வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..
எல்லாரும் எப்டி இருக்கீங்க ? நவராத்திரி விஜயதசமி எல்லாம் முடிஞ்சி இப்போ தான் இங்க வரேன் .. அடிக்கடி நம்ம பயணத்துல லீவு வருது .. இனிமே அடிக்கடி லீவு வரக்கூடாதுன்னு வேண்டிக்கிட்டு ஒரு இறகு மென்மை எழுத்தாளர இன்னிக்கி நம்ம பாக்கலாம் ..
இவங்க எழுத்து எனக்கு சமீபமா தான் பரிச்சயம் ஆச்சி .. இவங்க கதாநாயகர்களும் அவளோ மென்மை உள்ளவங்களா இருப்பாங்க ..
இவங்க எழுத்து நடை மனச மயில் இறகா தான் வருடுது .
இவங்க கதைல நான் கவனிச்ச முக்கியமான விஷயம் பெண்களை வெறும் பொம்மை ஆக காட்டாம , அவங்க பாதிக்கும் மேல முக்கியமான கருவா செயல் படறது போல காட்டினது, அப்பறம் எதார்த்தம் கிட்ட நெருங்கி வந்துட்டே இருக்கு இவங்க படைபுகள் ..
இவங்க சிறு கதை தொகுப்பு ரொம்பவே பிடிச்சி இருந்தது .. பீட்ரூட் கதை நல்ல விதமான எதிர்பும் அதனால வரும் பலனும் சொன்ன விதம் ரொம்ப அருமை ..
யாருன்னு தெரிஞ்சதா ? வாங்க உள்ள போய் பாக்கலாம் ..
எழுத்துப்பயணத்தில் நம்முடன் இன்று….
1. புனைபெயர் – தூரிகா சரவணன்
2. இயற்பெயர் – அபிராமி
3. படிப்பு – B.S.M.S பட்டதாரி
4. தொழில் – இப்போதைக்கு இல்லத்தின் அரசி
5. பிடித்த வழக்கங்கள் –
நூல்கள் வாசித்தல், நல்ல திரைப்படங்கள் பார்த்தல், இசை கேட்டல், நுண் கலைகள் ( embroidery croche ) போன்றவைகள் செய்யப் பிடிக்கும்
6. கனவு –
கல்லூரியில் படிக்கும் போது மருந்துகள் தொடர்பான ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும் என்ற கனவு இருந்தது. இன்னும் இருக்கிறது…சூழ்நிலைகள் பொருத்து நாளை நிறைவேறலாம்.
எழுத்துலகைப் பொருத்த வரை நாளை நான் இல்லாமல் போனாலும் இவர்கள் எழுத்து நன்றாக இருக்கும் என்ற பெயர் வாங்க வேண்டும் என்ற கனவு இருக்கிறது.
7. உங்களுக்கு ஏற்பட்ட எழுத்தின் மீதான தாக்கம் என்ன?
பள்ளி காலத்தில் என் தந்தையால் எனக்கு அறிமுகப்படுத்தப் பட்ட எழுத்தாளர்கள் கல்கி மற்றும் ஜெயகாந்தன். ஜெயகாந்தனின் அக்கினிப் பிரவேசம் என் தந்தை என்னை முதல் முதலில் படிக்கச் சொன்ன குறு நாவல்…பின் பொன்னியின் செல்வன்… பத்தாவது முடித்ததும் பள்ளி விடுமுறையில் படித்தேன்…இன்று வரை ஐம்பது தடவைகளுக்கு மேல் வாசித்திருப்பேன். அதன் பின் என் வாசிப்பு வட்டம் விரிவடைந்தது… ஆனால் தாக்கம் என்றால் நான் முதலில் படித்த இவர்கள் இருவரால் நான் அதிகம் ஈர்க்கப்பட்டேன் என்று சொல்லலாம்.
8. உங்களின் வாசிப்பு அனுபவம் பற்றி –
நிறைய வாசிப்பேன். எங்கு சென்றாலும் நூலகத்தைத் தேடிக் கண்டுபிடித்து விடுவேன். கல்கி, ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், சாண்டில்யன், விக்கிரமன், மணியன், நா. பார்த்தசாரதி, தி. ஜானகிராமன், ப்ரபஞ்சன், ராஜேஷ்குமார், பட்டுக் கோட்டை ப்ரபாகர், சுபா, பாலகுமாரன், சுஜாதா, ரா.கி. ரங்கராஜன், லக்ஷ்மி, சிவசங்கரி, அனுராதா ரமணன், வாசந்தி, இந்துமதி என்று தொடங்கி ரமணிசந்திரன், காஞ்சனா ஜெயதிலகர், ஸ்ரீகலா, முத்துலக்ஷ்மி ராகவன், ஷெண்பா, மல்லிகா மணிவண்ணன், இந்திரா சவுந்தர்ராஜன், ஜெய்ஷக்தி, என். சீதாலக்ஷ்மி, என்று வளர்ந்து இப்போது இன்னும் பலப்பல எழுத்தாளர்களுடன் இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
9. உங்களை எழுத தூண்டியது எது?
ப்ரதிலிபியில் ‘நான் ஏன் எழுகிறேன்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதச் சொல்லி ஒரு போட்டி வைத்திருந்தார்கள். இதற்கான பதிலை அதில் விரிவாக எழுதி இருக்கிறேன்…சுருக்கமாகச் சொல்லப் போனால் படித்து கொண்டே இருக்கும் போது ‘நாமும் ஏன் எழுதக் கூடாது’ என்று தோன்றிய எண்ணமும் என் தமிழ் எனக்குக் கொடுத்த தைரியமும்தான் நான் எழுத ஆரம்பிக்கக் காரணம்.
10. எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்?
ஆரம்பித்தது 2018 இல்…ஆனால் முதல் நூல் கிண்டிலில் போட்டது 2019 இல்.
11. உங்களது எழுத்தை படித்தவரிடம் அதன் தாக்கத்தை உணர்ந்தது உண்டா?
உண்டு. என் மூன்றாவது கதையான வாராதிருப்பானோ படித்த நிறைய பேர் பெண்கள் சிறிய விஷயங்களில் கூட எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உங்கள் கதை படித்துத் தெரிந்து கொண்டோம் என்று என்னிடம் சொன்னதுண்டு. இன்னும் கதை ஆன்லைனில் வந்த போது ஆண்களும் உணர்ச்சிகளை மனதில் அடக்கி வைக்காமல் அழுது விடுவது நல்லது என்று புரிந்து கொண்டோம் எனப் பல வாசகர்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள்.
12 . எழுத்தால் எதையும் மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா ?
இல்லை. நம்பவில்லை… அப்படி மாற்ற முடிந்திருந்தால் இந்நேரம் உலகம் மாறியிருக்க வேண்டாமா? எழுத்தால் சிலரிடம் சில நேரம் மாற்றங்களைக் கொண்டு வர முடியும்…எழுத்து என்றில்லை…பொதுவாக கலையால் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்…அது ஒரு கதையாகவோ பாடலாகவோ, ஓவியமாகவோ திரைப்படமாகவோ எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். உள்வாங்கிக் கொள்ளும் மனிதர்களையும் பொருத்தது அந்த மாற்றங்கள்.
13 . மின்னூல் , பதிப்பு புத்தகம் . இவற்றினைப் பற்றி உங்கள் கருத்து என்ன ?
மின்னூல் கடல் தாண்டி வாழும் மனிதர்களையும் சில நொடிகளில் சென்றடைந்து விடுகின்றது என்ற விஷயத்தில் அருமையானதாக தோன்றுகிறது. இன்று உலகம் முழுதும் எத்தனையோ வாசகர்கள் ஆன்லைனில் என் எழுத்தைப் படிக்க முடிகிறதே!
என்னதான் ஆன்லைனில் படித்தாலும் புத்தகத்தை தொட்டுத் தடவி பக்கம் பக்கமாகத் திருப்பி என்று படிக்கும் உணர்வு தனிதான். எனவே முடிந்த வரை என் வாக்கு பதிப்புப் புத்தகத்துக்குத்தான்…முடியாத நிலைகளில் கைகொடுப்பது மின்னூல்.
ஆனால் கைகளில் எடுத்துச் செல்ல எளிமையாக இருப்பதாலேயே மின்னூல் திருடர்கள் பெருகி விட்டார்கள். அவர்களாகத் திருந்தா விட்டாலும் வாசகர்கள் எழுத்தாளர் அனுமதி இல்லாமல் வெளிவரும் மின்னூல்களைப் படிப்பதில்லை என உறுதி எடுத்துக் கொண்டால் தொழில் நுட்பம் நல்ல விதமாகவே பயனில் இருக்கும்
14. நீங்கள் பதிப்பித்த பதிப்பு புத்தகங்கள் எத்தனை ? (அவற்றை பெற தொடர்பு கொள்ள ) –
மொத்தம் 3 எல்லாமே எஸ்எம்எஸ் பதிப்பக வெளியீடுகள்தான்
மனமே நினைவை மறந்து விடு
வாராதிருப்பானோ
அழகன் அழகியிடம் ஆசை வைத்தான்
புத்தகங்களைப் பெற – ஆன்லைனில் ஆர்டர் செய்ய
http://srikalatamilnovel.com/product-category/books/
whatsapp மூலம் ஆர்டர் செய்ய – +91 97901 22588 (what’s app only)
15. ஆடியோ புத்தகங்கள் மீதான உங்கள் பார்வை என்ன ?
வாசிக்கும் அளவுக்கு நான் அதிகம் கேட்பதில்லை. ஆனால் புத்தகம் வாசிக்க நேரம் அதிகம் செலவழிக்க முடியாதவர்கள் இந்த ஆடியோ நாவல்களால் பயனடைவதாகச் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
16 . எழுத்தாளரின் வெற்றி என்பது எதன் அடிப்படையில் இருக்கிறது ?
தன் எழுத்தால் சமுதாயத்திலோ அல்லது சமூகத்தின் ஓர் அங்கமான மனிதர்களிடமோ, குறைந்த பட்சம் ஒரு சிலரிடமாவது மாற்றங்களைக் கொண்டு வர முடிந்தால் அவன்/ அவள் வெற்றி பெற்ற எழுத்தாளரே… என்பது என் கருத்து.
17 . உங்கள் படைப்பில் எதையாவது எழுதி இருக்க வேண்டாம் என்று எண்ணியதுண்டா ?
இல்லை இதுவரை அப்படி நேர்ந்ததில்லை… ஆனால் என் ‘மனமே நினைவை மறந்து விடு’ கதையில் ஒரு மாற்றம் செய்திருக்கலாமென யோசித்ததுண்டு.
மெல்லத் திறந்தது கதவு என்று ஒரு திரைப்படம் வந்தது. அதில் படம் வெளியிட்ட சில வாரங்கள் கழித்து ஒரு மாற்றம் செய்ததாக ஒரு செய்தியைக் காண நேர்ந்தது…அதாவது முன்பாதியை பின்னாலும் பின் பாதியை முன்னாலும் என்று மாற்றி விட்டார்கள் சுவாரசியத்துக்காக…
அதைப் போல் என் கதையில் கடைசியில் வந்த சில அத்தியாயங்களை முன்னால் வைத்திருக்கலாமோ என யோசித்திருக்கிறேன். ஆனால் அது போட்டிக்காக அவசரமாக எழுதி அனுப்பிய கதை… பின் பதிப்பகத்தார் பதிப்பிக்க முன்வந்த போது வெற்றி பெற்ற கதையை மாற்றி எதற்கு வீண்வேலை என நினைத்தேன்… ஆனால் இப்போதும் செய்திருக்கலாமோ என்ற எண்ணம் உண்டு.
18 . உங்களின் படைப்புகளில் எது உங்களுக்கான அங்கீகாரத்தை பெற்று கொடுத்ததாக நினைக்கிறீர்கள் ?
முதல் கதை ‘கைவிடுவேனோ கண்மணியே’ வுக்கு writing is too perfect didn’t feel like its the first story of the author என்று கிண்டிலில் ரெவ்யூ வந்த போதே நான் எழுத்தாளராக ஆங்கீகரிக்கப்பட்டு விட்டேன் என்று நினைக்கிறேன். ஆனால் பரவலாகப் பேசப்பட்டது வாராதிருப்பானோ கதைதான்.
19 . கதைக்கரு மற்றும் கதாபாத்திரங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள் ? அதற்கான மெனக்கெடல் எந்த அளவிற்கு கொடுப்பீர்கள் ?
கதைக்கரு என்பது ஒரு oneline-ஆக என் மனதில் உருவாகும். பின் அதை அப்படியே develop செய்வேன். பொருத்தமான கதாபாத்திரங்களைப் புகுத்துவேன். இந்தக் கதாபாத்திரங்களில் நான் சந்தித்த என்னை பாதித்த நிஜ மனிதர்களைக் கூட சில நேரம் பயன்படுத்திக் கொள்வதுண்டு. ஆனால் அப்படியே செய்யாமல் கதைகேற்றவாறும் அவர்கள் படித்தாலும் தெரிந்து கொள்ளாதவாறும் கொஞ்சம் மாற்றிக் கொள்வேன். நாம் மெனகெடல் செய்யச் செய்ய அந்தப் பாத்திரம் மெருகேறும் என்பது என் கருத்து.
20 . நீங்கள் பெற்ற போட்டி பரிசுகள் –
அழகிய சங்கமம் 1 இல் என் கதை ஐந்தாம் பரிசு பெற்றது.
21. எதிர்வினை கருத்துக்களை எப்படி கையாள்கிறீர்கள்?
என் கதைகளுக்கு அதிகமாக எதிர்க்கருத்துக்கள் இதுவரை வந்ததில்லை. இனிமேல் வரலாம். அப்படி வந்தால், ரசிக மனதுடன் படித்து நிறைகுறைகளைப் பகிர்ந்து கொள்பவர்களுக்குத் தலைவணங்குகிறேன். அவர்கள் கருத்துக்களை சிரமேற்கொள்கிறேன்.
குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களிடம் என் தரப்பு வாதத்தை முன்வைத்து விட்டு, உங்களைப் போன்ற வாசகர்களையும் வருங்காலத்தில் திருப்தி செய்ய முயல்கிறேன் என முடித்துக் கொள்வேன்.
22 – நீங்கள் அதிகம் எழுத விரும்புவது எது ? (கதை , கவிதை, தொடர்கதை, நாவல் , சிறுகதை) ஏன் ?
நாவல்தான்…கொஞ்சம் பொறுமையாக எழுதும் ஆள் நான். ஒரு கதை முடிக்க நான்கு முதல் ஆறு மாதங்கள் கூட ஆகும். லாஜிக் பார்த்துப் பார்த்து திருத்திக் கொண்டே இருப்பேன். அப்படிப் பொறுமையாக எழுத நாவல்தான் எனக்கு வசதியானது
23 – ஏன் மாறுபட்ட கதைக்கரு கொண்ட கதைகள் வாசகர்களை அதிகமாக சென்றடைவதில்லை?
மாறுபட்ட கதைக்கரு நல்ல விதமாக இருந்தால் கண்டிப்பாக வாசகர்களைச் சென்றடையும். வாசகர்கள் பலவிதம்…
ஆன்லைனிலும் முகநூலிலும் இருப்பவர்கள் மட்டுமே வாசகர்கள் அல்ல. எனவே நல்ல கதைகள் கண்டிப்பாக வாசகர்களைச் சென்றடையும்… அது வெளியே தெரியாமல் இருக்கலாம்.
24 . குடும்பம் காதல் சாராத கதைகளை நீங்கள் எழுதியது உண்டா? (படைப்பின் தலைப்பு)
இதுவரை இல்லை.
25 . அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்களாக நீங்கள் கருதுவது என்ன என்ன?
வாசிப்பு என்பது அவரவர் ரசனை பொருத்தது. இதைத்தான் படிக்க வேண்டும் என்று யாரையும் நாம் சொல்லி விட முடியாது… நல்ல… மனதிற்கு இதம் தரும் புத்தகங்களை… மொழிவளம் உள்ள நூல்களைத் தேடிப் படியுங்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். இன்றைய இளைய தலைமுறை வரலாற்றுப் புதினங்களை வாசித்து நம் வரலாற்றுச் சுவடுகளைத் தெரிந்து கொள்ளலாம்.
26 . ஓர் படைப்பின் வார்த்தை அளவுகள் பற்றி உங்களது கருத்து என்ன?
சலிப்புத் தட்டாத வரை… இது இந்த இடத்தில் அதிகப்படி என்று படிப்பவர்களுக்குத் தோன்றாத வரை வார்த்தை அளவைப் பற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லை என்பது என் கருத்து.
27. எழுதுபவர்கள் பெறும்பாலும் பயன் அடைவதில்லை. அவர்கள் பயன்பெற நீங்கள் கூறும் சில யோசனைகள் என்ன?
பணம் பெறுவதில்லை என்று நீங்கள் குறிப்பிடுவதானால் அந்த நிலை இப்போது மாறி விட்டது. இருக்கவே இருக்கிறது கிண்டில், நோஷன் ப்ரெஸ் போன்ற தளங்கள்…
புகழ் பற்றிக் குறிப்பிட்டீர்களானால் எழுத்தின் தரத்தை உயர்த்திக் கொள்வது ஒன்றே வழி. தரமான எழுத்துக்களை வாசகர்கள் கண்டிப்பாகத் தேடிப் படிப்பார்கள். கொண்டாடுவார்கள்.
28. உங்கள் தனி தன்மை என்று தாங்கள் கருதுவது என்ன ?
இது நீங்கள் வாசகர் முன் வைக்க வேண்டிய கேள்வி… அவர்களால் என்னைப் பிறரிடம் இருந்து பிரித்தறிய இயலுமானால் அதுதான் என் தனித்தன்மை.
29. உங்களது கவிதை , பிடித்த வாக்கியம் , பழமொழி (பைனல் பஞ்ச்).
நற்றமிழ் நவில்வோம்
30 . உங்கள் படைப்புகள் (லிங்க்குகளுடன்) (Youtube also ):
கைவிடுவேனோ கண்மணியே – edited version ( நெடுங்கதை)
https://www.amazon.in/dp/B09BZ2FHLJ/ref=cm_sw_em_r_mt_dp_M961XGJ80A1WJBF0EFDR
வாராதிருப்பானோ (நெடுங்கதை)
https://www.amazon.in/dp/B08WJ4XQH2/ref=cm_sw_em_r_mt_dp_9AQJG68QXBXGWQA5CVGW
தூரிகை தீற்றல்கள் ( சிறுகதைத் தொகுப்பு)
https://www.amazon.in/dp/B092D7NG4L/ref=cm_sw_em_r_mt_dp_PH9EW3FE86WFJV2N1H4D
நல்லறமாமோ நிலவே ( குறுநாவல் )
https://www.amazon.in/dp/B08XXMHYDQ/ref=cm_sw_em_r_mt_dp_MKXYJ4XQH7VP6N8SZNSP
மனமே நினைவை மறந்து விடு( நெடுங்கதை)
https://www.amazon.in/dp/B08RDF8YC4/ref=cm_sw_r_em_apa_glc_HMRC0RTCBE4WWRRNYWHH
தோழி ஆலோன் மகரிக்கு இந்த நல்வாய்ப்பிற்காக நன்றி கூறிக் கொள்கிறேன்
இவங்க கூட வந்த பயணமும் மயிலிறகா தான் மனச வருடுது .. உங்க தனி தன்மை பற்றி நீங்க குடுத்த பதில் அருமை சகோதரி .. உங்களோட ஒவ்வொரு பதிலும், அதில் இருந்த தெளிவான சிந்தனையும் படிக்கறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு.. திட்டமிடலும், வாழ்க்கையின் போக்கும் புரிந்து வாழ்தல் அழகு, அது போல உங்க ஒவ்வொரு பதிலும் அருமையா இருந்தது ..
இவங்க கதைகள் சிலது தான் நான் படிச்சி இருக்கேன் இன்னும் இவங்க எழுதர எல்லாத்தையும் கண்டிப்பா படிக்கணும் .
எல்லாரும் கேட்கற “feel good “ மனநிலை கண்டிப்பா இவங்க கதைகள் கொடுக்கும். இவங்க தமிழ் கையாளர விதம் ரொம்ப அருமையா இருக்கும். அதாவது தமிழ் வார்த்தைக்கு ரொம்ப கஷ்டபடாம, நம்ம வழக்குல மறந்து போன வார்த்தைகள் இவங்க கதைல நான் படிச்சவரை பார்த்து இருக்கேன்.
பொன்னியின் செல்வன் 50 முறை படிச்சிங்களா ???? சலிக்காது தான் .. அந்த அளவுக்கு உங்களுக்கு நேரம் வாய்ச்சது தான் ரொம்ப சந்தோஷமா இருக்கு .
தூரிகா சகோதரி தான் எனக்கு பெரிய உதவி பண்ணினாங்க . வர்மக்கலை பத்தி கேட்டதும் நிறைய புக் பத்தி சொல்லி லிங்க் எல்லாம் அனுப்பினாங்க . ஆனா என்னால முழுசா படிக்க முடியல, தனியா சேகரிச்சி வச்சி இருக்கேன் . கண்டிப்பா எதிர் காலத்துல படிப்பேன் . என் முதல் புத்தகமா “ காற்றின் நுண்ணுறவு “ வரத்துக்கு இவங்க பெரிய சப்போர்ட் . மிக்க நன்றி சகோ ..
ரொம்ப மென்மையானவங்க அவங்க எழுத்தும் அதில் வரும் கதா பத்திரமும் மென்மையானது தான் .. ஆனா இவங்க சொல்ற கரு நிச்சயம் மனசுல பதியும்.
பொறுமையா வலிக்காம சொல்றது எல்லாருக்கும் வராது ஆனா இவங்க அதை அழகா பண்ணுவாங்க ..
நீங்க கண்டிப்பா பெரிய பெரிய உயரங்களை அடைவீங்க சகோ .. உங்களோட மருத்துவ ஆராய்ச்சிளையும் , உங்க எழுத்து பயணத்துளையும் பெரிய சாதனைகள் செய்ய எங்க எல்லாரோட மன மார்ந்த வாழ்த்துகள் ..
உங்க எழுத்து பயணம் எப்பவும் தொடர்ந்துட்டே இருக்கணும்..
அடுத்து ஒரு பிசி எழுத்தாளரை நம்ம கூட பயணிக்க கூட்டிட்டு வரேன் சகோஸ் ..