வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..
இதோ ஒரு புது கதையுடன் வந்துள்ளேன். இது தற்காலத்தில் அதிகமாக பேசப்படக்கூடிய “truama” சார்ந்த கதைக்கரு. இதில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாம் ஏதேனும் ஒரு வகையில் நம்மையோ, நம்மை சுற்றி உள்ளவர்களையோ காட்டலாம்.. மனம் சார்ந்த காயங்களுக்கான மருந்தை தரும் அத்தியாவசியத்தை உணர்த்த முயன்று இருக்கிறேன். எப்பொழுதும் போல இதிலும் தங்கள் அனைவரின் ஆசியும், ஆதரவும் நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இனி கதைக்குள் பயணிக்கலாம் ..
1 – வேரோடும் நிழல்கள்
தினமும் சரியாக காலையில் தன் பணி கிளம்பும் சூரியனை, அவன் கதிர்கள் நிலம் தொடும் முன் மலையின் உச்சியில் அமர்ந்து பெற்று, அவனின் பலம் மிகுந்தக் கதிர்களை உள்வாங்கிக் கொண்டு, தனது பணியை செவ்வனே தொடங்குகிறார் திருச்சி மலை உச்சியில் அமர்ந்துள்ள உச்சிப் பிள்ளையார்.
அவரை எழுப்பி தயார் செய்ய தேவையான பால், பழம் மற்றும் இதர அபிஷேக பொருட்கள் முதல் மடப்பள்ளி பிரசாதம் வரையிலும் தயாரிக்க கோவில் பணியாளர்கள் பிரம்ம முகூர்த்தம் முதலே வேலை செய்ய ஆரம்பித்து விடுகின்றனர்.
அவர்களைக் கண்டபடி அதிகாலை குளிருக்கு இதமாக எழும் சாம்பிராணி மனம் கலந்த கதகதப்பும், கற்கோவில்களில் கிடைக்கும் பெரும் நேர்மறை அலைகளும் மனதை நிறைக்க, மெல்ல பிரகாரம் சுற்றி வந்து கர்ப்பகிரகத்தின் முன் நின்றான் அவன்.
முதல் கதிரொளி பெற்ற கணபதியை வணங்கியபடி, அங்கிருக்கும் சிற்பங்களை கண்களில் நிறைத்துக் கொண்டு தனது பணியிடம் நோக்கி கிளம்பினான் நீரஜ். நமது கதையின் நாயகன்.
தினம் நாம் பார்த்து கடந்து செல்லும் அடுத்த வீட்டு பையன் என்கிற தோற்றம், தன் உடலையும், மனதையும் சரியாக பராமரித்துக் கொண்டபடி தன் அருகில் உள்ளவர்களுக்கும் அவ்வப்போது தன்னால் இயன்ற உதவிகளை செய்பவன்.
அன்பான தாய், அரவணைக்கும் தந்தை, சொந்த ஊரிலேயே கல்யாணம் கட்டிக் கொடுத்த அக்கா, நண்பனை போன்ற அக்கா கணவன் என உறவின் இனிமை புரிந்து, ஆயிரம் சண்டைகள் வந்தாலும் உறவுகளை விட்டுக் கொடுக்காமல் பொறுப்புணர்ந்து வாழ்பவன்.
கல்லூரியில் பி.காம் முடித்துவிட்டு, தொலைதூர கல்வியில் நிர்வாக மேலாண்மை படித்து வருகிறான். குறைந்த வருமானத்தில் நிறைவாக வாழ பழகியவன்.
அம்மா கனகா, அப்பா பாலதேவன், அக்கா மைதிலி, மாமா சடகோபன். இது தான் அவனது குடும்பம்.
அவன் தற்போது ஒரு பைனான்ஸ் நிறுவனத்தில் துணை மேலாளராகப் பணிபுரிந்து வருகிறான்.
“குட் மார்னிங் நீரஜ்…… “, நண்பன் பார்த்திபன் அவன் அருகே வண்டியை நிறுத்தினான்.
“என்ன அதிசயம் அதுக்குள்ள வந்துட்ட? இன்னிக்கும் 2 மணிநேரம் பெர்மிஷன் போடுவன்னு நெனைச்சேன்….”, எனப் பேசியபடி இருவரும் அந்த 3 மாடி கட்டிடத்தின் உள்ளே நுழைந்தனர்.
“ஏண்டா பேசமாட்டா? நான் அமைதியா சரக்கடிச்சிட்டு படுத்துட்டு இருந்தேன்.. நீ ஃபோன் பண்ணி நான் எடுக்கலன்னதும் என் ஆளுக்கு ஃபோன் பண்ணி ஆரம்பிச்சியே ஒரு கலகம்…… விடிய விடிய என் காது போச்சு…. அவளும் தூங்கல என்னையும் தூங்க விடல.. இந்த வீடியோ கால் வந்து மனுஷன பாடா படுத்துது மச்சான்….. நெட் பேக் எவ்ளோ தான் போடறது?”, எனப் புலம்ப ஆரம்பித்தான்.
“சரி பஞ்சாயத்து முடிஞ்சதா இல்லையா?”, சிரிப்புடன் அவன் கேட்டதும் பார்த்திபன் அவனை முறைத்தான்.
“நீ தானே ஆரம்பிச்ச.. நீயே இன்னிக்கி சாயிந்தரம் முடிச்சி வை…. இல்லைனா உன்ன வீட்டுக்கு போக விடமாட்டேன்….”
“சரி மச்சி விடு… பாத்துக்கலாம்…. என் தங்கச்சி நான் சொன்னா கேப்பா….”, மீண்டும் சிரித்தான்.
“சிரிக்காத டா… எரிச்சலா வருது.. நீ தினம் பிள்ளையார கும்பிட போறியா நாரதர கும்பிட போறியான்னு எனக்கு தெர்ல…. ஏண்டா இப்படி பண்ண?”
“சரி அழுவாத… வா மொத ஆபீஸ் வேலைய பாக்கலாம்.. அப்பறம் இதப்பத்தி பேசிக்கலாம்….”, என அவனை அனுப்பிவிட்டு தனது இடத்திற்கு வந்தமர்ந்தான்.
அன்றைய வேலைகள் அனைத்தும் பட்டியலிட்டு, யார் யார் எந்த வேலை பார்க்க வேண்டும் என்று பிரித்துக் கொடுத்துவிட்டு தனது மேலாளருக்கு கோப்பினை சமர்பித்தான்.
காவிரியில் இருந்து வரும் வாய்க்கால் தண்ணீரை வைத்து தென்னை மரங்களை பயிரிட்டு, அதன் ஊடு பயிராக கற்றாழையும், இன்னும் சில சிறு பயிர்களை வைத்து அழகாய் இயற்கைமுறை விவசாயம் பார்த்து வரும் அந்த தோப்பினைத் தாண்டி, அழகான மலர்கள் எல்லாம் பூ பந்து போல அங்கும் இங்கும் ஓடித் திரிந்துக் கொண்டிருந்தன.
4 வயது குழந்தைகள் முதல் பதின்பருவ பிள்ளைகள் வரைச் சாரைச் சாரையாக அந்த பள்ளிக்கூட வளாகம் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தனர்.
திருச்சியைத் தாண்டி 3 கி.மீ தள்ளி இருந்தது அந்த தனியார் கல்வி வளாகம். பிள்ளைகளை மதிப்பெண் வைத்து எடைப்போடாமல், மற்ற தகுதிகளையும் வளர்க்க ஏதுவாக அனைத்து வசதிகளையும் செய்து வருகின்றனர்.
இன்றைய பிள்ளைகள் அதிகம் மனதளவில் பலமில்லாமல் இருப்பதை கருத்தில் கொண்ட பள்ளி நிர்வாகம், பிள்ளைகள் மனநலனை முதல் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
பிள்ளைகளைப் புரிந்து கொள்ளக்கூடிய ஆசிரியர்களை மட்டுமே தேர்வு செய்து ஒவ்வொரு பிள்ளைகளையும் கண்காணித்து, அவர்களை நல்ல மனிதர்களாக உருவாக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறது.
அந்த வளாகத்தில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியபடி, புடவை மடிப்பைச் சரிசெய்து விட்டு தனது கைப்பையுடன் ஆசிரியர்கள் அறைக்குள் சென்றாள் அவள்.
நம்முடன் தினம் பேசி பழகும் முகம், ஆசிரியருக்கு உண்டான குரல் வளத்தோடு, அந்த மிடுக்கும் உடலில் ஊறி இருந்தது.
எட்டாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை கணினி பாடம் எடுப்பவள்.
“காலை வணக்கம் நிழலினி…..”, என தமிழ் ஆசிரியர் அவளுக்கு வணக்கம் கூறினார்.
“காலை வணக்கம் ஐயா…. “, மிதமான சிரிப்போடு பதில் வணக்கம் கூறிவிட்டு பன்னிரெண்டாம் வகுப்பு நோக்கிச் சென்றாள்.
“குட் மார்னிங் மேடம்…..”, பிள்ளைகள் கோரசாகப் பாடினர்.
“குட் மார்னிங்…. எல்லாரும் உக்காருங்க…… இன்னிக்கி பரிட்சை ஆரம்பிக்கலாமா?”, என அனைவருக்கும் வினாத்தாள் கொடுத்து 30 நிமிடம் என எழுதும் நேரத்தைக் கூறினாள்.
2 நாட்கள் முன்பு எடுத்த பாடத்திற்கான சின்ன ஞாபகப்படுத்தல் போல இந்த பரீட்சை நடக்கும். பிள்ளைகள் எழுதத் தொடங்கியதும், வெளியே வந்து அங்கிருந்த பெரிய ஜன்னல் வழியாக தென்னை மரக்காற்றை ஆழ சுவாசித்தபடி நின்றிருந்தாள்.
பிள்ளைகள் அமைதியாக தனக்கு தெரிந்ததை மட்டும் எழுதி விட்டு அமர்ந்திருந்தனர்.
“குட் மார்னிங் நிழலினி…. பசங்க பரிட்சை எழுதறப்ப வெளிய வந்து நின்னுட்டு இருக்கீங்க…. பார்த்து எழுத போறாங்க….”, வேதியியல் ஆசிரியர் கூறினார்.
“குட் மார்னிங் சார்…. பாத்து எழுதினா நஷ்டம் அவங்களுக்கு தான் சார்… . நம்ம முன்னாடி நின்னா மட்டும் அவங்க ஒழுக்கமா இல்லாம நாம இல்லாதப்பவும் ஒழுக்கமா இருக்கணும் இல்லையா?”, சிரிப்புடன் கேட்டாள்.
“நான் எப்ப எது கேட்டாலும் நீங்க ஒரு பதில் வச்சிருக்கீங்க மேடம்….”, அவரும் சிரிப்புடன் கூறினார்.
“என் பதில் சரி தானே சார்?”
“சரி தான்… அடுத்து என் கிளாஸ்…. எனக்கு உங்க கிளாசோட 30 நிமிஷம் குடுத்தா நான் என் சில்லபஸ் முடிக்க ஈசியா இருக்கும்…. “, என விசயத்திற்கு வந்தார்.
“ஏன் சார் 12த் வந்துட்டாலே பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி மட்டும் தான் படிக்கணுமா? மத்த சப்ஜெக்ட் மார்கும் அவங்களுக்கு தேவை சார்.. நானும் இன்னும் சில்லபஸ் முடிக்கணும்…. எனக்கு என் கிளாஸ் தேவை சார்….”, எனச் சிரிப்போடு மறுத்தாள்.
“ஹம்ம்….. கட்டாஃப் மார்க் அதிகமா வேணும்னா அதிகமாக இதை படிக்கணும் தானே மேடம்…..“
“சாரி சார்…. நான் பசங்களுக்கு இன்னிக்கி லாங்குவேஜ் எடுக்கணும்…. “, எனக் கூறிவிட்டு உள்ளே வந்துவிட்டாள்.
பிள்ளைகள் இவர்களுக்குள் நடந்த சம்பாஷனையைக் கவனித்தபடி மூச்சை இழுத்துப் பிடித்துகொண்டு அமர்ந்திருந்தனர். வேதியியல் ஆசிரியர் சென்றதும் அப்பாடா என அனைவரும் பெருமூச்சு விட அவள் சிரித்தபடி பார்த்தாள்.
“என்னடா எல்லாரும் ஒண்ணா பெருமூச்சு விடரீங்க?“
“இல்ல மேடம்… அவருக்கு கிளாஸ் குடுத்துடுவீங்களோன்னு பயம்.. இன்னிக்கி ரெண்டு கெமிஸ்ட்ரி கிளாஸ் இருக்கு…. காலையிலேயே கெமிஸ்ட்ரி பாத்தா அன்னிக்கி முழுக்க தூக்கமா வரும்…. “, மாணவன் ஒருவன் கூறினான்.
“தைரியம் தான் டா உனக்கு… என் சப்ஜெக்ட் கூட அப்பிடி தானே PT சமயத்துல சொல்லுவ?”
“சத்தியமா இல்ல மேடம்… நீங்க தூக்கம் வருதுன்னு சொன்னாலே கிளாஸ் எடுக்கறது நிறுத்திறுவீங்க…. எல்லாரும் அப்படி இல்லையே…”, மாணவி ஒருத்தி கூறினாள்.
“சரி இன்னிக்கி யார் யார் லீவு? சி லாங்குவேஜ் பாக்கலாம் தானே?”, எனப் பாடத்தைத் தொடங்கினாள்.
அடுத்த 40 நிமிடங்கள் பிள்ளைகளுக்கு பாடம் எடுத்து, அவர்கள் கேட்ட சந்தேகங்களை நிவர்த்தி செய்து, இன்னும் புரியவில்லை என்றவர்களை மதியம் விளக்கி சொல்கிறேன் எனக் கூறி வெளியே வந்தாள்.
“என்ன மேடம் நீங்க… 10 நிமிஷம் அதிகமாக எடுத்துட்டு இருக்கீங்க…”, வேதியியல் ஆசிரியர் கடுப்போடுக் கேட்டார்.
“இல்லையே சார்… சரியா தான் முடிச்சி இருக்கேன்… உங்க வாட்ச்ல டைம் அட்ஜஸ்ட் பண்ணனும் போல…. “, எனக் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து பள்ளி மைதானம் வந்தாள்.
“என்ன நினி…. கொஞ்சம் கடுப்பு கொஞ்சம் காரமா வந்து நிக்கற…. யாரு அது?”, சிரிப்புடன் கேட்டான் அவள் நண்பன் சக்திசிவன்.
அதே பள்ளியில் கணித ஆசிரியராகப் பணிப்புரிகிறான். ஆசிரியர் பயிற்சி காலம் முதலாரம்பமான நட்பு, ஒரே பள்ளியில் இருவரும் வேலைக்கு வரவும் நன்றாக வளர்ந்திருந்தது.
“எல்லாம் அந்த கடுவன் மூஞ்சி தான் சசி…. எப்போ பாரு அவன் மட்டுமே தான் கிளாஸ் எடுக்கணும்னு வந்து நின்னுக்கறான்… அவனுக்கு குடுக்கற நேரத்துல என்ன தான் பண்ணுவானோ?”, என மெல்லமாகப் பேசியபடி விளையாட்டு ஆசிரியர் அறைக்கு இருவரும் சென்றனர்.
“இது ஸ்கூல் நினி… பாத்து பேசு…. பசங்க நம்ம பேச்சை கேட்டா என்ன ஆகறது?”, சக்திசிவன் கண்டித்தான்.
“நீ ஒருத்தன்… சரி அந்த சாரு இருக்காரு பாரு.. அந்த சாரு அவரு கிளாசுல என்ன தான் பண்ணுவாரு?”, எனக் கடுப்புடன் கேட்டாள்.
“அவங்களுக்கு என்ன கஷ்டமோ விடு… நீயும் கிளாஸ் குடுக்கபோறது இல்ல… நானும் குடுக்கபோறது இல்ல…. கடைசில இந்த தமிழ் இங்கிலீஷ் தலைல தான் கை வைப்பாங்க…. மத்த ஸ்கூல் எல்லாம் இன்னும் மோசம் தெரியுமா? தமிழ் கிளாஸ் குடுக்கறதே இல்ல… எக்ஸாமுக்கு 3 மாசம் முன்ன ஒரு வாரம் தான் படிக்க குடுக்கறாங்க …. இங்க பரவால்ல….”
“என்னமோ? கட்டாஃப் வரலைன்னா யாரும் வாழவே முடியாதுங்கறமாறி தான் பில்டப் தராங்க…. விஷா வரலியா இன்னிக்கு ? காணோம்…”, அறையில் யாரும் இல்லாமலிருப்பதைக் கண்டுக் கேட்டாள்.
“இல்லையே காலைல பைக் நின்னத பாத்தேனே…. “, என சக்திசிவனும் சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு வெளியே வந்தான்.
வெளியே தூரத்தில் ஒரு பெண் பிள்ளையைத் தூக்கிக் கொண்டு அவசரமாக மருத்துவ அறைக்குள் நுழைந்தாள் அவர்கள் தேடிய விஷாலினி. விளையாட்டு ஆசிரியர்.
“என்னாச்சி விஷா?”, நிழலினி வேகமாக அங்கே சென்றுப் பார்த்தாள்.
“சைக்கிள்ல வர வர மயங்கி விழுந்துட்டா நினி… பசங்க சொன்னதும் போய் தூக்கிட்டு வந்தேன்…..”, வேகமாக கைக் கால்களைச் சூடுபறக்கத் தேய்த்தபடி அந்த பெண் பிள்ளையின் மயக்கம் தெளிவிக்க முயன்றனர்.
“இந்த பொண்ணோட கிளாஸ் டீச்சர வர சொல்லுங்க…. இந்த பொண்ணு எந்த கிளாஸ்?”, சக்திசிவன் அடுத்த வேலைகளைப் பார்த்தான்.
“இந்த பொண்ணு நியூ அட்மிஷன் சார்… 8த் கிளாஸ் ‘பி’ செக்சன்….. “
“அந்த கிளாஸ் டீச்சர் வந்து இருந்தா இங்க வர சொல்லு… அந்த தண்ணி பாட்டில் எடுங்க..”, நிழலினி கூறினாள்.
சிறிது நேரத்தில் அந்த பிள்ளை கண் திறக்க, கண் திறந்த நொடி முதல் அழ ஆரம்பித்தது.
“ஏன்மா அழற? எங்கேயாவது அடி பட்டுறிச்சா? வலிக்குதா?”, விஷா பரிவாக கேட்டாள்.
“அம்மா… அம்மா வேணும்…..”, தேம்பித் தேம்பி அழுதபடிக் கூறியது அப்பிள்ளை.
“சரி வீட்டுக்கு போய் பாக்கலாம்….”, நிழலினி சமாதானம் செய்தாள்.
“அம்மா… வீட்ல இல்ல… சாமி…… சாமிகிட்ட….. போய்ட் …“, என மேலே கைக்காட்ட மற்றவர்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவதென ஒரு நொடி புரியாமல் நின்றனர்.