102 – ருத்ராதித்யன்
“தமையரே.. அந்த இடத்தினை பாருங்கள் சிவப்பாக ஏதோ மிளிர்கிறது.. அந்த இடத்திற்கு அருகே செல்லுங்கள்..” என ஆருத்ரா கூறினாள்.
“எனக்கு ஒன்றும் தெரியவில்லையே சிங்கமாதேவி..” அமரன் சுற்றிலும் பார்வையைச் சுழற்றியபடி கூறினான்.
“உங்களுக்கு வலது பக்கம் நூறடி தூரத்தில் அந்த வெளிச்சம் தெரிகிறது இளவலாரே..”
“இங்கே உனக்கு தான் முக்கியபணி இருப்பதாக அரசர் கூறினார். இது அதுவாக இருக்கலாம். எனது கண்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. நீ கூறும் இடத்தில் தரையிறங்குகிறேன் இளவரசி..” எனக் கூறிவிட்டு சிறிது தூரம் கடந்து மெல்ல தரையிறங்கி அவளையும் இறக்கிவிட்டான்.
“இந்த இடத்தில் வித்தியாசமான வாசனைகள் வருகிறது. உங்கள் நாசிக்கு ஏதும் தெரிகிறதா?” ஆருத்ரா மண்ணை தொட்டதும் கேட்டாள்.
“இல்லை.. ஆனால் இந்த இடத்தில் ஓர் மாய வலை இருப்பது போல தோன்றுகிறது. நான் பறக்கும்பொழுது எனது உடல் மறைவது போல ஓர் மாயம் இங்கு நிகழ்கிறது. அதோ அந்த கல்லை பார். அதன் அருகே இருக்கும் செடி நொடிக்கும் குறைவாக மஞ்சளும், வெள்ளையுமாக நிறம் மாறி மாறி காட்டுகிறது..” எனக் கூறியபடி அமரன் அதன் அருகே சென்று மலரை தொட்டான்.
அவனுடலில் இருக்கும் இரசாயனங்களோடு கலந்து அது இப்போது சிவப்பாக தெரிந்தது. அமரனும், சிங்கமாதேவியும் சில அடிகள் உள்ளே இழுக்கப்பட்டனர்.
இப்போது அமரன் கண்களுக்கு அந்த சிவப்பு வெளிச்சம் நன்றாக தெரிந்தது. ஆருத்ராவும் அந்த இடத்திற்கும், மற்ற இடத்திற்கும் இடையே தெரிந்த மெல்லிய திரையை இப்போது நன்றாக இனம் கண்டுக் கொண்டிருந்தாள்.
“தமையரே.. இந்த இடம்..” என ஆர்வமும் உத்வேகமுமாக அவன் பக்கமாக திரும்பினாள்.
“நீ உன் மனம் கூறும் திசையில் நடந்து செல் தேவி.. நான் இங்கேயே நிற்கிறேன்..” என தூரமாக பார்வையை வைத்தபடிக் கூறினான்.
ஆருத்ரா நிற்கும் இடத்தில் இருந்து ஒரு காத தூரத்தில் அபராஜிதன் அந்த இடத்தினை நோக்கி வந்துக் கொண்டிருந்தான்.
அவனது அகோர குரு கூறியபடி, வடமேற்கு பகுதியில் இருக்கும் ஐந்து உயர்ந்த மலைகளின் நடுவே இருக்கும் இடத்தினை குறிப்பெழுதிக் கொண்டே வந்து கொண்டிருந்தான். அவனுடன் இரண்டு அகோரிகளும் வந்து கொண்டிருந்தனர்.
அபராஜிதன் உடலில் அதிகமாக இரத்த வாடை வீசியது, புதிதாக கோர்த்த முதுகு தண்டு எழும்புகளின் சரசரப்பு ஒலியுடன் அவனது கண்களை காண்பவர்களுக்கு அதில் வேட்டையாடும் வெறி மிகுந்திருந்திருப்பது மனம் பதைப்பதைக்கும் உணர்வை நொடியில் உணர்வர்.
அவன் எடுத்திருக்கும் அகோரிகளின் போதைப் புகை அவனது உடலையும் மனதையும் அடக்கி, எடுத்த குறிக்கோளை மட்டும் நோக்கி நடக்க வைத்துக் கொண்டிருந்தது.
இது ஒரு வகையில் மூளையை மயங்க செய்து அவர்களுக்கு பிடித்தமான உணர்வில் லயிக்க வைக்கும். அதோடு உடலில் ஆற்றலை கூட்டும் மூலிகையும் உட்கொண்டால், எடுத்த காரியத்தை முடிக்கும்வரை அவர்களை எந்த எண்ணமும் திசை திருப்பாது. அப்படி யாரேனும் திட்டமிட்டு திசை திருப்பினால் கொடிய மிருகமும் அஞ்சும் வகையில் அவர்களது நடவடிக்கைகள் இருக்கும்.
அவன் அங்கு வருவதை ஒரு காதம் முன்பே உணர்ந்த அமரபுசங்கன் ஆருத்ராவை முன்னேற கூறிவிட்டு, உடலை மறைத்துக் கொண்டு காவல் இருந்தான்.
ஆருத்ரா அவனது உடல் முறுக்கி நிற்கும் நிலைக் கண்டு ஏதோ ஆபத்து வருவதை உணர்ந்தவள் வேகமாக அந்த சிவப்பு வெளிச்சம் வரும் இடத்திற்கு சென்றுப் பார்த்தாள்.
சிறு சிறு பாறைகளுக்கு இடையே தெரிந்த இடைவெளியில் நட்சத்திர ஒளிப்பட்டு மிளிரும் ஏதோ ஒன்று அங்கே இருக்கிறது என்று புரிந்தது. அந்த கற்களை அவளால் தனியாக பெயர்த்து எடுக்க முடியவில்லை. அனைத்து கற்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து கற்பூட்டு போல பதிந்திருந்தது.
அதன் செயல்பாட்டை யூகித்த ஆருத்ரா நொடியில் அதன் மேலே படர்ந்திருந்த கொடியை எல்லாம் விளக்கி நன்றாக அதன் கட்டமைப்பை ஊன்றி கவனித்தாள்.
எந்த விசையும் அதில் இருப்பது போல தெரியவில்லை. கைகளை எல்லா பாறைகளின் மேலும் வைத்து முழுதாக தடவிப் பார்த்துவிட்டாள். அப்படியென்றால் இது விசையில் இயங்கும் வகையல்ல.
ரேகையாக இருக்குமோ என்று தனது அனைத்து விரல் ரேகைகளையும் எல்லா பள்ளமான இடங்களிலும் வைத்து பார்த்தாள். அதிலும் அது திறக்கவில்லை.
அடுத்து ரத்தம் அல்லது திரவம் கொண்டு திறக்கும் வகை. எந்த வகையான திரவம் இதில் எப்படி ஊற்றி திறப்பது என்று இன்னும் ஊன்றி கவனித்தாள். வெளிச்சம் மிகவும் குறைவாக இருந்ததால் நெருப்பை மூட்டி அந்த பாறைகளை கவனமாக ஒரு இடமும் விடாமல் கவனித்து மனதில் பதியவைத்துக் கொண்டாள்.
“இது திரவ வகை செயற்பாட்டு முறையை கொண்ட பூட்டு தான்.. தமையரே.. ஒரு நிமிடம் இங்கே வந்து பாருங்கள்” என்று அவனை அழைத்தாள்.
“என்னவாயிற்று ஆருத்ரா?”
“இது ஓர் கற்பூட்டு .. திரவத்தை ஊற்றினாள் திறக்கும் வகையான ஒன்று. ஆனால் எந்த திரவத்தை ஊற்றுவது என்று தெரியவில்லை. தாங்கள் இதுபோன்றவைகளை இதற்கு முன் பார்த்து இருக்கிறீர்களா?” என தான் அறிந்ததைக் கூறிக் கேட்டாள்.
“இதன் அருகே வேறு எங்கும் குகை போன்ற பாறை அமைப்புகள் இல்லை. அதனால் இது நிலத்தில் தான் இருக்கிறது. இந்த வகையான நிலத்தடி பாதைகள் பெரிதும் ரத்தம் கொண்டே திறக்க முடியும். முன்னோர்களோ, தெய்வ செயலோ எதுவாயினம் தேர்ந்தெடுக்கபட்டவர்களின் ரத்தம் மட்டுமே இதன் திறவுகோளாக இருக்கும். ஆனால் இதற்கு உனது ரத்தம் மட்டும் போதுமா?”
“முயற்சி செய்து பார்க்கலாம்” என கத்தியால் கையைக் கீறி அந்த பாறையின் ஆரம்ப புள்ளியில் இரத்தம் சொட்ட வைத்தாள்.
அவளது இரத்தம் சொட்ட சொட்ட அந்த சிவப்பு நிற வெளிச்சம் அதிகரித்துக் கொண்டே வந்தது. முழுதாக ஒரு நிமிடம் அவளது கைகளில் ரத்தம் வழிந்து முடிந்ததும் காயம் பட்ட இடம், வெட்டிய தடம் ஏதுமின்றி காணப்பட்டது. அங்கிருந்த பாறைகள் உருண்டு உள்ளிருந்து பவளத்தினால் செய்யப்பட்ட அம்மன் சிலை வெளியே வந்தது.
ஒரு முழம் உயரமும், இரண்டு கை அகலமும் கொண்டிருந்தது. அம்மையின் முகத்தில் அப்படியொரு சிரிப்பும், தேஜசும் கண்டு ஆருத்ரா சில நிமிடங்கள் மெய் மறந்து நின்றாள்.
இங்கே சிலை வெளியே வந்ததும் அபராஜிதன் உடலில் அதீத அதிர்வுகள் எழுந்து அவனை வேகமாக இந்த இடம் நோக்கி வரவைத்தது. அவனது வேகம் இருபது குதிரைகளின் வேகத்தை இப்போது தொட்டிருந்தது. சிலை வெளியே வந்துவிட்டத்தை உணர்ந்த அகோரிகளும் அவனை விரட்டியபடி வேகமாக மந்திர உச்சாடனங்கள் செய்துக்கொண்டே ஓடி வந்துக் கொண்டிருந்தனர்.
“வேகமாக செல்லுங்கள் இளவரசே.. அந்த சிலை தங்களுக்கு மிகவும் முக்கியம். அந்த சிலை இருந்தால் தான் ஆத்மாக்களை அடைக்கியாள முடியும். விரைவாக சென்று அதை கைப்பற்றுங்கள்..” என அகோரிகள் சொல்ல சொல்ல இன்னும் வேகமெடுத்து ஓடினான்.
“ஆருத்ரா.. வேகமாக வா.. அந்த அபராஜிதன் இங்கே வந்து கொண்டிருக்கிறான். இன்னும் சில நிமிடங்களில் இங்கே வந்து விடுவான். அசுர பலம் கொண்டு ரத்தவாடையுடன் வருகிறான். விரைவாக நாம் செல்ல வேண்டும்.” என அமரபுசங்கன் கூறவும் ஆருத்ரா தன்னிலை திரும்பி தனது இடையில் இருந்து ஓர் பட்டு துணி எடுத்து சிலைக்கு சுற்றிக்கொண்டு தனது நெஞ்சோடு இறுக்கமாக கட்டிக்கொண்டாள்.
“இன்னும் சில வினாடிகளில் அவன் இங்கே வந்துவிடுவான். வேகமாக இங்கே வந்து கூடையில் உட்கார்..” என அமரன் அவசரப்படுத்தினான்.
“அவனுடன் நாம் சண்டையிடலாமே சகோதரா.. நம் இருவரால் ஒருவனை வீழ்த்த முடியாதா?”
“அவன் இப்போது சாதாரண மனிதனாக இல்லை. தன்னையே அசுரனாக பாவித்து அகோரிகளின் உபயத்தால் வெறிக்கொண்ட ராட்சஷனாக வருகிறான். இது விவேகத்துடன் செயல்படவேண்டிய நேரம்..” என கூறி முடிக்கும் முன் அபராஜிதன் அவர்களின் முன்னே வந்து நின்றான்.
நெடிந்து வளர்ந்த உருவம், வலிமையான தோள்கள், முகத்தில் இருந்த இறுக்கமும், கண்களில் இருந்த தீர்க்கமும் அவனின் உடல் பலத்தோடு புத்தியின் பலத்தையும் பறைசாற்றின. ஆருத்ரா அவனை அணுஅணுவாக ஆராய்ந்தாள். அவனின் மொத்த பலத்துடன் பலவீனத்தையும் அவள் மனம் அந்நொடி உணர்ந்தது.
அபராஜிதனும் ஆருத்ராவினை கண்ட நொடி அப்படியே ஸ்தம்பித்து நின்றான். மழையில் நனைந்ததால் அவளது அலங்காரம் கலைந்திருந்தாலும், கண்களில் தெரிந்த ஜ்வாலையும், உடலில் இருந்த மிடுக்கும், நின்ற தோரணையும் கண்டு அவளது ஆத்மாவினை அவனது ஆத்மா அடி நுகர்ந்தது.
அவளது ஆத்மாவில் இருந்த ஒளியும், தீரமும் உணர்ந்தவன் தனது வம்சாவழிகள் அழிவில்லாமல் வாழ இவளது ஆத்மாவுடன் இணை சேர்ந்தே தீரவேண்டும் என்று முடிவு கட்டி அவளை வசியப்படுத்த தனது தலையில் இருந்த முடியை உருட்டி வசியமந்திரம் உருவேற்றி அவளை நோக்கி வீசினான்.
“வேண்டாம் இளவரசே.. நமக்கு சிலை தான் முக்கியம். அதை கைப்பற்றுங்கள்.” என்று பின்னால் வந்த அகோரிகள் கூறினர்.
“இரண்டு சிலைகளும் எனக்கு அவசியம் அகோரிகளே.. அவளது ஆத்ம தீரத்தை உணருங்கள். அதன் வலிமையும், ஆற்றலும் இதுவரையில் எங்குமே நான் கண்டதில்லை. இவள் எனக்கு வேண்டும். இவளது மெய்யும், உள்ளிருக்கும் ஒளியும் எனக்கு மட்டுமே சொந்தமாக வேண்டும்.” என வெறி வந்தவன் போல கத்தினான்.
“நல்ல கனவு அபராஜிதா.. ஆனால் ஒருநாளும் நடவாத விஷயம். உனது வசியமோ மந்திரமோ எனை ஒன்றும் செய்யாது. நீ செய்து வரும் ஈனத்தனமான செயல்களை முதலில் நிறுத்து. இயற்கையை தோற்கடிக்க நினைப்பது மிகப்பெரும் முட்டாள் தனம். அதை கைவிட்டு உன் நாட்டினையும், மக்களையும் சந்தோஷமாக வாழ வை” என ஆருத்ரா நிதானமாக, குரலில் ரௌத்ரம் காட்டி கூறினாள்.
“அவள் ஏன் வசியப்படவில்லை?”
“அவள் தன்னுடலில் கட்டிக்கொண்டிருப்பது சக்தியை. அந்த சக்தியை மீறி உனது சக்தி அவளை ஒன்றும் செய்யாது அபராஜிதா.. நீ செய்து வரும் அனைத்தும் நாங்கள் அறிவோம். விரைவில் போர் காலத்தில் சந்திப்போம்”
“மந்திரத்தை தொட்டபின் வாளினை தொடுவது அத்தனை ஸ்வாரஸ்யமாக இருக்காது அமரரே.. தங்களின் அன்னை செய்த திரவம் தங்கள் உடலில் நன்றாகவே கலந்து வேலை செய்கிறது போலவே.. அங்குள்ள மற்ற பொருட்கள் அனைத்தும் அதை காத்துக்கொண்டிருக்கும் வனயட்சியே என்னிடம் கொண்டு வந்து கொடுப்பாள். அதை நீங்கள் அனைவரும் பார்ப்பீர்கள்..”
“ஹாஹாஹாஹா.. அநேக பகல் கனவுகள் காண்கிறாய் அபராஜிதா.. நீ இத்தனை காலம் செய்த பாவங்களின் மூட்டை உன் கண்ணை மறைக்க ஆரம்பித்துவிட்டது. இனி நீ ஒரு உயிரை சித்திரவதை செய்தாலும் உன்னுடல் மண்ணில் துகளாக கலந்திருக்கும்.” ஆருத்ரா தன்னிடை தாங்கியிருந்த வாளினை பிடித்தபடிக் கூறினாள்.
“உனை காண காண எனது தாபம் அதீதமாக கூடுகிறது இளவரசி.. வீணாக உன் உயிரை மாய்த்துக் கொள்ளாதே.. என்னுடன் வந்துவிடு.. உனை இந்த உலகத்தின் கடவுளாக மாற்றுகிறேன்..”
“நல்ல நகைச்சுவை இல்லையா தமையரே..” எனக் கூறிவிட்டு ஆருத்ரா கலகலவென சிரித்தாள்.
நொடியில் அவளருகே சென்ற அபராஜிதன் அவளது கைகளை பிடித்தான். அவளது ஆத்ம ஒளி அந்த ராட்சஷனை சுட்டெறித்தது. கைகளில் கொப்பளங்கள் கணத்திற்கும் குறைவான நேரத்தில் தோன்றி ரத்தம் வழிய தொடங்கியது.
“நான் தான் கூறினேனே அபராஜிதா.. அவள் சக்தி என.. உனது அசுர தந்திர மந்திரத்தினால் உன்னால் வாழவும் முடியாது, உன்னை அது முழுதாக வாழவும் விடாது. உன் தந்தையின் மேலுள்ள நன்மதிப்பின் காரணமாக உன்னை இப்போது விட்டு செல்கிறோம். நிலவொளி உன்மீது படும்முன் நீ இங்கிருந்து சென்றுவிடு இல்லையேல் உன்னுடல் முழுதுமே எரியத்துவங்கும் அல்லவா?” என நக்கலாக அமரன் கூறியதும் அகோரிகள் இருவரும் அவனை இழுத்துக் கொண்டு அங்கிருந்து மாயமாக மறைந்தனர்.

