வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..
எல்லாருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் .. காலைல சீக்கிரம் குளிச்சி கோவிலுக்கு விநாயகர கும்பிட்டு , அப்படியே பொங்கல் , சுண்டல் னு வாங்கி நல்லா சாப்டுட்டு இப்போ ரிலாக்ஸ் பண்ணிட்டு இருப்பீங்க .. நம்ம எழுத்து பயணத்துல நாமலும் இன்னிக்கி ஒருத்தர விநாயகர கும்பிட்டுட்டு பேச போலாம்..
இவங்கள பத்தி சொல்லணும்னா .. ???? நான் பிரதிலிபில படிக்க ஆரம்பிச்சப்ப இவங்க கதைகள் நிறைய படிச்சி இருக்கேன் . இவங்க எழுத்துல என்னை அதிகம் ஈர்த்த விஷயம் ஒவ்வொரு கதைலையும் காதலோட ஏதாவது ஒரு சமூக கருத்தும் அதிகமா பயணம் ஆகும் .
காதல எந்த அளவுக்கு இவங்க காட்டாறங்களோ அத விட கொரறஞ்சது ஒரு மடங்கு ஏதாவது சமூகம் அல்லது இயற்கை சார்ந்த கருத்துக்கள் அதிகமா இருக்கும் .
அதனாலயே இவங்க எழுத்து எனக்கு ரொம்ப பிடிச்சது.. இப்போ நம்ம பயணத்துல இவங்களோட நம்ம பேசறது எனக்கு ரொம்பவும் சந்தோஷமான விஷயம் . ரொம்பவே தன்னடக்கம் , அதே சமயம் இவங்க பொண்ணோட இவங்க பண்ற ரகளை எல்லாம் வேற லெவல் ல இருக்கும் . இப்போ இவங்களும் ஒரு தளம் ஆரம்பிச்சி ஓட விட்டு இருக்காங்க ..
யாருன்னு தெரிஞ்சதா ? வாங்க பாக்கலாம் ..
எழுத்துப்பயணத்தில் நம்முடன் இன்று….
வணக்கம் மா..
முதலில் உங்களுக்கு என்னுடைய நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் புதுவிதமான இந்த முயற்சியில் பல எழுத்தாளர்களைப் பற்றி எங்களைப் போன்ற பலர் தெரிந்து கொள்ள முடிந்தது. தொடரட்டும் உங்கள் பணி..
1. புனைபெயர் – வதனி
2. இயற்பெயர் – சு. இராஜேஸ்வரி
https://www.facebook.com/groups/2305324303037506
3. படிப்பு – (எத சொல்ல, எத விட மொமென்ட்)
: M.LT (Lab Tech) – B.sc. Psycology,
தமிழ் ஆர்வத்திற்காக – BA TAMIL (LIT)
4. தொழில் –
மருத்துவ ஆய்வாளர் (Lab Tech)
5. பிடித்த வழக்கங்கள் –
ராஜாவின் இசை அதுமட்டுமே வாழ்க்கை என்பது போலொரு பைத்தியம் நான். அவர் பாடல்களில் லயிப்பது என்பது எனக்கொரு போதை. அடுத்தது வாசிப்பு. தினம் ஒரு 40 பக்கமேனும் வாசித்தே ஆகவேண்டும் என்பது எனக்கு நானே இட்டுக்கொள்ளும் கட்டளை.
6. கனவு –
என் கனவு சமீபத்தில் நனவாகிவிட்டது என்றே நினைக்கிறேன்.
7. உங்களுக்கு ஏற்பட்ட எழுத்தின் மீதான் தாக்கம் என்ன? –
எழுத்தின் மீதான தாக்கம் என்பது அந்த எழுத்துக்களால் ஒரு இரவாது நம் தூக்கம் தொலைந்திருக்க வேண்டும். அப்படி பல இரவுகளை நான் தூங்கா இரவாக தொலைத்திருக்கிறேன் எழுத்தெனும் வசியக்காரியால்.
8. உங்களின் வாசிப்பு அனுபவம் பற்றி –
வாசிப்பு என்பது ஒரு போதை. அதற்கு அடிமையாகிவிட்டால் மீள்வதென்பது நிச்சயம் முடியாது. அப்படி வாசித்தக் கதைகளுடன் வாழ்ந்த நாட்கள் ஏராளம். அப்படி பல கதைகள் உண்டு என் நாட்களில்.
9. உங்களை எழுத தூண்டியது எது? –
அனுபவங்கள் தான். அதைத் தாண்டி பெருசா ஒன்னும் இல்லம்மா.. வேலை இல்லாம இருந்த டைம்ல நாமளும் எழுதுவுமேன்னு எழுத ஆரம்பிச்சேன். முதல்ல சிறுகதைகள் பக்கம் தான் என் கண் போச்சு. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா நாவல் எழுத ஆரம்பிச்சேன். முதல் இரண்டு கதைகள் எழுதும்போது நான் வேலையில் இல்லை. இப்போ மறுபடியும் சின்சியர் சிகாமணி ஆகிட்டேன். அதனால எனது ஓய்வு நேரங்கள் மிகவும் சொற்பமே, அதில் சிரமப்பட்டே எழுத நேரிடும். கிடைக்கும் நேரத்தை பயண்படுத்தி எழுதிட்டு இருக்கேன். எழுத்து அது ஒரு சுழல் போல, நம்மை அதற்குள்ளாகவே இழுத்துச் செல்லும் மாயக்காரி.
10. எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்?
எழுத வந்து 7 வருடங்கள் ஆகிவிட்டது, இதுவரைக்கும் 14 நாவல்கள்., 26 சிறுகதைகள், சில மருத்துவக் கட்டுரைகள், கவிதைகள் அவ்ளோதான்.
11. உங்களது எழுத்தை படித்தவரிடம் அதன் தாக்கத்தை உணர்ந்தது உண்டா?
நிச்சயமா.. எனது தோழி. இப்போதும் அவர் என் நட்பில் இருக்கிறார். என் முதல் கதையைப் படித்துவிட்டு, எனக்கு நட்பு அழைப்பு விடுத்தார். அப்போது தான் அந்தக் கதையில் வாழும் நிலாவைப் போன்ற ஒரு நிலைதான் என்னதும் என்றார். பெருமகிழ்வு அது.
12 . எழுத்தால் எதையும் மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா ?
கண்டிப்பாக.! இல்லையென்று யாராலும் சொல்ல முடியாதே. நமக்கு கிடைத்த விடுதலையில் கூட எழுத்துக்கள் பெரும்பங்கு வகிக்கிறது என்பதை மறுக்க முடியாதே.
13 . மின்னூல் , பதிப்பு புத்தகம் . இவற்றினைப் பற்றி உங்கள் கருத்து என்ன ?
இன்றைக்கு சூழலில் பதிப்பு புத்தகங்களின் வரவேற்பு மிகவும் குறைந்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. ஒரு புத்தகம் பதிப்பிக்கப்பட்டால் மட்டுமே அந்த எழுத்தாளர் வெளி உலகிற்கு தெரிவார் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.. எனக்கும் அதில் உடன்பாடு உண்டு. ஆனால் இன்றைக்கு அப்படி அல்ல. கையடக்க பேசியில் எழுதி, தன் திறமையை வளர்த்துக் கொண்ட எழுத்தாளருக்கு ஆதாரமாக இருப்பது மின்னூல் புத்தகங்கள் தான்.
14. நீங்கள் பதிபித்த பதிப்பு புத்தகங்கள் எத்தனை ? (அவற்றை பெற தொடர்பு கொள்ள ) –
1. புதுமலர்கள் பூத்திடும் வேளை – அருன் பதிப்பகம் (தொடர்பு கொள்ள : +91 9003145749 )
2. சித்திரைப்பூவிழியே – செங்கோபுரம் பதிப்பகம்
3. அன்பிற்கினியவளே – செங்கோபுரம் பதிப்பகம்
4. மென்பனி இரவுகள் – எஸ்.எம். பதிப்பகம்
5. இனிதான பொழுது நமதாகுமோ – வைகை பதிப்பகம் (தொடர்பு கொள்ள : +91 9486802859)
15. ஆடியோ புத்தகங்கள் மீதான உங்கள் பார்வை என்ன ?
மாற்றங்கள் ஒன்றே மாறாதது. ஆனால் எனக்கதில் பெரிதாக ஈடுபாடு கிடையாது.
16 . எழுத்தாளரின் வெற்றி என்பது எதன் அடிப்படையில் இருக்கிறது ?
ஒரு வாசகன் துனிந்து என் கதையைப் படிப்பதில் இருக்கிறது என் எழுத்தின் வெற்றி.
17 . உங்கள் படைப்பில் எதையாவது எழுதி இருக்க வேண்டாம் என்று எண்ணியதுண்டா ?
ஹா ஹா.. இதுவரை எனக்கு அப்படி எதுவும் தோன்றியதில்லை. வாசகர்களுக்கு இருக்கலாமோ, தெரியவில்லை.
18 . உங்களின் படைப்புகளில் எது உங்களுக்கான அங்கீகாரத்தை பெற்று கொடுத்ததாக நினைக்கிறீர்கள் ?
என் முதல் புத்தகம் – புதுமலர்கள் பூத்திடும் வேளை
19 . கதை கரு மற்றும் கதா பத்திரங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள் ? அதற்கான மெனக்கெடல் எந்த அளவிற்கு கொடுப்பீர்கள் ?
பெரும்பாலும் உண்மைச் சம்பவங்கள் மட்டுமே. “இதைக் கதையும், களமும்தாம் தீர்மானிக்கும் என்று கருதுகிறேன். கதாபாத்திரம் என்பது உண்மைக்கு மாறான ஒரு விஷயம் என நினைக்கிறோம், அதில் உண்மையில்லை. உண்மை என்று நாம் கருதுவது நம் ஒவ்வொருவரது கண்ணோட்டம்தான். என்னைப் பொறுத்தவரை அந்தக் கதாபாத்திரம் என்பது, நமது பார்வையை மேம்படுத்துவதற்கான வழிகாட்டி என நினைக்கிறேன்.
கனலியை வேண்டுமானால் எடுத்துக்காட்டாக வைத்துக் கொள்ளலாம்.
20 . நீங்கள் பெற்ற போட்டி பரிசுகள் –
நிலாச்சாரல் இலக்கிய வட்டம் சார்பாக, “செம்பருத்தி” கதைக்கு சிறந்த சிறுகதை எழுத்தாளர் விருது கிடைத்தது.
அதைத் தொடர்ந்து அந்த சிறுகதை குறும்படமாக இன்னும் சற்று நாட்களில் வெளிவர இருக்கிறது.
21. எதிர்வினை கருத்துக்களை எப்படி கையாள்கிறீர்கள்?
எதிர்வினைக் கருத்துக்கள் நம் எழுத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அல்லவே. அதில் இருக்கும் உண்மையை அலசி ஆராய்ந்து ஏற்றுக் கொள்வது நலம். நான் அப்படியே!
22 . நீங்கள் அதிகம் எழுத விரும்புவது எது ?
(கதை , கவிதை, தொடர்கதை, நாவல் , சிறுகதை) ஏன் ?
சிறுகதைகள் தான். சொல்ல வருவதை சுருங்க சொல்ல வேண்டும் என்பதில் உடன்பாடு அதிகம். அதனால் கூட இருக்கலாம்.
23 . ஏன் மாறுபட்ட கதைக்கரு கொண்ட கதைகள் வாசகர்களை அதிகமாக சென்றடைவதில்லை?
வாசகர்கள் காதல் கதையத் தாண்டி மற்றக் கதைகளில் ஆர்வம்ம் செலுத்தாது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
24 . குடும்பம் காதல் சாராத கதைகளை நீங்கள் எழுதியது உண்டா?
(படைப்பின் தலைப்பு)
இதுவரைக்கும் இல்லை. இனி முயற்சிக்கலாம் என்றிருக்கிறேன்.
25 . அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்களாக நீங்கள் கருதுவது என்ன என்ன?
வாசிப்பதற்கான புத்தகத்தினை நான் தேர்ந்தெடுக்கும் முறைகள்:
- மனத்திற்கு மகிழ்ச்சி அளிக்க கூடியவை
- ஆர்வத்தினை வளர்ப்பவை
- துறைசார்ந்த அறிவினை விரிவுபடுத்துபவை
- புதுமையான செய்திகளைத் தருபவை
- வாசகன் சார்ந்த படைப்பாளுமை வளர்க்க உதவுபவை
- திறனாய்வு அறிவினை மேம்படுத்துபவை
- பிறதுறை சார்ந்த வியப்பினை அளிப்பவை
- பொதுவானவை
26. ஓர் படைப்பின் வார்த்தை அளவுகள் பற்றி உங்களது கருத்து என்ன?
கடுகு சிறுத்தாலும், காரம் குறையாது என்பார்கள். சொல்ல வேண்டியக் கருத்தை சுருக்க சொல்வதே நலம்.
27 . எழுதுபவர்கள் பெறும்பாலும் பயன் அடைவதில்லை. அவர்கள் பயன்பெற நீங்கள் கூறும் சில யோசனைகள் என்ன?
அப்படி சொல்ல முடியாதே. அன்றைய எழுத்தாளர்களை விட,இன்றைய எழுத்தாளர்கள் தான் அதிகம் பயன் பெறுகிறார்கள் என்பது என் கருத்து.
28 . உங்கள் தனி தன்மை என்று தாங்கள் கருதுவது என்ன ?
அப்படி ஒன்னு கூட இல்லையே, என்ன பண்ண.?
29 . உங்களது கவிதை , பிடித்த வாக்கியம் , பழமொழி (பைனல் பஞ்ச்).
கீழோர்க்கு அஞ்சேல்! குன்றென நிமிர்ந்து நில்! கேட்டிலும் துணிந்து நில்! கொடுமையை எதிர்த்து நில்! கல்வியதைக் கைவிடேல்! சிதையா நெஞ்சு கொள்! சீறுவோர்ச் சீறு! ரௌத்ரம் பழகு!’ என்ற பாரதியின் கருத்துகளே எனது தாரக மந்திரம்.
30 . உங்கள் படைப்புகள் (லிங்க்குகளுடன்) (Youtube also ):
https://www.amazon.in/s?k=vathani+prabhu&i=digital-text&ref=nb_sb_noss
https://www.youtube.com/playlist?list=PL03HG4ZO3E6rvCJEx3s0bp2eGRHPnlmj2
கனலி மட்டுமில்ல நீங்களும் ரொம்ப நல்ல கருத்தும் கொள்கையும் வச்சி இருக்கீங்க வதனி மா ..
உங்க புது தளம் மூலமா நீங்க நிறைய சாதிக்கணும் , உங்க எழுத்துக்கள் எப்பவும் மெருகேரிட்டே போகணும் . அதை நாங்க படிச்சிட்டே இருக்கணும் .
வதனிமா கதைகள்ல எப்பவும் ஒரு வாழ்வியல் எதார்த்தம் இருக்குன்னு எனக்கு தோணும் . வாழ்க்கையோட மறுபக்கம் எப்டி வேணா இருக்கலாம்னு இல்லாம அதை ஆக்க பூர்வமாவும் வாழலாம்ங்கறத சொல்லும் .
இவங்க முகநூல் பக்கத்துல இவங்க போடற அவங்க பொண்ணும் இவங்களும் பண்ற சேட்டை பதிவுகள் ரொம்பவே ரசிக்க வைக்கும் . பல எடங்கள்ல இவங்க சேயாகவும், அவங்க பொண்ணு தாயாகவும் இருக்கறதா எனக்கு பல முறை தோன்றி இருக்கு . எப்பவும் நீங்க இதே போல சந்தோஷமா இருக்கணும் னு பிரார்தனை பன்னிக்கறேன் வதனிமா ..
அக்மார்க் மதுரை தேனி பக்க மொழிநடை வதனி மா உபயோகிக்கறது ரொம்ப நல்லா இருக்கும் . தமிழுக்கு தனி அழகு மதுரைல இருக்கறது யாரும் மறுக்க முடியாது இல்லையா ?? உங்களோட பேசினது எங்களுக்கு நிறைய விஷயங்களை தெரிஞ்சிக்க வச்சி இருக்கு வதனி மா .. உங்களோட எல்லா முயற்சிகளுக்கும் எங்களோட மனமார்ந்த வாழ்துக்கள்.. நீங்க தொட வேண்டிய உயரம் இன்னும் நிறைய இருக்கு .. அதை பாத்து சந்தோஷப்பட நாங்களும் தயாரா இருக்கோம் ..
இன்னிக்கி இவங்களோட நடந்த நம்ம பயணம் உங்களுக்கு பிடிச்சி இருக்கும் னு நினைக்கறேன் . அடுத்து ஒரு ஊக்கம் மிக்க எழுத்தாளர் கூட்டிட்டு வரேன் ..