30 – ருத்ராதித்யன்
காசிக்கு சென்ற சர்வேஸ்வரன், அவர்கள் கூறிய படித்துறையில் அந்த சூட்கேஸ்சுடன் நின்றிருந்தார்.
கதிர் அங்கிருந்த பரதேசிகள் போல வேடமிட்டு தன் கண் பார்வையில் அவரை வைத்திருந்தான்.
பரதேசிகள் என்பவர்கள் நிலையாய் ஒரு இடத்தில் நில்லாமல் சுற்றிக் கொண்டே இருப்பர். அவர்களுக்கென்று தனியே ஒரு வீடு ஏற்படுத்திக் கொள்ளாமல் சுற்றிக்கொண்டே இருப்பவர்கள்.
காசியில் இப்படிப்பட்டவர்கள் மிகவும் அதிகம். தவிர அகோரிகள் அங்கே அதிகமாக சுற்றிக்கொண்டு இருப்பார்கள். படித்துறையில் அவர்களை எளிதில் காணலாம்.
நாம் ஜீரணிக்க முடியாத பல விஷயங்களை இவர்கள் மிகவும் இயல்பானதொரு விஷயமாக தினம் தினம் செய்து வருகின்றனர்.
சர்வேஸ்வரன் நின்ற இடத்தின் அருகில் ஒரு பத்து பிணங்கள் எறிந்துக் கொண்டிருந்தன. அங்கிருந்த மக்கள் அத்தனை நேரம் அகோரிகளின் வருகைக்காக காத்திருந்து பிணங்கள் பின்னே வரிசையில் கூடுவதை பார்த்து அப்போது தான் எரிக்க ஏற்பாடு செய்தனர்.
ஒரே நேரத்தில் பத்து பிணங்களுக்கும் நெருப்பு வைக்கபட்டு அது எறிந்துக் கொண்டிருந்தது. காசியில் இறந்தால் முக்தி என்ற கூற்று ஆணித்தரமாக இன்றும் நமது மனதில் பதிந்துள்ளது. அப்படிப்பட்ட காசியில் பிணங்களை எரித்தாலும் அவர்களுக்கு முக்தி கிட்டும் என்ற நம்பிக்கையில் தான் சுற்றி உள்ள ஊர்களில் இருக்கும் மக்கள் தங்கள் குடும்பத்தில் யார் இறந்தாலும் காசியில் இருக்கும் படித்துறையில் வந்து இறுதி சடங்குகளை செய்து வருகின்றனர்.
அந்த சமயத்தில் அகோரிகள் கூட்டம் ஒன்று அந்த படித்துறைக்கு வந்தது. அங்கே எரிந்துக் கொண்டிருந்த பிணங்களில் இருந்து இரண்டை உருவி சில பாகங்களை மட்டும் பிய்த்து எடுத்துக் கொண்டு சாப்பிட்டபடி வேறு படித்துறைக்கு சென்றனர்.
அதை கண்ட சர்வேஸ்வரன் சற்று பயந்து தள்ளி நின்றார்.
“என்ன டிஎஸ்பி சார்.. இத பாத்தே பயந்தா எப்படி? இன்னும் நெறைய விஷயம் நீங்க செய்யணுமே.. உங்களோட வந்திருக்க அந்த பையனையும் இங்க கூப்பிடுங்க.. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்தே அதுலாம் செய்யலாம்”, என பரதேசி கோலத்தில் இருந்த ஒருவன் அவர் அருகில் வந்து பேசினான்.
“என் பையன் எங்க? அவன நான் பாக்கணும்..”, என தன்னை திடப்படுத்திக் கொண்டு கேட்டார்.
“பாக்கலாம் பாக்கலாம்.. அதுக்கு முன்ன உங்க பொண்ண பாத்துடலாம்”, என கூறி அவன் சிரிக்கவும் அவனின் கழுத்தை பிடித்தார் டிஎஸ்பி.
“சார்.. கொஞ்சம் பொறுமையா இருங்க.. “, என கதிர் அங்கே ஓடி வந்து அவரின் கைகளை அவன் கழுத்தில் இருந்து எடுத்தான்.
“என் பசங்க எங்க ? அவங்கள என்ன பண்ணீங்க ?”
“வாங்க .. பாக்கலாம்..”, என அந்த சூட்கேஸை வாங்கிக் கொண்டு முன்னே நடந்தான் அவன். ஜன நெருக்கடி அதிகமான இடத்தில் அந்த சூட்கேஸை யாரோ அவனிடம் இருந்து நொடிக்கும் குறைவான நேரத்தில் வாங்கிகொண்டு மறைந்தனர்.
கதிர் தன்னை சுற்றியும் கண்களை சுழற்றியபடி டிஎஸ்பியுடன் நடந்தான். தாங்கள் தேடும் நபர் அத்தனை சாதாரணமாக நம்மிடம் சிக்கமாட்டான் என்று நன்றாக கதிர் இப்போது புரிந்து கொண்டான்.
“என்ன கதிர்.. 360 டிகிரியும் கண்ண சுத்தி விடற.. இங்க என்ன தெரிஞ்சது..?”, என முன்னே நடந்து கொண்டு இருந்தவன் பின்னால் திரும்பாமலே கேட்டான்.
“நான் வந்தது நீங்க கெஸ் பண்றது பெரிய விஷயம் இல்ல.. எங்க அர்ஜுன் சார் எங்க ?”, என நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.
“நல்ல நல்ல பசங்கள தான் டீம்ல வச்சி இருக்கான் அர்ஜுன்.. அப்பறம் உங்க மேடம் .. பேர் என்ன?? ஹான் .. யாத்ரா .. அவங்கள பத்தி கேக்கவே இல்லயே கதிர்..”, என நக்கலாக சிரித்தபடி கேட்டான்.
“அர்ஜுன் சார் கூட தான் அவங்களும் இருக்காங்கன்னு எனக்கு தெரியும்.. “, கதிர் கோபமாக பதில் கொடுத்தான்.
“ஹாஹாஹா .. கடத்தரப்ப ஒண்ணா கடத்தினா இப்பவும் ஒண்ணா தான் இருப்பாங்களா என்ன?”, என சிரிப்புடன் கேட்டவன் ஒரு வேனில் இருவரையும் ஏற கூறினான்.
அவர்கள் ஏறியதும் அந்த வேன் ஊரை விட்டு சற்று வெளியே வந்து மேற்கு திக்கில் சென்றது.
இங்கே பைரவ் வனயட்சி பாட்டியின் மேல் ஏறிக்கொண்டு இறங்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தான்.
“டேய் பைரவ் .. இப்டி எல்லாம் பண்ணக்கூடாது .. பாட்டி மேல ஏன் இப்டி ஏறிட்டு எறங்கமாட்டேங்கற .. கீழ வா..”, என ஆருத்ரா அவனை இறங்கச் சொல்லிக் கொண்டிருந்தாள்.
நுவலியும் பைரவனை விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு ஏற்பட்ட ஆச்சரியம் தான் இன்னும் குறையவே இல்லை.
வனயட்சி ஆச்சி அவளிடம் சற்று முன்னர் தான் இந்த பைரவனை பற்றி கூறிக்கொண்டு இருந்தார்.
அவன் வந்தால் என்ன என்ன செய்ய வேண்டும் என்று சில கட்டளைகள் கூட அவளுக்கு இட்டு இருந்தார்.
அவர் கூறியதில் இம்மியளவும் பிசகாமல் ஒரு நாழிகை நேரத்தில் அந்த நாயை காண்போம் என அவள் நினைக்கவே இல்லை.
நுவலியின் நீல விழி கண்கள் பைரவனை சுற்றி சுற்றி வந்து கொண்டிருப்பது கண்டு ஆருத்ரா அவளை இடித்தாள்.
“என்னாச்சி நுவலி .. ஏன் அவன இப்படி அதிசயமா பாக்கற ?”
“ஒண்ணும் இல்ல சின்னம்மா .. இது எவ்ளோ அழகா இருக்கு.. துருதுருன்னு அதோட கண்ணு எப்டி சிங்க கண்ணாட்டம் மஞ்சலா இருக்கு ..”, என பைரவனை தொட்டு பார்த்தபடி கூறினாள்.
அவளின் கை ஸ்பரிசம் பட்டதும் பைரவன் அவளிடம் இப்போது தாவி அவளின் தோளில் முன்னங்கால் இரண்டும் வைத்து அவளின் கன்னத்தை நக்கினான்.
“ஹாஹாஹா .. கூசுது டா.. பைரவா ..”, என நுவலி சிணுங்கியது அவனுக்கு எப்படி தோன்றியதோ அவளின் தோளின் மேல் ஏறி அவளின் நெற்றியை நக்கினான் பைரவன்.
“நல்லது.. எல்லாருக்கும் எல்லாமே புரிய ஆரம்பிச்சிரிச்சி .. இனிமே வேலை கட கடன்னு நடக்கும்..”, என கூறியபடி ஆருத்ராவின் கைப்பிடித்து உள்ளே அழைத்து சென்றார்.
“உக்காரு தாயி .. இதோ வரேன்”, என சமையலறை தடுப்பு பக்கம் சென்றார்.
“ஆச்சி இப்ப தான் ஏரன் ஐயா வீட்ல சாப்டேன் .. “
“இது நான் உனக்காக செஞ்சி வச்சி காத்திருக்கேன் தாயி .. வேணாம்ணு சொல்லாத”, என கூறியபடி இலை போட்டு மூடி வைத்திருந்த மண் குடுவையை எடுத்துக் கொண்டு அவள் அருகில் வந்து கொடுத்தார்.
“சரி வேணாம்ன்னு சொல்லல .. இது என்ன ஆச்சி ?”
“இந்த ஆச்சி மேல நம்பிக்கை அத்து போச்சா தாயி ? என்ன ஏதுன்னு கேட்டுட்டு தான் குடிப்பியோ ?”, என ஆச்சி முகம் சுருக்கியதும் அவள் கடகடவென அப்படியே வாயில் ஊற்றிக்கொண்டு காலி குடுவையை அவர் கையில தந்தாள்.
சிரித்தபடி அவள் கொடுத்த குடுவையை கண்ணில் ஒற்றிக் கொண்டு சாமி சிலை கீழே வைத்தார்.
“இன்னும் நீ மாறவே இல்ல சிங்கம்மா ..”, என கூறியபடி அவள் தலை தடவி கொடுக்க அப்படியே அவரின் மடியில் படுத்து உறங்கினாள்.
பல வருடங்களாக அவளை நெருங்காத தூக்கம் இப்போது முழுதாக ஆட்கொண்டது.
தேனியில் இருந்து கிளம்பிய ஆதி நேராக தன் இல்லம் சென்றான். அங்கே தீரனின் அருகில் நின்றிருந்த தாஸை அருகில் அழைத்து, “யாராவது சந்தேகம் படர மாதிரி மறுபடியும் வந்தாங்களா தாஸ்?”, என தீரனை தடவியபடி கேட்டான்.
“இல்லைங்க ஐயா.. ராத்திரிக்கு அப்பறம் யாரும் வரல.. இன்னும் சில பேர வர சொல்லி நம்ம எடத்துல எல்லாம் நிக்க வச்சி இருக்கேன். யாத்ரா மேடம் எங்க இருக்காங்க சார்?”, என சிறிது பதற்றமாக கேட்டான்.
“ஒண்ணும் இல்ல தாஸ்.. சீக்கிரம் எல்லாம் சரி பண்ணிடலாம்.. நான் வெளிய போய்ட்டு வரேன்.. ஜாக்கரதை .. “, என முணுமுணுத்துவிட்டு வீட்டின் உள்ளே சென்றான்.
“என்னடா வந்ததும் வராததுமா தீரன பாத்துட்டு வர.. என்ன விஷயம்? ஏதாவது பிரச்சனையா ? “, என அவனின் அம்மா கேட்டார்.
“ஒண்ணும் இல்லம்மா.. சும்மா தான் .. நேத்து ராத்திரி கனவுல தீரன் வந்தான் அதான் பாத்துட்டு வந்தேன்.. “, என சிரித்தபடி மழுப்பி விட்டு, தன்னறைக்கு சென்றான்.
தமிழன்பன் அவன் வீட்டினுள் வந்ததில் இருந்து நடந்து கொள்வதை கவனித்துக் கொண்டு தான் இருந்தார். சிவியும் அப்போது தான் இதழியுடன் நடைபயிற்சி முடித்துவிட்டு உள்ளே வந்தான்.
“என்ன மாமா என்ன யோசனையா இங்கயே நீக்கறீங்க ?”, என இதழியை உள்ளே செல்ல கூறிவிட்டு அங்கே நின்று இருந்தவரிடம் வந்தான்.
“ஒண்ணும் இல்ல மாப்ள.. இந்த ஆதி தான்.. தாஸ வர சொல்லி இருக்கான்.. நம்ம எல்லா எடத்துலையும் ஆள போட்டு இருக்கான்.. பிரச்சனையான்னு கேட்டா எதுவும் சொல்ல மாட்டேங்கறான்”, என கூறிவிட்டு சுற்றிலும் ஆட்கள் நிற்பதை காண்பித்தார்.
சிவியும் யாத்ரா கிளம்பிய பின் இருந்து அனைத்தும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான். ஏதேனும் ஆபத்து என்றால் நெடுமாறன் தன்னிடம் கூறுவான் என்றும் நினைத்து இருந்தான்.
ஆனால் தன்னிடம் கூறாமல் வீட்டிலும், தொழில் செய்யும் இடங்களிலும் ஆட்களை போட்டு இருப்பது சிவிக்கும் யோசனையை அதிகப்படுத்தி இருந்தது.
இப்போதே நெடுமாறனுக்கு அழைத்தாலும் அவன் கூறி விடுவான் தான், ஆனால் ஆதி நிச்சயம் இதில் தன்னை நுழைய விடமாட்டான் என்பதும் நன்கு அறிந்து இருந்தான்.
“நம்ம ஆதி இருக்கறப்போ நமக்கு என்ன கவலை மாமா.. அவரு எல்லாமே பாத்துப்பாரு .. நீங்க கவல படாம இருங்க.. “, என அவரை சமாதானம் செய்து உள்ளே அழைத்து சென்றான்.
அறைக்கு சென்ற ஆதி நெடுமாறனுக்கு அழைத்தான்.
“மாப்ள .. தகவல் ஏதாவது வந்ததா ?”
“இன்னும் இல்ல ஆதி.. நிச்சயம் அவங்க இடம் சேர்ந்ததும் குடுப்பாங்க.. நாங்க இங்க எல்லாத்துக்கும் ரெடியா தான் இருக்கோம்.. “, நெடுமாறன் குரலும் இறுக்கமாக ஒலித்தது.
“பரிதிகிட்ட பேசினியா ?”
“இல்ல.. நந்தன் தான் பேசினான்.. ரெண்டு பேர காசிக்கு அனுப்ப சொன்னான். நானும் அனுப்பி இருக்கேன்”
“அங்க யாது போனதுக்கு அப்பறம் என்ன நடந்தது ? அத அப்டியே ஆர்டர் மாறாம சொல்லு”, என கண்ணை மூடி யாத்ராவை மனதில் நிறுத்தியபடி கேட்டான்.
நெடுமாறன் தன்னிடம் நந்தன் மற்றும் பாலாஜி கூறியதை மனதில் கோர்த்து வரிசையாக கூறினான்.
“அவங்கள கடத்த வந்தது யாருன்னு சொன்ன?”, என இடையில் கேட்டான்.
“ஆயுஷ்.. மிருகத்த கொல்றவன் .. “
“அப்போ அதே கும்பல் தான் தீரனோட பிளட் அண்ட் ஹேர் சேம்பிள் எடுத்தவங்களா ?”
“இருக்கலாம் ஆதி.. அருணாச்சல் பக்கம் தபோரிஜோல ஒரு மனுஷ உடம்பு தோல் உரிக்கப்பட்ட நிலைல இருந்து இருக்கு. இது அர்ஜுன் அங்க போனதும் பாத்து இருக்காங்க.. தவிர சில ஹூலாக் கிப்பன் குரங்கு கூட்டமும் தோல் உரிக்கபட்ட நிலைல கிடந்து இருக்கு…”
“ம்ம்”
“இது தவிர.. மகதன்ங்கற புலிய கடத்தி இருக்காங்க.. “, என கூறி நெடுமாறன் சிறு இடைவெளி விட்டான்.
“சோ .. இவங்க மிருகத்ததான் டார்கெட் பண்றாங்க.. “
“ஆமா.. இந்த கேஸ் நம்ம கைக்கு எதிர்பாராத விதமா வந்து இருந்தாலும் கண்மயா சொன்ன ஆளுங்க இவங்க தான் இன்னும் கன்பார்ம் பண்ண சில விஷயங்கள் நமக்கு தேவை ஆதி”
“இதுக்கு மேல என்ன வேணும்? எல்லாமே ஒரே நூல்ல கோர்த்த மாதிரி தான் வருது மாறா”
“ஆனா இது பத்தாது.. அதான் அர்ஜுனும் யாத்ரவும் கெளம்பி போய் இருக்காங்க.. ஆனா இந்த தடவ அவ்ளோ ஈசியா இருக்காதுன்னு தோணுது… ரொம்பவே ரிஸ்க் தான்.. “, என நெடுமாறன் கூறியதும் ஆதி பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு, “கண்டிப்பா ரெண்டு பேருக்கும் ஒண்ணும் ஆகாது மாறா.. நம்ம இங்க எல்லாத்துக்கும் ரெடியா இருக்கலாம்”, என கூறினான்.
இதே நேரத்தில் யாத்ராவின் உடலை அவன் பரிசோதனைக்காக அந்த மெஷினில் படுக்க வைத்தான் கண்மயாவை அருகில் வைத்தபடி..