3 – ரெட்டைக்குன்றுக் கோட்டை
“இன்னிக்கி சின்ன மொதலாளிங்க வர்றப்ப இப்படியா நடக்கணும்? என்ன பண்றது செல்லய்யா?” என அந்த கோட்டையின் மூத்த நிர்வாகிப்பாளர் குமரேசன் கேட்டார்.
“இப்போதிக்கு இதை பின்னாடி பக்கம் தூக்கி மறைச்சி வைக்கலாம் தாத்தா.. மொதலாளி நல்ல மனநிலைல இருக்கறப்ப இதப்பத்தி சொல்லுவோம். ஆனா அதுவரைக்கும் இது முழுசா இருக்குமான்னு தெரியலியே.. ஏற்கனவே அங்க போட்டு வச்ச ரெண்டு படமும் மொத்தமா சாம்பலாகிடிச்சி..” என அங்கே வேலை செய்யும் செல்லய்யா கூறினான்.
“சரி. அவங்க ரெண்டு பேரும் ரொம்ப வருஷம் கழிச்சி இங்க வராங்க, வந்ததும் இதை பாக்க வேணாம். ரெண்டு மூணு நாள் போனப்பறம் இதை காட்டி பேசலாம். ஆனா பெரியய்யா படம் இப்படி ஆகிரிச்சே. குடும்பத்துல எதுவும் அசம்பாவிதம் நடக்க போகுதா? முன்ன எல்லாம் அமாவாசைல தான் ஏதாவது நடக்கும். இப்போ நடுநாள் தானே..” என படபடக்கும் நெஞ்சத்துடன் கூறினார்.
“அது என்னனு பாக்க தானே அவங்க வராங்க. வந்து எல்லாத்தயும் பாக்கட்டும் தாத்தா. நம்ம ஃபோன்ல சொல்றதெல்லாம் அவங்களுக்கு எந்தளவுக்கு புரியும்னு தெரியாது. நேர்ல பாத்தா தான் அவங்களுக்கும் என்ன பிரச்சினைன்னு புரியும். நான் இதை கழட்டி பின்னாடி வைக்கறேன்.” என அந்த படத்தைக் கழற்றினான்.
“டே நில்லு. இத அங்க வைக்காத.. நடுக்கட்டுல பூஜை ரூம் பக்கம் ஒரு சின்ன ரூம் இருக்குல்ல அங்க வை. இந்த தடவை மாத்தி வச்சி பாப்போம்.” என குமரேசன் கூறியதும் செல்லய்யாவும் சரியென அங்கே கொண்டு வைத்தான்.
“ரெண்டு பேருக்கும் ரூம் ரெடி பண்ணியாச்சா? எந்த வசதி கொறைவும் வந்துடக்கூடாது. இங்க எத்தன நாள் இருப்பாங்கன்னு எனக்கும் தெரியாது. தினமும் டவுனுக்கு போய் காய்கறி எல்லாம் புதுசா வாங்கிட்டு வந்து வைக்கணும். அவங்க எது கேட்டாலும் உடனே செஞ்சி தரணும். ஆடு கோழி மத்த கறி எல்லாம் இன்னிக்கி சந்தைல மொத்தமா வாங்கிட்டு வந்துட சொல்லு. மீனு, காடை எல்லாம் நம்ம தோட்டத்துல இருந்து பிடிச்சிக்கலாம். இறாலும், நண்டும் தான் தினம் புதுசா போய் பக்கத்து ஊர்ல இருந்து வாங்கிட்டு வரணும்…”
“சரிங்க தாத்தா..”
“அப்பறம் காலைல தினமும் மூணு வகை டிபன், மதியம் அஞ்சாரு வகை பொரியல், துவையல், கூடவே அசைவத்துல என்ன கேக்கறாங்களோ அதை பண்ணிடனும். ராத்திரியும் என்னென்ன வேணும்னு கேட்டு செஞ்சி குடுக்கணும். ஒரு குறையும் இருக்கக்கூடாது. பழமெல்லாம் நம்ம தோட்டத்துல இருந்து அனுப்ப சொல்லிட்டேன். வேற எதுவும் கேட்டா உடனே நீ டிரைவர அனுப்பி வாங்கிட்டு வர சொல்லிடணும்.”
“ம்ம்..”
“இன்னும் எதுவும் மறந்துட்டேனா?” என பின்னந்தலையை நீவியபடி கேட்டார்.
“உங்க மண்டைய ஒடச்சி உள்ள போயா நான் பாக்கமுடியும்? நீங்க தான் சொல்லணும். இதுவே அதிகம் தான். அவங்க என்ன ஹோட்டல் கடை நடத்தவா வராங்க? கோட்டைய சரி பண்ண வராங்க தாத்தா.. ரொம்ப டென்ஷன் ஆகாம அமைதியா இரு..” என அவரிடம் கூறிவிட்டு, அவர் கூறியபடி அறைகளை மீண்டும் ஒருமுறை சரிப்பார்த்துக் கொண்டு சமையலறைக்கு சென்றான்.
“முத்தம்மா.. முத்தம்மா.. சமையலுக்கு வேணுங்கறது எல்லாம் இருக்கா? இப்போ டவுனுக்கு போறேன் எதுவும் தேவைன்னா எழுதி குடு வாங்கிட்டு வரேன். ஆடு கோழி எல்லாம் இன்னிக்கி மதியம் வந்ததும் சரிபாத்து பட்டில அடைச்சிடு. தோட்டத்துல இருக்க குலத்துல மீன் பிடிச்சிக்கலாமாம். வேற எதுவும் அசைவ வகை வேணும்ன்னு சொன்னா அதையும் வாங்கிட்டு வந்து குடுத்துருவேன். இன்னிக்கி மதியம் சாப்பாட்டுக்கு இங்க வந்துடுவாங்கலாம். மலையுச்சில தான் தங்கியிருக்காங்கலாம்.”
“அவங்க வந்ததும் ஆரத்தி எடுக்கணும் அதனால வாசல்ல ரெண்டு பேர நிக்கவைக்கணும். பெரியவரு இங்க தான் பொறந்தாரு, சின்னவரு மொத தடவை இங்க வரதால அதுக்கான சாங்கியம் செய்யணும். குமரேசன்கிட்ட சொல்லி அதுக்கு ஏற்பாடு பண்ண சொல்லு. இன்னிக்கி சைவம் தான் சமைக்கறேன். நாளைக்கு அசைவம் செஞ்சிக்கலாம். அம்மாகிட்ட ஏற்கனவே பேசி அவங்களுக்கு பிடிச்சது எல்லாம் கேட்டுகிட்டேன். ரெண்டு பேருக்கும் ரெண்டு திசை தான் எல்லாத்துலயும். வேலை கூட தான் இருக்கும். இன்னும் நாலு பேர உதவிக்கு போடணும் செல்லய்யா.. உங்க ஊர்ல இருக்கறவங்கள கூட்டிட்டு வந்துடு..” என முத்தம்மா என்கிற 70 வயதான பெண்மணி கூறினார்.
“சரி முத்தம்மா.. நான் தாத்தாகிட்ட சொல்லிடறேன்..” என்றவன் வெளியே வந்து அந்த கோட்டையை ஒருமுறை சுற்றி வந்தான். 60 வயதான குமரேசன் தான் அந்த கோட்டையின் நிர்வாகிப்பாளர். அவரின் உதவியாளன் தான் செல்லய்யா எனும் வாலிபன்.
அந்த கோட்டை சுமார் 10 ஏக்கர் பரப்பரவில் ஒரே கட்டிடமாக உயரமான குன்றிலும், அதற்கு நான்கு பக்கமும் உயரம் குறைந்த பாறையமைப்பு கொண்ட இடத்தில் சிறு சிறு அறைகளும், வீடுகளும் சுற்றி கட்டப்பட்டிருந்தன.
குன்றுக்கு கீழே ஒரு பகுதி முழுதும் பழ மரங்கள் கொண்ட தோட்டமும், மற்ற பகுதியில் விவசாய நிலமும் இருக்க, நான்கு புறமும் பெரிய ஆழமான குளங்களும் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த கோட்டையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் தான் ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆறுக்கு அந்த பக்கம் காடாக மரங்கள் வளர்ந்து எந்த பராமரிப்புமின்றியிருந்தது. அந்த குன்றின் மேலிருக்கும் கோட்டையும் பாதி உடைந்த நிலையில் சிதிலமடைந்து பார்ப்பவர் நெஞ்சத்தை பயம் கொள்ள வைத்தது.
இரட்டைக் குன்றுகள் கிழக்கும் மேற்குமாக அமைந்திருக்கின்றன. கிழக்கு கோட்டை மலையசேன பாண்டியன் மற்றும் சிற்பவல்லி தேவியார் இருவரும் வாழ்ந்து இறந்த கோட்டை.
மேற்கு பக்கமிருக்கும் குன்றில் வாழ்ந்தவர்கள் எல்லாம் நூறு வருடங்களுக்கு முன்பே அங்கிருந்து சென்றுவிட்டதாக தகவல் மட்டும் உண்டு ஆனால் அதன் உரிமையாளர் யார் எவர் என்ற எந்த தகவலும் அவர்களுக்கு தெரியாது.
உயரமான நான்கு மலைகளையும் சிரஞ்சீவி அருவி இரண்டிரண்டாக பிரிக்கிறது. அந்த அருவி ஆறாக மாறி இந்த குன்றுகளுக்கு இடையே பரந்து விரிந்து ஓடுகிறது. எப்போதும் இங்கே நீர் வற்றுவதே இல்லையாம்.
இயற்கையின் பெரும் பொக்கிஷமாக இந்த இடத்தை கூறலாம். இந்த மண்ணில் எதை போட்டாலும் நன்றாக விளையும். அத்தகைய மண் வளம் மற்றும் நீர் வளத்தை நிரப்பிக்கொண்டிருக்கிறது.
கிழக்கு குன்றுக் கோட்டைக்காரர்கள் வெள்ளையர்கள் ஆண்ட போதே தங்களின் தொழில் ஸ்தாபனங்களை தொடங்கியிருந்தனர். இனிமேல் போர் இல்லை என்ற நிலை வந்தபோதே மலையசேன பாண்டியரின் தந்தை தங்களின் கோட்டையை பணம் கொழிக்கும் வகையில் ஒரு பக்கம் பழ தோட்டத்தையும், மறுபக்கம் நெல் மற்றும் தானியங்களை விதைக்கும்படி நிலத்தை சமப்படுத்தி விவசாயமும் செய்ய ஆரம்பித்துவிட்டார்.
அந்த காலத்தில் இது எல்லைக் கோட்டையாக இருந்தபோது படை வீரர்கள் தங்கவும், எல்லை காக்கவும் தான் இதைக் கட்டினார்கள். அதன்பின் இந்த இடத்தின் இயற்கை வனப்பில் மயங்கிய ராஜாக்கள் இதை வசந்தமாளிகையாகவும் பல காலங்களில் உபயோகித்து வந்திருந்ததால், இந்த கோட்டைக்கு பூட்டு என்பதே போடப்படவில்லை.
மேற்கு கோட்டை சில காலம் வெளிநாட்டவர் வசமிருந்தது. நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தபின்னர் அக்கோட்டையின் வாரிசுகள் சட்டவிரோதமாக சில காரியங்கள் செய்ததாக கூறி அவர்களை கைது செய்துச் சென்றனர்.
அதன்பின்னர் அங்கே யாரும் வரவில்லை. ஒருமுறை பெய்த பழமான மழையில் அந்த கோட்டையின் மேலே இடியும் விழுந்ததில் அந்த கோட்டையின் ஒரு பகுதி சரிந்து விழுந்து அப்படியே பாழடைந்தும் போனது.
கிழக்கு கோட்டையின் அகலம் 5 கிலோமீட்டர் என்றால், மேற்குக்கோட்டையின் அகலம் 8 கிலோமீட்டர் தூரம் வரும். அருவியில் இருந்து கணக்கெடுத்தால் கிழக்கு கோட்டையின் நீளம் 9 கிலோமீட்டர் வரும், ஆனால் மேற்கு கோட்டையின் நீளம் 5 கிலோமீட்டர் தான், மேற்கு பக்கம் மலைகள் சற்று அருவிபக்கமிருந்து நீண்டு வருவதால் சமதளத்தின் நீளம் குறைந்திருக்கும்.
கவிநேசன் அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி முடித்து குளித்துவிட்டு குலசேகரனுக்கு அழைத்தான். அவன் அழைப்பு இரண்டு முறை முழுதாக சென்று எடுக்கபடவில்லை என்றதும் ஹோட்டலில் வேலை செய்பவர்களை அனுப்பி எழுப்பச் சொன்னான்.
“சார்.. அவரு நல்லா தூங்கறாரு போல.. நாங்க கால் மணிநேரமா பெல் அடிச்சும் அவரு கதவ தொறக்கல..” என ரிசப்ஷனில் கூறினர்.
“ரூம் ஓபன் பண்ணுங்க நான் வரேன்..” என அவன் கூறி குலசேகரன் அறை வாயிலில் சென்று நின்றான்.
“சார் .. இப்படி பண்றது தப்பு..”
“இந்த ரிசார்ட் ஓட பார்ட்னர் தான் நானும். என் தம்பி அவன். நீங்க திறங்க. நாங்க சீக்கிரம் கிளம்பணும்.” என முகத்தில் எந்த உணர்வும் காட்டாமல் அதிராமல் பேசினான்.
“சரிங்க சார்..” என அந்த ரிசார்ட் சூப்பர்வைசர் அறையின் மாற்று சாவி கொண்டு திறந்தார்.
“நீங்க போங்க. நான் பாத்துக்கறேன்..” என்று அவரை அனுப்பிவிட்டு நேராக குலசேகரன் படுக்கைக்கு சென்றான்.
தலையும் காலும் எங்கிருக்கிறது என்று தெரியாத அளவிற்கு போர்வைக்குள் புதைந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். கவிநேசன் ஒருநொடி பார்த்துவிட்டு போர்வையை மொத்தமாக உருவினான்.
இரவின் குளிரில் போர்வையில் சுருண்டிருந்தவன், இவன் வேகமாக போர்வையை இழுக்கவும் கீழே உருண்டு விழுந்தான்.
“அம்மா…” என அலறலுடன் தலையை பிடித்துக் கொண்டு கண்விழித்து பார்த்தான்.
“ஏன்டா தள்ளிவிட்ட?” என நினைவு உணர்ந்ததும் கேட்டான்.
“7 மணிக்கு கிளம்பணும்னு தெரியாதா? இப்போ மணி 6.15. எந்திரிச்சி குளிச்சி ரெடியாகி வா… 7 மணிக்கு நீ வண்டில இருக்கணும்.” எனக் கூறிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் சென்றான்.
“சரியான ஹிட்லர பெத்து வச்சிருக்கு எங்கம்மா.. ச்சே.. நல்லா என் கனவு கன்னி கூட உருள போனப்போ இவன் என்னை கீழ உருட்டிவிட்டுட்டான்..” எனப் புலம்பியபடி அம்மாவுக்கு அழைத்து நடந்ததைக் கூறி நியாயம் கேட்டான்.
“அவன்கூட போறப்போ அவன் சொல்றத தான் கேக்கணும் சேகர். சும்மா சும்மா உங்கம்மாவுக்கு ஃபோன் பண்ணாத. அவ தூங்கறா..” எனக் கூறிவிட்டு பரஞ்சோதி பாண்டியன் வைத்துவிட்டார்.
“இவரு வேற எப்போ பாரு எங்கம்மா மொபைல் தூக்கி வச்சிக்கறாரு.. மொத எங்கம்மாவ இவருகிட்ட இருந்து பிரிச்சி கூட்டிட்டு போகணும். நானும் எங்கம்மாவும் மட்டும் ஜாலியா இருப்போம். “ என முணுமுணுத்தவன் குளித்துவிட்டு, தன் அறையை திறந்துவிட்ட சூப்பர்வைசர் முன்பு சென்று நின்றான்.
“யார கேட்டு என் ரூம தொறந்து விட்டீங்க? நான் கேஸ் போடுவேன். உங்க பேரு என்ன? இந்த ரிசார்ட் மொதலாளி யாரு? சொல்லு எல்லார் மேலயும் நான் கேஸ் போடறேன்..”
“சார். உங்கண்ணன் தான் தொறக்க சொன்னாரு. அவரு தான் ஓனர்..” என அவன் பம்மியபடி கூறினான்.
“அவன் ஓனரா?” என ஒரு நொடி அதிர்ந்தவன், “சரி சரி.. பொழச்சி போ.. இன்னொரு தடவ இப்படி பண்ணாத..” என இவன் இங்கே பேசிக்கொண்டிருக்கும் போதே காருடன் வந்தான் கவிநேசன்.
(கிழக்குக்குன்றுக் கோட்டை மாதிரி வடிவம்)

