117 – ருத்ராதித்யன்
“சித்ராங்கி.. அம்புவி கோட்டையில் கடற்கோள் ஏற்பட்டபோது தனது தாயை இழந்து கைக்குழந்தையாக நின்றாள். அவளின் தந்தைக்கு மக்களை காக்கவே நேரம் சரியாக இருக்க, இவளை கவனிக்க முடியவில்லை. மக்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்ற சிந்தனை மட்டுமே கொண்டு வெகு குறுகிய காலத்தில் ஓர் உயரமான நிலத்தில் மக்கள் வாழவும் அவர்களின் தொழில் செழிக்கவும் பல அரிய முயற்சிகளை மேற்கொண்டு இன்று செழிப்பாகவும் வாழ வைத்து கொண்டிருக்கிறார். இவள் இரண்டு வயது குழந்தையாக ஜுரம் வந்து அனத்தி கொண்டிருந்த வேளையில் தான் மகாராஜாவும் மகாராணியும் அந்த கோட்டையை பார்வையிட சென்றிருந்தனர். இவள் இப்படி இருக்கவும் மகாராணி நானே வளர்க்கிறேன் என்று தூக்கி வந்துவிட்டார். எனக்கும் அமரருக்கும் தங்கையாக ஒரு குழந்தை வந்ததும் குஷி தாளவில்லை. நாங்கள் எங்கு சென்றாலும் மூவரும் ஒன்றாக தான் செல்வோம். இன்று யாத்திரை செய்கிற அத்தனை சேட்டைகளையும் இவள் பத்து வயதிலேயே செய்து எங்களை எல்லாம் ஒரு வழி செய்துவிட்டாள். அதனால் குருகுலத்தில் சீக்கிரமாக சேர்த்துவிட்டனர். அங்கும் இவளின் சேட்டைகள் குறையவில்லை. அவளின் அறிவும், வீரமும், தீரமும் உடன் சிந்தனை திறனும் நாம் யாரும் யூகிக்க முடியாத அளவில் அப்போதே இருந்தது. தனியாக பல ஆராய்ச்சிகளை செய்து அதனை வெற்றியாகவும் மாற்றியிருக்கிறாள். அவளின் சிந்தனையின் தடம் ஒவ்வொரு கலை பயிலும் போதும் அடி ஆழம் வரையிலும் சென்று பார்ப்பதில் முனைப்பாக இருந்தது. அப்படி தான் மருத்துவத்தின் வேரினை அடைய உங்களை அவள் தேர்ந்தெடுத்து பயில வந்தாள். இன்று கடலின் அசைவுகள் அனைத்தும் அறிந்து அதன் போக்கிற்கு ஏற்ப மரக்கலம் செலுத்துவதில் இவளை மிஞ்ச ஆள் இல்லை. மரக்கலத்தை கட்டுவதிலும் இவளின் செயல்முறைகள் எல்லாம் புதுமையாக இருக்கும்..”
“நானும் பார்த்திருக்கிறேன். வித்தியாசமான ஆனால் அதிக பலன் தரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு இயங்குகிறது..”
“ஆம்.. போர் கலை நமது நாட்டில் அனைவரும் அறிவர். இவளுக்கு கட்டிட கலை முதல் விவசாயம், அழகு கலை, வான சாஸ்திரம் என பல கலைகளிலும் அரிய விஷயங்களை கற்று வைத்திருக்கிறாள். இவளின் ஞானம் கடலினை போல.. அது விரிந்து கொண்டே செல்கிறது. இதை தாம் புரிந்து அவளின் இயல்பை தொலைக்காமல் வாழ விடவேண்டும். இது தமையனாக எனது கோரிக்கை..” என நரசிம்மன் அவனை கையெடுத்து கும்பிட்டான்.
“யுவராஜரே.. முதலில் கையை இறக்குங்கள்.. இப்படியான அறிவு பெட்டகத்தை என்னை நம்பி கொடுக்க முன்வரும் உங்களை நான் தான் வணங்க வேண்டும்..” என சிங்கத்துரியன் நரசிம்மனை கட்டிக்கொண்டான்.
“இங்கே என்ன நடக்கிறது..? இருவரும் அவரவர் உடையாளை கட்டிக்கொள்ளாமல் நீங்கள் கட்டிக்கொண்டு என்னடா செய்கிறீர்கள்?” எனக் கேட்டபடி மகாராஜா வரத யோகேந்திரர் மற்றும் முதல் அம்புவிக் கோட்டை அரசர் சித்தார்த்தன் உடன் வந்தார்.
“வணங்குகிறோம் மகாராஜா.. வணங்குகிறோம் அம்புவிக் கோட்டை அரசே..” என இருவரும் அவர்களை வணங்கினர்.
“எங்கே பெண்கள் இருவரும்? நால்வரும் இங்கே இருப்பதாக அறிந்து வந்தோம்..” எனக் கூறியபடி தயங்கி நின்ற மகதனை அருகே வரும்படி கையசைக்க அவனும் பாய்ந்தோடி வந்து அவரின் மடியில் தலையை வைத்து நின்றான்.
“நன்றாக வளர்ந்து விட்டான் போலவே மகாராஜா.. இளவரசர் தூக்கி வந்தபோது நான்கு மாதமே இருக்கும் அல்லவா?” என சித்தார்த்தன் கேட்டார்.
“ஆம். இவனுக்கு இணை தேடுவது தான் இப்போது எங்களின் பெரிய வேலையாக இருக்கிறது சித்தார்த்தரே.. இவனின் இனமே முழுதாக அழிந்து விட்டதோ என்ற ஐயம் அடிக்கடி எழுகிறது..” என்றவர் குரலில் வருத்தம் நன்றாக தெரிந்தது.
“கவலை கொள்ள வேண்டாம் அரசே.. நானும் தனி குழு அமைத்து தெற்கு பக்க காடுகளில் தேடிக்கொண்டு தான் இருக்கிறேன். விரைவாக இவனின் இணை கிடைத்துவிடும். அன்னை வனதேவியும், அலை தேவியும் அதற்கு அருள் புரிவர்..” எனக் கூறியபடி மகதனின் தலையை அவரும் வருடி கொடுத்தார்.
“சரி உங்கள் இணைகளின் நிலை என்ன? திருமண சடங்கு நடத்தி விடலாமா? ருத்ரக் கோட்டை அரசர் அதற்காக தான் காத்திருக்கிறார்.. நான் பதில் கூறும் முன் உங்களிடம் கலந்துரையாடவே வந்தேன்.” என விஷயத்தை நேரிடையாக கேட்டார்.
“எனக்கு சம்மதம் அரசே.. ஆருத்ரா சம்மதம் கூறினால் வைத்துக் கொள்ளலாம். இவரின் பாடு தான் சற்று சிக்கல். சித்ராங்கி கொடுத்த கெடுவை இவர் தாண்டி விட்டாராம். அதனால் என்னிடம் இவரை விட்டுவிட்டு ஆருத்ராவை அழைத்துக் கொண்டு கானகம் சென்று இருக்கிறாள்..” என நரசிம்மன் சிங்கத்துரியனை அனைத்தபடிக் கூறினான்.
“எத்தனை காலம் கடந்தது துரியா?” என மகாராஜா கேட்டார்.
“அரசே.. வெறும் 5 நொடிகள் தான். அதுவும் இந்த உணவு கூடைகளை வைக்கும் நேரம் தான்..” என அவன் கூறியதும் மற்ற மூவரும் முழித்தனர்.
“வெறும் 5 நொடிகளா? இதற்கா இத்தனை போராட்டம்?” எனக் கூறி நரசிம்மன் சிங்கத்துரியனை பார்த்து முழிக்க, சித்தார்த்தரும் அவனைக் கண்டு விழித்தார்.
மகாராஜா மட்டும் சிரித்தபடி, “சரி 5 மாதம் உனக்கு தண்டனை உண்டு. அதை சிந்திக்க தான் ஆருத்ராவுடன் சென்று இருக்கிறாள். அவளின் சிந்தனையின் பலனாக யுவராஜரின் திருமணமும் தள்ளி போகலாம்.. அவர்கள் வந்தபின் எனது அறைக்கு நால்வரும் வாருங்கள்..” எனக் கூறிவிட்டு மகாராஜா அங்கிருந்து வனதேவியை வணங்கிவிட்டு சென்றார்.
“அடேய் சிங்கத்துரியா.. கூடையை வைக்கும் போதே உன் மனதை வெளிக்காட்டியிருக்க வேண்டியது தானே?”
“அப்படி செய்தால் அவள் அதற்கும் திட்டுவாள் இளவரசே.. அதனால் தான் அவள் கொடுத்த வேலையை முதலில் சரியாக செய்து முடித்தேன்.” எனக் கூறியவனை பாவமாக பார்த்தான் நரசிம்மன்.
“மிகவும் கஷ்டம் தான்.. ஆனாலும் நீ அவளை புரிந்து வைத்திருக்கிறாய் அதனால் அவள் உனக்கு தான். உனக்கும் அவள் மட்டும் தான் வேறு யாரும் உனை நெருங்கவும் விடமாட்டாள். அவளின் பைத்தியக்காரத்தனமும், உனது நியாய நடவடிக்கைகளும் சரியான ஜோடி தான்.. உங்களின் பிள்ளைகளை நினைத்தால் தான் எனக்கு பெரும் சிந்தனை ஏற்படுகிறது.”
“ஏன்?”
“இந்த இரண்டு பைத்தியங்களின் பிள்ளைகள் எப்படி இருக்குமோ என்ற கவலை தான் வேறு என்ன?” எனக் கூறியபடி சித்ராங்கி அங்கே வந்து சேர்ந்தாள்.
“ஆமாம் பின்னே எனக்கு சிந்தனை இருக்காதா? தாய் மாமனான நான் எனது மருமகப் பிள்ளைகள் பற்றி கவலை கொள்ளாமல் இருக்க முடியுமா? எப்படியும் பிள்ளைகளை பெற்று என்னிடம் தான் கொடுப்பீர்கள்.. உங்களை விட அவர்கள் உங்கள் இருவரின் குணத்தை ஒன்றாய் கலந்து பெற்றிருப்பார்கள்.. அவர்களை எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டும் என்று நான் இப்போது இருந்தே வரையறுக்க வேண்டும் அல்லவா..?”
“அடடா.. என்ன ஒரு தொலைநோக்கு பார்வை தங்களுக்கு? ஆனாலும் தமையரே இது அதீதம் தான். பிள்ளைகளை பெற்றால் நாங்கள் வளர்க்க மாட்டோமா என்ன? இல்லை நீங்கள் தான் பிடுங்கி வைத்து கொள்வீர்களா? அவர்கள் பிறந்து வளரும் போது இதற்கான யோசனையில் இறங்கினால் போதும். எங்களுக்கு முன்னே உங்களின் பிள்ளைகள் பிறந்து வரப் போகிறார்கள் போலவே.. காந்தர்வ மணம் புரிந்ததை என்னிடம் மறைத்து விட்டீர்கள் அல்லவா நீங்கள்?” எனக் கோபமாக கேட்டாள்.
“நானும் உனை இப்போது தானே பார்க்கிறேன். நீங்கள் இருவரும் தான் சாப்பிட்டவுடன் தனியாக சென்று விட்டீர்களே.. பிறகு நான் எப்படி கூறுவதாம்?” என நரசிம்மனும் சிறுபிள்ளை போல கோபமுகம் காண்பித்தான்.
“உங்களுக்கு முன் நான் தான் கோபம் கொண்டிருக்கிறேன்.. அதனால் நீங்கள் தான் எனை சமாதானம் செய்ய வேண்டும்..” என சித்ராங்கி அவன் முன்னால் வந்து இடுப்பில் கை வைத்து முறைத்துக் கொண்டே கூறினாள்.
“நீங்கள் இருவரும் கிளம்பி சென்றதில் இருந்து நான் தான் கோபமாக இருக்கிறேன் அதனால் நீ தான் எனை சமாதானம் செய்ய வேண்டும்..” என நரசிம்மனும் அவளை போலவே இடுப்பில் கைவைத்துக் கொண்டு முறைத்து கூறினான்.
“இல்லை.. நான் தான் முதலில் கோபம் கொண்டேன்..”
“இல்லை .. நான் தான்..”
“நான் தான்..”
“நான் தான்..” என இருவரும் மாறி மாறி சண்டை போட, மகதன் வனதேவி ஆலயம் உள்ளே சென்று காதுக்கு அருகே கைகளை வைத்து அடைத்தபடி படுத்துக் கொண்டான்.
சிங்கத்துரியனும், ஆருத்ராவும் இருவரின் சிறுபிள்ளைத் தனத்தை பார்த்துச் சிரித்தபடி அவர்களின் விளையாட்டு சண்டையை இரசித்துக் கொண்டிருந்தனர். பல நிமிடங்களை கடந்தும் இவர்களின் சண்டை நிற்கவில்லை.
தூரத்தில் ருத்ரவிக்னன் வருவதைக் கண்டு, “சரி நானே சமாதானம் செய்கிறேன்..” என நரசிம்மன் முதலில் இறங்கி வந்தான்.
சித்ராங்கி அரை நொடியில் யாளியை கண்டதும் நரசிம்மன் இறங்கி வந்ததன் நோக்கம் புரிந்து, “நீ புதிதாக அழைத்து வந்த கஜ யாளியை எனக்கு கொடுத்து விடு.. உன் சமாதானத்தை ஏற்றுக் கொள்கிறேன்..” என அவனைக் கூர்மையாக பார்த்தபடி கூறினாள்.
“என்ன..? அதெல்லாம் முடியாது.. அவன் எனது நண்பன். அவனை எல்லாம் உன்னுடன் அனுப்பமுடியாது..” என இப்போது நரசிம்மன் நிஜமான கோபத்துடன் கூறினான்.
“முதலின் எனை சமாதானம் செய்வதாக இறங்கி வந்தது தாம் தான். அதனால் நான் கேட்பதை கொடுத்தாக வேண்டும் தமையரே..” சித்ராங்கியும் அடமாக நின்றாள்.
“இல்லை சித்ராங்கி.. வேறு ஏதேனும் கேள். அவனை என்னால் கொடுக்க முடியாது..”
“நான் கேட்பது வேண்டும்..”
“இல்லை அது முடியாது..”
“வனதேவி ஆணையாக கேட்கிறேன்..”
“அதே வனதேவியின் முன் சபதம் செய்து அவனை வாழ்நாள் முழுதும் பாதுகாப்பதாக அழைத்து வந்திருக்கிறேன். அவனை கொடுக்க முடியாது..”
“ஓஹோ.. அப்படியென்றால் நான் கேட்கும் ஒரு வாக்கினை நீ எனக்கு கொடுக்க வேண்டும்..”
“என்ன அது?”
“அதை இப்போது கூற முடியாது. ஆனால் நீ செய்வேன் என்று வனதேவி மீது ஆணையிட்டு எனக்கு வாக்கு கொடு..”
“என்ன கோரிக்கை என்று அறியாமல் வாக்கு கொடுக்க முடியாது சித்ராங்கி..”
“யுவராஜர் மாகராஜாவாக மாறினாலும் இந்த தங்கையின் கோரிக்கையை நிறைவேற்றும் கடமையுள்ளது. நான் வேண்டும் வாக்கை கொடுங்கள். காலம் கனியும் போது உங்கள் செவிகளில் கூறுகிறேன்..” என அவளும் திடமாக நரசிம்மன் கண் பார்த்துக் கூறினாள்.
“ஏன் இப்படி அடம்பிடிக்கிறாய் சித்ராங்கி?”
“நீங்கள் கொண்டிருக்கும் அதே மனத்திடம் தான் நானும் உங்களிடம் இருந்து பெற்றிருக்கிறேன் நரசிம்மரே.. நான் கேட்பது எனக்கு வேண்டும்.. அவ்வளவே..”
என அவள் கூறிய விதமும், அவளின் குரலும் ஆருத்ராவை அவளின் பால் அதிகம் ஈர்த்து அவளிடம் செல்ல வைத்தது.
“அவரின் சார்பாக நான் உனக்கு வாக்கு கொடுக்கிறேன் சித்ராங்கி.. நீ வேண்டியது நீ கேட்கும் போது செய்வது எங்கள் இருவரின் கடமை. இது வனதேவியின் முன்னே அவளின் அனுமதியுடன், அவளின் அருளினால் உனக்கு கொடுக்கும் வாக்கு..” என நரசிம்மன் கைகளை அவள் கைகளுடன் கோர்த்து சித்ராங்கி கையின் மேல் வைத்து கூறினாள்.
ருத்ர விக்னன் சித்ராங்கி அருகே சென்று நின்று அவளின் கண்களை கூர்ந்து பார்த்து அவளை தன் மேல் தூக்கி அமரவைத்துக் கொண்டு மீண்டும் கானகம் நோக்கி சென்றது.
சிங்கத்துரியன் கண்களில் கலவையான உணர்வுகள் ஆட்கொண்டிருக்க நரசிம்மனும் குழப்பத்துடன் ருத்ர விக்னன் சென்ற திசையை பார்த்துக் கொண்டிருந்தான்.
மகதன் உள்ளே தேவியின் மடியில் தலை வைத்து படுத்தபடி ஆருத்ராவைப் பார்த்து மெல்லிய உறுமல் செய்ய, அவனது உடலில் இருந்த கோடுகள் எல்லாம் சில நொடிகள் மின்னியது.
ஆருத்ராவின் கண்கள் அந்த மின்னலை முழுதாக உள்வாங்கியதும் அவளின் கண்களும் பச்சையாக மாறியது.

