62 – ருத்ராதித்யன்
அப்படி அது பாய முற்பட்டதும் வல்லகி கீழே குதித்து ஆதியின் யானையின் அருகே வந்து நின்றாள்.
“அர்ஜுன்…”, ஆதி பதற்றமாகி கத்தினான்.
“கத்தாதீங்க ஆதி சார்… உங்க உள்ளுணர்வ கவனிங்க.. அது தான் அவருக்கு உதவி பண்ண வழிசெய்யும்…. “, வல்லகி அவனை மனதை ஒருநிலைப்படுத்தக் கூறினாள்.
“என்ன வல்லகி நீ… கண் முன்னாடி அவன் சிங்கத்தோட சண்டை போட்டுட்டு இருக்கான்.. “, தவிப்புடன் கூறினான்.
“ஆதி சார்.. உங்க பாசத்த எல்லாம் ஓரம் கட்டி வச்சிட்டு ‘நரசிம்ம யோகேந்திர ஆதித்தன்’ அஹ் யோசிங்க…. “, வல்லகி கண்டிப்பானக் குரலில் கூறினாள்.
அவள் அந்த பெயரை கூறியதும் அவனுக்குள் ஏதேதோ காட்சிகள் ஓட, உடலில் மின்சாரம் பாய்ந்தது போல துடித்து தலையைப் பிடித்தபடி யானையின் தலையின் மேலே படுத்துவிட்டான்.
இங்கே அர்ஜுன் தன்னைக் கொல்ல வரும் சிங்கத்திடம் லாவகமாக தப்பித்து தாக்கி, சண்டையிட்டுக் கொண்டிருந்தான்.
மகதனும் அவனும் மேகமலையில் விளையாடிய போது மகதன் செய்த வித்தைகள் எல்லாம் இப்போது அர்ஜுன் மூளைக்குள் இருந்து உடலில் செயலாக மாறி அவனை சிங்கத்திடம் சண்டையிட வைத்துக் கொண்டிருந்தது. அத்தனை கனமான சிங்கத்தை அவன் தாங்கி பிடிக்கும் விதம் கண்டு, வல்லகியும் மற்றவர்களும் அதிசயித்து தான் நின்று இருந்தனர்.
அந்த சிங்கத்தின் பாய்ச்சல் எல்லாம் நொடிக்கு நொடி ஆக்ரோஷமாக மாறிக் கொண்டிருந்தது. இவன் புலியை போல தந்திரமாக அதன் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொண்டிருக்கிறான் மகதனின் பயிற்சியினால்….
சிங்கத்தின் கர்ஜனையில் பல நூறு சிங்கங்களும், புலிகளும் அவர்களை சுற்றி நின்று கொண்டன சில நிமிடங்களில்….
மற்ற எந்த சிங்கமும் புலியும் அந்த சண்டையில் இடைப்புகவில்லை, மாறாக அவர்கள் சண்டைக்கு காவலாக நின்று யாரும் உள்ளே செல்லக் கூடாது என்ற நோக்கத்துடன் வளையம் கட்டி நின்றனர்.
ஆதி வின்னென்று தெறித்த தலைவலியுடன் யானையின் மேல் இருந்து கீழே இறங்கி சிவந்த விழிகளுடன், சண்டை நடக்கும் இடத்தின் அருகே சென்றான்.
“மேடம்.. அவரு சிங்கம் பக்கம் போறாரு ..”, கண்மயா பின்னால் இருந்து கூறினாள்.
வல்லகி ஆதியின் பின்னால் நடக்க ஆரம்பிக்கவும், அவளை வரவேண்டாம் என்று செய்கை காட்டிவிட்டு அவன் மட்டும் முன்னால் சென்று நின்றான்.
அர்ஜுன் தன் உடல் பலம் மொத்தமும் உபயோகித்து தீவிரமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தான். அவன் உடலில் விழுந்த ஒவ்வொரு கீறலுக்கும், சிங்கத்தின் உடலை காயப்படுத்திக் கொண்டிருந்தான்.
சிங்கமும் அவன் தலையை கவ்வும் நோக்கத்துடன் அவனை பிரட்டிக் கொண்டிருந்தது. தன் முழு உடல் கனத்தை அவன்மேல் செலுத்தி அவனை தனக்கு ஆடியில் கிடைத்த அது முனைந்து, அவனை பின்னிருந்து அடித்து தலையை பிடிக்க வரும்போது, அவன் மகதனின் நகத்தை எடுத்து சிகத்தின் காலில் குத்த, பெரும் சாதத்துடன் சிங்கம் அவனிடம் இருந்து நகர்ந்து சென்று வழியும் உதிரத்தை பாத்து அவனையும் கொல்லும் வெறியுடன் பார்த்தது.
அர்ஜுன் மூச்சு வாங்க முழு உயரத்தையும் நிமிர்த்தி நின்று சிங்கத்தை பார்த்தான். அவன் கண்கள் இலை பச்சை நிறத்தில் மின்னியது.
அர்ஜுனின் கண்களை பார்த்து, அதுவும் அவனை தாக்க அடுத்த யுக்தியை செயல்படுத்த முனைகையில், ஆதி அர்ஜுன் முன்னால் வந்து தன் கையினை அறுத்து உதிரத்தை மண்ணில் சிந்தினான்.
அவன் உதிரத்தின் வாசனை கண்ட மிருகங்கள் மெல்ல உருமியபடி அவர்கள் அருகில் வர, அங்கிருந்த சிங்கங்கள் மற்றும் புலியை விட இரண்டு மடங்கு உருவத்தில் பெரிதாக இருந்த ஒரு சிங்கம் ஆதியின் முன்னால் குதித்து வந்து நின்றது.
அவன் உதிரத்தை நக்கியபடி அவன் அருகில் வந்து, உதிரம் வழியும் கையையும் நக்கி, அவனை சுற்றி வந்து மீண்டும் உதிரம் குடித்தது…
“சிம்மேசா…. நான் நரசிம்மனடா….. அன்னையை அப்பனோடு சேர்க்க வந்திருக்கிறேன்…”, என கண்ணீர் மல்க சிங்கத்தின் முன்னங்காலை பற்றிக் கூறினான்.
அர்ஜுன் ஆதியின் அருகில் வந்து அடிகுரலில் வித்தியாசமான ஒலி எழுப்ப, மற்ற மிருகங்கள் அங்கிருந்து நகர்ந்தன.
அர்ஜுனுடன் சண்டையிட்ட சிங்கம் அவர்கள் அருகில் வந்து மெல்ல உருமியது. அர்ஜுன் மீண்டும் மெல்ல ஒலி எழுப்ப, ஆதியின் அருகில் வந்து அவனை முகர்ந்து பார்த்தது.
அர்ஜுன் அந்த சிங்கத்தின் காயம்பட்ட காலை குனிந்து பார்த்து, தன்னிடம் இருந்த பச்சிலையை கசக்கி விட்டு இலையை காலுடன் ஒட்டவைத்தான்.
சிங்கமும் அவனை நாவினால் நக்கி தன் நன்றியை தெரிவித்தது. ஆதியின் அருகில் நின்ற சிங்கம் தான் எந்த எதிர்வினையும் ஆற்றாமல் அப்படியே நின்றது ஆதியின் கண்களைப் பார்த்தபடி… அர்ஜுன் ஆதியின் கைகளுக்கும் பச்சிலை வைத்துச் சுற்றிவிட்டு பின்னால் யானையின் மேல் இருந்தவர்களுக்கு அருகில் வரும்படி செய்கை செய்தான்.
“நான் வரல மேடம்…”, என கண்மயா நுவலியைக் கட்டிக்கொண்டாள்.
நானிலன் நிலையோ அதற்கும் மேலே யானையைப் கட்டிக்கொண்டு படுத்துவிட்டான் பெரிய சிங்கத்தை பார்த்தநொடியில்…
“நாச்சி… கீழ இறங்கி வாங்க…”, வல்லகி அழைத்தாள்.
“வல்லா.. அது சிங்கம் டி… அதுகிட்ட போகணுமா?”, நாச்சியாருமே அரண்டு இருந்தால் அங்கே நடந்த யுத்தம் பார்த்து..
“இதெல்லாம் தான் செக்யூரிட்டி செக் போஸ்ட்… இவங்க அனுமதி குடுத்தா தான் நாம இதுக்கு மேல போகமுடியும்…. இறங்குங்க… ஆதிக்கு நினைவு வர ஆரம்பிச்சுருச்சு…..”, என சமாதானம் செய்து அவர்கள் மூவரையும் கீழே இறக்கினாள்.
நானிலன் தான் படுத்துக்கொண்டு இறங்குவேனா என அடம்பிடித்துக் கொண்டு இருந்தான்.
வல்லகி நொடியில் மேலே ஏறி அவனை கீழே தள்ளிவிட்டாள்.
“மேடம்… பயமா இருக்கு மேடம்.. பிளீஸ் மேடம்…”, என வல்லகியின் பின்னே ஒளிந்து கொண்டு அரற்றினான்.
“இப்போ நீ வரலைன்னா உனக்கு கேட்பாஸ் கிடைக்காது… அப்பறம் இந்த சிங்கம் கூடவே நாங்க திரும்பி வரவரைக்கும் உக்கார்ந்து இருக்கணும்….”
“அய்யய்யோ… வேணாம்… என்னை உங்ககூடவே கூட்டிட்டு போயிடுங்க… “, பயந்தபடியே வல்லகியின் பின்னால் மறைந்தபடி வந்தான்.
நாச்சியாரும் மனதை திடப்படுத்திக் கொண்டு வல்லகியுடன் நடந்து முன்னே செல்ல, அர்ஜுன் அவர்களை பார்த்துவிட்டு சிங்கத்துடன் அவர்கள் அருகில் வந்தான்.
அந்த சிங்கம் அவர்கள் ஒவ்வொருவரையும் அவர்களின் இதயத் துடிப்பு வரை சரிபார்த்து எகிறவைத்து, ஆதியின் அருகே செல்ல விட்டது.
நுவலி ஆச்சர்யம் பொங்கும் விழிகளுடன் அந்த சிங்கத்தைப் பார்த்து மென்னகை புரிந்தாள்.
சிங்கமும் அவளின் அருகில் வந்து அவளது கண்களை ஆழ்ந்து பார்த்தது. ஏதோ ஒரு பந்தம் இருவருக்கும் ஏற்பட்டது போல நுவலி சிங்கத்தின் பிடரியை தொட்டு தடவ ஆரம்பித்தாள்.
சிங்கமும் அவளுக்கு வாகாக தலையைச் சாய்த்துக் கொடுத்து அவளுடன் உரசியபடி நடந்தது.
கண்மயா நாச்சியாரின் கையை இறுக்கமாகப் பிடித்தபடி நடந்து சென்று ஆதியின் அருகே நின்றாள்.
வல்லகி நானிலனை இழுத்துக் கொண்டு அர்ஜுன் கைகளில் கொடுத்துவிட்டு நுவலி அருகில் சென்றாள்.
சிங்கம் வல்லகியை மெல்ல அருகில் வந்து முகர்ந்து பார்த்தது. அவளது கைகளை நக்கி தன் கண்கள் அருகில் வைத்துக்கொண்டது.
வல்லகியும் படபடக்கும் இதயத்துடன் சிங்கத்தை மெல்ல தடவி கொடுத்து, கண்களை சுற்றி மெல்ல விரல்களை வட்டமடித்தாள்.
ஆதி இன்னமும் தன் முன்னால் இருந்த சிங்கத்தின் கண்களை இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனுக்காக பல நூறு வருடங்களாக காத்திருக்கும் சிம்மேசனை கண்டு ஆதி மனம் குமைந்து நொடிந்துக் கொண்டிருந்தான்.
ஆதியின் கண்களில் இருந்து ஒரு துளி நீர் கூட வெளிவரவில்லை. அத்தனையும் உள்ளுக்குள்ளே இழுத்துக் கொண்டு சிவந்திருந்த கண்களை இன்னும் சிவக்க வைத்து, இதயம் தாங்கா பாரம்தனை சுமந்துக் கொண்டு நின்றான் பாராண்ட வேந்தன்.
அன்றைய நாளில் கடைசியாக அவன் இட்டு சென்ற கட்டளையின் காரணமாக காலம் தாண்டி போராடி தன் கண் முன்னே நிற்கும் உயிர்களை எல்லாம் கண்டவன் நெஞ்சம் வஞ்சத்தினால் வீழ்ந்த நொடிகளை எண்ணி தலைக்குனிய வைத்தது.
ஆதியின் தலைக் குனிய முற்பட்டதும் சிம்மேசன் அருகில் வந்து அவனது தலையை நிமிர வைத்து, அவனை மண்டியிட்டு வணங்கி காடே அதிரும் வண்ணம் கர்ஜித்தான்.
அந்த கர்ஜனையில் காட்டில் இருந்த மிருகங்கள் எல்லாம் அடங்கி ஒடுங்கி நடுங்கி நின்றன. கர்ஜனையின் ஒலியில் மனிதர்களின் காதெல்லாம் செவிடாகித்தான் விடும் போல, அத்தனை அடர்ந்த கர்ஜனை.
காத்திருந்த காலத்தின் தவப்பலன் கிடைத்த மகிழ்ச்சியில் எழுந்த கர்ஜனை, அம்மையின் காவல் பூதங்கள் பயணப் பரிவாரத்தை தயார் செய்துக்கொள்ள வேண்டிய காலம் வந்ததை அறிவிக்க மேற்கொண்ட கர்ஜனை. சில நிமிடங்கள் தொடர்ந்தது. நுவலியின் அருகில் நின்றிருந்த சிங்கம் கூட அந்த கர்ஜனையில் அடங்கித் தலைத் தாழ்ந்து மண்டியிட்டு அமர்ந்துக் கொண்டது.
மன்னவன் முன்னே கொட்டும் பேரிகையாக சிம்மேசனின் கர்ஜனை அத்தீவிற்கு பறையரிவித்தது அவன் எஜமானின் வருகையை.. பல நூறு நூற்றாண்டுகளாக காத்திருந்த வேந்தனின் வருகை இன்று, அந்நிலத்தின் கொண்டாட்டம் ஆரம்பமானது அவன் பாதுகாத்து வளர்த்த உயிர்களிடத்தில்…
நரசிம்ம யோகேந்திர ஆதித்தன் மீண்டும் உயிர்பெற்று வந்துவிட்டான் ….
இங்கே காடு எழுந்த வேளையில் தான் பைரவகாட்டில் அருவம் மண்டியிட்டு அமர்ந்திருந்த லிங்கத்தில் பேரொளிப்பட்டு பைரவக்காடும் சிலிர்த்து எழுந்தது அம்மையின் வருகைக்காக…..
மேகமலையில் மகதன் முதல் பைரவன் வரையில் சத்தம் எழுப்பிக் தங்களின் ஆரவாரத்தை வெளிக்காட்டினர்.
தீரன் பைரவக்காட்டின் பாதையைக் கண்டிருந்தான் வனதேவியின் குகைக்கு அருகே……

