103 – ருத்ராதித்யன்
“ஆருத்ரா நாமும் கிளம்பலாம்.. அங்கே யாத்திரையை மீட்க வேண்டும்..” என அமரன் அவளைத் தூக்கிக் கொண்டு பறந்து சென்றான்.
அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்ற பின்னர், அபராஜிதனுடன் இருந்த அகோரி ஒருவன் ஆருத்ராவின் ரத்தத்தை தேடி அவ்விடம் வந்தான். அவளது ரத்தம் அந்த பாறையின் மேல் விழும் முன்னே ஒரு துளி நிலத்தில் சிந்தி கிடந்தது. அதைக் கண்ட அகோரி அந்த மண்னை அப்படியே தோண்டி எடுத்துக் கொண்டு அங்கிருந்து மறைந்தான்.
இவர்கள் மீண்டும் அந்த கூட்டத்தின் எல்லைப்பகுதியில் வந்து தரையிறங்கினர். அதே நேரத்தில் நரசிம்மனும் ருத்ரவிக்னன் மேலமர்ந்து அங்கே வந்து சேர்ந்தான். எல்லையில் இருந்த காவல் தெய்வத்திற்கு வணக்கம் வைத்து, அங்கே இருந்த ஒருவனிடம் தங்களின் அடையாளம் கூறி உள்ளே செல்ல அனுமதி வாங்கி வர அனுப்பினர்.
“நாம் மூவரும் உள்ளே செல்வது இப்போது சரியா?” ஆருத்ரா கேட்டாள்.
“உள்ளே சென்றால் தான் யாத்திரையை நாம் மீட்டு வரமுடியும். அவள் எத்தனை நாட்கள் அங்கே அமர்ந்திருந்தாலும் நீர் கெட்டிபடாது. அவளை கண்காணிப்பவர்களை சில நொடிகள் திசைதிருப்ப வேண்டும்.” எனக் கூறிவிட்டு அமரனிடம் அவன் கொண்டு வந்திருந்த குடுவையைக் கொடுத்து காதில் ஏதோ கூறி அவனை அங்கிருந்து அனுப்பினான்.
யாளியை கண்டு அங்கிருந்த மற்ற காவலர்கள் அங்கிருந்து ஓடியிருந்ததால், அமரன் அவ்விடத்தில் இருந்தே உடலை மறைத்துக் கொண்டு வனயாத்திரை இருக்கும் திசை நோக்கிப் பறந்தான்.
“என்ன கொடுத்து அனுப்பினீர்கள் இளவரசே?” என ஆருத்ரா கவனித்து கேட்டாள்.
“இந்த பழங்குடி கூட்டம் நாம் என்ன சொன்னாலும் செய்தாலும் வனயாத்திரை கொண்ட பணியை முடிக்காமல் இவ்விடம் விட்டு அனுப்பமாட்டார்கள். அதனால் தான் நீர் கெட்டியாகும் திரவத்தை கொடுத்து அனுப்பினேன். அவள் இந்த எல்லை வரை வந்துவிட்டால் போதும் நாம் எப்படியும் தூக்கி சென்று விடலாம்.. அதற்கும் இந்த எல்லை தெய்வம் மனம் வைக்கவேண்டும். அதனால் தான் வனதேவியின் அருள் பெற்றபோது ஒரு மலரில் தேங்கியிருந்த நீரின் துளியை கெட்டியாக்கி கொடுத்தனுப்பினேன். பார்ப்போம்..” எனக் கூறியபடி நரசிம்மன் எதிரே வரும் ஆழ்-துளி கூட்டத்தின் தலைவனையும் தலைவியையும் கண்டு புன்னகை முகமாக வணங்கினான்.
அவர்களும் புன்னகை முகமாக இருவரையும் வரவேற்று யுவராஜானுக்கு செய்யும் மரியாதையை செய்தனர்.
“மற்றொருவரும் இங்கே இருப்பதாக காவலன் கூறினானே.. இன்னொருவர் எங்கே?” அந்த கூட்டத்தின் தலைவி கேட்டார்.
“எனது மைத்துனர் அமரபுசங்கர் தான் அது. எனது யாளியை அந்த பக்கமாக அழைத்து சென்றிருக்கிறார்.. இங்கே மக்கள் பயந்து தாக்கிடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக..”
“யாளியா? என்ன வகை யாளியில் வந்தீர்கள் யுவராஜரே?” தலைவன் கேட்டான்.
“கஜ யாளியில் வந்தேன் தலைவர் அவர்களே.. தாங்கள் அனைவரும் காண விருப்பபட்டால் அமரரை அழைத்து வர சொல்கிறேன்..” என சிரிப்புடன் கூறினான்.
“கஜ யாளியை எப்படி அடக்கினீர்கள்? பொதுவாக அவை யாருக்கும் அத்தனை எளிதில் அடங்காதே.. தவிர அதனிடம் நெருங்குவதே மிகவும் ஆபத்தான ஒன்று அல்லவா?”
“உண்மை தான். நானாக அடக்கவேண்டும் என்று செல்லவில்லை. எதிர்பாராத விதத்தில் நான் ஒரு கஜயாளி குட்டியை புதைக்குழியில் இருந்து மீட்டெடுத்து காப்பாற்றினேன். அதற்கு நன்றியாக அவர்கள் கூட்டத்தின் வாலிப யாளி ஒன்றை எனக்கு உதவிக்கு அவர்கள் அனுப்பினார்கள். அதன்பின் எங்களின் பயணம் வனதேவியின் அருள் எங்களை பிணைத்துவிட்டது. அந்த கூட்டமும் எனக்கு இந்த யாளியை உரிமை கொண்டாட அனுமதித்துவிட்டார்கள்.” என தனது பயணத்தில் நிகழ்ந்ததை அனைவரும் மயங்கி கேட்கும் வண்ணம் சத்தமாகவும், மற்றவர்களையும் அவ்விடம் இழுக்கும் வகையிலும் கூறினான்.
அவனது குரலுக்கு கட்டுப்பட்டு அக்கூட்டத்தினர் அனைவரும் அங்கே வந்து ஒன்றாக நின்றனர். வனயாத்திரையை சுற்றி அமர்ந்திருந்த நபர்களில் இருவர் கீழே கூட்டம் கூடி நிற்பதை ஒரு நொடி கவனித்து மற்றவர்களிடமும் கூற அனைவரும் அந்த திசையில் திரும்பும் வேலையில் அமரன் அந்த திரவத்தினை அந்த மழை துளியின் மேலே ஊற்றினான். அது அப்போது நீல நிறத்தில் ஒளிர துவங்கவும், அவர்கள் மகிழ்வுடன் வனயாத்திரையை தலைதாழ்த்தி வணங்கினர்.
அதன்பின் இருவரை விடுத்து மற்றவர்களும் நரசிம்மன் பேசிக்கொண்டிருந்த இடம் வந்து சேர்ந்தனர்.
“அதற்குள்ளே வந்துவிட்டீர்.. மேலே வேலை பூர்த்தியடைந்ததா?” என தலைவி கேட்டார்.
“நீலம் பூத்து புத்தொளி வீசுகிறது அன்னையே.. இருவரை அங்கே விட்டுவிட்டு இங்கே எல்லை தெய்வத்திற்கு வேண்டிய சடங்கு பொருட்களை சேகரிக்கவே வந்தோம்..”
“யுவராஜரே அமரரை இங்கே யாளியுடன் வரச்சொல்லுங்கள்..” என தலைவன் கூறியதும் நரசிம்மன் சீழ்க்கை அடித்தான்.
அதன்பின் சில நிமிடங்களில் யாளியின் துதிக்கையை பிடித்தபடி அமரபுசங்கன் அங்கே வந்து தலைவர்களை வணங்கினான்.
கஜ யாளியை இத்தனை அருகே கண்டதும் அனைவரும் மிரண்டு சில அடிகள் பின்னே சென்றனர். துடிப்பு மிகுந்த இளைஞர்களும், இளைஞிகளும் ஆர்வமாக சில அடிகள் முன்னே வந்து பார்த்தனர். யாளி மெலிதாக சத்தம் எழுப்பவும் சிறு குழந்தைகள் சில வீரிட்டு அழுதன.
“அற்புதம் யுவராஜரே.. இதுவரையில் காட்டில் கம்பீரமாக சுற்றும் யாளிகள் பல கண்டிருக்கிறோம். இன்று மனிதரின் அன்பிற்கும், வார்த்தைக்கும் கட்டுப்பட்டு இங்கே நிற்கும் மாவீரம் கொண்ட இந்த ஜீவனை காண்கையில் மனம் பெரும் உவகை கொள்கிறது. இரக்கமும், நல்லெண்ணமும் தான் மிகப்பெரும் வீரம் என்று தாம் இவ்வுலகிற்கு பறைசாற்றி விட்டீர்கள்.. மன்னிக்க வேண்டும் தங்களை உள்ளே இன்னும் அழைக்கவில்லை என்று கோபம் கொள்ள வேண்டாம். முதல் மழை துளி எடுத்து செல்லும் சடங்கு ஒன்று இப்போது இங்கே நடைபெறும். தாமும் அதை கண்டுவிட்டு அதன் பின்னர் எங்கள் குடிலுக்கு வருகை தரவேண்டும் என்று விண்ணப்பம் வைக்கிறேன்.” என அந்த தலைவன் பணிவுடன் கூறினான்.
“அறிவோம் தலைவரே. வனயாத்திரை ருத்ரக் கோட்டை சமஸ்தானத்தின் இளைய இளவரசி. இவர் மூத்தவர். அவரை அழைத்து செல்லத்தான் நாங்களும் வந்திருக்கிறோம்.” என நரசிம்மன் கூறியதும் அந்த கூட்டத்தில் சலசலப்பு எழுந்தது.
“மன்னிக்கவேண்டும் யுவராஜரே.. முதல் துளியை புனிதமாக்கி எடுத்து செல்பவரின் உற்றம் யாரும் இங்கே இருக்க கூடாது. அது எங்களின் பாதுகாக்கும் மரபு. தாங்கள் அனைவரும் உடனே இங்கிருந்து சென்று விடுங்கள்..” என தலைவி கூறிவிட்டு அரண் எழுப்பும் ஒலி எழுப்பியதும் வீரர்கள் அனைவரும் அவர்களை தடுத்து முன்னே நின்றனர்.
“கலக்கம் கொள்ளவேண்டாம் தலைவி அவர்களே.. என் தங்கை கொண்ட காரியத்தை முடித்து வெற்றியுடன் தங்களின் எல்லையை தாண்டியபின் அவளை கொண்டாடி அழைத்து செல்லவே நாங்கள் இங்கே வந்திருக்கிறோம்..” என ஆருத்ரா இப்போது கம்பீரமாக கூறினாள்.
“எல்லை தெய்வத்தை துளி உடையாமல் தாண்டும் வரையிலும் அவர் முழுதும் எங்களின் பொறுப்பு. அவரால் இந்த எல்லையை கடக்கமுடியவில்லையெனில் அவர் வாழ்நாள் முழுதும் இங்கே அடிமையாக வாழ்ந்தாக வேண்டும் என்பதும் விதி. அதற்கு உட்பட்டே அவர் இந்த செயலில் இறங்கியிருக்கிறார். அவர் தோல்வியடையும் பட்சத்தில் நீங்கள் யாளியை வைத்து இங்கே கலகம் செய்து அவரை தூக்கி செல்லும் எண்ணத்தில் இருந்தால் விளைவுகள் விபரீதமாகும்.. அதனால் அனைவரும் ஐநூறு அடிகள் தள்ளி நிற்கவேண்டும்..” என அந்த கூட்டத்தின் தலைவியும் கம்பீரமாக மொழிந்தார்.
ஆருத்ரா மென்னகையுடன் அடிகளை எண்ணியபடி பின்னே சென்றாள். நரசிம்மனும், அமரனும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு அவளுடன் நடந்தனர்.
“தலைவி .. என்ன இது? அவர் யுவராஜர்..” என தலைவன் தவிப்புடன் கூறினான்.
“இருக்கட்டுமே.. நாம் அவர்களின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்கள் இல்லை. நமது பணியில் அவர்கள் இடையூறு செய்யாமல் இருக்கவே அவ்விதம் கூறினேன். அதை அவர்களும் ஒப்புக்கொண்டதால் மறுபேச்சு இல்லாமல் விலகி சென்றனர். வனயாத்திரை முழுதாக வெற்றி பெற்றால் அவர்களை உள்ளே அழைக்கலாம் இல்லையென்றால் அவர்கள் இன்று உள்ளே வரமுடியாது..” என திடமாக கூறிவிட்டு சடங்குகளுக்கு வேண்டிய ஏற்பாடுகளை கவனிக்க சென்றார்.
தலைவனும் தாங்கள் கொண்ட கடமையில் இருந்து தவறமுடியாது என்பதை உணர்ந்து அங்கேயே அமர்ந்து பாதுகாப்பை பலப்படுத்தினான்.
முழுதாக இரண்டு நாழிகை முடிந்தபின் வனயாத்திரை அந்த இலைச் சிப்பியோடு எல்லை தெய்வம் இருக்குமிடம் வந்து சேர்ந்தாள். மலையில் இருந்தே யாளியையும் அருகே இருந்தவர்களையும் கண்டவள் உதட்டில் மென்னகை பூத்தது.
“வனதேவி அருள் பெறாமல் இங்கே நான் வந்தேன் என்று நினைத்தார்கள் போல..” என தனக்கு தானே பேசியபடி வானத்தினையும், நிலத்தினையும் வணங்கிவிட்டு அங்கிருந்து மலையிறங்கினாள்.
அங்கே எல்லை தெய்வத்தினை மனதார வணங்கி மூன்று முறை அந்த கம்பத்தினை வலம் வந்து அந்த எல்லையினை அவள் தாண்டும் வேலையில் அம்பொன்று அவளைத் துளைத்தது.
தூரத்தில் அரசகேசரி யானையின் மேல் அமர்ந்து அவளை நோக்கி அம்பெய்தான். அபராஜிதன் கூறியபின் பலரை இவ்விடம் அனுப்பி தோல்வியுற்று மனவுளைச்சலில் இருந்தவன் இன்று, வனயாத்திரை முதல் துளி எடுக்க வந்துள்ளாள் என்ற செய்தி அறிந்ததும் உடனே தனது காட்டு குடிலில் இருந்து காட்டுயானையை அடக்கி அதன் மீதே சவாரி செய்து வந்தான்.
சற்று நேரம் முன்னர் அபராஜிதன் ஆருத்ராவை சந்திக்க வந்திருந்தான் அல்லவா? அவனோடே இவனும் அவன் அறையில் வைத்திருக்கும் பாம்பினை அகோர குரு கூறியதால் எடுத்து வந்திருந்தான். நடுகாட்டில் கூடாரம் அமைத்து பல கோரங்களை நடத்திக் கொண்டிருந்தனர் மாயாஜாலங்களின் துணையுடன்.
அபராஜிதன் தனியாக ரத்த பலி பூஜை செய்ய சில அகோரிகள் அழைத்து சென்றனர். அப்போது தான் இவனுக்கும் வனயாத்திரை இவ்விடம் இருப்பது தெரிந்தது.
நண்பனின் ஆணைக்கிணங்க அந்த துளியை இவன் அவளை கொன்று எடுத்து செல்ல வந்திருக்கிறான்.
வனயாத்திரை அம்பு அவளை நோக்கி வருவதை உணர்ந்து அந்த மழை துளியினை மார்போடு நெருக்கமாக வைத்துக் கொண்டாள். ஆழ்-துளி கூட்டத்தின் தலைவி அவளருகிலேயே இருந்ததால், அம்பு அவளை தொடும் வேலையில் தன்பக்கமாக இழுத்துக் கொண்டார். ஆனாலும் வனயாத்திரை கை முதல் இடை மற்றும் தொடை வரையிலும் அம்பின் கூர்மையான முனை ஆழமான காயத்தை ஏற்படுத்தியது.
அமரன் யாளியுடன் அவர்களை எதிர்க்க செல்ல, ஆருத்ராவும் நரசிம்மனும் வேகமாக அவள் அருகே ஓடினர்.
அதற்குள் அந்த பழங்குடி கூட்டத்தினர் எதிரே வருபவர்களை கொன்று வீசிடும் நோக்கில் வேகமாக முன்னேறி சென்றனர்.
“ஒரு நொடி அங்கேயே நில்லுங்கள்..” என ஆருத்ரா அந்த எல்லையில் கால் வைக்கும்போது அந்த கூட்டத்தின் தலைவி கூறினார்.
“அவள் காயமடைந்து இருக்கிறாள்..” என நரசிம்மனும், “மூன்று சுற்றுகள் முடிந்து விட்டது என்று ஆருத்ராவும் கூறி கடுமையாக முறைத்தனர்.
“இன்னும் ஒரு விஷயம் மீதமுள்ளது இளவரசி மற்றும் யுவராஜரே.. சில நொடிகள் பொறுங்கள்..” என கூறியவர் வனயாத்திரையை இடைப்பிடித்து நேராக நிமிர்த்தி எல்லை தெய்வத்தின் சிலை அருகே கொண்டு சென்று அந்த தெய்வத்தின் கைகளில் இருந்த இளமஞ்சள் நிற பசையை எடுத்து அந்த மழைதுளி முழுதும் சுற்றிக் கொண்டு வணங்கி நின்றார். அப்போது அந்த தெய்வத்தின் ஐந்தாவது கரம் வலது பக்கமிருந்து வந்து வனயாத்திரை தலையை தொட்டு உச்சியில் அழுத்தியது. அதில் வனயாத்திரை ஆழ்ந்த மயக்கநிலைக்கு சென்று அத்தலைவியின் கைகளிலேயே துவண்டாள்.
“யாத்திரை..” என ஆருத்ராவும் , நரசிம்மனும் பதறினர்.

