61 – ருத்ராதித்யன்
வல்லகியை தூக்கிய யானையின் மேல அர்ஜுன் தந்தத்தை பிடித்து ஏற முயற்சிக்க, வல்லகி யானையின் தலையைக் குறிப்பார்த்துக் குதித்தாள்.
பிறைசூடன் அவளுக்கு யானையைக் கட்டுப்படுத்தும் வித்தையை அதித் ஒவிஸ்கரின் கட்டளையின் பேரில் சொல்லிக் கொடுத்து இருந்தார். இரண்டு நாட்களில் அதில் அவளும் நன்கு தேறி வந்ததால், அடுத்தடுத்து பல மிருகங்களின் சூச்சும புள்ளிகளைக் காட்டி, எப்படி எங்கே அடித்தால் அந்த மிருகம் எதிர்வினையாற்றும் என்பதையும் சொல்லிக் கொடுக்க ஆட்களை ஏற்பாடு செய்து, அவளை பழக்கினார்.
அந்த பயிற்சியின் விளைவால், அவள் யானையின் தலையில் அமர்ந்து காதுகளின் அடியில் கட்டை விரலால் அழுத்தி, காதை வளைக்க மூர்க்கம் சற்றே குறைந்தது.
அந்த சமயத்தை அர்ஜுன் பயன்படுத்தி, யானையின் முண்மண்டையில் தடியினால் அழுத்தி நீர்நிலைப் பக்கமாக விரட்டினான்.
அங்கிருந்த குளத்தில் யானை இறங்கியதும் கொஞ்சம் கொஞ்சமாக அது தன்னிலைத் திரும்பி, ஆசுவாசமாக நீரிலேயே படுத்துவிட்டது.
“என்னடா படுத்துறிச்சி?”, கண்மயா நானிலனிடம் கேட்டாள்.
“என்னைய கேட்டா… நானே தொடநடுங்கி நின்னுட்டு இருக்கேன்… நுவலி அது மறுபடியும் எந்திரிக்காதே….. அவங்க ரெண்டு பேரும் எங்க காணோம்?”, என நானிலன் கேட்கும்போது, வல்லகியும் அர்ஜுனும் அவர்கள் பின்னால் இருந்து முன்பக்கமாக குதிக்க அவர்கள் மூவரும் அலறியபடி நாச்சியார் இருக்கும் மரத்தில் ஏறி மரத்தை கட்டிக்கொண்டு கண்மூடி அமர்ந்துக் கொண்டனர்.
“வல்லா… என்ன விளையாட்டு இது? கண்மயா… நானிலன்.. இறங்குங்க ரெண்டு பேரும்…. “, நாச்சியார் வல்லகியைத் திட்டிவிட்டு அவர்களை ஆசுவாசப்படுத்தினாள்.
“பின்ன நாங்க கஸ்ட்டபட்டு யானைய டைவர்ட் பண்ணா இவங்க ரெண்டு பேரும் நுவலி மேல ஏறி நின்னுட்டு இருக்காங்க.. பாவம் அந்த சின்ன பொண்ணு… “, என அர்ஜுன் நுவலியைக் கைப்பிடித்து தூக்கிக் கொண்டு வந்தான்.
“அர்ஜுன் சார்….. இதயமே நின்னுபோச்சி தெரியுமா? இப்படியா பயமுறுத்துவீங்க?”, என நெஞ்சை நீவிவிட்டபடி திட்டினான்.
“ஏன் சார்… ஏற்கனவே நான் அதீத பயத்துல இருக்கேன்…. அவ்ளோ பெரிய யானைய பாத்ததும் எனக்கு மயக்கமே வந்துருச்சு… நுவலி என்னை கைத்தாங்கலாக பிடிச்சி நிக்கவைக்க பாத்தா…. படபடன்னு வருது இன்னும்….”, கண்மயாவும் அவள் பங்கிற்கு கூற வல்லகியும், அர்ஜுனும் மர்மமாக சிரித்தபடி நின்றனர்.
“என்னங்க நீங்க சிரிக்கரீங்க? “, நாச்சியார் அவர்களின் சிரிப்பின் அர்த்தம் புரியாமல் கேட்டாள்.
“அவங்க உள்ளேயே இருந்த பயம் இப்போ வெளிய வந்துருச்சு.. பயத்த மீறி ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சி, பய உணர்வு கொறஞ்சிட்டு இருக்கு….. இனிமே மனசு திடம் பண்றது சுலபம்… நீங்க இவங்க மனச திடம் பண்ண உதவி பண்ணுங்க நாச்சியார்.. நாங்க மூணு பேரும் யானைகிட்ட போயிட்டு வரோம்….”, என ஆதி கூறிவிட்டு யானை அருகில் சென்றான்.
யானை பெரிதாக மூச்சை இழுத்துக் விட்டுக் கொண்டிருந்தது. அதன் துதிக்கை நீரை உறிஞ்சி தன்னுடல் மேலே ஊற்றிக் கொண்டிருந்தது சில நிமிட இடைவெளியில்.
“மதம் பிடிச்சா வந்தது?”, ஆதி.
“இல்ல ஆதி சார்… எதோ வெளி விசயம் இத ஆக்குரோசப்படுத்தி இருக்கு…. மதம்பிடிச்ச யானை இவளோ சீக்கிரம் அமைதி ஆகாது… “, வல்லகி.
“உண்மை தான் ஆதி… எதாவது விசப்பூச்சி கடிச்சி இருக்கணும் இல்லையா இதுக்கு சேராத புகைய சுவாசிச்சு இருக்கணும்….”, அர்ஜுன் அந்த யானையில் கண் அருகே நின்று தடவி கொடுத்து துதிக்கையைக் கட்டிப்பிடித்து நெற்றியில் முத்தம் கொடுத்தான்.
யானையும் அவன் செய்கையில் உவகைக் கொண்டு துதிக்கையினால் அவனை அருகில் இழுத்துத் தலையை அவன் மார்பில் முட்டிக்கொண்டு நாய் குட்டி போல ஆட்டியது….
“சரிதான்.. அர்ஜுன் சார் அவனுக்கு லவ்வர் ஆகிட்டாரு…..”, வல்லகி சிரிப்புடன் கூறிக் கொண்டு யானையின் மறுபக்கம் காதைத் தடவிக் கொடுத்தாள்.
யானைக் வல்லக்கியையும் இழுத்து நெற்றி முட்டி தன் நன்றியைக் காட்டியது. இருவரும் அதனின் ஏதோ ஒரு சிரமத்தினை விரட்டி அதற்கு நலம் செய்துவிட்டனர் அந்த சில நிமிடங்களில்…
ஆதி கரையில் இருந்தபடியே யானையைப் பார்த்துக் கொண்டு இருந்தான். அவனுக்கு பின்னால் வரிசையாக 20 யானைகள் கூட்டமாக தன் தோழனைத் தேடிவந்து நின்றன.
ஆதியின் உடலில் இருந்து வந்த வாசனை அந்த கூட்டத்தின் வயதான யானையை அவனை அருகில் இழுக்க வைத்தது. சட்டென ஒரு துதிக்கை தன்னை பின்னால் இழுக்கவும், முதலில் பதறி பின்பு நிதானித்து கண்களைத் தீர்க்கமாகத் திறந்துப் பார்த்தான்.
அவன் மேல வந்த வாசனை அந்த யானைகளுக்கு ஏதோ செய்தி கூற, சில யானைகள் தங்களுக்குள்ளே பேசிக்கொண்டு தங்கள் பகுதிக்கு வேகமாக சென்றன..
யானைகள் வந்ததும் ஆதி அருகில் செல்ல முயன்ற அர்ஜுனை வல்லகி தடுத்து, அங்கு நடப்பவற்றை கவனிக்கக் கூறினாள் .
நாச்சியார் மற்ற மூவரையும் மரத்தின் பின்னால் நிற்கவைத்துவிட்டு, மெல்ல எட்டிப் பார்த்தாள். சில யானைகள் பின்னால் சென்றதும், ஆதியை தங்களுக்குள் இழுத்து பேசுவதும், அவனை நடுவில் நிறுத்தி, அவனது வாசனையை நுகர்வதுமாக இருக்கும் இந்த அதிசய செயலில் அவள் குழம்பி நின்றாள்.
“என்ன கண்மயா இது? ஆதி சார மோப்பம் பிடிக்கறமாறி மாத்தி மாத்தி அவர்கிட்ட வந்துட்டு போகுது எல்லா யானையும்…… “, நானிலன் மெல்ல எட்டி பார்த்துவிட்டுப் பேசினான்.
“ஆமாண்ணா… நானும் யானைங்க இப்படி பண்றதை இப்ப தான் பாக்கறேன்…. இந்த யானைங்க எல்லாம் நம்ம காட்டுல இருக்கறதவிட ரொம்ப பெருசா இருக்கு.. பாருங்களேன் நாலு தந்தம் இருக்கு…. “, வியந்துப் பேசிக்கொண்டிருந்தாள் நுவலி.
“இது ஐராவதம் வகை யானை நுவலி… ரொம்ப காலத்துக்கு முன்ன இது இருந்தது… இந்திரன்கிட்ட வெள்ளை யானை இருக்கும்ன்னு நமக்கு கதை சொல்வாங்களே… அந்த வகை இது… இதோட எழும்பு கூடு கூட கொஞ்ச வருஷம் முன்ன வெளிநாட்ல கிடைச்சது…. “Gomphothere”- ன்னு, இப்போ சொல்றாங்க…..“
“அப்போ இது பறக்குமா? ஆனா இது கருப்பா தானே இருக்கு….”, நானிலன் கேட்டான்.
“தெரியல நிலன்.. ஆனா இத வகை எல்லாம் ரொம்ப மில்லியன் வருசம் முன்னவே அழிஞ்சதா சொல்றாங்க.. அத இங்க பாக்கறப்போ பிரம்மிப்பா இருக்கு….”, என கண்மயா யானைகளைப் பார்த்தபடிக் கூறினாள்.
நாச்சியார் அவள் சொன்னதைக் கேட்டுக்கொண்டு, அவர்களை முன்னே அழைத்தாள்.
“கண்மயா.. இதுலாம் நம்மல தாக்குமா?”
“இல்ல மேடம்… இந்த யானைங்க நடந்துக்கறது பாத்தா வித்தியாசமா இருக்கு…. ஆதி சார் தான் இந்த இடத்தை உருவாக்கி இருக்கார்ன்னா அவரே நம்ம கூட இருக்கறப்போ பெருசா நமக்கு ஆபத்து வராதுன்னு தான் நினைக்கறேன்….”
“அவர் உருவாக்கினார்ன்னு உங்களுக்கு யாரு சொன்னது?”, நாச்சியார்.
“வல்லகி தான் சொன்னாங்க…. அதனால தான் அவர முன்ன விட்டு நாம பின்ன போறோம்…”
“ஆனாலும் எனக்கு இங்க நமக்கு ஆபத்து இருக்குன்னு தான் தோணுது.. நாம எப்பவும் ஜாக்கிரதையா இருக்கணும்.. நீங்க மூணு பெரும் என்னை விட்டு ரொம்ப தூரம் போகாதீங்க…. மனச ஒருநிலை படுத்தலாமா?”
“மேடம்… இந்த காட்ல இப்போ மெடிடேஷன் கிளாஸ் தேவையா?”, நானிலன் கேட்டான்.
“கண்டிப்பா உங்களுக்கு தேவை நானிலன். மிருகங்கள் நம்மள விட அதிகமா அலைவரிசைகள கிரகிக்கும்.. உங்க பய உணர்வு அதுங்களுக்கும் பயத்தை கொடுக்கும், அதனால் நமக்கு ஆபத்து வரலாம்… அதனால காட்டுக்குள்ள இருக்கறப்போ மனச கண்டிப்பா ஒருநிலை படுத்தணும்… கன்னாபின்னா-ன்னு எந்த எண்ணமும் வளத்துக்க கூடாது…. மனச அமைதியா வச்சிக்கணும்.. நல்லா மூச்ச இழுத்து வெளிய விடுங்க எல்லாரும்…. 20 தடவை இப்படி நல்லா மெதுவா மூச்ச இழுத்து வெளிய நிதானமா விடுங்க…. உங்க மனசு அமைதியாகும்…”, எனக் கூறினாள்.
அவள் சொன்னதை போலவே இவர்கள் மரத்தின் பின்னால் ஒதுங்கி நின்றுத் தங்களை சமன்படுத்திக் கொண்டிருந்தனர்.
அதற்குள் ஆதியை யானைகள் கூட்டமாக வந்து சூழ்ந்து நின்றுக் கொண்டன. அவைகளின் நடவடிக்கைகள் அவனுக்கும் ஆச்சரியத்தையும், குழப்பத்தையும் கொடுத்தன.
அர்ஜுன் வல்லகியும் ஒரு பெரிய மரத்தின் மேல் ஏறி அமர்ந்து கொண்டு அங்கு நடப்பதை வேடிக்கைப் பார்த்தனர்.
“வல்லகி…. ஆதிக்கு முழுசா ஞாபகம் வருமா?”
“தெரியல அர்ஜுன்… ஆனா அவர் வாசனை நமக்கு உதவி பண்ணும்… அதே சமயம் ஆபத்தும் கொடுக்கும்… ரெண்டுத்துக்குமே நாம தயாரா இருக்கணும்….”
“யானையை தாண்டி போனா என்ன இருக்கு?”
“தெரியல அர்ஜுன்… போயே பாத்துக்கலாம்… இந்த நானிலன் கண்மயாவ தான் ரொம்ப கவனமா பாத்துக்கணும்.. ரெண்டு பேரும் ரொம்ப பயப்படறாங்க… “
“எனக்கு முன்ன நாச்சியார் விட்டு, நான் அவங்க மூணு பேரையும் பக்கம் இருந்து பார்த்துக்கறேன்…”
“இல்ல அர்ஜுன்.. நீங்க ஆதி கூடவே இருக்கணும்…. இந்நேரம் நாம மேகமலைல இல்லைன்னு அவனுக்கு தெரிஞ்சிருக்கும். இந்த இடமும் தெரிஞ்சிருக்கலாம்…. அவனால ஆபத்து வரவும் வாய்ப்பிருக்கு…. சின்ன அசைவயும் நீங்க கண்காணிக்கணும் “, எனக் கூறிவிட்டு நாச்சியார் இருக்கும் பக்கம் மரத்தின் கிளைகள் வழியாகவே நடந்துச் சென்றாள்.
அர்ஜுன் ஆதியின் அருகில் செல்ல மரக்கிளைகளைப் பற்றியபடி யானைகளுக்கு நடுவில் சென்றுக் குதித்தான்….
அதில் நான்கு யானைகள் மிரண்டு பின்னால் செல்ல சின்ன சலசலப்பு ஏற்பட்டது.
ஆதி மிரண்ட யானையின் துதிக்கைப் பிடித்துத் தடவிக் கொடுத்தான். அதுவும் அவன் கையோடு ஒட்டிக்கொண்டு நின்றது அவனை விட்டு பிரிய மனமில்லாமல்.
“கொஞ்சினது போதும்.. நமக்கு நேரம் போய்கிட்டே இருக்கு… நமக்கு லிஃப்ட் குடுக்க சொல்லுவோமா?”, என அர்ஜுன் ஆதியிடம் கேட்டான்.
“இவங்கள எப்படி கேக்கறது?”
“இவங்கள கேக்காம? விடிய இன்னும் 4 மணிநேரம் கூட இல்ல…. இதோட வடகிழக்கு மூலைக்கு நாம நடந்து போகணும்னா ஒரு நாள் ஆகும்… அடுத்தடுத்து என்ன இருக்குன்னு தெரியாது… யானை மேல போறது தான் சேப்டி….”
“சரி எப்படி கேக்கறது…. “, ஆதி யானையைத் தடவியபடிக் கேட்டான்.
“அதோ ஒரு வயசான யானை வருது வந்து, அந்த துதிக்கைய பிடிச்சு என் தலை மேல வை.. நான் கேட்டுக்கறேன்…”, அர்ஜுன் ஆதியை அந்த யானை அருகில் அழைத்துச் சென்றான்.
ஆதி அர்ஜுன் சொன்னதைப் போல அந்த வயதான யானையை மெல்லத் தொட்டு, தடவிக் கொடுத்து, நெற்றியில் முற்றி முத்தம் கொடுத்து, துதுக்கையைக் கட்டிக்கொண்டு, சில வினாடிகள் ஆழ மூச்செடுத்து அர்ஜுனை அருகில் அழைத்து துதிக்கையை அவன் தலை மேல் வைத்தான்.
யானை ஆதியைப் பார்த்துவிட்டு, அர்ஜுனைப் பார்த்து அவனை அருகில் இழுத்து மோப்பம் பிடித்துத் துதிக்கையால் அவனைத் தூக்கி தன் மேல் அமர்த்திக் கொண்டது. அர்ஜுன் யானையின் காதில் தங்களைச் சுமந்துச் செல்லக் கூற அந்த யானை பெரிய உயரமான 2 யானைகளை அருகில் அழைத்து மற்றவர்களைத் தூக்கி தன் மேல் அமரவைத்துக் கொள்ளக் கட்டையிட்டது.
அர்ஜுன் சத்தம் கொடுக்கவும் வல்லகி மற்றவர்களை யானைக் கூட்டத்தின் நடுவில் அழைத்து வந்து நிறுத்த, நுவலி, கண்மயா, நாச்சியாரை ஒரு யானையில் ஏற்றிவிட்டு, நானிலன் உடன் அவள் ஒரு யானையில் ஏறினாள்.
அர்ஜுன் இருந்த யானையின் மேல் இப்போது ஆதியும் அமர்ந்து இருந்தான்.
அவர்களைத் தொடர்ந்து மற்ற யானைகளும் பாதுகாப்பு வளையம் அமைத்து அவர்களைச் சுற்றி நடந்து வந்தன.
நுவலியும், கண்மயாவும் கண்கள் விரிய பார்த்துக் கொண்டு வந்தனர்.
மிகவும் நெருக்கமான மரங்கள் அந்த பகுதியில் வானுயர வளர்ந்து நின்றன. சூரிய வெளிச்சம் உள்ளே வருமா என்பது சந்தேகம் தான். குளிரும் அதிகமாகவே உடலைக் குத்தியது. நானிலன் வல்லகியின் கையைப் பிடித்தபடி அமர்ந்து இருந்தான்.
“மேடம்… நம்மல கீழ வீசிடாதே..”
“அப்படி வீசினா மரத்த பிடிச்சி தப்பிச்சிக்கலாம் நிலன்…. “, சிரித்தபடிக் கூறினாள்.
“மேடம்….”
“விடு நிலன் பாத்துக்கலாம்… ஆமா இங்க நாங்க இத்தன பேர் வந்தே இப்படி பயபடறியே.. தனியா எப்படி இங்க வருவ?”, அவன் ஒருமுறை இங்கே வர முயற்சித்ததை வைத்து கேட்டாள்.
“காட்ட பாத்திருந்தா அப்படியே ஓடி இருப்பேன்.. ஏற்கனவே எனக்கு மிருகம்னா ரொம்ப பயம்.. நாய், பூனைகிட்ட கூட போகமாட்டேன்…. “
“ஹாஹாஹா.. அப்போ அடுத்த பகுதிக்குள்ள போறப்ப நீ என்ன பண்ணுவன்னு பாப்போம்….”
“ஏன் மேடம்.. அங்க என்ன இருக்கு?”, பயந்தபடி கேட்டான்.
“இதோ கொஞ்ச தூரம் தான்.. அங்க போய் பாத்துக்கலாம் நிலன்…”, எனக் கூறியபடி யானைகள் இருந்த இரண்டாம் பகுதியைக் கடந்தனர் அனைவரும்.
அங்கே அவர்களை வரவேற்க யுரேசிய (குகை) சிங்கம் என அழைக்கப்பட்ட 10 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்து போனதாகக் கூறப்படும், 4 அடி அகலமும், 7 அடி நீளமும் கொண்ட சிங்கம் கம்பீரமாக இவர்களை வரவேற்க நின்றது…
அதைத் தூரத்தில் கண்ட கண்மயா நாச்சியாரை இறுகப்பற்றிக் கொண்டாள். நடுவில் இருந்த நுவலி அதைக் காணவில்லை. வல்லகியின் பின் அமர்ந்து இருந்த நானிலன் அது நிற்கும் தோரணையைக் கண்டதும் மயக்கமுறும் நிலைக்கு சென்றான்.
அர்ஜுன் அந்த சிங்கத்தைக் கண்டதும், யானையின் மேலிருந்து கீழிறங்கி சிங்கத்தின் முன்னே மண்டியிட்டு எழுந்து நின்றான்.
அந்த சிங்கம் அவனைக் கொல்லும் வெறியுடன் அவன் மேலே பாய்ந்தது…..