாக்கி சற்று தூரம் தள்ளிக் கொண்டு சென்றாள்.
நாச்சியார் பதற்றமாக வல்லகியை நோக்கி ஓடும் போதும் எதிற்பக்கமாக இன்னொரு ஓநாய் வந்து அவளின் மேல் பாய வந்தது.
அர்ஜுன் சரியாக அவளின் முன்னே வந்து அந்த ஓநாயின் முன் இரண்டு கால்களை பிடித்துத் தூக்கி எறிந்தான். அது சற்று தூரமாக வல்லகி பக்கம் விழுந்து, அதே வேகத்தில் அவளை தாக்கப் பாய்ந்தது. அர்ஜுனும், வல்லகியும் ஓநாய்களுடன் போராடிக்கொண்டிருந்தனர்.
கண்மயா மயக்கமருந்து இருக்கும் ஊசியை நுவலியிடம் கொடுத்து ஊதுகுழல் மூலமாக ஓநாய் உடலில் செலுத்தச் சொன்னாள்.
நுவலி ஒரே ஓநாய் மேல் நான்கு முறை ஊசி செலுத்தியும் அதற்கு மயக்கம் வரவே இல்லை. கண்மயா அதிர்வுடன் நுவலியைப் பார்க்க, ஆதி நுவலி கையில் இருந்த ஊதுகுழல் வாங்கி, சற்று தூரத்தில் இருந்த ரத்தசிவப்பில் இருந்த கொடியில் இருந்தப் பழத்தை நசுக்கி ஊசியில் தேய்த்து ஓநாய் கழுத்தைக் குறிவைத்து ஊதவும் அது மயங்கிச் சரிந்தது. இன்னொரு ஓநாயையும் அப்படியே மயங்கவைத்துவிட்டு அனைவரும் மீண்டும் சுற்றிலும் பார்த்தனர்.
“வல்லா.. உனக்கு ஒன்னும் இல்லயே…”, நாச்சியார் பதற்றமாகக் கேட்டாள்.
“எனக்கு ஒன்னும் இல்ல நாச்சி… அதிக நேரம் இங்க நிக்கவேணாம்… ஆதி சார்… உங்களுக்கு ஞாபகம் வந்துறிச்சா?”
“இல்ல வல்லகி…. எனக்கு அந்த பழச்சாறு மயக்கம் கொடுக்கும்ன்னு தோணுச்சு….”, அந்த பழத்தைக் கீழே போட போனவனைக் கண்மயா தடுத்து பையில் வைத்துக் கொண்டாள்.
“இந்த காட்ல என் மருந்து வேலை செய்யாது போல.. இத ஏன் கீழ போடணும்…. இன்னும் கொஞ்சம் பழத்தை பரிச்சிக்கலாமா ?”, எனக் கேட்டாள்.
“இல்ல கண்மயா… இந்த பழம் எல்லாத்துக்கும் மயக்கத்த குடுக்காது…. இத சுமக்க தேவையில்லை….. “, அர்ஜுன் அந்தப் பழத்தை முகர்ந்துப் பார்த்துக் கூறினான்.
“நாம எப்படி சிலைய எடுத்துட்டு பத்திரமா திரும்பி வரது?”, நானிலன் கேட்டான்.
“இந்த தீவ பாத்தாலே வித்தியாசமா இருக்கு நிலன்… இது செயற்கையா உருவாக்கப்பட்டு இருக்கு… பாருங்க இந்த இடம் கால் வச்சா உடையுது, என ஓநாய் மயங்கி கிடந்த இடத்திற்கு அருகே கால் வைத்துக் காட்டினாள்.
“கடலுக்கு நடுவுல எப்படி? யாருமே கிட்ட வரமுடியலன்னு சொல்றாங்களே…. அந்த உடைஞ்ச இடத்துக்கு இந்த பக்கமும் அந்த பக்கமும் வலுவான கெட்டி நிலம் தான் இருக்கு….”
“இங்க கடல் தண்ணி வரதுக்கு முன்னேயே இது மலையா உருவாக்கப்பட்டு இருக்கணும்… கடல் வந்ததும் இப்போ தீவா மாறிடிச்சி…”, அர்ஜுன் தனது ஊகத்தைக் கூறினான்.
“என்ன சார் சொல்றீங்க? மலைய எப்படி உருவாக்க முடியும்?”, நானிலன் கேட்டான்.
“கடல்ல தீவ உருவாக்கறப்போ, நிலமா இருக்க இடத்தில மலைய உருவாக்க முடியாதா?”, என அர்ஜுன் கேட்டதும் அனைவரும் சிந்தனையுடன் அவனைப் பார்த்தனர்.
“அர்ஜுன்… நீங்க சொல்றது போலவே கூட இருக்கலாம்… ஆனா இந்த பிளவு எனக்கு ரொம்பவே ஆச்சர்யமா இருக்கு.. இந்த தீவுல பல மிருகங்க உலாவுறதும் நல்லாவே உணரமுடியுது… நம்மகிட்ட இருக்க எந்த மருந்தும் நமக்கு உபயோகம் ஆகாம போய்ட்டா நம்ம தற்காப்புக்கு என்ன பண்றது?அடுத்து எப்படி உள்ள போறது?”, நாச்சியார் கேட்டாள் .
“நாச்சி…. ஆதி சார் நம்மளோட இருக்கறப்ப அந்த கவலை யாருக்கும் வேணாம்… நேரம் கடத்தவேணாம்…. எக்ஸ்ட்ரா லைட் எல்லார் கையிலையும் இருக்கட்டும்…. ஆதி சார் நீங்க முன்ன போங்க.. நாச்சி உன் வழிகாட்டுதல் ரொம்ப கூர்மையா இருக்கணும் இனிமே…. “, வல்லகி அனைவரையும் எச்சரித்தபடி முன்னேற கூறினாள்.
“நுவலி நீ கண்மயாவுக்கும் நானிலனுக்கும் நடுவுல தான் நடக்கணும்…. ஆச்சி குடுத்த குடுவை மருந்த எல்லாரும் குடிங்க…. “, அர்ஜுன் கூறினான்.
“எந்த மருந்து அண்ணா?”, நுவலி கைகளில் பச்சை, சிவப்பு, கருப்பு இலை போட்டு மூடிய மூன்று குடுவைகள் இருந்தன. அனைவரின் கைகளிலும் அதே போல மூன்று குடுவைகள் இருந்தன.
“கருப்பு….. ம்ம் சீக்கிரம்….”, அர்ஜுன் அவசரப் படுத்தினான்.
அனைவரும் அவன் சொன்னது போல குடித்து முடித்ததும் இரண்டு ஓநாய் கூட்டம் அவ்விடம் வந்தது.
மற்றவர்கள் அதைக் கண்டு அதிர்ந்து பின்னால் நடக்க, அர்ஜுன் அமைதியாக அப்படியே நிற்கும்படி செய்கை செய்தான்.
மெல்ல மெல்ல ஓநாய்கள் அவர்களை நெருங்கி முகர்ந்து பார்த்தன. வியர்வை வழிய பயத்துடன் நானிலன் நடுங்கும் கால்களையும் கைகளையும் இறுக்கிக் கொண்டு நின்றிருந்தான்.
நுவலியின் மேல் வந்த ஒருவித மூலிகை வாசம் அவளை விட்டு ஓநாய்யை விலகி நிற்க வைத்தது. நாச்சி அமைதியாக கத்தியில் கைவைத்தபடி அப்படியே நின்றாள்.
அர்ஜுன் அருகில் வந்த ஓநாய்கள் அமைதியாக அடுத்தவர்கள் பக்கம் சென்றன.
இங்கே இவர்கள் ஓநாய்களுக்கு நடுவில் நின்ற சமயம் யாத்ரா வனதேவி குகைக்கு அஜகரன் உடன் சென்றாள்.
அவள் உள்ளே சென்றதும் அஜகரன் திரும்பி வந்து கிராம எல்லைக்கு சென்றுக் காவல் காக்கத்தொடங்கியது.
கண்மயாவை நள்ளிரவில் ஆருத்ராவுடன் வரச்சொல்லியும் அவள் இன்னும் வராத கோபத்தில் அந்த கிராமத்தின் எல்லையில் வந்து நின்றான் ரிஷித்.
பைரவன் முதல் கொம்பன் வரை அனைவரும் காவல் வேலையில் இருக்க, அவன் வாசனையை உணர்ந்ததும் கொம்பன் உடல் விறைத்து வேகமாக அவன் இருக்கும் இடம் நோக்கி ஓடி வந்தது.
கிளிகளும் கூட உறங்காமல் மரத்தில் அமர்ந்து கத்திக் கொண்டிருந்தன. திடீரென எழுந்த பறவைகளின் ஒலியில் வனயட்சி ஆச்சி எழுத்து ஜன்னல் வழியாகப் பார்த்தார்.
அவனும் அவரைத் தான் பார்த்தான் போலும், அப்படி ஒரு குரூர சிரிப்பு அவனிதழில் உதித்தது.
ஆச்சி ஒரு நொடி உள்ளம் நடுங்கி, அவனைக் கூர்ந்துப் பார்த்தார்.
“என்ன கிழவி சௌக்கியமா? இத்தனை ஆண்டுகள் நீ உயிருடன் இருக்கிறாய் என்றால் அந்த மூலிகை கலவையை வெற்றிகரமாக கண்டுபிடித்து விட்டாய் என்று தானே அர்த்தம்…இம்முறை உன்னை மட்டும் அல்லாமல் இந்த இயற்கையை காக்க நினைக்கும் அனைவரையும் என் ஆராய்ச்சி கூடத்தின் எலிகளாக ஆக்குகிறேன்… எங்கே அவள்? அவளின் நெஞ்சத்தில் உறைந்து இருக்கும் முக்கிய நாடியை உருவி எடுத்து, என் கைக்காப்பில் கோர்த்துக் கொள்ள வந்திருக்கிறேன்….. அவளை எங்கே மறைத்து வைத்திருக்கிறாய்? இந்த ஜென்மத்திலும் நீ எனக்கே அடிமையாக சேவகம் செய்ய வேண்டும்…”, என இகழ்ச்சிச் சிரிப்புடன் கூறினான்.
“அது எப்படி முடியும் அபராஜித வர்மா? ஈசனும் அம்மையும் இணைந்து இயக்கும் இந்த இயக்கத்தை கேவலம் ஒரு வஞ்சம் கொண்ட நெஞ்சம் கொண்டவன் தடுக்கத் தான் முடியுமா? அவர்கள் கூடலை முடக்கத்தான் முடியுமா?”, என கேட்டபடி ஆருத்ரா அவன் முன்னே வந்து நின்றாள்.
அவள் கண்களில் ஒளிரும் தீயை அவன் நேருக்கு நேர் பாக்கிறான். அவளின் எழில் கொஞ்சும் தேகத்தையும் ஆராய்ந்தவன், அவள் அருகே ஓரடி எடுத்து வைக்க கொம்பன் அவன் முன்னால் வந்து நின்று உருமினான்.
கொம்பனின் பின்னால் பல நாய்கள் கண்களில் கோபத்துடன் நின்றன. அவனின் துர்எண்ணம் அவர்களுக்கு புரிந்துவிட்டது போல…. அவனை ஓரடி கூட நகர விடமாட்டோம் என்பது போல வளர்ந்த நாய்கள் அவனைச் சுற்றி நிற்க பைரவன் அவளின் அருகே வந்து அவளை கையில் ஏந்த சொல்லித் தாவி, அவளின் தோளில் வாகாகச் சாயிந்து கொண்டு அவனைப் பார்த்தான்.
“ஹாஹா ஹாஹாஹாஹா …. இவைகள் உன்னை காக்குமா சிங்கமாதேவி? சிங்கமும் புலியும் எனக்கு கீழே பூனையாக கிடக்கும்.. கேவலம் நாய்கள் என்னை என்ன செய்யும் என்று நினைக்கிறாய்?”
“உன் நோக்கம் இன்று நிறைவேறாது அபராஜிதா….. திரும்பி செல்….. வரும் துர்கா பஞ்சமியில் எங்களை எதிர்கொள்ள காத்திரு….. உயிரை விடும்முன் ஓர் வாய்ப்பு இயற்கை உனக்கு கொடுக்கிறது… அதை பயன்படுத்திக் கொள்…. மீண்டும் முட்டாளாகவே மடிந்து போகாதே….”, சிங்கமாதேவியின்ன் குரல் கர்ஜனையாய் ஒலித்தது. அஜகரனின் உடல் அவன் அந்த எல்லையைக் கடக்க முடியாதபடி தடுத்து நின்றது.
மொத்த இயற்கையும் அவன் முன்னால் நின்றது அவனைத் திருந்தச் சொல்லி…. திருந்தும் ஜென்மமா அவன்???