104 – ருத்ராதித்யன்
“பதற வேண்டாம். எங்களின் எல்லை தெய்வத்தின் பரிபூரண அருள் இவருக்கு கிட்டியிருக்கிறது. இத்தனை காயங்கள் ஏற்பட்ட பின்பும் கூட, முதல் துளி அவரின் நெஞ்சத்தில் பத்திரமாக இருக்கிறது. அந்த நீரும் இப்போது ஓர் ஆத்மாவை உள்ளடக்கியுள்ளது..” எனக் கூறியபடி தலைவியார் அவளை தூக்கி வந்து ஆருத்ரா கைகளில் கொடுத்தார்.
“தாங்கள் உள்ளே செல்லுங்கள். இவரை தாக்கியவரை கொன்றுவிட்டு வருகிறேன்..” எனக் கூறிவிட்டு தனது ஆயுதங்களுடன் தலைவியார் வெளியே ஓடினார்.
நரசிம்மனும், ஆருத்ராவும் வனயாத்திரையை தலைவரின் குடிலுக்கு கொண்டு சென்று வைத்தியம் பார்க்க ஆரம்பித்தனர். அம்பு அவளது உடலை கொஞ்சம் ஆழமாகவே கீறி சென்றிருந்தது. இரத்தமும் அதிகமாக வழிந்து கொண்டிருந்தது.
“யுவராஜரே.. எனது இடையில் இருக்கும் பொடி பொட்டலத்தை எடுத்து அவளது காயங்களில் அழுத்துங்கள்.. உடனடியாக இரத்த போக்கு நின்றுவிடும்.” எனக் கூறிவிட்டு வனயாத்திரையை கைகளில் குழந்தை போல தூக்கி அவளது உடை விளக்கி காயப்பட்ட இடங்களை சுத்தம் செய்தாள். நரசிம்மனும் பின்னோடு அந்த பொடியினை காயத்தில் வைத்து அழுத்திக் கொண்டே வந்தான்.
இடப்பக்கமிருந்து வலது பக்கம் வரையிலும் காயம் மேலிருந்து கீழாக ஏற்பட்டிருந்தது.
“அங்கிருக்கும் உடை ஏதேனும் எடுத்து கொடுத்துவிட்டு வெளியே செல்லுங்கள்.. இவளை நான் பார்த்துக் கொள்கிறேன்..” என ஆருத்ரா கூறியதும் நரசிம்மன் அதுவரைக் கட்டுப்படுத்தியிருந்த கோபத்தினை ஓடுவதில் காட்டினான்.
சுமாராக ஒரு காத தூரம் அமரபுசங்கன் யாளி கொண்டே துரத்தி சென்றான். யாளியை கண்ட யானை அப்போதே அரசகேசரியை கீழே தள்ளிவிட்டு வேறுபக்கமாக ஓடியது. அவன் பின்னே குதிரையில் வந்த வீரர்களை எல்லாம் பழங்குடி மக்கள் நசுக்கியே கொன்றுவிட்டனர்.
அந்த கூட்டத்தின் தலைவனும், தலைவியும் ஆளுக்கு ஒரு பக்கமாக அடர்வனத்தில் புகுந்து தேடிக் கொண்டிருந்தனர். வந்தவன் அரசகேசரி என்பது அமரன் மட்டுமே அறிந்ததால் யானை ஓடிய பாதையில் இவனும் யாளியுடன் அனைத்து திக்கிலும் பார்த்தபடி நடந்தான்.
அரசகேசரி மட்டும் கண்ணில் பட்டால் யாளியின் நகம் கொண்டு அவனுடலை கீறி உள்ளிருக்கும் உடற்பாகங்கள் அனைத்தும் தனித் தனியாக பிரித்து எடுத்து அவனையே திண்ணவைத்து பார்க்கும் வெறியுடன் இருந்தான்.
“எங்கே அவன்? யாரது அமரரே ?” என நரசிம்மனும் இவனை தேடி வந்து சிறிது நேரத்தில் யாளியின் மேலே ஏறியபடிக் கேட்டான்.
“யாத்திரை ?”
“காயங்களில் மருந்திட்டு ரத்தபோக்கை நிறுத்தியாகிவிட்டது. பயமில்லை. ஆனால் அவளுடல் முழுதும் தழும்பாக மாற்றியவனை ஓர் நரம்பையும் விடாமல் உருவி எடுத்து துடிதுடிக்க வைக்கவேண்டும்..”
“அரசகேசரி தான். இங்கே தான் பக்கத்தில் கூடாரம் அமைத்திருக்க வேண்டும். அந்த அபராஜிதனும் இங்கே தான் இருக்கிறான். நான் பறந்து சென்று எங்கே இருக்கிறார்கள் என்று பார்த்து வருகிறேன். நீங்கள் இந்த பக்கமாக செல்லுங்கள். யானை யாளியை கண்டதும் அவனை கீழே தள்ளிவிட்டு ஓடியது. இந்த பக்கமாக திரும்பும் வரையிலும் அவன் யானையின் மீது தானிருந்தான்.” எனக் கூறிவிட்டு சட்டென காற்றாக கலந்தான்.
நரசிம்மனின் கோபம் நொடிக்கு நொடி அதிகரிக்கும்படியான விஷயங்களே அங்கே நடந்துக் கொண்டிருந்தன.
இங்கே வனயாத்திரை இருந்த இடத்தினை சுற்றி பலர் காவல் காத்துக் கொண்டிருந்தனர். கண்ணில் தென்பட்டவர்களை எல்லாம் கொன்றுவிட்டு தலைவனும் தலைவியும் குடில் வந்து வனயாத்திரையின் உடல்நிலையைப் பற்றி அவர்களின் மருத்துவரிடம் கேட்டனர்.
“உடலில் இருந்து ரத்தபோக்கு அதிகமானதால் மயங்கிவிட்டார். இளவரசியும் இளவரசருமே வைத்தியம் பார்த்து காயத்திற்கு மருந்தும் போட்டுவிட்டனர்.” எனக் கூறி குடிலின் கதவை திறந்துவிட்டார்.
“நமது வேர் மருந்தினை கொண்டு வாருங்கள் உடலில் ஏற்படும் தழும்பும் மறைந்துவிடும். சிறு பெண் வாழும் காலம் முழுதும் உடல் முழுதும் தழும்பைக் கண்டு மனம் நோகக்கூடாது..” என தலைவி கூறியதும் அவர் அதை எடுத்து வர சென்றார்.
“அவள் வீரத்தின் அடையாளமாக எண்ணி சந்தோஷம் மட்டுமே கொள்வாள் தலைவி அவர்களே.. தாங்கள் சரியான நேரத்தில் அவளை காப்பாற்றி விட்டீர்கள். அதற்கு ருத்ரக்கோட்டை என்றும் கடன்பட்டிருக்கும்.” எனக் கூறி அவரை வணங்கினாள்.
“அது எனது கடமை இளவரசி அவர்களே.. முதல் துளியை வெற்றிகரமாக எடுத்தவர்களை ஆயுள் முழுதும் காக்கும் கடமை எங்களுக்கு உண்டு. அதற்கு அவர்களுக்கு விசேஷ பரிசினை கொடுப்பதும் எங்கள் வழக்கம். இதுவரை நான் பார்த்த வெற்றியாளர்களில் இவர் மிகவும் இளவயது உடையவர் மட்டுமின்றி அவரின் அர்ப்பணிப்பு அத்தனை ஆழமாக இருந்தது. தங்களுக்காக விசேஷ விருந்தும் தயாராகி கொண்டிருக்கிறது. எங்களின் மரியாதையை தாங்கள் இங்கே இரவு தங்கி ஏற்றுக் கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.” என அவர் கூறியதும் ஆருத்ரா அவரை ஆரத்தழுவிக் கொண்டாள்.
“தங்களின் கடமையை தாங்கள் நிறைவேற்றும் விதம் எனை மிகவும் கவர்ந்துவிட்டது. முதலில் எங்களை தள்ளி நிறுத்தியதும், அவள் துளியை கொண்டு வந்ததும் தாங்கள் நடந்து கொள்வதும் நான் மேற்கொள்ள வேண்டிய கடமையுணர்வின் ஆழத்தை உணர்த்துகிறது. பெரும் பாடம் இன்று கற்று கொண்டேன்.” என ஆருத்ரா அவர்களின் செயலை சிறப்புப்படுத்தி பேசினாள்.
“தெளிவான சிந்தனையும் தீர்க்கமான உணர்வுகளும் கொண்டவர்கள் மட்டுமே புரிந்து கொள்வர் இளவரசி… அவ்வகையில் தாம் தாங்கள் கொண்ட கடமையில் மிகவும் தீவிரமாக மட்டுமின்றி திட எண்ணமும் செயலும் கொண்டுள்ளீர்கள்.. யாத்திரை ஓய்வு எடுக்கட்டும் நாம் முன்னே இருக்கும் திடலில் அமர்ந்து கொள்ளலாம்..” என அவளை முன்பிருந்த திண்ணையில் அமர வைத்தனர்.
சிறிது நேரத்தில் மருத்துவரும் தழும்பை நீக்கும் மருந்தை தலைவியிடம் கொண்டு வந்து கொடுத்தார்.
“யாத்திரையை தாக்கியது யார் என்று தெரிந்ததா தலைவி அவர்களே?”
“இல்லை இளவரசி.. ஆனால் சரியாக அவர் எல்லை தாண்டும் சமயத்தில் அவர்கள் வந்திருக்கிறார்கள் என்றால் இங்கே அருகே இருந்து கண்காணித்து வந்திருக்க வேண்டும். ஒருசிலர் வனத்தில் தேட சென்று இருக்கிறார்கள். அவரை தங்கள் மேல் சாய்த்து அமரவைத்து கொள்ளுங்கள்.” எனக் கூறினார்.
ஆருத்ராவும் அவளது உடையை விளக்கிவிட்டு அமரவைத்துக் கொண்டு காயத்தை ஆராய்ந்தாள்.
“காயம் அதற்குள் சரியாக தொடங்கிவிட்டது. என்ன என்ன மூலிகையை இந்த பொடியில் சேர்த்துள்ளீர்கள் என்று நான் அறியலாமா இளவரசி?” என யாத்திரை காயத்தில் இருந்த பொடியை நுகர்ந்தவாறு கேட்டாள்.
“நிச்சயமாக.. அதற்கு முன் தங்களின் பெயரை நான் அறியலாமா தலைவி அவர்களே?”
“மறந்துவிட்டேன்.. எனது பெயர் கண்மயா..” எனக் கூறிவிட்டு மேலும் பல விஷயங்களை இருவரும் பேசியபடியே வனயாத்திரை உடலில் ஏற்பட்ட காயத்திற்கு மருந்தைத் தடவி விட்டார்.
“இந்த கழிம்பு எதில் செய்திருக்கிறீர்கள்?” என ஆருத்ரா கேட்டாள்.
“இது வடக்கு புறத்தில் இருக்கும் ஒரு மலையில் விளையும் கொடிவேர். இதனுடன் இன்னும் சில இலைகள் மற்றும் நெருப்பில் வேகவைத்த காய்களை சேர்த்து கலந்து வைத்து அதனை சூரிய ஒளியில் சில நாட்களும், மண்ணுக்கடியில் சில நாட்களும் வைத்து எடுத்தால் இப்படி கெட்டியாக மாறும். அதில் அவ்வப்போது காயத்தின் ஆழத்திற்கு ஏற்ப சில எண்ணையை கலந்து தடவினால் கை துண்டாக வெட்டப்பட்டிருந்தாலும் அந்த தழும்பு மறைந்துவிடும்.”
“நமது வீரர்கள் மற்றும் வீராங்கணைகளுக்கு மிகவும் உபயோகமாக இருக்குமே..” என ஆருத்ரா புருவத்தை உயர்த்தி சிறிது மென்னகையுடன் கூறினாள்.
“உண்மை தான். ஆனால் அதிகளவில் இதை தயாரிக்க மூலப்பொருட்கள்
தேவை. பேரரசு இதில் பங்கு கேட்டால் நாங்கள் எங்கள் கூட்டத்தார்களுக்கு ஏமாற்றம் தரவேண்டிய நிலை வரும்..”
“இல்லை கண்மயா அவர்களே.. நான் இதன் தயாரிக்கும் முறையை தான் கேட்டேன். நீங்கள் எடுக்கும் இடங்களில் நாங்கள் செல்லவும் மாட்டோம். 5000 பேரை வைத்து இந்த காட்டினில் மிகவும் அற்புதமாக தங்களின் வாழ்வை நடத்தி வரும் உங்கள் மீது எனக்கு பெரும் மரியாதையும் அன்பும் உண்டு. உங்களது சபதமும் நான் அறிவேன். முதல் மழைத் துளிக்காக உங்கள் அத்தனையும் அர்ப்பணித்து வாழும் உங்கள் அனைவரையும் நாங்கள் என்றும் மதிப்புடனும் மரியாதையுடனும் மட்டுமே நடத்துவோம். பேரரசரும் தங்கள் கூட்டத்தினரை காக்கவே என்றும் செயல்படுவார்.”
“அறிவோம் இளவரசி.. சரி வாருங்கள் நாம் வெளியே செல்லலாம். இனி இவர் நாளை காலை தான் கண்விழிப்பார். அதுவரை தாங்கள் எங்கள் விருந்தாளியாக இருக்க கேட்டுக்கொள்கிறேன்..”
“அரண்மனைக்கு செய்தி அனுப்ப வேண்டும். இவளை காணவில்லை என்றதும் மகாராணியார் மிகவும் பதறிவிட்டார்..”
“செய்தி அனுப்பியாகிவிட்டது.. என்னவர் துளி ஒளி பெற்றதும் அரண்மனைக்கு செய்தி அனுப்பிவிட்டார். உங்கள் அரண்மனைக்கும் கூட..” எனக் கூறிவிட்டு சில விஷயங்களை ரகசியமாக ஆருத்ராவிடம் பகிர்ந்துக் கொண்டார். ஆருத்ரா அவர் கூறிய அனைத்தும் கவனமாக கேட்டுக் கொண்டு கண்மயா கைகளைப் பிடித்து நன்றி கூறினாள்.
“இளவரசியார் உணவு உண்ண வரவேண்டும்..” என அந்த கூட்டத்தின் தலைவன் அழைப்பு விடுத்தார்.
“இன்னும் எனது தமையனும் யுவராஜரும் வரவில்லையே.. அவர்களும் வந்துவிடட்டும் தலைவர் அவர்களே..”
“அவர்கள் தங்கள் தங்கையை கொல்ல துணிந்தவனை கொல்லாமல் வரமாட்டார்கள் போல.. எங்கள் எல்லை வரை நாங்கள் உள்நுழைந்தவர்களை கொன்றுவிட்டோம். யானையில் வந்தவன் தப்பித்துவிட்டான். அவனை தேடியே இருவரும் சென்று இருக்கிறார்கள்.” என தலைவன் கூறினார்.
“சரி. வாருங்கள் நாம் உண்ணலாம்…” என ஆருத்ரா புன்னகை முகமாகவே உடன் நடந்தாள்.
“தங்கள் அனைவருக்கும் இங்கே வந்தவர் மிகவும் முக்கியமானவர் என்பது தெரிந்தது. ஆனால் இத்தனை அன்பை அனைவரும் அவரின் மேல் பொழியும் அளவிற்கு உங்கள் அனைவரையும் இளைய இளவரசி வசியம் செய்து வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்..” தலைவி கூறினார்.
“அவர் தியானத்தில் அமரும் வரையிலும் நீயுமே அவரின் கைபற்றி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாய் என்பதை மறந்தாயா மாயாதேவி? நீ எனது கைககளை கூட அத்தனை நேரம் பற்றிக் கொண்டிருந்ததில்லை இத்தனை வருடங்களில்.. சுமாராக மூன்றே முக்கால் நாழிகை அவருடன் கைகோர்த்து பேசிக் கொண்டிருந்தாய்..” என தலைவன் இடைபுகுந்து பேசவும் ஆருத்ரா கலகலவென வாய்விட்டுச் சிரித்தாள்.
“தலைவருக்கு இத்தனை பொறாமையை எனது தங்கை தூண்டி விட்டிருக்கிறாளா? தலைவி அவர்களே நீங்கள் உங்களவரை இன்னமும் கவனிக்க வேண்டும் என்று ஏக்கம் கொள்கிறார். உயிர் ஏற்றிய சபதத்தோடு, உயிர் கொண்ட காதலையும் தாங்கள் சரிவர கவனிக்க வேண்டும் அல்லவா?” என ஆருத்ரா மிகவும் லகுவாக கண்மயாவிடம் கிண்டலடித்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
அதை தூரத்தில் இருந்தே நரசிம்மனும், அமரனும் பார்த்தபடி அவ்விடம் வந்து சேர்ந்தனர்.
“என்ன இளவரசியார் மிகவும் சந்தோஷமாக சிரித்து பேசிக்கொண்டிருக்கிறார்? என்னவென்று கூறினால் நாங்களும் சிரிப்பில் கலந்து கொள்வோம்..” எனக் கூறியபடி ஆருத்ரா அருகே வந்து தோள் உரசி அமர முற்பட்டவனை அமரன் தன்பக்கம் இழுத்து அமரவைத்தான்.
“இன்னும் பரிசமும் போடவில்லை, திருமணமும் நடக்கவில்லை யுவராஜரே.. இப்போதே வசந்த காலத்தை நாடக்கூடாது..” என அமரன் கூறியதும் நரசிம்மன் முறைக்க ஆருத்ரா தலைக்குனிந்து மௌனமாக சிரித்தாள்.
“என் இளைய சண்டிராணி எப்படி இருக்கிறாள்? அவளை காணலாமா?” என அமரனே நரசிம்மனை தோள் தட்டி சமாதானம் செய்தபடி கேட்டான்.
“அவருக்கு கழிம்பு பூசி விட்டிருக்கிறோம். நாளை அவர் கண்விழித்தபின் பார்க்கலாம் அரசே..” என தலைவர் கூறினார்.
“தங்களின் பெயர் நான் அறியலாமா?” என நரசிம்மன் கேட்டான்.
“மாறவல்லன் என்பர் எனை யுவராஜரே..” என எழுந்து நின்று வணங்கிக் கூறினான்.

