90 – ருத்ராதித்யன்
நரசிம்மனும், மகதனும் சதுப்புநில மலை நோக்கி கடல் வழியாகவே தங்களின் பயணத்தை மேற்கொண்டனர். அந்த மலையைச் சுற்றி சதுப்பு நிலமாக, சேரும், சகதியான புதைக்குழிகளும் நிறைந்திருக்கும். ஆதித்ய நாட்டின் தென்-மேற்கு மூலையில் அது அமைந்திருந்தது.
இரண்டாம் அம்புவிக் கோட்டைக்கும், மேற்காட்டு கோட்டைக்கும் நடுவே அந்த சதுப்பு நிலமலை அமைந்திருந்தது. அந்த பகுதிகளில் நிலம் ஊர்ந்து செல்லும் பூச்சிகளும், ஒரு காலத்தில் வானை முட்டும் உயரம் கொண்ட அடர்ந்த முடிகள் கொண்ட மந்த யானைகளும் அங்கே வாழ்ந்ததாக கூறுவார்கள். காலப்போக்கில் அவைகள் கடற்கோளாலும், நிலநடுக்கங்களாலும் அவை அதே மண்ணில் புதைந்து போனது.
அங்கே இந்த புதைக்குழிகளை தாண்டி மலை ஏறி தேவியை தரிசிக்க வேண்டும். நரசிம்மன் அந்த இடத்தினைப் பற்றி குருகுலத்தில் இருந்த பொழுதே தகவல்கள் சேகரித்து வைத்திருந்தான். எப்படி எந்த குறியீடுகள் கொண்ட இடம் அறிந்து நடக்க வேண்டும்? எங்கே எப்படி நிலத்தின் கடினத்தன்மையினை சோதிக்க வேண்டும்? புதைக்குழிகளில் சிக்கிக் கொண்டால் எப்படி வெளியே வரவேண்டும் என்று அனைத்தும் மனதில் ஏற்றிக் கொண்டிருந்தான். உடன் மகதனை அழைத்துச் செல்லும் போது அவனையும் பாதுகாப்பாக எப்படி அழைத்துச் சென்று வரவேண்டும் என்று மனதில் வரைப்படம் போட்டு வைத்திருந்தான்.
“மகதா.. உடல் இடையை முழுதாக நிலத்தில் அழுந்தாமல் இங்கே நாம் நடக்க வேண்டும். என்னுடனேயே வா. எனக்கு முன் ஓடாதே. கால் மலை ஏறிய பின் உணவை தேடிக் கொள்ளலாம். இடையில் வேட்டையாட ஓடாதே.. இது மிகவும் ஆபத்தான பகுதி, இங்கே நாம் சிக்கினால் நமது உடல் கூட யாருக்கும் கிடைக்காது. கவனமாக என் பின்னால் வா..” என மகதனின் காதருகில் விவரங்கள் கூறி அவனை தட்டிக் கொடுத்து முத்தம் கொடுத்துவிட்டு அந்த நிலத்தில் கால் வைத்தான்.
அந்த மண்ணே சாம்பல் நிறத்தில் இருந்தது. கடல் கரையில் இருந்து நான்கு காத தூரத்தில் மலை இருந்தது. இரண்டு காத தூரத்தில் சதுப்பு நிலம் ஆரம்பமானது. ஒரு காதம் வரையிலும் அந்த சகதியும், புதைக்குழிகளும் அமைந்திருந்தன. அந்த ஒரு காதம் மட்டும் மிகவும் கவனமாக கடக்க வேண்டும்.
முதலில் இருந்த சாம்பல் மண் நிலத்தில் சில கனிகள் கொண்ட மரங்கள் சுற்றிலும் வளர்ந்திருந்தன. மஞ்சளும், சிகப்புமாக அவை நான்கு பழுத்து வாசனையை அவ்விடம் முழுதும் பரப்பிக் கொண்டிருந்தன. அந்த வாசனையிலேயே அனைவரும் அதை உண்ண ஆவல் கொண்டு உடனே சென்று பறிப்பர். அங்கே தான் இயற்கை மிகப்பெரும் ரகசியத்தை மறைத்து வைத்துள்ளது.
அந்த கனி மரங்கள் அனைத்தும் ஒருவிதமான போதையை தரக்கூடியவை. அதில் ஒரு பழத்தை உண்டால் கூட ஒரு ஜாம நேரம் புத்தி சரியான நிலையில் இருக்காது. உடலும், மனமும் முற்றிலும் மயக்கநிலைக்கு சென்று விடும். இதே நிலையில் இருப்பவன் அந்த சதுப்பு பகுதியில் நடந்தால், மிக எளிதாக புதைக்குழியில் வீழ்வான்.
அந்த புதைக்குழியும் உணவு கிடைத்த சந்தோஷத்தில் இன்னமும் பொங்கி அடுத்த இரைக்காக நாடகமாடி காத்திருக்கும். ஒரு பக்கம் அனைத்து உயிர்களையும் காக்கும் இயற்கையானது, மறுப்பக்கம் எந்த கருணையும் இன்றி உயிர்களை உள்வாங்கவும் செய்கிறது. எங்கிருந்து ஆரம்பமானதோ அங்கேயே சென்று சேர்கிறது உடலும் உயிரும்.
நரசிம்மனும் மகதனும் ஆங்காங்கே கிடைத்த வலுவான நீண்ட குச்சிகளையும், மரத்தின் வேர்களையும் சேர்த்தபடி முன்னே நடந்துக் கொண்டிருந்தனர். முதல் இரண்டு காத தூரமானது சில நாழிகைகளில் முடிந்து, சகதியான இடமும் ஆரம்பமானது.
முதலிலேயே புதைக்குழியும் அங்கே அமைந்திருந்தது. நரசிம்மன் கவனமாக குச்சியை முன்னால் வைத்து தரையை அழுத்திப் பார்த்து ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்தான்.
மகதனும் அவனின் பின்னாலேயே உடல் கனத்தை முழுதாக நிலத்தில் நிறுத்தாமல் பாதி கனத்தை மட்டும் நிலத்தில் நிறுத்தி நடந்தான்.
இருபது அடி தூரம் கடந்து ஓர் பெரிய புதைக்குழி அவர்களின் முன்னே இருந்தது. அது சுமார் பத்து அடிக்கும் அகலமாகவும், மிகவும் நீண்டும் இருந்தது. அதை சுற்றி செல்லவும் முடியாத மாதிரி இரண்டு பக்கமும் பெரிய மரங்கள் வீழ்ந்துக் கிடந்தது.
அதன் வேர்கள் இருந்த பகுதியும் பெரிய பெரிய குழிகளாக சேறு சேர்ந்து எந்த பக்கமும் போகமுடியாமல் இருந்தது. இப்போது ஒரே வழி மரத்தினை நகர்த்தி போட்டு அதன் மேலே நடக்க வேண்டும். இல்லையென்றால் அங்கே தொங்கும் விழுதுகளைப் பிடித்து தொங்கியபடி குரங்கு போல செல்ல வேண்டும். நரசிம்மன் அப்படி சென்று விடலாம் மகதனை எவ்வாறு அந்த பக்கம் அழைத்து செல்வதென இப்போது யோசித்தான்.
“மகதா.. அந்த மரத்தினை நானும் நீயும் சேர்ந்து நகர்த்தி பார்க்கலாமா?” எனக் கேட்டான்.
“உர்..” என்றபடி மகதனும் பெரிய மரத்தின் அருகே சென்றான். அங்கே வீழ்ந்து கிடக்கும் மரம் அந்த பதினைந்து அடியை தாண்டும் என்ற யூகத்துடன் நரசிம்மனும் அதைத் தள்ள சென்றான்.
பல நூறு ஆண்டுகள் பழமையான வைரம் பாய்ந்த மரத்தினை ஒரு மனிதனும், ஒரு புலியும் மட்டும் சேர்ந்து நகர்த்திட முடியுமா என்ன?
இருவரும் எத்தனை முயன்றும் இரண்டு அடி தான் விழுந்த இடத்தினை விட்டு நகர்ந்து இருந்தது. அதை இன்னும் பத்தடி தூரம் நகர்த்தி நேர்செய்து தள்ளுவது மிகப்பெரும் காரியம் தான்.
அதற்குள் இருவரும் மிகவும் களைத்து அப்படியே மரத்தின் மேலே அமர்ந்துக் கொண்டனர்.
“இதென்னடா மிகப்பெரும் பாறையை விடவும் கனமாக இருக்கிறது. இதை இன்னும் நான்கு அடிகள் தள்ளவே ஒரு நாழிகைக்கு மேல் ஆகும் போல.. இதை நேர்செய்து அடுத்தப் பக்கமிருக்கும் கடினமான நிலத்தில் நிறுத்தி தான் நாம் செல்லமுடியும்..”
மகதனும் மிகவும் களைத்து பசியில் வாடத் தொடங்கினான். மூச்சுகள் பெரிது பெரிதாக வந்துக் கொண்டிருந்தன. நீர் வேண்டும் என்ற அவனது பார்வை அலைப்பாய்ந்தது.
“நீர் நிலை இருக்கிறதா என்று பார்த்துவிட்டு வருகிறேன். இங்கேயே இரு..” என மகதனை பத்திரமாக இருக்கும்படி ஓர் குறிப்பிட்ட எல்லையினை காட்டி கூறிவிட்டு அங்கிருந்து நீர் தேடி சென்றான். வந்த வழியில் திரும்ப சென்று சுனை ஏதும் இருக்கிறதா என நீர் அதிகம் இழுக்கும் மரங்களையும் கொடிகளையும் பார்த்தபடி சென்றான். அவைகளுக்கு அருகே நிச்சயமாக நீர்நிலைகள் இருக்கும்.
ஓர் நாழிகை நடைக்கு பின்னர் ஓர் சுனை அவனது கண்களுக்கு தெரிந்தது. அந்த நீரில் மூலிகை தூவி சுத்தம் செய்தபின் தன் இடையில் இருந்த நான்கு குடுவைகளிலும் நிரப்பி அதில் நீர் மூலிகைகளை போட்டு கலக்கி குடித்தான். அப்படி குடித்தால் பல மணிநேரங்களுக்கு உடல் நீர் சத்தினை பாதுகாத்துக் கொள்ளும். மகதனின் ஊர்வத்திற்கு அதிகம் நீர் தேவைப்படும் ஆனால் பயணத்தில் நினைத்த நேரத்தில் நீர் கிடைக்காது என்பதால் இதுபோல நீர் சத்தினை கட்டில் வைக்கும் மூலிகை பொடிகளை கலந்து நீரினை அருந்தினால் உடலின் நீர் தேவை கனிசமாக குறைவதுடன் கலைப்பில்லாமல் பயணம் மேற்கொள்ள உதவும்.
நரசிம்மன் வேகமாக மகதன் இருக்கும் இடம் நோக்கி நடந்து சென்றான். வழியில் கிடைத்த கிழங்குகளையும் பறித்துக் கொண்டு சில செடிகளின் தண்டுகளையும் எடுத்துக் கொண்டு மகதன் இருக்குமிடம் சென்று சேர்ந்தான்.
அங்கே மகதன் இல்லை. அவன் கூறிய எல்லைக்குள்ளும் அவனை காணவில்லை. சுற்றிலும் அவனின் காலடி தடங்களை பார்த்து அவன் சென்ற திக்கினை அரிய முற்பட்டான். அவை நேராக புதைக்குழிக்கு முன்னே சென்று நின்றன.
ஏதேனும் மிருகத்தை பிடிக்க ஓடி சென்று குழியில் விழுந்திருப்பானோ? இந்த எண்ணம் அவனை கதிகலங்க செய்தது.
‘இல்லை .. அப்படி இருக்காது.. அத்தனை அஜாக்கிரதையாக அவன் இருக்க மாட்டான்.. வேறு ஏதேனும் மாயை இங்கே நிகழ்கிறது..’ என்று தனக்கு தானே சமாதானம் செய்தபடி அங்கும் இங்கும் ஓடி திரிந்து தேடிப் பார்த்தான்.
சுமார் மூன்று நாழிகைக்கும் மேலே எல்லா பக்கமும் தேடியவன் மீண்டும் அதே காலடி தடம் இருக்கும் புதைக்குழிக்கு அருகே வந்து நின்றான். அவன் அங்கிருந்து செல்லும் முன்பு நீளமான வேர்களை பிணைத்து அந்த புதைக்குழியின் உள்ளே விட்டு மறுமுனையை அருகிருந்த மரத்தின் விழுதில் பிணைத்திருந்தான். இப்போது அந்த வேர் முன்பிருந்ததை விட உள்ளே இழுக்கபடுவதைப் போல தெரிய அதைத் தொட்டதும் அதன் அசைவும், அதில் ஓடும் இழுக்கும் அழுத்தமும் அவன் உணர்ந்தான்.
உடனடியாக உள்ளே குதிக்க முடிவெடுத்தவன் அதற்கான முன்னேற்பாடுகளை தனக்கு செய்து கொண்டான். மூக்கின் ஓட்டைகளை மட்டும் சிறிதளவு விட்டுவிட்டு, முகம் முழுவதும் பருத்திடகுனியினைக் கொண்டு அடுக்கடுக்காக சேரணாது அவனது முகத்திள் படியாதவாறு தலை முழுதும் சுற்றிக் கொண்டான். கைகளுக்கும் பிடிமானம் கிடைக்கும் படியாக துணியினை சுற்றிக் கொண்டவன் உடன் கொண்டு வந்திருந்த முறுக்கு கயிற்றை தன் இடையில் காட்டிக் கொண்டவன் முறுமுனையை மரத்தினைச் சுற்றி கட்டினான்.
கொண்டு வந்திருந்த மற்ற பொருட்களை எல்லாம் மரத்தின் கிளைகளில் பத்திரப்படுத்திவிட்டு வனதேவியை மனதார வணங்கினான்.
“அன்னையே.. மகதன் இன்றி நானும் எனது வாழ்வும் முழுமையாகாது. இருவரும் செத்தாராமின்றி உன் பாதம் வந்தடைய அருள்செய்.” என வாய்விட்டு கூறிக் கும்பிட்டவன் அடுத்த நொடி அந்த குழியில் குதித்தான்.
இழுவிசையை கொண்ட வேரினை பிடித்தபடியே சகதியில் ஆழம் சென்று கொண்டிருந்தான். கண்களுகளை முழுதாக மூடிவிட்டதால் கைகளிக்கு கிடைப்பதையும், உடலில் படுவதையும் கொண்டே என்ன பொருள் என்று யூகித்தபடி அனுமானத்துடன் அந்த வேரினை விடாமல் பிடித்தபடி இன்னும் உள்ளே சகதியில் நுழைந்தான்.
ஆழம் செல்ல செல்ல கடினத்தன்மையும், இலகுதன்மையும் சில அடிகளுக்கு மாறி மாறி வந்தவண்ணம் இருந்தன. பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு அவன் கைகளுக்கு ஓர் உருவம் தட்டுப்பட்டது. அது மகதனின் கால் போல இருக்க, அதைப் பற்றி தூக்கி அதனையும் தன்னுடன் கயிறுக் கொண்டு இணைத்துக் கொண்டு அதே வேரினைப் பிடித்து மேலே ஏறினான்.
உள்நுழைவது போல வெளி வருவது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. அந்த சகதி அவனை அங்கே சமாதி செய்திடும் நோக்கிலேயே அவனை உள்ளிழுத்துக் கொண்டிருந்தது. இரண்டு அடி மேலே ஏறினால் ஆறடி ஆழம் கீழே சென்றான். நேரம் செல்ல செல்ல பருத்தி துணிகளும் சகதியில் பாழாகிக் கொண்டே வந்தது. பிடிமானம் கிடைத்து மேலே அந்த உருவத்தை இழுத்துக் கொண்டு வருவது பெரும் சக்தி விரயத்தை அவனுக்கு ஏற்படுத்தியது.
நரசிம்மன் மனதில் உறுதி மட்டும் மாறாமல் கைபற்றிய உருவத்தை மேலே கொண்டு சென்று விடவேண்டும் என தன் உடல் கொண்ட சக்தி மட்டுமின்றி, ஆத்மா கொண்டிருக்கும் சக்தியையும் திரட்டியபடி சளைத்த கைகளையும், துவழும் உடலையும் மீண்டும் முறுக்கேற்றி ஒரு நாழிகையில் நிலம் தொட்டு மேலே ஏறினான்.
அவன் தூக்கி வந்த அந்த உருவம்…

