வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..
இன்னிக்கி நம்ம பாக்க போற எழுத்தாளர் .. அவங்கள எழுத்தாளர்-னு சொல்றத விட நம்ம வீட்ல ஒருத்தரா தான் சொல்ல தோணுது. அதுவும் நம்ம அம்மா பெரியம்மா சின்னம்மா மாதிரி நம்ம மேல அன்பும் அக்கறையும் வச்சி, நமக்கு நல்லது கெட்டது சொல்லி குடுத்து, நம்மல சரியா வழி நடத்துற ஒரு அன்பான இதயம் ..
இவங்க எப்படி எழுத ஆரம்பிச்சேன் னு சொல்றது கேட்டா எனக்கு ஆச்சரியமும், அவங்க எழுத கத்துக்க உபயோகிச்ச வழிமுறையை இன்னிக்கி வரை அவங்க கடை பிடிக்கறேன்னு சொன்னது எல்லாம், யாரும் முறையான பயிற்சி எடுத்தா நிச்சயம் கலையை கை வசப்படுத்த முடியும்-னு சொல்லிட்டாங்க ..
இவங்கள நான் எப்ப இருந்து கவனிக்க ஆரம்பிச்சேன் ?? அவங்க போடற கோலம் பாத்தும் , அவங்க சாமி படத்துக்கு விளக்கு சுத்தி செய்யற அலங்காரம் பாத்து ரொம்பவே ரசிச்சேன்..
யாருன்னு கண்டு பிடிச்சீங்களா ?
சரி வாங்க கொஞ்சம் கிட்ட போய் பேசலாம்..
எழுத்துப்பயணத்தில் நம்முடன் இன்று….
1. புனைபெயர் – இல்லை
2. இயற்பெயர் – அன்னபூரணி
கணவருடன் இணைந்து, அன்னபூரணி தண்டபாணி ஆகிவிட்டேன்.
3. படிப்பு – B. Sc.,
4. தொழில் – முழு நேர இல்லத்தரசி
5. பிடித்த வழக்கங்கள் –
Hobbies பற்றி கேக்கறீங்கன்னு நெனக்கிறேன். நிறைய பிடிக்கும். படம் வரைதல், கோலம் போடுதல், கைவேலை செய்தல், புத்தகம் வாசித்தல்ன்னு நிறைய.. இதுல கோலம் போடறது ரொம்ம்ம்ம்ம்ம்ப பிடிக்கும்.. யார் வீட்லயாவது, இல்ல கோவில்ல எதாவது விசேஷம்ன்னு தெரிஞ்சா அவங்க கூப்பிடலன்னா கூட நானே வாலன்டியரா ஓடிப் போய் கோலம் போடற அளவு அந்தக் கலை அவ்ளோ பிடிக்கும்..
6. கனவு –
உலக நாயகன் வசூல் ராஜா படத்தில சொல்ற மாதிரி கனவு மனசில எக்கசக்கமா இருக்கு.. 😂😂😂😂😂😂😂
7. உங்களுக்கு ஏற்பட்ட எழுத்தின் மீதான் தாக்கம் என்ன?
சொல்லத் தெரியல.. ஆனா அதனாலதான் எழுத வந்தேன்னு மட்டும் நல்லா புரியுது.
8. உங்களின் வாசிப்பு அனுபவம் பற்றி –
எனக்கு இதைச் சொல்லுமளவு அனுபவம் இல்லன்னு நெனக்கிறேன். ஏன்னா நான் எழுத ஆரம்பிச்சப்றம்தான் படிக்க ஆரம்பிச்சிருக்கேன். அதுக்கு முன்னாடிலாம் என் சிந்தனைகள் கிச்சனை விட்டு வெளிய வந்ததில்ல. அப்பல்லாம் ஓய்வு நேரங்கள்ல படம் வரையறது, புதுசா கோலம் போடறதுதான் என் பொழுதுபோக்கா இருந்தது. அதனால அன்றைய எழுத்து இன்றைய எழுத்துன்னு எனக்கு பிரிச்சி பார்க்கத் தெரியல. எழுத்து! ப்பா! எப்டி எழுதியிருக்காங்க! சான்சே இல்ல! இதுதான் எனக்கு தோணும்! எழுத்துன்னா, அப்பவும் இப்பவும் எப்பவும் எனக்கு பிரமிப்பு மட்டும்தான்!
9. உங்களை எழுத தூண்டியது எது?
எனக்கு எழுத வரும்னு தெரியவே தெரியாது. என் தோழி ஒருவர்தான் எனக்கு எழுத வரும்னு கண்டுபிடிச்சாங்க. கண்டுபிடிச்சவங்க அப்டியே விட்டுடாம என்னை நாலு நாலு வரியா குழந்தைய எழுத வைக்கற மாதிரி எழுத வெச்சாங்க.
இது எப்டி சாத்தியம்னு கேக்கறவங்களுக்கு, என் எழுத்துப் பயணத்தின் ஆரம்பம் கண்டிப்பா ஒரு மோட்டிவேஷனா இருக்கும்னு நெனக்கறதால சொல்றேன்!
ஒரு சாதாரண இல்லத்தரசியா இன்னிக்கு என்ன சமையல் செய்யலாம்; பருப்புபொடி காலியாடுச்சே; மிளகாய் பொடி அரைக்கணுமேன்னு இருந்தவதான்; என் மனவுளைச்சல்களை தீர்த்துக்க சும்மா இன்டர்நெட்ல நோண்டி சமையல் ப்ளாகுகளை சுத்தி வந்து சரி நாமும் ஒரு ப்ளாக் ஆரம்பிப்போம்னு ஒரு கிச்சன் ப்ளாக் ஆரம்பிச்சேன். (இதுல காமெடி என்னன்னா எனக்கு சமைக்கறது சுத்தமா பிடிக்காது 🙈😂) எனக்கு தெரிஞ்ச சமையலை அதில பதிவிட ஆரம்பிச்சேன். அது கூட ஆங்கிலத்தில்தான் பதிவிட்டேன். அதை என் தோழி, தோழின்னு சொல்றத விட என் மென்டார்ன்னு சொல்லலாம்; அவங்க படிச்சி பார்த்துட்டு நீங்க ரொம்ப அழகா எழுதறீங்கன்னு சொல்லி ஒரு வாட்ஸ்அப் க்ரூப்ல என்னை சேர்த்தாங்க. அந்த க்ரூப்ல நேர்மறை எண்ணங்களை தோற்றுவிக்கற மாதிரி சின்ன சின்ன ரைட்அப்கள் பதிவிடணும். வேற எதையும் பதிவிடக்கூடாதுன்னு விதிகள்ன்னு சொன்னாங்க. எனக்கு எழுத தெரியாதேன்னு நான் தயங்கினேன்.
உங்களால முடியும் அன்னபூரணின்னு சொல்லி சேர்த்தாங்க. அங்க ஆரம்பிச்சதுதான் என் எழுத்துப் பயணம். சின்னச் சின்ன ரைட்அப்கள் இன்று நாவல் எழுதும் அளவுக்கு வளர்ந்திருக்கு.
என்னை எனக்கே புதிதாக அடையாளம் காட்டிய என் மதிப்புக்குரிய அந்த அன்புத் தோழிக்கு என் நன்றிகள், என்றென்றும். இன்னும் நான் அந்த வாட்ஸ்அப் குழுல எழுதிட்டு வரேன்.
10. எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்?
2017லிருந்து..
11. உங்களது எழுத்தை படித்தவரிடம் அதன் தாக்கத்தை உணர்ந்தது உண்டா?
கொஞ்சம் உணர்ந்திருக்கேன்னு நினைக்கிறேன்.
12 . எழுத்தால் எதையும் மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா?
கண்டிப்பா. நல்ல எழுத்துக்கள் நல்ல மாற்றத்தை கண்டிப்பா தோற்றுவிக்கும்.
13 . மின்னூல், பதிப்பு புத்தகம். இவற்றினைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
மின்னிதழ்களை விட புத்தகங்களுக்கு இருக்கும் மவுசு அதிகம். நம்ம படைப்பு நம்ம கைகளில் தவழும்போது வரும் மகிழ்ச்சி, உணர்வு சொல்லில் வடிக்க முடியாது. ஒவ்வொரு புத்தகமும், அது நம்முடைய படைப்போ மற்றவருடைய படைப்போ அது தரும் நினைவுகள், காலத்தால் அழியாதவை! என்றென்றும் நம் மனதில் நீங்காது நிலை பெற்றிருக்கும். அந்தப் புத்தகத்தை கையில் எடுக்கும் போதும், அதைப் பற்றிப் பேசும் போதும், ஏன் அதைப் பற்றி நினைத்தாலும் கூட அவை மெதுவாக மேலே எழும்பி மணம் பரப்பும். இந்த அற்புத குணம் மின்னூலுக்கு இல்லை.
14. நீங்கள் பதிபித்த பதிப்பு புத்தகங்கள் எத்தனை ? (அவற்றை பெற தொடர்பு கொள்ள ) –
4 நாவல்கள் புத்தகங்களாக வந்துள்ளன.
- என்றென்றும் உன்னுடன் (பிரியா நிலையம் )
- பார்வை ஒன்றே போதுமே (பிரியா நிலையம் )
(தொடர்பு கொள்ள : +91 9444462284 )
- என்ன சொல்ல போகிறாய் (செங்கோபுரம் பதிப்பகம் )
- உனக்கென்ன வேணும் சொல்லு (செங்கோபுரம் பதிப்பகம் )
(தொடர்பு கொள்ள : +91 9384693210)
எல்லா புத்தகக் கடைகளிலும் கிடைக்கும்.
15. ஆடியோ புத்தகங்கள் மீதான உங்கள் பார்வை என்ன?
மிகவும் நன்மை பயக்கும் ஒன்று. இன்றிருக்கும் அதிவிரைவான கால கட்டத்தில் கதைகளை வாசிக்க பலருக்கு மனதில் ஆசையிருந்தாலும் நேரமிருப்பதில்லை. அவர்களுக்கான ஒரு வரமே ஆடியோ புத்தகங்கள். அது மட்டுமில்லாமல் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இருந்த பல பெரியவர்கள் அவர்களின் உடல் நிலை காரணமாக படிக்க முடியாமல் அவதிப்படும் போது ஆடியோ நூல்கள் அவர்களின் அவதிக்கு கைகொடுக்கும் தோழியாகச் செயல்படும் என்றே நம்புகிறேன்.
என்ன ஒன்று என்றால், கதைகளை வாசிப்பவர், செய்திகள் வாசிப்பது போல வாசிக்காமல் சரியான ஏற்ற இறக்கங்களோடு கதையின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் வாசித்தால் மட்டுமே அது நல்ல அனுபவத்தைத் தர முடியும். இல்லையேல் அது நேர விரயம்தான்.
16 . எழுத்தாளரின் வெற்றி என்பது எதன் அடிப்படையில் இருக்கிறது?
தன் எழுத்தின் மூலம் ஒரே ஒருவரையாவது நல்ல விதமாக மாற்றினால் அதுவே எழுத்தாளரின் வெற்றி என நினைக்கிறேன்.
17 . உங்கள் படைப்பில் எதையாவது எழுதி இருக்க வேண்டாம் என்று எண்ணியதுண்டா?
நல்ல வேளை! இப்ப வரை அப்படி நினைத்ததில்லை.
18 . உங்களின் படைப்புகளில் எது உங்களுக்கான அங்கீகாரத்தை பெற்று கொடுத்ததாக நினைக்கிறீர்கள்?
எல்லாமே நல்ல கருத்துக்களைப் பெற்றிருக்கிறதுதான். ஆனால் இது இருளல்ல என்ற கதை, கதைப்புத்தகம் படிக்க விரும்பாத என் கணவரையும், அடுத்து என்ன என்று காத்திருந்து படிக்க வைத்த கதை! இதுதான் என்னாலயும் உருப்படியா எதையோ செய்ய முடியும் என்ற அங்கீகாரத்தை என் வீட்டில் பெற்றுத் தந்தது.
19 . கதை கரு மற்றும் கதா பத்திரங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்? அதற்கான மெனக்கெடல் எந்த அளவிற்கு கொடுப்பீர்கள்?
என்னைச் சுற்றி நடப்பவற்றைதான் கதைக் கருவாக தேர்ந்தெடுக்கிறேன். அதற்காக கண்டிப்பா ஹோம் வொர்க் நிறைய செய்வேன். எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் எந்த விதமான தவறான கருத்தையும் சொல்லிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.
20 . நீங்கள் பெற்ற போட்டி பரிசுகள் –
எங்க போட்டி வெச்சாலும் ஓடிப் போய் கலந்துக்கறது என் வழக்கம். அதனால பல பல்புகளை வாங்கி என் வாழ்க்கையை ஔி மயமா மாத்தியிருக்கேன். சில போட்டிகள்ல பரிசுகளை வாங்கி மகிழ்ச்சியும் அடைந்திருக்கேன். 😁😁😁😁😁😁
பெண்மை இணையம் நடத்திய சிறுகதைப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் விவாதப் போட்டிகளில் பங்கு கொண்டு பலவற்றில் முதல் பரிசு வாங்கியிருக்கிறேன்.
பிரதிலிபி இணையத்தில் எழுதும் லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் எழுத்தாளர்களில் ஸ்டார் எழுத்தாளர்களுள் ஒருவராக என்னையும் தேர்தெடுத்து பெருமைப் படுத்தியுள்ளார்கள்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற்புலத் தமிழியல்துறையும் மலேசியா, மலேசியத் தமிழ் மணி மன்றமும் இணைந்து நடத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டியில், பங்கேற்ற 1000ம் மேற்பட்ட சிறுகதைகளுள் என்னுடைய சிறுகதை முதல் நூறு கதைகளுள் 45 வது இடத்தை அடைந்துள்ளது! முதல் நூறு சிறுகதைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள்.
குவிகம் இல்லம் நடத்திய பெண்களுக்கான சிறுகதைப் போட்டியில் என்னுடைய கதை ஆறுதல் பரிசு பெற்றது! பரிசு பெற்ற கதைகள் எல்லாம் அவர்கள் புத்தகமாக வெளியிட்டு எங்களை பெருமைப் படுத்தினார்கள்!
தமிழ் புத்தக நூலக செயலி ஆண்டுதோறும் நடத்தும் சிறுகதை போட்டிகளில், 2019 ஆண்டு நடத்திய சிறுகதைப் போட்டியில் என்னுடைய சிறுகதை சிறப்புப் பரிசு பெற்றது என்னை மிகவும் ஊக்கப்படுத்தியது.
தமிழ் நாவல் ரைட்டர்ஸ் தளம் நடத்திய கனவுப்பட்டறை நாவல் போட்டியில் என் கதை இரண்டாம் சுற்று வரை வந்தது.
சங்கமம் நாவல் போட்டி 2021ல் என் கதைக்கு ஊக்கப்பரிசு கிடைத்துள்ளது.
குவிகம் குறும் புதினம் போட்டியில் பங்குபெற்ற 70க்கும் மேற்பட்ட கதைகளில் ஃபைனலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 17 கதைகளில் என்னுடைய குறும் புதினமும் ஒன்று.
21. எதிர்வினை கருத்துக்களை எப்படி கையாள்கிறீர்கள்? –
சில சமயம் மனம் சோர்ந்து போவது உண்மைதான். இல்லையென்று கூற முடியாது. ஆனால் சீக்கிரமே அதிலிருந்து மீள முயலுவேன். அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள முடியுமா என்று பார்ப்பேன். அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளும்ளவுக்கு எதுவுமில்லையென்றால் நன்றி என்ற வார்த்தையுடன் நகர்ந்து விடுவேன்.
ஒரே ஒரு முறை என் கதையின் கருவே தவறு என்று சொன்ன போது என்னால் அதை ஒப்புக் கொள்ள முடியாமல் பொங்கியிருக்கிறேன். (நானும் ஒரு தபா பொங்கல் வெச்சிருக்கேன்ப்பா.. 😂😂😂😂😂😂😂😂😂)
22. நீங்கள் அதிகம் எழுத விரும்புவது எது ? (கதை , கவிதை, தொடர்கதை, நாவல் , சிறுகதை) ஏன்?
கவிதை எழுதத் தெரியாது. அதனால கதைதான். அதுவும் சிறுகதை மிகவும் பிடிக்கும். சீக்கிரமா எழுதி முடிச்சிடலாம்னுதான். வேற என்ன?
23. ஏன் மாறுபட்ட கதைக்கரு கொண்ட கதைகள் வாசகர்களை அதிகமாக சென்றடைவதில்லை?
இங்கே வாசிப்பு அனுபவத்துக்காக படிப்பவர்களை விட பொழுது போக்கிற்காக படிப்பவர்களே அதிகம். அதனால் அவர்கள் தங்கள் மன அழுத்தம் குறைய எளிதான கதைக்கரு, ஜனரஞ்சகமான கதைகள், மனதுக்கு இதமளிக்கும் காதல் ரசம் கொண்ட கதைகளைதான் அதிகம் படிக்க விரும்புவார்கள். நம்ம வாழ்க்கையே அழுது வடியுது; இதுல இந்த கதைய படிச்சி வேற அழணுமா என்று கேட்பவர்கள்தான் அதிகம். அதனால்தான் மாறுபட்ட கதை கரு கொண்ட கதைகள் அதிகம் வாசிக்கபடுவதில்லை என்பது என் கருத்து.
24 . குடும்பம் காதல் சாராத கதைகளை நீங்கள் எழுதியது உண்டா? (படைப்பின் தலைப்பு)
இல்லை. அப்படி எழுதவும் தோன்றியதில்லை. என்னைப் பொருத்தவரை குடும்பம்தான் முக்கியம். குடும்பம் இல்லன்னா எதுவுமே இல்லை. அதனால குடும்பம் தவிர வேற எதையும் எழுத நினைத்ததில்லை.
25. அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்களாக நீங்கள் கருதுவது என்ன என்ன?
இதை சொல்ற அளவுக்கு நான் இன்னும் நிறைய படிக்கவில்லை. நானே என் நண்பர்கள் கிட்ட கேட்டு கேட்டுதான் படிச்சிட்டு வரேன்.
26 . ஓர் படைப்பின் வார்த்தை அளவுகள் பற்றி உங்களது கருத்து என்ன?
இது அந்தந்த படைப்பாளியின் உரிமை. அவங்க தன் திறமையைக் காட்ட இதுவும் ஒரு அளவுகோலாக வைத்திருக்கிறார்கள். இதில் தலையிட யாருக்கும் உரிமைில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் போட்டி என்றால் ஒரு அளவுக்குள் எழுத வேண்டியிருக்கும். இது போட்டி நடத்துபவர்கள் வைத்திருக்கும் விதி. இதைக் கடைபிடித்து எழுத முடிந்தால் போட்டியில் கலந்து கொள்ளலாம். இல்லையென்றால் விட்டுவிடலாம். இதுவும் அந்த படைப்பாளியின் கையில்தான். இதில் நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை.
27 . எழுதுபவர்கள் பெரும்பாலும் பயன் அடைவதில்லை. அவர்கள் பயன்பெற நீங்கள் கூறும் சில யோசனைகள் என்ன?
எழுத்தினால் எழுதுபவர் பயன்பெற வேண்டுமென்றால் மனசாட்சியைக் கைவிட்டு விட்டு ஜனரஞ்சகமாக எழுத வேண்டும். இத நா சொல்லலங்க.. கவிஞர் வாலியே இததான் சொன்னாரு. செஞ்சாரு.. இல்லன்னா பத்திரிகை ஆபீஸ்ல செய்திகள்தான் எழுதணும். இத நாந்தாங்க சொல்றேன்.
28 . உங்கள் தனி தன்மை என்று தாங்கள் கருதுவது என்ன?
சிறுகதையில் கூட 10 கேரக்கடர் வெச்சி எழுதுவது. ஆனா இதுதான் என் பலவீனமும் கூட.
29 . உங்களது கவிதை , பிடித்த வாக்கியம் , பழமொழி (பைனல் பஞ்ச்).
செய்வன திருந்த செய். இதுதான். என் அம்மா சொல்லிக் கொடுத்தது. முடிஞ்ச வரை ஃபாலோ பண்ணிட்டிருக்கேன்.
30 . உங்கள் படைப்புகள் (லிங்க்குகளுடன்) (Youtube also ):
என் படைப்புகளை
பிரதிலிபி, பூஞ்சிட்டு – சிறுவர்களுக்கான மாத மின்னிதழ், அமேசான் மற்றும் புஸ்தகாவில் படிக்கலாம்.
Poonchittu :
Pratilipi :
https://tamil.pratilipi.com/user/s9207e3qkb?utm_source=android&utm_campaign=myprofile_share
Amazon :
Pustaka :
https://www.pustaka.co.in/home/author/annapurani-dhandapani
இந்த நல்ல வாய்ப்பினை வழங்கிய சகோதரி ஆலோன் மகரிக்கு என் மனமார்ந்த நன்றிகள். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் மொதல்ல சொன்னது இப்போ சரின்னு உங்களுக்கும் தோணுதா நட்பூஸ் ? வீட்ல நல்ல ஞானம் உள்ள பெரியவங்க நமக்கு வாழ்க்கையோட எதார்த்தத்த எப்படி மடில படுக்க வச்சி பொறுமையா குழந்தைக்கு சொல்வங்களோ அப்டி தான் இருக்கும் இவங்க கதைகளும் ..
இவங்க நாவல் நான் படிச்சது இல்லை ஆனா இவங்க சிறுகதைகளை படிச்சி இருக்கேன். “சொல்வதை சுருங்க சொல்வது “ ஒரு பெரிய கலை ( என்னை பொருத்தவரைக்கும் அது ரொம்பவே பெருசு ) அது இவங்க அழகா கையாள்வாங்க..
நறுக்குன்னு கருவை இவங்க சொல்ற விதமும், அதுக்கு இவங்க உருவாக்கற கதா பாத்திரங்கள் பேசும் விதமும் அவ்ளோ அருமையா இருக்கும். சீக்கிரமே இவங்க நாவலும் படிக்கணும் ..
உங்க முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறனும் சிஸ்டர் .. நீங்க எப்பவும் சந்தோஷமா, ஆரோக்யமா, உங்க குடும்பத்தின் ஜீவனா வாழணும்-னு நாங்க இறைவனை பிரார்த்தனை பண்ணிக்கிறோம் . உங்களோட விலை மதிப்பில்லாத நேரத்தை எங்களுக்கு கொடுத்ததுக்கு மிக்க நன்றி சிஸ்டர் ..
அடுத்து ஒரு ஸ்வீட் பேபி ஓட சீக்கிரம் வரேன் நட்பூஸ் ..