119 – ருத்ராதித்யன்
“நாம் அதை தனியாக நமது அறையில் பேசிக்கொள்ளலாம்.. இப்போது ருத்ர விக்னன் அவளுடன் சென்று இருக்கிறானே.. என்ன செய்வது?” என நரசிம்மன் சுற்றிலும் கண்களை சுழற்றியபடி கேட்டான்.
“அவளும் விக்னனும் ஓர் புரிதலில் தான் தனியாக சென்று இருக்கிறார்கள். தாம் இருவரும் பேசி கொண்டிருங்கள் நான் தாயாரை பார்த்து விட்டு வருகிறேன்..” எனக் கூறிவிட்டு சிங்கத்துரியன் அங்கிருந்து சென்றான்.
“இங்கு நடப்பது எல்லாம் என் மனதை அதிகம் வலிக்க செய்கிறது இளவரசி..” என நரசிம்மன் அவளின் தோள் அணைத்து நடந்தபடிக் கூறினான்.
“உங்கள் அனைவருக்கும் விஷயம் இது தான் என முழுதாக தெரியும், ஆனால் எனக்கு இன்னதென்று முழுதாக தெரியாமலே நான் நீங்கள் கூறும் அனைத்தும் செய்து வருகிறேன் அப்படியென்றால் என் மனம் எப்படி நிம்மதியிழந்து இருக்குமென்று நினைத்து பார்த்தீர்களா ஆதித்யரே?” சிங்கமாதேவி அவனின் தோளில் தலைசாய்த்துக் கொண்டு கேட்டாள்.
“அதை நீ முழுதாக அறிந்தால் இப்படி இணக்கமாக இருக்கமாட்டாய் சிங்கம்மா.. உனையும் இழக்காமல் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கடமையும் தவறாமல் அனைத்தும் செய்து முடிக்க வேண்டும். குருவி தலையிலே பனங்காயை வைத்தது போல உள்ளது..”
“இது என்ன பேச்சு ஆதித்யரே? நமக்கு ஓர் பரீட்சை வைக்கிறார்கள் என்றால் அதில் நம்மால் வெற்றி பெற முடியும் என்ற சாத்திய கூறுகள் உள்ளதாக தானே அர்த்தம். நம் பக்க முயற்சிகளை நாம் இடைவிடாமல் செய்து வரலாம். மற்றது காலத்தின் கையில் இருக்கிறது..” என அவனுக்கு ஆறுதல் கூறியபடி ஓர் பாறையில் அமர்ந்து அவனை தனது மடியில் படுக்க வைத்துக் கொண்டாள்.
“சிங்கமாதேவி.. உனக்கு என் மேல் வெறுப்பு வருமா?” என சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு கேட்டான்.
“வருமே..”
“என்னடி இப்படி கூறுகிறாய்? என்னை வெறுப்பாயா நீ?” என கோபமுடன் கேட்டான்.
“ஆம். அதுவும் ஓர் உணர்வு தானே.. நீங்கள் ஏதேனும் நன்மையான செயல்கள் செய்யும் போது உங்கள் மேல் வரும் அன்பு போல நீங்கள் தவறான செயல்கள் செய்தால் வெறுப்பும் தோன்றுவது இயற்கை தானே..? இரண்டும் உணர்வு தான்.”
“உண்மை தான். ஆனால் வெறுப்பு முதலிலேயே வருமா என்ன? முதலில் கோபம் வரும். பின்னர் அந்த கோபம் நீண்டு,உன் கோபத்தினாலும் அர்த்தமில்லை என்ற நிலையில் தானே வெறுப்பு தோன்றும்.. அதற்கான கால அளவுகள் அதிகம் எடுக்கும்..”
“அப்படி அத்தனை கால அளவு உங்கள் மேல் கோபம் நீடிக்கும் அளவிற்கு தாம் என்ன செய்ய போகிறீர்கள்?” என ஆருத்ரா சிரிப்புடன் கேட்டாள்.
“நான் ஒன்றும் செய்ய போவதில்லை..” என நரசிம்மன் கூறிவிட்டு ஆருத்ராவின் வயிற்றில் முகம் புதைத்துப் படுத்துக் கொண்டான்.
“அப்படியானால் நான் அப்படி செய்வேன் நீங்கள் எனை திருத்த முயற்சிக்கும் வேலையில் நான் உங்களின் மேலே வெறுப்பு கொள்வேன் என்று கூறுகிறீர்கள்..” எனக் கூறிவிட்டு ஆருத்ரா அவன் கண்களை ஆழமாகப் பார்த்தாள்.
“என்னை அப்படி பார்க்காதே ருத்ரா..” என மீண்டும் அவளின் வயிற்றில் புதைய சென்றவனை தடுத்து நிறுத்தி, “இங்கே பாருங்கள் பல விஷயங்கள் நமது கட்டுப்பாட்டினை மீறி நடந்தாலும், பெரும் யுத்தமே வந்தாலும், உங்களை அன்றி நான் யாரையும் என் பாதியாக ஏற்றுக் கொள்ளவே மாட்டேன் அது நான் எனது சுயநினைவில் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி. வேறு யார் எனை நெருங்கினாலும் அவன் உயிர் அந்நொடியே அவனுடலை விட்டு செல்லும். அதே போல நான் அறிந்தவரையில் நான் எடுத்து வந்த சக்தி சிலையும் இனி நீங்கள் தேடி செல்லவிருக்கும் அப்பனின் சிலையும் நம் இருவரின் கைகளால் தான் ஒரே இடத்தில் நிறுவப்படப் போகிறது. அப்போது நமது மனங்கள் இணைந்திருக்கும்.. இது மட்டும் எந்த நிலையிலும் மாறாது. இது வனதேவியின் மீது ஆணை..” எனக் கூறி எழுந்துக் கொண்டாள்.
“நீ இல்லையென்றால் எனக்கு எதுவுமே இல்லை ருத்ரா.. அரை மனிதனாக வாழும் சாபத்தை ஏற்க நான் விரும்பவில்லை.. உனது புத்தி சாதுர்யம் என்னை பல நேரங்களில் சிலிர்க்க வைத்திருக்கிறது ஆனால் இப்போது எனக்கு வலியை தான் கொடுக்கிறது..” எனக் கூறி அவளை இறுக்கமாகக் கட்டிக் கொண்டான்.
“இங்கே பாருங்கள் அன்பரே.. நாம் செய்து வரும் காரியம் சாதாரணமானது அல்ல என்று உணர்ந்த நொடியே நாம் அனைத்திற்கும் தயாராக தொடங்க வேண்டும். நமக்கு அத்தனை வலிமை இருக்கிறது என்று இந்த இயற்கையும் பிரபஞ்சமும் கூறும்போது நாம் ஏன் தயங்கி நின்று சிறு விஷயங்களுக்காக கலங்க வேண்டும்?”
“உனை இழப்பது ஒன்றும் சிறிய விஷயமில்லை ருத்ரா..” என நரசிம்மன் சற்றே உள்ளம் கொந்தளிக்க நிலை தவறி வார்த்தைகளை விட்டான்.
“என்ன கூறினீர்கள்?” என ஆருத்ரா அவனது முகம் பார்த்து கேட்டாள்.
“ஒன்றுமில்லை.. நான் அறைக்கு செல்கிறேன்..” என வேகமாக நடந்து சென்றான்.
அவனுக்கு முன் வேகமாக சென்று அவனை வழிமறைத்து நின்றாள். “இப்போது எனக்கு தெளிவாக கூறுங்கள்.. எனை இழக்க வேண்டிய நிர்பந்தம் வாய்க்குமா?” என தீர்க்கமாக கேட்டாள்.
“ஆருத்ரா..” என திணறினான்.
“கூறுங்கள் என் மேல் ஆணை..”
“அதை முழுதாக உங்களிடம் கூற முடியாது இளவரசி..” எனச் சொன்னபடி சிங்கத்துரியன் அங்கே வந்தான்.
“நான் அறியக் கூடியதை கூறுங்கள். நீங்கள் மூவர் மட்டுமே இதை செய்து முடிக்க முடியாது.. நான் அறியக் கூடியதை கூறினால் நானுமே நிறைவாக இந்த பணியை செய்வேன்..” என ஆருத்ரா திடமான குரலில் கூறினாள்.
“இங்கே பேச வேண்டாம். இரவு அமரர் வந்த பின் பேசி கொள்ளலாம்.. சிங்கத்துரியரே.. தமது முகம் கசங்கியுள்ளதே..” என நரசிம்மன் பரிவுடன் கேட்டான்.
“நாம் நினைத்ததை விடவும் வேகமாக அவன் முன்னேறி கொண்டிருக்கிறான் யுவராஜரே.. இதே வேகத்தில் சென்றால் வனயட்சி அவர்கள் வெகு விரைவில் அவனது ஆத்மார்த்த அடிமையாக மாறிவிடுவார். அந்த அறையில் அவனது ஆத்மா வெளியேற முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. எந்த நொடியிலும் அது இங்கிருந்து வெளியேறும்.”
“அனைத்தும் ஈசன் செயல்.. நான் கோட்டையை ஒரு முறை சுற்றிவிட்டு வருகிறேன். நீங்கள் இருவரும் சிறிது நேரம் ஓய்வெடுங்கள்..” எனக் கூறிவிட்டு ஆருத்ராவின் முகம் காணாமல் அங்கிருந்து வேகமாக சென்றான்.
“அத்தனை பெரிய விபரீதம் நடக்கிறதென்றால் அதை தடுப்பதில் எனது பங்கும் நிச்சயமாக இருக்கும் துரியரே.. தமது தோழரிடம் கூறுங்கள். நான் வனதேவி ஆலயத்தில் இருக்கிறேன். சித்ராங்கி வந்த பின் அறைக்கு செல்கிறேன். அதுவரை எனை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம்..” எனக் கூறிவிட்டு மீண்டும் அவள் மகதன் மேல் படுத்திருந்த இடத்திற்கு சென்று அமர்ந்து கொண்டாள்.
மகதனும் அவள் அவ்விடம் வந்ததும் மீண்டும் எழுந்து வந்து அவள் உடல் சாய்ந்து கொள்ளும் வகையில் படுத்துக் கொண்டான்.
இங்கே ருத்ர விக்னன் மேல் அமர்ந்திருந்த சித்ராங்கி யாளியின் பாஷையில் அதனுடன் பேசியபடியே வனத்தைச் சுற்றி வந்துக் கொண்டிருந்தாள்.
கோட்டையை விட்டு வெகு தூரம் வந்த பின்னே ஓர் இடத்தில் யாளி நீர் அருந்த நதியோடும் பாதையில் நடக்கத் தொடங்கியது.
பிறந்தத்தில் இருந்து இந்த இடத்திற்கு வந்திராத ருத்ரவிக்னன் சரியாக நீரோடும் பாதையை உணர்ந்து அந்த பாதையில் நடப்பதை கண்டு சித்ராங்கி மெல்ல அதனை முத்தமிட்டு சிரித்தாள்.
அவளின் உள்ளத்தில் ஓடும் எண்ணங்களை எல்லாம் அவள் உடல் வழியே உணர்ந்த யாளியும் சிறிதாக சந்தோஷ ஒலி எழுப்பியது. அதுவே நூறு சிங்கங்களின் கர்ஜனை போல அத்தனை கம்பீரமாகவும், ஒலி அடர்த்தியாகவும் இருந்தது.
சித்ராங்கி அவளது காதுகளை அடைத்துக் கொண்டாள். அந்த ஒலியினால் அங்கிருந்த பல நூறு மிருகங்களும், பறவைகளும் அவ்விடத்தை விட்டு தூரமாக ஓடி சென்று திரும்பி யாளியை பார்த்தன.
“விக்னா.. உனை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. எதிர்காலத்தில் உன்னை தான் அவனிடம் கேட்க போகிறேன். ஆனால் அவன் கொடுக்க மாட்டேன் என்று முரண்டு பிடிப்பான். நீ அவனை சமாதானம் செய்துவிட்டு என்னிடம் வந்து விட வேண்டும். சரியா?”
யாளி மாட்டேன் என்று தலையை இடவலாமாக ஆட்டியது.
“ஏன்? அவனை அத்தனை பிடித்து விட்டதா உனக்கு? ஆனாலும் அவன் இறுதியில் என்னிடம் வந்து தான் நின்றாக வேண்டும். காலம் அப்படியான கோலத்தை தான் எழுதி வைத்திருக்கிறது. நீ ஒன்று செய்ய வேண்டும்.” எனக் கூறிவிட்டு அதன் காதில் விக்னன் செய்ய வேண்டிய சில பணிகளை கூறினாள்.
அதைக் கேட்ட கஜயாளி சரியென தலையை ஆட்டியது. “இப்போது மட்டும் தலையை நன்றாக உருட்டு. ஆனாலும் உனது அன்பு எனை மெய் சிலிர்க்க வைக்கிறது தெரியுமா? என்னவனும் இந்த பெரும் பணியில் இருக்கிறான் என்று உவகை கொள்வதா இல்லை அவன் இந்த பணியினால் பல ஆண்டுகள் சிறையில் உறையப் போகிறான் என்று வருத்தம் கொள்வதா என்று எனக்கு தெரியவில்லை. காலத்தின் பிடியில் இருக்கும் பொம்மைகள் தான் நாம் அனைவரும்.. வருங்காலத்தை எதிர்கொள்ள பரமாத்மா தான் மனதிடம் அருளவேண்டும்..” எனக் கூறிவிட்டு யாளியின் மீது படுத்துறங்க ஆரம்பித்தாள்.
சித்ராங்கி கூறியபடி யாளியும் வனத்தினை சுற்றிவிட்டு மீண்டும் வனதேவி ஆலயமிருக்குமிடம் வந்து அவளை நிலத்தில் இறக்கி விட்டுவிட்டு வனதேவியின் முன்னே படுத்துக் கொண்டது.
சித்ராங்கி அங்கே படுத்துறங்கும் ஆருத்ராவை எழுப்பினாள். “ஏன் இங்கேயே படுத்திருக்கிறாய் ருத்ரா?”
“உனது தமையன் தான் எனை தனியாக விட்டு சென்றுவிட்டார்…” எனக் கூறிவிட்டு யாளியிடம் சென்றாள்.
“அவளுடன் எங்கே சென்று சுற்றிவிட்டு வருகிறாய்? எனை கூட நீ இன்னும் உன் மேல் அமரவைத்து எங்கும் அழைத்து செல்லவில்லை…” என விக்னனிடமும் செல்லக் கோபம் கொண்டாள்.
யாளி அவளை துதிக்கையினால் முன்னால் இழுத்து மெல்ல அணைப்பது போல சுற்றிக் கொண்டது.
“நீ எனை நன்றாக அறிவாய் அல்லவா? சரியான நேரத்தில் அனைத்திற்கும் நீ தலைமை ஏற்று விடு.. எனது அத்தனை வன நண்பர்களும் இனி உனது பொறுப்பு…” என யாளியின் முகத்தில் படுத்தபடி கூறினாள்.
யாளியின் கண்கள் ஓர் துளி நீரை நிலத்தில் சிந்தியதும் அங்கே ருத்ரக் கோட்டையில் இருந்த தீரன் பெரும் குரல் கொடுத்தான் வான் நோக்கி…

