60 – ருத்ராதித்யன்
“என்னை வெல்ல முடியும் என்று நினைக்கிறாயா தேவி? இத்தனை பிறவிகள் கடந்து என் லட்சியத்தை அடையும் வழியுடன் கூடிய சக்தி வாய்ந்த மெய்ப்பொருளையும் கண்டுப்பிடித்து வந்திருக்கிறேன்…. உன்னால் என்னை தடுக்க முடியுமா?”, ரிஷித் கண்களில் எரியும் வன்மத்துடன் பேசினான்.
“இத்தனை பிறவிகள் கடந்தும் நீ திருந்தவில்லை என்பது வருத்தம் கொள்ளும் விசயம் தான் அபராஜிதா…. ஆனால் இன்று காலம் இந்த பக்கம் இருக்கிறது. நீ முழுபலத்துடன் மோது… உன்னை எதிர்க்க உன்னில் பாதி பலம் போதும்…..”
“ஹாஹாஹா…. என்னில் பாதியா? சிங்கமாதேவி….. உனக்கு நான் முழு பலத்தையும் கொடுக்கிறேன்…. அதை வைத்து என்னை இம்முறை நீ வென்றுவிட்டால், இனி நான் இயற்கையின் அடிமை என ஆத்மசாசனம் எழுதி தருகிறேன்… நீ தோற்று விட்டால்?”, என ஏளனச் சிரிப்புடன் கேட்டான்.
“ஆத்மசாசனம் எழுத தயாராகி கொள் அபராஜித வர்மா….. இயற்கை துளிர்க்க வைக்கும் செடியின் உரமாக உன்னை மாற்றி, உன் பாவங்கள் கழிய வழி செய்கிறேன்….”, என அவன் திரும்பிச் செல்ல வேண்டிய பாதையைக் கைக்காட்டிவிட்டு பைரவனைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டாள்.
“சிங்கத்துரியன் பற்றி நீ கவலை கொள்ளவில்லை போலவே தேவி….. அருவமாக மிதக்கும் அமரபுசங்கனின் ஆத்மா இம்முறை முக்தி பெறவில்லை எனில் இந்த உலகம் எத்தனை பாவத்தை பெறும் தெரியுமா? “, என அவன் கூறியதும் சிங்கமாதேவி அவன் அருகில் வந்து, “அதர்வனத்தையும் தொட்டுக் கொண்டு உயிர்களை ஆட்டுவிக்கும் மமதையா ? முக்கியமான விதியை நீ மறந்து விட்டாய் போலவே….. அதர்வனத்தை அதர்மத்திற்காக தொட்டவன் கதை எல்லாம் எப்படி முடிந்தது என்று அறிவாயா? உன் எந்த மந்திரமும் எங்கள் தளபதிகளின் முன்னால் எடுபடாது… உடன் உன் தந்திரங்களும்….. இனி ஒரு உயிர் உன்னால் வலி கொண்டாலும், உன் உயிர் சுமக்கும் வலி இந்த யுகத்தில் யாரும் கண்டிருக்கமாட்டர்கள்….. அக்கிழவியை வைத்து தானே சென்றமுறை எனை குறுக்குவழியில் அழைத்து சென்று உயிர் துறக்க செய்தாய்…. நீ எனக்கு கொடுத்த மொத்த வேதனையும் இப்பிறவியில் பிறந்தது முதல் தாங்கி உரமாக்கி வாழ்ந்து வருகிறேன்…. இம்முறை உனக்கு நான் வாய்ப்பு தருகிறேன்… முடிந்தால் முயன்று பார் இயற்கையின் உயிர் குடிக்க….”, எனக் கம்பீரமும், திமிரும் விழிகளில் பொங்க, தேயாத மென்னகையுடன் அவன் முகத்தின் அருகே வந்துக் கூறினாள்.
அவள் அருகாமையில் அவன் சிந்தைக் கட்டுக்கடங்காதக் கோபமும், தாபமும், வன்மமும் கொண்டு அவள் கழுத்தைப் பிடிக்க கை உயர்த்தினான்.
உயர்ந்த கையை எங்கிருந்தோ ஒரு வேரால் செய்யப்பட்ட சாட்டை அவனைத் தூக்கி வீசியது…
சிங்கமாதேவியின் முன்னே முழுதாக வளர்ந்த உடலும், வலுத்த தின்மையும், விடைத்த நாசியில் கோபாக்கினியைக் கக்கியபடிக் குதித்து நின்றாள் யாத்ரா…
அவளைக் கண்ட ரிஷித், கண் இமைக்கவும் மறந்து, அவளை அணுஅணுவாக அளந்தான்.
“என் கண்டுபிடிப்பு…”
“இல்லை…. இவள் என் தளபதி….. எங்கள் உயிரணுவில் முழுமைபெற்று இங்கே நிற்கிறாள்…. இயற்கையை காப்பதற்கென்றே உருவாக்கப்பட்டவள்…. உன்னால் அழிந்த உயிர்களுக்காக உன்னை கயிறாக திரிக்க உருப்பெற்று வந்திருக்கிறாள்….”
முழுதாக 8 அடிக்கும் அதிகமாக வளர்ந்து, வலுவேறிய தோளும், இறுகிய உடலும், நீண்ட விரல்களும், சிறுத்தையின் வேகமும், புலியின் யுக்தியும், சிங்கத்தின் தோரணையும் என விலங்கும் மனிதனும் கலந்த முழு கலவையாக யாத்ரா அங்கே நின்றாள்.
அவளைக் கண்டதும் தீரன் ஓடி வந்து அவள் அருகில் நிற்க, மகதனும் மறுபக்கம் நின்று அவனை முறைத்தான்.
அவளை எப்படி வர்ணிப்பதென தமிழும் தான் திணறி நிற்கிறது அந்நொடியில்…. இப்படியொரு விஸ்வரூப கம்பீரத்தை இதுநாள் வரையில் பார்த்ததில்லை காலம். இயற்கையின் மொத்த வனப்பும், பலமும் அவளின் இரு கண்களில் வெளிப்பட, இயற்கையின் கோபமும், சீரலும் அவளது மூச்சில் வெளிப்பட்டது.
இன்னும் ஒரு அடி நீ முன்னேற நினைத்தால் கூட காற்றில் கரையும் அளவிற்குத் துண்டாக்கி விடுவேன் என்பது போல அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என் கண்டுபிடிப்பை நீ எப்படி உன்னுடையதென கூறலாம் தேவி?”
“இவள் உன் கண்டுபிடிப்பில் உயிர் வாழவும் இல்லை, இங்கே இப்படி நிற்கவும் இல்லை… நீ உன் நூறு பிறவிகளின் நினைவுகளை தேடி எடுக்கும் போது, நான் எனது 10 பிறவிகளின் நினைவுகளை தேடியிருக்க மாட்டேனா ?”, சிங்கமாதேவி யாத்ராவின் முன்னே வந்து நின்றுக் கூறினாள்.
அபராஜிதன் எனும் ரிஷித் கண்களில் கோபம் பொங்க அவளைப் பார்த்தான்.
“இன்னொன்றும் தெரிந்து கொள்…. என்னவர் அம்மையை தேடி சென்றுவிட்டார்… முடிந்தால் அவரை இனி தடுத்து பார்…. உன் முழு பலமும் உனக்கு கிடைக்க நான் வழி சொல்லட்டுமா?”, எனக் கேலியாக வினவியபடி தன் குடில் நோக்கிச் சென்றாள்.
யாத்ராவும், மற்ற உயிர்களும் அவனை மறித்து அப்படியே தான் நின்றனர். அவன் செல்லும் தேவியை வன்மம் பொங்க பார்த்துவிட்டு, “கிழவி….. இப்போது நன்றாக கேட்டுக் கொள்…. அமரபுசங்கன் ஆத்மா கூட இம்முறை மிஞ்சாது….. எனக்கே ரெட்டை ஆட்டம் காட்டுகிறாயா ?”, என அவன் கிழவி இருக்கும் பக்கம் பார்த்துக் கூறிவிட்டு மடமடவென சென்றான்.
“ராஜ்….. அந்த ஆதி எங்க இருக்கான்? அவனுங்க வெளிய போனதுபத்தி எனக்கு ஏன் தகவல் வரல?”, என தன் நண்பனைத் திட்டியபடி வேகமாக மேகமலையை விட்டுக் கீழே சென்றான்.
அங்கே அவர்கள் அந்த தீவின் முதல் பகுதியின் மத்யப்பிரதேசத்தைக் கவனமாகக் கடந்துக் கொண்டிருந்தனர். அங்கே ஊர்ந்து கொண்டிருந்த பூச்சிகளும், அட்டைகளும், தேளும், பூரானும் தேகம் சிலிர்க்க வைத்தது. நானிலன் தான் அதிக பயத்தில் நுவலியின் கையைப் பிடித்தபடியே அரைக் கண்களை மூடிக் கொண்டே நடந்தான்.
“நுவலி…. எனக்கு கண்ண தொறக்கவே பயமா இருக்கு…. நான் கண்ண மூடிக்கறேன்… எனக்கு வழி சொல்றியா?”
“என்ன நிலன் அண்ணா நீ…. நானே எங்க எது இருக்கு எப்ப என்ன வரும்னு தெரியாம நடந்துட்டு இருக்கேன்.. நீ கண்ண தொறந்து வச்சி நடந்தாலே பாத்து வரமாட்ட….. மனச தைரியமா வச்சிட்டு வாண்ணா….”
ஓநாய்களும், நாய்களும் அவ்விடத்தில் நிரம்பி இருந்தன. முதலில் நுழைந்த ஆதியை அவை வாசனைப் பிடித்து, மற்றவர்களையும் வாசனைப் பார்த்தது.
நானிலன், கண்மயா, நுவலி மூவரின் அருகிலும் வந்துச் சுற்றி நின்று அவைகள் தங்களுக்குள் பேசிக்கொண்டன. வல்லகியின் அருகில் வந்து அவளது கைகளை நக்கிப் பார்த்து அவளின் காலில் உரசி நின்றன சில நாய்கள்….
“என்னாச்சி உங்களுக்கு? காயமா? சண்டை போட்டிங்களா ?”, எனக் கண்மயாவை அருகில் வரும்படி செய்கைச் செய்துவிட்டு மண்டியிட்டு அமர்ந்தாள்.
காதின் ஓரமும், முன்னங்காலிலும் சற்று ஆழமாகவே காயம்பட்டிருந்தது. கொண்டு வந்திருந்த முதலுதவி பெட்டியில் இருந்து பஞ்சை எடுத்துக் காயத்தை சுத்தம் செய்து, மருந்தை எடுத்ததும், அவைகள் ஆக்ரோசமாகப் பார்த்தன.
சட்டென ஏற்பட்ட மாறுதலின் காரணம் புரியாமல் கண்மயா பயந்து பின்னே சென்றாள். அவளின் மேல் ஒரு ஓநாய் பாய்ந்தது. அர்ஜுன் அந்த ஓநாயை பின்னால் இழுத்து, அடிதொண்டையில் இருந்து ஒருவிதமான சத்தம் கொடுக்கவும் அது மண்டியிட்டு அமர்ந்து கண்மயாவைக் காட்டியது.
“அது என்ன மருந்து?”, ஆதி அவளருகில் வந்தான்.
“வழக்கமாக காயத்துக்கு போடற மருந்து தான் சார்….”, கண்மயா மிரண்டு சுற்றிலும் பார்த்தபடிக் கூறினாள்.
அந்த மருந்த்தின் வாசனைக்கு சற்று நேரத்தில் ஆயிரம் நாய்களும், ஓநாய்களும் அவர்களை சுற்றிக் கொண்டு நின்றன.
நாச்சியார் வல்லகியின் அருகில் வந்து, “அதுல இவங்கள ஆக்ரோஷ படுத்தற பொருள் வாசனை இருக்கு…. இப்ப எப்படி தப்பிக்கறது?”
அர்ஜுன் மிருக பாஷையில் அங்கிருந்த ஓநாய் மற்றும் நாய்களிடம் பேசிக்கொண்டு இருந்தான்.
“அதுல மிருக சதையோட வாடை வருது…. அதான் எல்லாம் ஆக்ரோஷம் ஆகிரிச்சி….”, கையில் இருந்தத் தடியை ஒரு சுழற்று சுழற்றி ஆயிரம் நாய்களையும் பின்னால் செல்ல செய்கை செய்தான்.
“மருந்துல கலந்திருக்கா? சரி தூக்கி போற்றலாம்….”, நானிலன்.
“இல்ல இங்க போடமுடியாது… அடுத்த பகுதிக்கு இதோட போகவும் முடியாது… இங்க இருந்தே இத கடல்பக்கம் வீசணும் ….”, ஆதி கூறினான்.
“நான் வீசறேன்…. உயரமான மரத்துல ஏறி வீசலாம்….”, வல்லகி முன் வந்தாள்.
“வேணாம் வல்லகி…. நான் வீசறேன்… என்னை இவங்க ஒன்னும் பண்ண மாட்டாங்க….”, என மருந்தினை வாங்கி இரண்டே நொடியில் மரத்தின் மீதேறி குச்சியில் கட்டி அந்த மருந்தினை கடல் பக்கமாக வீசினான்.
அதுவும் காற்றை கிழித்துக் கொண்டு கடலில் சென்று விழுந்து மூழ்கியது.
“இன்னும் என்ன என்ன மருந்து உள்ள இருக்கு? இது எதுவும் இங்க பயன்படாது…. “, ஆதி கூறினான்.
“இது ஒண்ணு தான் வெளிய வாங்கினது, மத்தது எல்லாம் நானும் யாழனும் தயார் பண்ணது தான். சுத்தமான மூலிகை வச்சி தான் ஆச்சி சொன்னது போல செஞ்சோம்…”, கண்மயா பயத்துடன் கூறினாள்.
“எதுக்கும் இன்னொருமுறை பாத்துக்கோ கண்மயா…. அடுத்த பகுதி இதைவிட ஆபத்தானது….. அந்த மருந்து எடுத்த கையை கழுவி இந்த இலைய கசக்கி கையில் தேய்ச்சிக்கோ…..”, என அர்ஜுன் ஒரு கொடியினை வாசம் பார்த்துவிட்டுக் கொடுத்தான்.
“அடுத்த பகுதில என்ன இருக்கு அர்ஜுன் சார்?”, நானிலன் பயத்துடன் கேட்டான்.
“யானை இருக்கு….. “, நாச்சியார் கூறிவிட்டு தொலைநோக்கியை எடுத்துக் கொண்டு ஒரு மரத்தின் மேல் ஏறிப் பார்த்தாள்.
வழக்கமான யானைகளை விட இரண்டு மடங்கு அதிகமான உயரமும், பருமனும், நீளமான 4 தந்தங்களும், முரம் போன்ற காதுகளும் கொண்ட யானைகள் அவள் பார்வைக்கு தெரிந்தன. நாய்களை விட சில விசயங்களில் அதிக மோப்ப சக்தி யானைகளுக்கு உண்டு என்று அவள் கேள்விப்பட்டு இருக்கிறாள்.
மனிதனின் மனஉணர்வுகளைத் துள்ளியமாக யானையும், குதிரையும், நாயும் உணரும். அதனால் தான் இவை மூன்றும் மற்ற விலங்குகளை விட அதிகமாக மனிதன் கூடவே தங்கள் வாழ்வினையும் கடக்கிறது.
இங்கே வந்திருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மனஉணர்வுகளுடன் போராடிக்கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் இந்த மாறுபட்ட உணர்வுகளின் அதிர்வுகளை இத்தனை மிருகங்கள் உணர்ந்தால், நிலைமை கைமீறி செல்லும் வாய்ப்பு அதிமாக இருக்கிறது.
“வல்லா…. எல்லாரும் மனச ஒருநிலைப்படுத்த ஏதாவது பண்ணனும்….”, நாச்சியார் வேகமாக கீழே இறங்கினாள்.
காயம் பட்டிருந்த நாய்களுக்கு மூலிகையினால் தயாரித்த மருந்தினை போட்டுவிட்டு அனுப்பியதும் வல்லகி மண்ணில் கைவைத்து அதிர்வுகளை உள்வாங்கத் தொடங்கினாள்.
அச்சமயம் மதம் கொண்ட யானை ஒன்றுக் கூட்டத்தை விட்டுப் பிரிந்து இந்த பகுதிக்குள் நுழைந்து ஓடி வந்தது. அது ஓடி வரும் வேகத்தில் நிலத்தில் அதீத அதிர்வுகள் உண்டாகி, மரங்கள் எல்லாம் வேரோடு சாய்ந்து விழும் சத்தமும் அனைவருக்கு கேட்டது.
நுவலியின் கைகளை நானிலன் ஒருபக்கமும், கண்மயா ஒருப்பக்கமும் பிடித்தபடி அரண்டு நின்றிருந்தனர்.
ஆதியும், நாச்சியாரும் மறைந்து கொள்ள அருகே இடம் இருக்கிறதா என்று சுற்றிலும் தேடி ஓடினர்.
அப்போது வல்லகியைக் கண்ட யானை அவளை நோக்கி ஓடி வந்தது. துதிக்கையை வேகமாகச் சுழற்றியபடி வந்த யானை அவளைத் தூக்கி எரிய முனைந்தது.
அப்போது அர்ஜுன்…….