115 – ருத்ராதித்யன்
வெளியே வனயட்சி பேசிக்கொண்டிருந்த அனைத்தும் அபராஜிதனின் ஆன்மாவும் அருகிருந்து கேட்டுக் கொண்டுதானிருந்தது. வனயட்சி 90 சதவீதம் அவனின் அடிமையாக மாறியிருந்தார். மீதமிருக்கும் 10 சதவீதம் மட்டும் ஏனோ இன்னும் அவனால் சாதிக்க முடியவில்லை. அதற்கு அவனை எதுவோ மூர்க்கமாக தடுக்கிறது.
விரைவாக இந்த நாடகத்தை முடித்துவிட்டு இந்த கோட்டையை முழுதாக ஆராய வேண்டும் என்ற வேகம் அவனுக்கு நொடிக்கு நொடி அதிகரித்துக் கொண்டிருந்தது.
ருத்ரக் கோட்டையை முழுதாக அடைந்து அதனை வைத்து ஆதித்யக் கோட்டையை கைப்பற்ற நினைத்தவனுக்கு கை மேல் பலனாக ஆதித்ய கோட்டையின் உள்ளே இருக்கும் மத்திய ஆதுரசாலையில் வெறுமனே படுத்திருப்பது அவனுக்கு பெரும் கஷ்டமாக இருந்தது.
நரசிம்மனின் தனி வனத்தில் இருந்து வித விதமான மிருகங்களின் ஒலி அவன் படுத்திருக்கும் இடத்தில் நன்றாக கேட்டது. அது அவனை இன்னும் அதிகம் பொறுமையிழக்க வைத்தது. அவைகளை பகுதி பகுதியாக அறுத்து உள்ளிருக்கும் உறுப்புகளின் செயல்பாட்டினை அறிந்து கொள்ளும் ஆவல் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
“நாளை இந்த நாடகத்தினை முடித்து எழுந்து நடமாட ஆரம்பிக்க வேண்டும். வரத யோகேந்திரர் ஆளும் விதத்தினை அருகிருந்து நுணுக்கமாக கவனிக்க வேண்டும்.” என பேசிக் கொண்டே அந்த அறையில் ஆவியாக அலைந்தவன் கண்களில் கஜயாளி பட்டது.
“இதை அவன் யாளி கூட்டத்திடம் இருந்து பரிசாக பெற்ற யாளி என்று கூறினார்கள் அல்லவா? பல மிருகங்களை அணுவணுவாக கொய்து பார்த்த என்னால் இன்றுவரை நெருங்கமுடியாத யாளியை இவன் எப்படி அடக்கியாள்கிறான்? உடனடியாக அதன் அருகே சென்று பார்க்க வேண்டும்..” என அவன் அந்த உப்பரிகையை கடக்க முனைய, அவனை அவ்விடம் விட்டு அகலமுடியாதபடி ஓர் மெல்லிய திரைத் தடுத்தது. அவனது ஆத்மா அந்த ஒரு தளத்தை தாண்டி வேறு எங்குமே செல்ல முடியவில்லை என்பதையும் அப்போது தான் அவன் உணர்ந்தான்.
“இதை இத்தனை நாட்கள் கவனிக்காமல் எப்படி மறந்தேன்? அதனால் தான் யாரும் எனை இன்று வரை காண வரவில்லையா? இப்படியான மந்திர கவசத்தை யார் போட்டிருப்பார்கள்?” என தனக்குத் தானே பேசியபடி அவனுடல் புக முனைந்தான்.
ஆனால் அவனால் அவனது உடலிலும் புக முடியவில்லை. அதில் அவனது ஆத்மா அதிர்ந்து மீண்டும் மீண்டும் அவனுடல் சுற்றியிருந்த கவசத்தில் மோதியது. அப்படி மோதியதால் அவனது ஆத்மாவின் ஆற்றல் படிப்படியாக குறைய ஆரம்பித்தது.
அவனது ஆத்மாவின் அதீத ஆற்றல் எல்லாமே அந்த கவசத்துடன் அவன் மோதியதால் விரயமாகி பலவீனமடைந்து ஓர் கட்டத்தில் அவனுடல் அருகே வந்து பார்த்தபடி நின்றது.
“இங்கே பெரும் மந்திர வேலைகள் செய்யும் ஆட்கள் இருக்கிறார்கள். நான் இங்கிருந்து தப்ப முடியாது என்று இறுமாப்பு கொண்டும் இருப்பார்கள். நாளை முழு அமாவாசை இரவு, எனது சக்திகளை எப்படி மீட்டுக் கொண்டு எழுகிறேன் என்று பாருங்கள்..” என வன்மத்துடன் கூறிவிட்டு மீண்டும் வனயட்சி அருகே சென்று அவரின் புத்தியை தனது வசத்திற்கு கொண்டு வர ஆரம்பித்தான்.
அவன் இந்த கோட்டைக்குள் நுழையும் போதே வரத யோகேந்திரர் தனது தமக்கை அறிவுரைத்து சென்றபடி அந்த கோட்டையில் விடாது குல தெய்வத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்வதோடு, காவல் தெய்வங்களுக்கும் பலியிட்டு படையல் போடுவதென 16 நாட்கள் சிறப்பு திருவிழாவை நடத்திக் கொண்டிருந்தார்.
“வரதா.. என்னுயிர் விரைவாக இவ்வுடலை விட்டு பிரிந்துவிடும். நமது சந்ததிகள் மிகப்பெரும் அரிய காரியங்களை செய்ய போகிறார்கள். அவர்களுக்கு துணையாக, அவர்களின் முயற்சிகளுக்கு தடையாக வருபவற்றை எல்லாம் நீக்குவது நமது தலையாக கடமை. அதனால் நான் சொல்கிறபடி நமது கோட்டையில் தெய்வங்களை நிறுவி, அங்கே வருடந்தோறும் திருவிழாக்கள் நடக்கும்படி செய். இயற்கையை அழிக்க நினைப்பவன் இந்த கோட்டைக்குள் அடிவைக்கும் நாளில் குறிப்பிட்ட இந்த பூஜைகள் இங்கிருக்கும் அனைத்து கோவில்களிலும் நடக்க வேண்டும். அவன் யார்? எங்கிருந்து வருவான் என்று எனக்கு தெரியாது. ஆனால் உனை நான் எப்போதும் அரூபமாக இருந்து வழிநடத்தி செல்வேன். அவன் இங்கே நுழையும் நாளில் எனது அறையில் இந்த விளக்கு எரியும். அதை வைத்து நீ இந்த ஓலையில் இருப்பதை போன்று செய்ய வேண்டும்.” என சில வழிமுறைகளை எல்லாம் குறித்து வைத்திருந்த ஓலை சுவடிகளை கொடுத்துச் சென்றிருந்தார்.
அதன்படி தான் அபராஜிதன் கோட்டைக்குள் நுழைந்ததும் அவரின் அறையில் இருந்த குறிப்பிட்ட தீபம் எரியத் தொடங்கியதும், ஓலையில் இருந்த வழிமுறைகள் படி கட்டளைகள் இட்டு பூஜைகளை ஆரம்பித்து நடத்திக் கொண்டிருந்தார்.
வனயட்சி வந்த நாள் முதல் அவரை தனியறையில் இருக்க வைக்க மகாராணியார் முயன்றும் கூட அவர் வராமல் அவனுடனே இருந்தது வரத யோகேந்திரரை மிகவும் யோசனையில் ஆழ்த்தியது. அதனால் அவர் அவனிருந்த தளத்தினை மந்திர கவசங்களால் முற்றுகையிட்டு அவனது ஆத்மா வேறு எங்கும் செல்லாதபடியும் செய்திருந்தார்.
இப்போது நரசிம்மனும், ஆருத்ராவும் ஒன்றாக வந்து சென்றதில் அவனது உடலையும் அவனது ஆத்மா தொடாதபடியும் செய்திருந்தனர். மகாராஜா வனயட்சியின் உடலில் மந்திர மூலிகை சாற்றினைத் தடவி விட்டு வரும்படி ஆருத்ராவிடம் கூறியே அனுப்பினார்.
“இந்த சாறு அவரை தன்னிலை மீட்குமா மகாராஜா?” என அவர் அதை அவளிடம் கொடுத்தபோது கேட்டாள்.
“இல்லை மகளே.. இப்போது அவனது ஆத்மா அவனுடல் விட்டு பிரிந்து வனயட்சியின் ஆத்மாவினை அடிமைப்படுத்தும் காரியத்தில் இருக்கிறது. இந்த சாற்றினை வனயட்சி உடலில் தடவி விட்டால், அவரது ஆத்மா முழுதாக அவனது கட்டுப்பாட்டில் செல்லாமல் தடுக்கலாம். தவிர அவனது ஆத்மாவினை அவனுடல் சேராமல் இன்னும் ஒரு வாரம் கடத்திவிட்டால், நமக்கு சாதமாக முடிவுகள் அமையும் வாய்ப்பு உருவாகலாம்.”
“நேராக அவனிடம் வாள் கொண்டு போரிட்டு அவனை கொல்லாமல் நாம் இந்த வழியை கையாள வேண்டுமா?” என ஆருத்ரா வருத்தம் தோய்ந்த கண்களுடன் கேட்டாள்.
“மகளே.. ஒரு விஷயத்தை நீ நன்றாக புரிந்து கொள்ளவேண்டும். போர் என்றால் நிலத்தில் வாள் கொண்டு நேருக்கு நேர் மோதுவது மட்டுமே அல்ல.. போரில் பல வகைகள் உண்டு. போரின் அடிப்படை விதிக்கொண்டு பார்த்தோமானால் போரிடுபவர்கள் இருவரும் சமபலம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.. அதன்படி அவன் தொடுக்கும் இந்த மந்திர போரில் நாமும் மந்திரம் வைத்தே எதிர்க்க வேண்டும். மந்திரங்கள் தான் இந்த போரின் தளம். நமது ஆத்மாவின் மற்றொரு பரிமாணத்தை கொண்டு இதில் நாம் போரிட வேண்டும். அதை நினைவில் கொள்..” என அவளுக்கு தெளிவுரைத்து அனுப்பி வைத்தார்.
அவள் தனியாக செல்லும்போது தான் நரசிம்மனும் உடன் வந்து சேர்ந்து கொண்டான். அபராஜிதன் என்ன செய்கிறான் என்று கண்காணிக்க அவனும் அவனது யாளி நண்பனை வரச் சொல்லியிருந்தான்.
ருத்ர விக்னனும் அதனால் தான் அவனது ஆத்மாவின் கண்களில் படும் வண்ணம் அந்த பக்கமாக நடந்து அவனது மனதை திசைத் திருப்பி, நிதானத்தை இழக்க வைத்தான்.
அவனுடல் அருகே அமரன் கொடுத்த தீபத்தையும் வனயட்சியின் உதவி பெண்ணான தேனிசையிடம் கொடுத்தனுப்பியிருந்தான். வனயட்சி வெளியே வந்து பேசும்போது அவனது தலைக்கு நேரே இருந்த இடத்தில் அந்த தீபத்தை வைத்துவிட்டு அமைதியாக அமர்ந்து வனயட்சி கூறுபவற்றை மட்டும் அவர் செய்துக் கொண்டிருந்தார்.
அவர் ஒருவரை மட்டுமே வனயட்சியும் இப்போது அருகே வைத்துக் கொண்டிருந்தார். மற்ற யாரும் அவரின் அருகே வரக்கூடாது என்ற கட்டளையும் கடுமையாகவே இட்டிருந்தார்.
“தாயே இந்த வேரினை நன்றாக இடித்து சாறு எடுத்து வடிக்கட்டிவிட்டேன். அடுத்து என்ன செய்ய வேண்டும் ?” என்று பணிவுடன் கேட்ட தேனிசையை கண்டார்.
“நீ உணவுண்டு விட்டு எனக்கும் இரண்டு நாழிகைகள் கழித்து எடுத்து வா தேனிசை.. மூன்று கட்டுகள் முடக்கத்தான் கீரையை இள தண்டுடன் போட்டு வேகவைத்து கொண்டு வா.. ஆனந்தனின் கை கால்கள் பலம் பெற அது உதவும்..” எனக் கூறி அனுப்பி வைத்தார்.
“அப்படியே ஆகட்டும் குருதேவி..” என குனிந்தபடியே கூறிவிட்டு தலை நிமிர்த்தாமல் கீழ் தளம் வந்து நின்றார்.
“என்ன நிலவரம் தேனிசை?” என ஆருத்ரா கேட்டாள்.
“அவர் புத்தியும், மனதும் ஒரு நிலையில் இல்லை இளவரசி. அவன் உடலில் இருந்து வரும் ஒரு விதமான வாடை அவரை இடம்விட்டு அசையாமல் உட்கார வைக்கிறது. எப்போதும் ஒரு நாழிகை நேரம் அமர்ந்தால் ஒரு நாழிகை நேரம் நன்றாக கைகள் வீசி நடப்பார். ஆனால் இந்த பத்து தினங்களாக அவரது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் வெகுவாக குறைந்துள்ளது, உணவும் சரியாக உட்கொள்வதில்லை. அவரை எதிர்த்து ஒரு பார்வை பார்த்தாலும் அவர்களை அருகே விடுவதில்லை. அவரின் முகம் பார்த்தாலே அவருக்கு பிடிக்கவில்லை. அவர் கூறுவதை மட்டும் கேட்டு நடக்கும் அடிமையை தான் அவர் கேட்கிறார். நான் அப்படி இருப்பதால் எனை மட்டும் அருகே இருக்க விடுகிறார்.”
“சரி.. அவர் உண்ண இதை எடுத்து செல். வேறு என்ன சாப்பிட கேட்டார்?”
“அவனுக்கு தான் முடக்கத்தானை நன்றாக வேகவைத்து கொண்டு வரும்படி கூறியனுப்பினார்..”
“சரி.. நீ உணவுண்டு ஓய்வெடு.. நான் சிறிது நேரம் அந்த தளத்தில் உலாவுகிறேன்..”
“வேண்டாம் இளவரசி. அவனது ஆத்மா இப்போது துவேஷத்துடன் அலைந்து கொண்டிருக்கிறது. என்னால் அதை நன்றாக உணரமுடிகிறது. யாருமே அங்கே செல்ல வேண்டாம். நான் சிறிது நேரம் காவல் தெய்வத்தின் அருகே அமர்ந்துவிட்டு வந்து உணவு எடுத்து கொள்கிறேன். எனையே அறியாமல் நானும் அவனுக்கு அடிமையாக மாறிவிடுவேன் போல.. அப்படியான சத்தங்கள் அவனிடம் இருந்து வந்து கொண்டே இருக்கின்றன. அது நம்மை வசப்படுத்தவே முனைக்கிறது..”
“நீ எப்படி தெளிவாக இருக்கிறாய்?”
“நான் காளிதேவியின் பரிபூரண அருள் பெற்றவள். எங்கு பூமிதி விழா நடந்தாலும் அதில் இறங்குபவள். எனை யாரும் வசியம் செய்ய முடியாது.. எனது ஆத்மாவினை கட்டுக்குள் வைக்கவும் பழகியிருக்கிறேன். அதனால் எனைப்பற்றி கவலை படவேண்டாம்.. நடப்பவை அனைத்தும் மிகவும் பெரிதாக தோன்றுகிறது. அனைவரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.. நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் இளவரசி.. உங்களை கண்டதும் அவனது ஆத்மா கொண்ட ஆவேஷம் ஆதீதமாக இருந்தது. கவனமாக இருங்கள். இது புற கண்களுக்கு தெரியாத போராட்டம்.” எனக் கூறிவிட்டு நேராக காளி கோவில் சென்று அவளின் காலில் தலை வைத்துப் படுத்துக் கொண்டாள் தேனிசை.

