76 – ருத்ராதித்யன்
“மகதா .. “
“உர்ர் ர் ர் ர் ர் ர் ர் ர் ர்ர்… “, என உருமியபடி மகதன் நரசிம்மனின் முன்னே நின்றான்.
“இருட்டினில் ஜொலித்த மஞ்சள் விழிகள் மெல்ல வெளிச்சத்தில் வந்தன. அதன் நீளமும், அகலமும், உயரமும் கண்ட நரசிம்மன் மனம் சந்தோஷத்தில் துள்ளியது.
“கண்டுவிட்டேன் .. மகதா .. கண்டுவிட்டேன் … “, என மகதனைத் தாண்டி முன்னே சென்றவனை மகதன் தடுத்து தன் பின்னே நிற்கவைத்தான்.
மகதனின் செயலை உள்வாங்கியபடி நரசிம்மனும் பின்னால் நின்று எதிரே வந்த மூப்பினைக் கொண்ட மகரயாளியைக் கண்டான். அதன் பின்னே சில யாளிகள் அவர்களை நோக்கி வருவதைக் கண்டு, நரசிம்மனும் மகதனும் ஒருவரைவருவர் காக்கும் அரணாக மாறி நின்றனர்.
நிச்சயமாக கையில் இருக்கும் ஆயுதத்தை வைத்து இவற்றை வெற்றிக் கொள்ள முடியாது என்பது நரசிம்மனுக்கு தெரியும். இந்த யாளிகளைக் கண்டால், அவற்றிடம் இருந்து எப்படி தப்பிக்க வேண்டும் என்று குருகுலத்தில் அவனின் குரு உபதேசித்து இருக்கிறார்.
இடையில் இருந்த மூலிகை நன்றாக சூடு பறக்க தேய்த்து தனது உடலிலும், மகதனின் உடலிலும் தேய்த்துவிட்டு, நெருப்பை மூட்ட துவங்கியதும் சிறிய யாளி ஒன்று அவனை நோக்கி பாய்ந்து வந்தது.
மகதன் அந்த யாளியை எதிர்த்து நிற்க, அந்த குட்டியை ஈன்ற தாய் யாளியானது மகதனை விழுங்க வரும்போது நரசிம்மன் வித்தியாசமான ஒலியை எழுப்பினான்.
அந்த ஒலி அவைகளுக்கு ஆபத்து இல்லை என்று மூளைக்கு உணர்த்தும். அதனால் விழுங்க திறந்த வாயை மூடாமல் இரண்டு அடி பின்னே மட்டும் சென்று நின்றது.
தனது இடைக்கச்சையில் இருந்து விதவிதமான ஒலி எழுப்பிகளை எடுத்து வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாக அவன் வாசித்து அவற்றுடன் சம்பாஷணை நடத்திக் கொண்டிருந்தான். அந்த ஒலி கடத்திய செய்தியை உணர்ந்த யாளிகள் வயதான யாளியின் பார்வைக்கு அடிபணிந்து அங்கிருந்து விடைபெற்றுச் சென்றன.
ஆனால் நான்கு யாளிகள் மற்றும் அவர்களைச் சுற்றி நின்றன. மகதன் நரசிம்மனுக்கு அரணாக நிற்பதைக் கண்ட தாய் யாளி தனது குட்டியை கவ்விக்கொண்டு இன்னும் நான்கடி தள்ளி நின்றது. இப்போது இரண்டு யாளிகள் இவர்களின் முன்னே இருக்க, மகதன் வயதான யாளியின் முன் மண்டியிட்டு வணங்கி எழுந்தான்.
நரசிம்மனும் அவ்வாறே செய்ய, வயதான யாளி ஒலி எழுப்பி அவர்களை பின்தொடரக் கூறிவிட்டு முன்னே சென்றது. அந்த ஒலியின் அர்த்தம் புரிந்த மகதன் நரசிம்மனை இழுக்க, “என்னடா ? நாம் பின்னே செல்ல வேண்டுமா?”, எனக் கேட்டான்.
“உர்… “, எனக் கூறிவிட்டு மகதன் நரசிம்மனை தன்மேல் அமரும்படி கூறி மண்டியிட்டு அமர்ந்தான்.
நரசிம்மனும் சுற்றிலும் ஒருமுறைப் பார்த்துவிட்டு மகதன் மேல் அமர்ந்து அந்த அடர்ந்த கூட்டப்பாறையின் உள்ளே நுழைந்தான்.
ஒரு நாள் பயணத்தில் ருத்ரக் கோட்டை வந்து சேர்ந்தனர் அமரபுசங்கன், ஆருத்ரா மற்றும் வனயாத்திரை. முதலில் வனயாத்திரை உள்ளே சென்று அமரபுசங்கரை வரவேற்க ஏற்பாடுகள் செய்யக் கூறிவிட்டு தந்தையைத் தேடி ஓடினாள்.
“தந்தையே .. தந்தையே .. “, என மூச்சு வாங்க ஓடிவந்து நிற்கும் மகளைக் கண்டு அந்த தந்தையின் முகத்தில் பெருமையுடன் கூடிய உவகைப் பொங்கியது.
“வந்துவிட்டாயா யாத்திரை .. அக்கா எங்கே ?”, என பெரிய மகளை காணும் ஆவலோடு வாசலை பார்த்தார்.
“தந்தையே .. அமரக்கோட்டை சமஸ்தான அரசர் வந்திருக்கிறார்.. வாருங்கள் வரவேற்க செல்லலாம் ..”, என அவரை இழுத்துக் கொண்டு வாசலுக்கு ஓடினாள்.
ஆருத்ரா யாத்திரையின் ஏற்பாடுகள் புரிந்து மெல்லவே அமரனோடு பேசியபடி 2 நாழிகை கடந்தே கோட்டை வாசலை அடைந்தாள்.
“எதற்கு இந்த ஏற்பாடுகள் ருத்ரா ?”, அமரன் சலிப்போடு கேட்டான்.
“என்ன இருந்தாலும் தாங்கள் அமரக்கோட்டை சமஸ்தானத்தின் அரசர்.. அந்த பதவிக்கு மரியாதை செய்யவேண்டும் சகோதரரே .. நாளை பேரரசர் வந்து கண்டிக்கும் அளவிற்கு நாங்கள் நடந்துவிடக்கூடாதே .. இதை ஏற்றுக்கொண்டு சிரித்தமுகமாக உள்ளே வாருங்கள் ..”, என இப்போது ஆருத்ராவும் அவன் எதிரே நின்று வரவேற்றாள்.
“ருத்ர சமஸ்தானம் தங்களை அன்புடன் வரவேற்கிறது இளவலாரே … “, அருகே சேடிப்பெண் பூக்கூடையுடன் வந்து நிற்கவும் அமரனின் மேல் மலர் தூவி வரவேற்றாள்.
அரண்மனை வாசலில் வித்யாதர ருத்ரேஸ்வரரும், ருக்மணி தேவியாரும் ஆரத்தி தட்டுடன் நின்றிருந்தனர். வனயாத்திரை உயரத்தில் தொங்கிய பூக்கூடையைக் கவிழ்த்துத் தனது வரவேற்பைக் காட்டினாள்.
“இந்த குறுகிய நேரத்தில் இவள் எப்படி அத்தனை உயரத்தில் பூக்கூடையை அங்கே கட்டினாள் ?”, என ருத்ராவிடம் கேட்டான்.
“அவள் இங்கிருந்து கிளம்பும்போதே அதை செய்திருக்க வேண்டும் பாருங்கள் பச்சைக் கொடிகள் காயாமல் இருக்க நீர் தெளித்து இருக்கிறார்கள்.. “, என ஆருத்ரா கீழே கிடந்த கொடியைக் காட்டி கூறினாள்.
“பயங்கர முன்னேற்பாடு தான் .. ஆனாலும் இவளை சமாளிக்க நிச்சயம் ஒருவன் இனி பிறந்து தான் வரவேண்டும்… “, என அமரன் கூறியதும் யாத்திரை அவனருகே வந்து, “நிச்சயம் பிறப்பெடுக்க வைத்துவிடுவேன் தமையனே .. எனை ஆசீர்வதியுங்கள் ..”, என அவனது பாதம் பணிந்து எழுந்தாள்.
“போதும் உனது விளையாட்டு யாத்திரை.. வா மகனே.. நலமா ?”, என ருக்மணி தேவியார் அன்புடன் வரவேற்றார்.
“வரவேண்டும் மகனே.. இத்தனை ஆண்டுகள் எடுத்ததா உனக்கு இந்த சிற்றப்பனையும், சிற்றன்னையையும் காண ?”, என உரிமையோடுக் கேட்டார் அரசர்.
“அப்படி இல்லை அரசே.. ஆதித்த கோட்டையில் அதிகமாக பணியில் இருந்துவிடுகிறேன் .. தங்கைகளை அவ்வப்போது சென்று குருகுலத்தில் பார்த்துவிடுவேன்… உங்களை பற்றியும் விடாது ஓலை அனுப்பி விசாரித்து வருகிறேன் … “, எனச் சொன்னபடி அமரன் சிரிப்புடன் உள்ளே சென்றான்.
“ஓலை அனுப்பினால் போதுமா ? இந்த தாயின் கையால் சாப்பிட வேண்டாமா ? சற்று இளைப்பாறிவிட்டு சாப்பிட வாருங்கள் அனைவரும்.. அறுசுவை விருந்து தயாராகிக் கொண்டிருக்கிறது.. யாத்திரை இன்று நீ இங்கே தான் சாப்பிட வேண்டும் .. சிங்கத்துரியன் கோட்டையில் இல்லை.. நாளை காலை அவன் வந்தபின் நீ உனது ஆராய்ச்சி கூடம் செல்லலாம்.. “, என கண்டிப்புடன் ருக்மணி தேவியார் கூறிவிட்டு அமரனை அழைத்து சென்றார்.
“பார்த்தாயா அக்கா ? நம்மை கண்டுகொள்ளவே இல்லை.. சகோதரனைக் கண்டதும் நம்மை மறந்துவிட்டார்கள்…”
“ஹாஹாஹா .. உன்னை கண்டுகொள்ளாமல் தான் உனை இங்கேயே இருக்கும்படி கூறினார்களா ? அன்னையிடம் வம்பு வளர்த்து சண்டையிடும் பழக்கம் இன்னும் உன்னைவிட்டு செல்லவில்லையா ?”, எனப் பேசியபடி ஆருத்ரா தங்கையை அணைத்துக் கொண்டு நடந்தாள்.
“அது தொட்டில் பழக்கம் தமக்கையே .. மாறாது .. நீ குளித்துவிட்டு வா.. நானும் என்னறைக்கு சென்று வருகிறேன்..”, எனக் கூறிவிட்டு மாடிப்படி நோக்கி சென்றாள்.
அவள் செல்லும் வழிகளெல்லாம், அனைவரையும் நலம் விசாரித்து விளையாடியபடி செல்லும் தங்கையைக் கண்டு ஆருத்ரா புன்னகை முகமாக பல வருடங்கள் கடந்து தனது அறைக்குள் சென்றாள்.
சில மாற்றங்களோடு அறையும் விசாலப்படுத்தி இருப்பது தெரிந்தது. ஆருத்ராவின் ஆயுத அணிவகுப்பு ஒரு பக்கமும், நூல் அணிவகுப்பு எதிர்பக்கமும் அமைத்து, பிறைநிலவு வடிவில் அவளது அறை நன்றாக வெளிச்சமும், காற்றும் நுழைய ஏதுவாக, எதிரே பெரிய உப்பரிகைக் கொண்டு கட்டமைத்திருந்தனர். அவளுக்கு விருப்பமான ஊஞ்சலும் பெரிதாக போடப்பட்டிருந்தது. அதில் தாராளமாக இருவர் சயணிக்கலாம்.
ஆருத்ரா முதலில் ஊஞ்சலில் சென்று அமர்ந்து ஆசுவாச மூச்சுகள் எடுத்துவிட்டு, உடலை லகுவாக்கி ஊஞ்சலில் உடலை சாய்த்துக் கொண்டு, எதிரே தெரிந்த காடுகளையும், மலைகளையும் பார்வையால் அளந்துக் கொண்டிருந்தாள்.
இந்த அடர்வனத்தில் தான் என்னவன் தேவியரின் ஆசி பெற சென்றுள்ளான். இடையே இரண்டு மூன்று யாளிகளின் இருப்பிடமும் கடந்து செல்லவேண்டும் என்று அவனுக்கு சிறப்பு பயிற்சியை குரு வழங்கியிருந்தார். ஆனாலும் அந்த பெரும் பலம் வாய்ந்த மிருகங்களை எதிர்த்து வெற்றிக் கொள்ளவும் முடியாது, சண்டையிடவும் முடியாது. ஒலி கொண்டு தொடர்பு கொண்டு தப்பிக்கலாம், ஆனால் அந்த அளவிற்கு நரசிம்மனுக்கு நேரம் இருக்க வேண்டுமே என்ற கவலை மனதில் எழுந்தது.
‘எப்படியும் இளவரசர் சாதுர்யமாக நடந்து கொள்வார் தான்… ஆனாலும் அந்த மிருகங்களை யாரும் இதுவரை எதிர்கொண்டு தப்பித்து வந்ததாக கேள்விப்படவில்லையே… மகதன் இருக்கிறான்.. அவன் எப்படியும் பாதுகாப்பாக அழைத்து செல்வான்.. வனதேவி .. உன்னருள் பெற வரும் என்னவரை என்றும் உடனிருந்து காக்கவேண்டுமம்மா ..’, என மனதில் பிரார்த்தனை வைத்து விட்டு முகம் கழுவி வேறு உடையுடுத்தி, கண்களில் மையிட்டு நெற்றில் குங்கும பொட்டிட்டுக் கொண்டு குறுவாளை இடையில் சொருகி, கட்டுக்கடங்காமல் தொங்கும் கார்கூந்தலை உயரத்தூக்கி கொண்டையிட்டுக் கொண்டு முற்றம் நோக்கிச் சென்றாள்.
அவள் சாதரமாக நடந்து செல்லும்போதே கண்கள் அனைத்து திசைகளிலும் சுழன்று கண்காணித்தபடி இருந்தது. உதட்டில் மென்னகை கொண்டிருந்தாலும், அதில் சற்று அழுத்தமும் திமிரி வெளிக்காட்டியது, அவள் மனதின் தீரத்தை. அலங்காரமேதுமின்றியே அவளின் முகமும், கண்களும் அத்தனை வசீகரத்துடன், கம்பீரமும் நிறைந்திருந்தது. வித்யாதர ருத்ரேஸ்வரர் தன் மூத்த மகளின் வருகை கண்டு உள்ளம் பொங்கும் பெருமையுடன் கண்டார்.
‘நிச்சயம் இவள் உலகாலும் பேரரசி தான் … ‘, என மனதில் நினைத்து பூரித்துக் கொண்டார்.
“வா ருத்ரா…. உனக்காக தான் காத்திருக்கிறோம் .. உணவுன்ன செல்லலாமா ?”, என அரசி ருக்மணி தேவி கேட்டார்.
“செல்லலாம் அம்மா … ஏன் தமையனை காக்கவைத்திருக்கிறீர்கள் ? முன்பே சென்றிருக்கலாமே ?”, எனக் கேட்டபடி வேகமாக முன்னே வந்தாள்.
“உனக்காக தான் காத்திருக்க விரும்பினேன் ருத்ரா … நீயில்லாமல் எப்படி ? வாருங்கள் அரசே ..”, என பேசியபடியே அனைவரும் உணவுண்ணும் கூடம் சென்றனர்.
“வெகு காலமானது இளவலாரே .. இன்று எங்கள் நெஞ்சம் நிறைந்திருக்கிறது .. விரைவில் தங்களுக்கு ஓர் இளவரசியை பார்த்து விவாகம் செய்து வைக்க பேரரசரிடம் முறையிடப்போகிறேன் … தாங்கள் குடும்பத்துடன் இங்கு வந்து சென்றபடி எப்போதும் இருக்கவேண்டும் ..”, எனக் கூறியபடி அரசியார் அமரனுக்கு உணவு பரிமாறினார்.
“இன்று அவரை நிம்மதியாக உண்ண விடுங்கள் தாயே.. பாருங்கள் எனது தமையன் முகம் பாகற்காயை அப்படியே உண்டது போல விக்கித்து நிற்கிறது … கவலை வேண்டாம் தமையனாரே … உங்களுக்கு எப்படிப்பட்ட பெண் வேண்டுமென்று கூறுங்கள் எங்கிருந்தாலும் நான் தேடிப்பிடித்து அழைத்து வருகிறேன்..”, எனக் கூறியபடி அவனுக்கு இனிப்பை கிண்ணத்தில் வைத்தாள் யாத்திரை.
“யாத்திரை .. உனது வாய்பேச்சு அளவைமீறி செல்கிறது .. இப்படி பேசாதே என்று எத்தனை முறை கூறியுள்ளேன்… எனது வார்த்தைகளுக்கு என்ன மதிப்பு உன்னிடம் ?”, என அரசியார் கோபமாக வினவவும் யாத்திரை அமரன் பின்னே ஒளிந்து தாயை பார்த்தாள்.
“அவள் தங்களிடம் வேண்டுமென்றே விளையாடுகிறாள் அரசியாரே … தங்களை கண்டு ஆறு மாதம் ஆகிறதல்லவா ? வேறொன்றும் இல்லை .. வணக்கம் இளவலாரே… மகாராணியார் நலமா ? பேரரசர் எப்படி இருக்கிறார் ?”, எனக் கேட்டபடி வனயட்சி அங்கே வந்தார்.
“தமையா.. இவர் தான் வனயட்சி.. சிங்கத்துரியரின் அன்னை.. இயற்கையுடன் கலந்தே எப்போதும் வாழ்பவர்…”, என ஆருத்ரா அவரை அறிமுகம் செய்து வைத்தாள்.
“வணங்குகிறேன் அம்மா .. தாங்கள் நலமா ? தங்களின் கண்டுபிடிப்புகள் தான் இன்று வரையிலும் ஆதித்த நாட்டில் பெரும் நலத்தை வழங்கி வருகிறது … தங்களை நேரில் கண்டது மிகவும் மகிழ்ச்சி .. மகாராணியார் தங்களை கண்டால் ஆனந்தம் கொள்வார் … “, என அமரபுசங்கன் கூறவும் ஆருத்ரா அவர்களை வியந்துப் பார்த்தாள்.

