31 – ருத்ராதித்யன்
வனயட்சி ஆச்சியின் மடியில் படுத்த ஆருத்ரா ஒரு மணிநேர ஆழ்ந்த உறக்கத்திற்கு பின் எழுந்தாள். அத்தனை நேரமும் ஆச்சியும் அவள் தலை கோதியபடி அமர்ந்து இருந்தார் மெல்லிய புன்னகையை முகத்தில் தவழவிட்டபடி.
ரண தேவ் அவள் உறங்குவது கண்டு கண்ணில் துளிர்க்கும் நீருடன் சில நிமிடங்கள் பார்த்துவிட்டு மீண்டும் ஏரன் வீட்டிற்கு சென்று அமர்ந்து கொண்டார்.
அவரின் கண்ணில் நீரை கண்டதும் ஏரன் கையை பிடித்தார்.
“அவ நிம்மதியா தூங்கி பல வருஷம் ஆச்சி ஏரா.. அவங்க அப்பா அம்மா சாகறத கண்ல பாத்தவ அதுக்கு அப்பறம் தூங்கவே முடியாம அலறி எந்திரிப்பா.. அந்த ஊர விட்டு போன அப்பறம் தான் அவ அலறி எந்திரிக்கறது கொறஞ்சது.. இன்னைக்கு தான் அந்த முகத்துல நிம்மதிய பாக்கறேன் .. இனிமேலும் என் சிங்கம்மா இப்படியே நிம்மதியா சந்தோஷமா இருந்தா போதும்..”, என கூறிவிட்டு அமைதியாக அவரும் தலை சாய்த்தார்.
பைரவ் நுவலியுடன் அங்கே சுற்றிக் கொண்டு இருந்தது. அவளை இழுத்தபடி அவன் செல்ல நினைக்கும் இடத்திருக்கு எல்லாம் ஓடி கொண்டு இருந்தான்.
அவனை கண்டு உள்ளே ஓடிய அந்த பாம்பு மிதிலன் குழுவின் கண்ணில் பட்டது.
“மிதிலா .. அங்க பாரு”, என அங்கிருந்தவர்களில் ஒருவன் கத்தினான்.
“எங்க ?”, மிதிலன் அந்த பாறை கூட்டத்தில் தாவியபடி கேட்டான்.
“அதோ அந்த குகைக்கு உள்ள போகுது..”
“குகைக்குள்ள போயிரிச்சா ?”, என மற்றவன் கேட்டான்.
“போயிரிச்சி யா.. “, என மரத்தில் இருந்து குதித்து முதலில் கூறியவன் சொன்னான்.
“குகைக்குள்ள போறது நமக்கு பாதுகாப்பு இல்ல ப்பா.. ஏரன் ஐயாகிட்ட சொல்லுவோம் .. வாங்க”, என மற்றவர் கூறினார்.
“இப்படியே விட்டுட்டு எப்டி போறது பெருசு ?”, மிதிலன் கேட்டான்.
“இங்கனயே நிக்கவும் முடியாது மிதிலா.. கண்ணுல பாத்துட்டோம்.. இனிமே கவனிச்சிக்கலாம் வா.. ஏண்டா எவ்ளோ அடி நீளம் இருக்கும்?”, என முதலில் பார்த்தவனை கேட்டார்.
“எப்பிடியும் அம்பது அடி நீளம் இருக்கும் பெருசு “
“அப்ப ஏரன் ஐயா சொன்னது இந்த பாம்ப தானா ?”, என மற்றவர் கேட்டார்.
“தெரியல ப்பா.. வாங்க எல்லாரும் கூட்டமா ஊருக்கு திரும்பலாம் .. ஐயாகிட்ட பேசிட்டு பாத்துக்கலாம்”, என அனைவரும் கூட்டமாக ஊருக்கு திரும்பி நடந்தனர்.
அந்த பாம்பு அந்த குகையின் வாயிலில் நின்று அவர்கள் செல்வதை கண்டுவிட்டு குகையின் உள்ளே திரும்பியது.
மிதிலன் அதன் உடலை இந்த முறை திரும்பி பார்க்கும் போது பார்த்தான்.
அதன் கருத்த உடலும், அதன் மினுமினுப்பும் மிதிலனை ஒரு நொடி திகிலடைய செய்தது.
அதற்கு பின் வேகமாக அங்கிருந்து நடந்தான்.
“ஐயா ஐயா.. “, என கூட்டமா அனைவரும் வேக வேகமாக ஏரன் வீட்டிற்கு வந்து நின்றனர்.
“நீங்க சொன்ன பாம்பு தான் இருக்கு.. இப்ப என்ன பண்றது?”, என அந்த கூட்டத்தில் பெரியவர் முன்னே வந்து நின்று கேட்டார்.
“என்னாச்சி ஏரா?”, என கேட்டபடி ரணதேவ் அங்கே வந்தார்.
“வணக்கம் சாமி”, என அனைவரும் சாஷ்டாங்கமாக கீழே விழுந்தனர்.
“எழுந்திரிங்க எல்லாரும்.. என்ன பாத்தீங்க? அந்த பாம்பு தானா?”, என ரணதேவ் இறுகிய குரலில் கேட்டார்.
“ஆமாங்க சாமி.. இப்ப அம்பது அடி நீளம் இருக்குங்க “
“இத்தன வருஷத்துல அதுவும் வளந்து இருக்கு”, என ஏரன் ரானதேவ்-ற்கு மட்டும் கேட்கும் வண்ணம் கூறினார்.
“இப்ப என்ன பண்ணலாம் ?”, ரணதேவ் கண்களில் வெறியுடன் கேட்டார்.
“நீங்க போலீஸ் அ கூப்பிடுங்க ஐயா”, என ஏரன் கூறினார்.
“கூறு இருக்கா ஏரா உனக்கு?”, என கேட்டபடி வனயட்சி ஆச்சி அங்கே வந்தார்.
“ஆச்சி..”, என அவர் தலைக் குனிந்து நின்றார்.
அவர் அப்படி நின்றதும் ரணதேவை பார்த்தார். அவரும் தலைக் குனிந்து கைக்கட்டி நின்றார்.
இருவருக்கும் நடுவில் வந்து அங்கிருந்த திட்டில் அமர்ந்து நுவலியை அழைத்தார்.
“என்ன ஆச்சி ?”, என ஓடி வந்தாள்.
“உங்க ஐயன் எங்க? போய் அவன இழுத்துட்டு வா”, எனக் கூறி அனுப்பினார்.
“ஆச்சி..”, என கூட்டத்தில் ஒருவர் பேச்சை ஆரம்பித்தார்.
“நான் சொல்ற வரைக்கும் ஒருத்தனும் வாய் தொறக்க கூடாது”, என கட்டளையிட்டுவிட்டு தனது இல்லம் சென்றார்.
தூக்கம் கலைந்து எழுந்த ஆருத்ராவிற்கு மீண்டும் இரண்டு மண் குடுவையில் இருந்த மூலிகை சாற்றை பருக கொடுத்தார். இன்னொரு மண் பானையில் இருந்த திட பொருளை அவளிடம் காட்டி அவள் காதில் ஏதோ கூறி, மீண்டும் அந்த பானையில் சில இலைகள் மற்றும் சாற்றை ஊற்றி மூடி அவளிடம் கொடுத்தார்.
வனயட்சி ஆச்சி அங்கிருந்து ஒரு மணி நேரதிற்கும் பிறகு தான் ஏரன் வீட்டிற்கு வந்தார்.
அனைவரும் அங்கே நிற்பது கண்டு ஆருத்ரா அங்கே வந்தாள். அவளுக்கும் அனைவரும் வணக்கம் கூறி அவள் முன்னே வர வழி கொடுத்து நின்றனர்.
“என்னாச்சி ? ஏன் எல்லாரும் இங்க அமைதியா நீக்கறீங்க?”, என கேட்டாள்.
“பவ் .. பவ்..”, என பைரவ் அங்கே வந்து அவளைத் தூக்கி கொள்ளும்படி கூறியது.
“என்ன டா? எல்லா எடமும் சுத்தி பாத்துட்டியா ?”, என அவனிடம் கேட்டாள் அவனை தூக்கி மூக்குடன் மூக்கு உரசியபடி.
“இங்க பத்து நாள் இருந்தா மொத்த காட்டையும் நான் காட்டி விடறேன் தாயி அவனுக்கு..”, என கூறியபடி அவளருகில் வந்தார் ஆச்சி.
“சரி என்ன தண்டனை எல்லாருக்கும் இப்படி?”, என நேரடியாக அவரிடமே கேட்டாள்.
“உங்க தாத்தனுக்கு மறுபடியும் கடமை மறந்து போகுது போல தாயி.. இந்த ஏரனுக்கும் மறந்து போயிரிச்சி.. அதான் அமைதியா நிக்க சொன்னேன். அமைதியா இருந்தா மனசுக்குள்ள இருக்கறது வெளிய வரும்ல ..”, எனக் கூறிவிட்டு அனைவரின் முகங்களையும் பார்த்தார்.
“ சரி என்ன விஷயம் நீங்க சொல்லுங்க ஆச்சி”, என ஆருத்ரா அனைவரையும் பார்த்துவிட்டு மீண்டும் அவரிடம் கேட்டாள்.
“நீ அந்த கடமைய ஏத்துக்க தயாரா இருந்தா சொல்லு தாயி சொல்றேன்”, என அவர் சிரிப்புடன் அவளிடம் வினவினார்.
ரணதேவ் திடுக்கிட்டு தலை நிமிர, ஆருத்ரா சிரிப்புடன், “எனக்கான கடமைகள என்னைக்கும் நான் தவிர்க்க மாட்டேன், நிறைவேத்த தவறவும் மாட்டேன் ஆச்சி.. “, என கூறிவிட்டு அவரின் அருகில் சென்றாள்.
“வர அமாவாசை முடிஞ்ச மூணாம் பிறைல உன் கழுத்துல தாலி ஏத்திக்கணும் தாயி.. அன்னிக்கி ராத்திரி உன் புருஷனோட என்கிட்ட வா.. அது என்னன்னு சொல்றேன்..”, என அவர் கூறியதும் ஆருத்ரா திடுக்கிட்டு தன் தாத்தாவை பார்த்தாள்.
“என்ன தாயி அங்க பாக்கற? இந்த கடமைய தனி ஆளா நீ நிறைவேத்த முடியாது.. தவிர சில சிக்கலான சூழ்நிலை எல்லாம் நீ கடந்து வரணும்.. அப்ப தான் அந்த கடமைக்கான செயல செய்ய உனக்கு தெடம் இருக்கான்னு தெரியும். தெடம் இல்லாதவங்க இந்த காரியத்த செய்ய முடியாது.. இது உன் குலத்துக்கான கடமை.. இனிமேலும் நீங்க காப்பாத்த வேண்டிய கடமை..”, என கூறிவிட்டு நுவலியை அருகில் அழைத்தார்.
“மிதிலா .. “
“ஆச்சி”, என பணிவுடன் வந்து அவரின் காலடியில் அமர்ந்தான்.
“பயப்படாத .. நீ தான் இன்னிக்கி வரை எந்த கலப்பும், சுயநலமும் இல்லாத மனுஷனா இங்க வாழ்ந்துட்டு இருக்க.. “, என அவன் தலையை தடவி கொடுத்தார்.
“நான் என்ன செய்யணும் ஆச்சி?”
“உன் மக வனயட்சிய பாக்க ஆசை படுறா யா..”, என கூறிவிட்டு அவன் முகத்தை பார்த்தார்.
அவன் திடுக்கிட்டு மகளை பார்த்தான். என்னடா என்பது போல அவன் பார்க்க, நுவலி திடமாக ஐயனின் கண் பார்த்து, இது நானாக தேர்ந்தெடுத்தது என்று கண்களால் கூறினாள்.
“என்ன சொல்ற ஐயா நீ?”, என வனயட்சி ஆச்சி மீண்டும் அவனிடம் கேட்டார்.
“இந்த குலத்துல பொறந்த யாருக்கும் அவங்க என்ன ஆக விருப்பமோ அப்படி ஆகலாம் ஆச்சி. நல்ல விஷயமா இருக்கறப்ப அத மறுக்க நான் யாரு ஆச்சி? அவ பாக்க விருப்ப படறா சரி.. அந்த ஆத்தாவும் இவளுக்கு பாக்க ஆசி குடுத்தா சந்தோஷம் ஆச்சி..”, எனக் கூறி அவரின் பாதம் தொட்டு வணங்கினான்.
“உன் மனசுக்கு நீ எப்பவும் அந்த வனதேவி கூடவே இருப்ப ராசா..”, என அவனை மனதார ஆசீர்வதித்துவிட்டு நுவலியை ஏரன் வீட்டில் இருந்து ஒரு பொருளை எடுத்துவர கூறினார்.
“ஆச்சி”, என குரலை சரி செய்துகொண்டு ரணதேவ் அழைத்தார்.
“நான் பேச சொன்னேனா விக்ரமா ?”, என ஆச்சி அதட்டியதும் மீண்டும் வாய் மூடித் தலைக் குனிந்து நின்றார்.
எங்கும் தலை குனியாத தன் தனுப்பா இங்கே ஆச்சியின் ஒரு வார்த்தைக்கு கட்டுப்பட்டு தலைக் குனிந்து நிற்பது ஆருத்ராவிற்கு ஆச்சரியமாக தான் இருந்தது.
அவளின் தாய் தந்தையை இழந்த புதிதில் இங்கே வந்தாள். அப்போது இருந்த தீராத மனவுளைச்சலை, இந்த ஆச்சி தான் ஏதேதோ பேசி சரி செய்து, அம்புவி விட்டு தொலைவாக வசிக்கச் செல்ல கூறினார்.
தனது நிலை கண்டு தனுப்பாவும் வேறு ஊர் அழைத்து சென்று அங்கே தொழில் தொடங்கி சிறப்பாக நடத்தி வந்தார். இடையிடையே தனக்கு ஏற்பட்ட உடல் உபாதைகளுக்கு எல்லாம் இந்த ஆச்சி தான் மருந்து கொடுத்து விடுவார்.
படித்து முடித்து நிர்வாகத்தை கையில் எடுக்கும் முன் இங்கே வந்து ஆச்சியை சந்தித்தவள், மீண்டும் ஐந்து வருடங்கள் கழித்து இன்று தான் அவரைப் பார்க்கிறாள்.
இன்று வரை இவர்கள் கூறும் வனதேவியையும், வனயட்சியையும் இவள் கண்களால் கண்டதில்லை.
இன்றைய தினம் தனது வாழ்வில் ஏதோ பெரும் திருப்புமுனை நடக்கவிருக்கிறது என்பது மட்டும் ஆருத்ரா உணர்ந்துக் கொண்டாள்.