15 – மீள்நுழை நெஞ்சே
“நீங்க எங்க இந்த பக்கம்?”, எனத் துவாரகா மைனாவை மறைத்தபடிக் கேட்டாள்.
“என்ன மருமகளே .. ஊர்ல இருந்து வந்தா இந்த அத்தைய பாக்கணும்ன்னு உனக்கு தோணறதே இல்லயா ?”, என அங்கே இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தார்.
“உங்களுக்கு தான் ஊருல இருக்க ஆளுங்களுக்கு எல்லாம் வட்டிக்கு குடுத்து, குடும்பத்த எல்லாம் தெருவுக்கு கொண்டு வந்துட்டு இருக்கறதுக்கு நேரம் பத்தலன்னு கேள்விப்பட்டேன் .. இந்த உயர்ந்த பணில இருக்கறவங்கள நான் ஏன் தொந்தரவு பண்ணனும் ?”, என நக்கலாகச் சிரித்தபடியே கேட்டாள்.
“மருமகளுக்கு கிண்டல் அதிகமா தான் இருக்கு.. என் வீட்டுக்கு வந்தா எல்லாம் சரியா போயிடும்.. “, எனக் கண்களில் வன்மமும், இதழில் புன்னகையுமாகக் கூறினார்.
“ஹாஹாஹா .. கனவு காணலாம் .. ஆனா இவ்ளோ உச்சிவெயில் கனவு காண கூடாது அத்த.. இங்க எதுக்கு வந்தீங்க அத சொல்லுங்க..”
“அந்த பொண்ணு மைனாவ கூட்டிட்டு போகலாம்னு வந்தேன்.. நாளைக்கு பஞ்சாயத்துக்கு நானே பத்திரமா கூட்டிட்டு வரேன் துவா.. உனக்கு எதுக்கு சிரமம்? என் தம்பிங்க ரெண்டு பேரும் ரொம்ப நியாயஸ்தங்க இல்லையா .. “
“உங்களுக்கு அவ்ளோ சிரமம் வேணா அத்த .. நீங்க கெளம்புங்க.. நீங்களும், உங்க புள்ளையும் நெனைக்கறது எதுவும் எப்பவும் நடக்காது.. தவிர பஞ்சாயத்து முறைப்படி பிராது குடுத்தவங்க மூணாவது மனுஷன் பாதுகாப்புல இருக்கறது தானே வழக்கம்.. அவ இங்க தான் இருப்பா .. நீங்க கெளம்புங்க .. நேரம் ஆச்சி..”, என வாசல் பக்கம் கை நீட்டினாள் துவா.
மரகதமும், கனிமொழியும் அமைதியாக அங்கு நடப்பதை மட்டும் கவனித்துக் கொண்டு இருந்தனர்.
“என்ன மரகதக்கா .. எப்படி இருக்கீங்க ? வீட்டுக்கு வந்தவள ஒரு வாய் காப்பி தண்ணி குடிக்கறியான்னு கூட கேக்காம அமைதியா நிக்கறீங்க ..”, எனத் துவாவின் அத்தை வைரம் கேட்டார்.
“என் வீட்டுக்குன்னு வந்திருந்தா கேட்டு இருப்பேன் வைரம். நீ வந்தது வேற விஷயத்துக்கு போல .. அதான் அமைதியா இருக்கேன்.. நீயும் உன் மகனும் இப்போ கெளம்பினா தேவல .. நாளைக்கு பாத்துக்கலாம் ..”, என மரகதம் பதில் கொடுத்து அங்கிருந்து அனுப்பினார்.
வைரம் நேராக தன் மகனை அழைத்துக் கொண்டு தன் அம்மாவிடம் சென்றார்.
“அம்மா ..”, என ஒப்பாரி வைத்தபடி உள்ளே ஓடினார். கூடத்தில் அமர்ந்து சாப்பிட்டபடி டிவி பார்த்துக் கொண்டு இருந்த அப்பத்தா கிழவி, மகளின் அழுகுரல் கேட்டுத் திரும்பினார்.
“என்னாச்சி வைரம் ? ஏன் கண்ணு இப்டி அழுதுட்டு வர்ற ?”, என உடனே எழுந்துக் கேட்டார்.
அங்கே அருணாச்சலம் முதல் மனோகர் மாதவி அனைவரும் இருந்தனர். மாதவி கிழவி எழுந்து நின்றதும் பவானியிடம், “பாத்தியாக்கா எப்டி குதிச்சி எந்திரிக்கறாங்க.. நம்மகிட்ட காலைல இடுப்புவலின்னு வைத்தியர் சொன்ன தைலம் காய்ச்சி குடுக்க சொல்லி எவ்ளோ வேலை வாங்கினாங்க .. இப்ப வலி காணாம போயிரிச்சி போல .. “, என முனகினார்.
“கம்முன்னு இரு டி .. அண்ணன் தம்பி யார் காதுல விழுந்தாலும் நம்ம காது இன்னிக்கி போயிடும்.. என்ன வேஷம் போட வந்திருக்கோ தெர்ல இந்நேரத்துல .. நிம்மதியா ஒரு வாய் சோறு திங்க விடமாட்டேங்கறாங்க..”, என பவானி அவரை அடக்கினார்.
“கம்முன்னு நம்ம ரெண்டு பேரும் நம்ம துவா கூட ஊருக்கு போயிடலாம் க்கா .. அப்பத்தான் நம்ம அருமை தெரியும் இவங்களுக்கு ..”, எனத் தன் கணவனைப் பார்த்தபடிக் கூறினார்.
“இதான் சாக்குன்னு கெழவி ரெண்டு பேருக்கும் இன்னொரு கல்யாணம் செஞ்சி வச்சிடும் டி.. நம்ம இருக்கறப்பவே என்ன பேச்சு பேசறாங்க.. நம்ம இங்க இல்லைன்னா நாளைக்கு தெருவுல தான் நிக்கணும்”
“செஞ்சாலும் செய்யும் இந்த கெழவி .. கொரோனாலயே தப்பிச்ச ஆளு ஆச்சே இந்த கெழவி..”, இப்படி இருவரும் அங்கொரு கண்ணும் காதும், இங்கொரு கண்ணும் காதுமாக தங்களுக்குள் பேசிக்கொண்டு இருந்தனர்.
“இந்த பய மேல அநியாயமா பழி போட பாக்கறாங்க ம்மா.. எங்க மேல பிராது குடுத்து இருக்காங்க ..”, எனக் கூறி ஒப்பாரி வைத்தார்.
“யாரு டி அது நம்ம மேல குடுக்கறது?”, எனக் கிழவி சினம் கொண்டுக் கேட்டது.
“அந்த அநாத சிறுக்கி மைனா தான் மா.. இதுக்கு அந்த மரகதமும் தொண நிக்கறா ம்மா..”, என மூக்கைச் சிந்தினார்.
“அக்கா.. கொஞ்சம் அழறத நிறுத்து.. இப்ப எதுக்கு இங்க ஒப்பாரி வச்சிட்டு இருக்க ?”, என அருணாச்சலம் அதட்டினார்.
“பாத்தியா ம்மா .. தம்பி என்னைய நம்பல போல ம்மா .. “, என மீண்டும் ஆழ ஆரம்பித்தார்.
“உம் பையன் செஞ்ச வேலைக்கு இவ்ளோ நேரம் வெளிய இருக்கறதே எங்க முகத்துக்காக தான்.. சும்மா நீ இங்க அழுது ஒப்பேத்தாத.. “, என மனோகரும் அதட்டினார்.
“அய்யோ அய்யோ அய்யோ .. நான் என்ன பண்ணுவேன் ..? ஏது பண்ணுவேன் ..? என் தம்பிங்களே என்னைய நம்பலயே .. இனி நான் யார்கிட்ட போய் நிப்பேன் .. நாதியத்து நிக்கறனே .. அம்மா .. நீ இருக்கறப்பவே எனக்கு இப்டி ஒரு நெலம வந்துரிச்சே .. இனி எனக்குன்னு யாரு இருக்கா ?”, என இன்னும் சத்தமாக ஒப்பாரி வைக்க ஆரம்பித்தார்.
அருகில் மனோஜ் தன் தாயின் நடிப்பைக் கண்டு வியந்துக் கொண்டு நின்றான். அப்படியே சுற்றி உள்ளவர்களைப் பார்க்க, மாமன்மார்கள் இருவரும் தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்திருக்க, அருகில் அத்தைமார்கள் தனது அன்னையை மனதிற்குள் வறுத்தபடி இருப்பது இவனுக்கு நன்றாகவே தெரிந்தது.
அவர்களுக்கு இடையில் இருந்த போட்டோவில் துவாரகா சிரித்தபடி தாவணியில் நின்றிருந்தாள். அதைக் கண்டதும் அவன் கண்களில் போதை ஏறத் தொடங்கியது.
இப்போது சரியாக நாடகத்தை நடத்தாவிட்டால் மாமன் மகளும், அவளுடன் வரும் சொத்தும் கிடைக்காமலே போகும் ஆபத்தும் அவனுக்குப் புரிந்தது. அதனால் மாமனிடம் நல்ல பெயர் எடுத்தே ஆகவேண்டும் என்று மனதில் கங்கணம் கட்டிக்கொண்டான்.
அதற்கான வேலைகளைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று மனதில் திட்டம் போட்டுக் கொண்டிருந்தான்.
“இங்க பாரு க்கா.. சும்மா சும்மா கத்திக்கிட்டு இருக்காத.. மொத அழரத நிறுத்து.. “, என அருணாச்சலம் குரலை உயர்த்தினார்.
“அவள ஏண்டா அதட்டுற ? பாவம் அவளே மனசு நொந்து வந்திருக்கா..”, என அப்பத்தா கிழவி மகளுக்கு வக்காளத்து வாங்கியது.
“நீ கம்முன்னு இரு ம்மா.. உனக்கு என்ன நடந்ததுன்னு தெரியாது..”, என மனோகரும் தாயின் வாயை அடைக்க முயன்றார்.
“எனக்கு என்னடா தெரியாது? அந்த சிறுக்கி என் பேரன் பின்னாடி சுத்தினத நானே ரெண்டு தடவ பாத்து இருக்கேன். பாவம் அவன் அவளுக்கு பயந்து என் பக்கம் வந்து நின்னுப்பான். அவளுக்கு வக்காளத்து வாங்கிட்டு இருக்காதீங்க..”, என மகன்களிடம் கோபமாகப் பேசியது கிழவி.
“அந்த பய பண்ற திருட்டுத்தனம் எல்லாம் உனக்கு எதுவும் தெரியாதும்மா.. நீ கம்முன்னு இரு.. பஞ்சாயத்து நாளைக்கு தான் .. நாளைக்கு பேசிக்கலாம்.. நீ மொத வீட்டுக்கு கெளம்பு..”, என அருணாச்சலம் திட்டியதும், மனோஜ் முன்னே வந்தான்.
“என் மேல தப்பு இல்ல மாமா.. நாளைக்கு பஞ்சாயத்துல முறைப்படி அத நிரூபிக்கறேன்.. வா ம்மா போலாம்..”, எனத் தன் அம்மாவைக் கையோடு அழைத்துச் சென்றான்.
“டேய் தம்பி மனோஜ்..”, என வைரம் அவனை அழைத்தபடி உடன் நடந்தார்.
“கம்முன்னு வா ம்மா.. நான் பாத்துக்கறேன்..”, எனக் காதில் கிசுகிசுத்துவிட்டு வேகமாக நடந்தான்.
“பாத்தியா டா.. என் மக கண்ல தண்ணியோட போறா.. நீங்க எல்லாம் இருந்தும் என் மகளுக்கு இப்டி நடக்குது..”, என அப்பத்தா தனது பாட்டை ஆரம்பித்தது.
“உன் பேரன் லச்சனம் அப்படி இருக்கு.. “, எனச் கூறிவிட்டு அருணாச்சலம் உள்ளே சென்றார்.
பவானி பின்னோடு சென்று அவருக்கு சாப்பாடு எடுத்து வைக்க ஆரம்பித்தார்.
“என்னங்க..”
“நான் பாத்துக்கறேன்.. ராகா ஃபோன் பண்ணா நான் மரகதம் வீடு வரைக்கும் போய்ட்டு வரேன்.. பாத்துக்க”, எனக் கூறிவிட்டுச் சாப்பிட்டதும், தம்பியிடம் கூறிவிட்டு மகளைக் காணச் சென்றார்.
“அப்போவே அவனுக்கு ஒரு கால்கட்டு போட்டு இருந்தா இன்னிக்கி கண்ட அநாத சிறுக்கி எல்லாம் இப்டி வந்து நிப்பாளா ? என் பேச்ச யாரு கேட்டீங்க.. இப்ப அவள வெளிநாடு வேற அனுப்பிட்டா எப்ப கல்யாணம் பண்றது..”, என ஆரம்பித்தது அப்பத்தா கிழவி.
“இங்க பாரு மா.. நீ நெனைக்கறது எப்பவும் நடக்காது.. இந்த பேச்ச அண்ணன் முன்ன எடுத்துறாத.. அப்பறம் நல்லா இருக்காது..”, என மனோகர் தாயைத் திட்டிவிட்டு வெளியே சென்றார்.
“பாக்கறேன் என்ன பண்ண போறீங்கன்னு .. “, எனக் கிழவி பொறுமியபடி எழுந்து உள்ளே சென்றது.
“என்னங்க .. உங்கம்மாவும் உங்கக்காவும் கம்முன்னு இருக்க மாட்டாங்க போல..”, என மாதவி கணவனிடம் கிசுகிசுத்தார்.
“நம்ம துவாரகாவ அவன் நெனைச்சி கூட பாக்க முடியாது டி.. எங்கள மீறி அவங்க எதுவும் பண்ண முடியாது. இத அண்ணிக்கிட்ட சொல்லிட்டு இருக்காத.. அப்பறம் வருத்தப் படுவாங்க.. நீ நான் வரவரைக்கும் இங்க இரு.. வந்துடறேன் ..”, எனக் கூறிவிட்டு வெளியே சென்றார்.
“வாங்க அண்ணே .. எப்டி இருக்கீங்க?”, என அருணாச்சலத்தை உபசரித்துக் கொண்டிருந்தார் மரகதம்.
“நல்லா இருக்கேன் மரகதம்.. நீ எப்டி இருக்க? உடம்பு பரவாலயா ?”, என நாற்காலியில் அமர்ந்தபடிக் கேட்டார்.
“தேவல ண்ணே.. இருங்க புள்ளைங்கள கூப்புடறேன் “, எனக் கூறிவிட்டுக் கனியை அழைக்கச் சென்றார்.
“அப்பா..”, எனத் துவாரகா வந்து அவரின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.
“ஹேய் .. என்னடா உங்கத்தை பலமா விருந்து போடறதால இங்கயே இருந்துட்டியா ?”, என அவளை முன்னே இழுத்தபடிக் கேட்டார்.
“ஆமா பா.. அங்க உங்கம்மா இதவிட பலமா விருந்து போட ரெடியா இருக்காம்.. “, எனக் கிண்டல் செய்தாள்.
“அதுல்லாம் இருக்கறது தான் டா ராகா.. சரி என்னைய எதுக்கு வர சொன்ன இப்ப?”, என விஷயத்திற்கு வந்தார்.
“மைனா”, என உள்ளே குரல் கொடுத்தாள்.
மைனா அங்கே வந்ததும் மனோகரும் வந்து சேர்ந்தார் உடன் ஒருவருடன்.
மைனாவைக் காப்பாற்றி அழைத்து வந்தது முதல் சற்று முன் வைரம் வந்துச் சென்றது வரை துவாரகா கூறினாள்.
அதைக் கேட்டதும் அருணாச்சலம் அதிர்ந்துப் போனார். அடுத்து என்ன செய்வதென அனைவரும் கலந்துப் பேசிவிட்டு, நாளைப் பஞ்சாயத்தில் என்ன எப்படி நடக்க வேண்டும் என்ற விஷயங்களைப் பேசிவிட்டு இல்லம் சென்றனர்.
மனோஜ் சத்தம் செய்யாமல் கனியின் வீட்டின் பின்னே குதித்துப் பின்பக்க வாசல் வழியாக உள்ளே நுழைந்தான்.
அப்போது…