93 – ருத்ராதித்யன்
“என்ன கூறுகிறாய் அமரா? பைரவக்காட்டின் தடமா?” என நரசிம்மன் அதிர்ந்து கேட்டான்.
“ஆம்.. ஆருத்ரா அதை கண்டுவிட்டாள்.. இன்னும் சிறிது நாட்களில் முழுதாக அதற்கான பாதையை அவள் கண்டுபிடித்துவிடுவாள். அதற்குள் நாம் செய்யவேண்டிய வேலைகள் நிறைய உள்ளன.தவிர..” என அவன் கிளம்பியத்தில் இருந்து நடந்த அனைத்தையும் அவனிடம் கூற ஆரம்பித்தான். வாருங்கள் நாமும் அவர்கள் ருத்ரக்கோட்டையில் இருந்து கிளம்பியதில் இருந்து பார்ப்போம்.
மஹாராஜா ருத்ரக் கோட்டை வரும் முன்னரே அமரபுசங்கன், யாத்திரை, சிங்கத்துரியன் மூவரும் அமரக்கோட்டை புறப்பட்டனர். அடர்வனங்களில் புகுந்து மூன்று நாட்களில் அமரக்கோட்டை எல்லையில் வந்து நின்றனர்.
இடையில் தேவைக்கு அதிகமாக எங்கும் தங்காமல் தங்களது பயணத்தை வெகுவிரைவாக மேற்கொண்டு மூன்றாவது நாள் மாலை கோட்டைக்குள் பிரவேசித்தனர்.
கோட்டையின் அரசர் உள்ளே நுழையும்போது நடக்கும் எந்த வரவேற்பும் அங்கே நடக்கவில்லை. ராஜவீதியில் கூட நுழையாமல், சட்டென சிறு சந்துகளில் புகுந்து அமரன் கோட்டைக்குள் நுழைந்ததுக் கண்டு சிங்கத்துரியனும், வனயாத்திரையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“தமையரே.. ஏன் எந்த வரவேற்பும் இன்றி இங்கே நுழைகிறீர்கள்?”
“நான் அடிக்கடி வெளியே செல்வதும் வருவதும் வாடிக்கை தான். அதனால் மக்களை தொந்தரவு செய்யாமல் வந்து செல்வது தான் சரி. இன்னொரு நன்மையும் இதில் இருக்கிறது, இங்கே யார் உண்மையாக இருக்கிறார்கள்? யார் தவறு செய்கிறார்கள் என்பது இப்படி வந்து செல்வதால் தான் சுலபமாக கண்டுப்பிடிக்கமுடிகிறது.” எனக் கூறியபடி கோட்டையின் தலைவனை அழைத்து இவர்கள் தங்க அறையை தயார் செய்யக் கூறிவிட்டு, தன்னறைக்கு இருவரையும் அழைத்து சென்றான்.
வனயட்சி கூறியதைப் போல தன் தாய் தந்தையுடன் அவன் சிறுக்குழந்தையாக இருக்கும்பொழுது மஹாராஜா வரைந்த ஓவியம் அங்கே மாட்டப்பட்டிருந்தது.
அதனைக் கழற்றி பின்னால் இருந்த சட்டத்தை குறுவாள் கொண்டு நெம்பி எடுத்தான். உள்ளிருந்து ஓர் கனமான துணி கீழே விழுந்தது. அதை எடுத்துக் கொண்டு மேஜையில் விரித்தான். அது அவனது தாய் அவரது கைப்பட எழுதிய அவரின் வாழ்க்கை வரலாறு. அவர் இறப்பதற்கு முதல் நாள் வரையில் நடந்த அனைத்தும் அங்கே எழுத்தப்பட்டிருந்தது. அவனின் கடமையும் யாதென அவர் குறிப்பிட்டிருந்தார்.
“மகனே அமரா.. நீ எங்களின் புண்ணியத்தின் பலன். உன்னை மகனாக பெற்றதில் நான் நொடிக்கு நொடி மகிழ்ச்சியை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் சிறிது நாட்களில் உன் மாமனுக்கு மகன் பிறப்பான். அவனுக்கு நீ தான் எல்லா வகையிலும் அரணாக நிற்கவேண்டும். வெறும் மனிதனாக மட்டுமின்றி சக்தி பிரயோகத்திலும் நீ தேர்ச்சி பெற்று அவனையும் அவன் செய்யப்போகும் மகத்தான பணிகளுக்கும் உதவி செய்ய வேண்டும். நான் தயாரித்த மூலிகை குப்பியை நீ தேர்ந்தெடுத்திருந்தால் உனக்கு கூடுதலாக அப்பனை பாதுகாக்கும் பொறுப்பும் உன்னையே வந்து சேரும். அப்பன் சுயம்புவாக ஓர் மலைக்குகையில் வீற்றிருக்கிறார். அது எந்த மலை என்பதோ? என்ன இடம் என்பதோ இப்போது வரையிலும் நான் அறியவில்லை. பாதுகாவலனுக்கு அழைப்பு வரும். அப்போது அவர்கள் கூறுமிடம் சென்று பாதுகாப்பது உனது கடமை. அந்த பணியில் இந்த குப்பி மூலிகை உனக்கு பெரும் துணையாக இருக்கும் என்று நம்புகிறேன். இப்பிரபஞ்சத்தின் பிரிந்திருக்கும் இரண்டு பெரும் சக்தியை ஓரிடத்தில் சேர்க்கும் பொறுப்பு உன் தலைமுறைக்கு தான் கிடைத்துள்ளது. அதில் பல சோதனைகள், இழப்புகள் நிகழும், கொண்ட பணியிலும் கடமையிலும் தவறாமல் அனைவரும் நடக்கவேண்டும் என்பதே எங்கள் இருவரின் கட்டளை உனக்கு. உன் உடல் குறித்த குறிப்புகள் முதல் பைரவக்காட்டில் நீங்கள் செய்யவேண்டிய அனைத்தும் இங்கே குறிப்பாக கொடுத்திருக்கிறேன். இவை வெறும் குறிப்புகள் தான். இங்கிருக்கும் ஒவ்வோர் மர்மத்தையும் நீங்கள் தான் கண்டறிந்து அதற்கு தகுந்தபடி செயல்பட வேண்டும். வனயட்சிக்கு இதை முழுதாக காட்டாமல் சிங்கத்துரியனுக்கு மட்டும் முழுதாக காட்டு. உங்கள் இருவருடன் மூன்றாவதாக யார் இதை படித்தாலும் அவர்களின் வாழ்க்கை பெரும் மாற்றத்தை சந்திக்கும், அவை நல்லதா கெட்டதா என்று இறைவனும், இறைவியும் மட்டுமே அறிவர். படித்த சிறிது நேரத்தில் சூரிய ஒளி பட்டதும் இந்த துணி நெருப்பு பிடித்து சாம்பலாகும் நான்கடி தள்ளி நில்லுங்கள்.” என அவர்கள் படித்து முடித்ததும் அந்த குறிப்புகள் இருக்கும் இடம் தவிர மற்ற இடம் அத்தனையும் தீ பிடித்து சாம்பலானது.
நிகழ்ந்ததை முழுதாக ஜீரணிக்க முடியாமல் மூவரும் அந்த சாம்பலையே பார்த்துக் கொண்டிருந்தனர். அமரனின் உடலும் மனமும் ஓர் நிலையில் இல்லாமல் தடுமாற அவன் உடல் மறையத்தொடங்கியது. அதைக் கண்ட வனயாத்திரை அவனை சடுதியில் நிகழ்வுக்கு கொண்டு வர தட்டி அவனை ஓரிடத்தில் அமரவைத்தாள்.
சிங்கத்துரியனும் ஓர் நொடி ஸ்தம்பித்து தான் நின்றிருந்தான். யாரோ அறைக்குள் வரும் அரவம் கேட்டதும் அவன் அமரன் அருகே செல்ல, வனயாத்திரை அந்தக் குறிப்புகள் அடங்கிய எரியாத துணியை எடுத்து இடையில் மறைத்துக் கொண்டாள்.
உள்ளே வந்த முதல்மந்திரி மேஜையில் இருந்த சாம்பலைக் கண்டு திடுக்கிட்டு அமரனைக் கண்டார். அவன் விழிகள் ஓரிடத்தில் நிலைக்குத்தி நிற்பதைக் கண்டு அவன் முன்னே வந்து நின்றார்.
“அரசே.. தாங்கள் நலம் தானே? உடல் வியர்த்து ஏதோ போல இருக்கிறீர்களே.. உடல்நலமில்லையா?” என பணிவுடன் கேட்டார்.
அவர் குன்றன்மாறவல்லார். அமரபுசங்கனின் தந்தை காலத்தில் இருந்து முதல் மந்திரியாக இருக்கிறார். அவர் இங்கே இருப்பதால் தான் அமரனும் அதிகம் கோட்டை தங்காமல் நாடு முழுவதும் சுற்றிவருகிறான். அவ்வப்போது ஆதித்த கோட்டைக்கும் சென்று விடுகிறான். தந்தை ஸ்தானத்தில் இருந்து அவனுக்கு அனைத்தும் சொல்லிக் கொடுத்து வருபவர். அவரின் மீது மகாராஜாவுக்கும் பெருமதிப்பு உண்டு.
“நான் நலம் தான் மந்திரியவர்களே.. தாங்கள் நலமா?” எனக் கேட்டபடி அவரை ஆரத்தழுவிக்கொண்டான். அவன் அவரை தழுவியதும் அவன் உடல் சூடு அவருக்கு ஆதீதாக தெரிந்து பதறி விலகி அவனுடல் பரிசோதித்தார்.
“என்ன இது இப்படி சுடுகிறது.. உடல் நலமில்லை போலவே.. யாரங்கே மருத்துவரை அழைத்து வாருங்கள்..” என கட்டளையிட்டார்.
“மந்திரியாரே.. பதறவேண்டாம். முதலில் இவர்களை அறிமுகம் செய்கிறேன். இவர் சிங்கத்துரியன். இவர் ருத்ரக் கோட்டையின் இளைய இளவரசி. இவரின் குருநாதர் இவர். இவர்களுக்கு அறை தயாரா?” என பேச்சை மாற்றினான்.
“தயாராக உள்ளது அரசே. வரவேண்டும் இளவரசி. வரவேண்டும் வனயட்சி மைந்தனே.. “ என முதல்மந்திரி இருவரையும் சிரித்தமுகத்தோடு வரவேற்றார்.
இருவரும் சிரிப்புடன் அவருக்கு வணக்கம் கூறி பாதம் பணிந்து ஆசி பெற்றுக் கொண்டனர்.
“நல்லது. இருவரும் சற்று இளைப்பாறிவிட்டு வாருங்கள்.” என அவர்களை அனுப்பிவிட்டு அமரன் அவரிடம் சில முக்கியமான விஷயங்களை மட்டும் கூறிவிட்டு தானும் ஓய்வெடுத்தான்.
அடுத்த நாள் காலை முதல் அமரன் பயிற்சி செய்ய தனி இடம் தயாராக இருந்தது. அதில் அனைத்து வகையான ஆயுதம் முதல் மூலிகைகள், செடிகள், மரங்களின் வேர்கள், இலைகள் என அனைத்தும் அவன் முன்னால் இருந்தது. பாலபாடம் எடுப்பதைப் போல அமரனும் முதலில் இருந்து தன்னுடல் கொண்டுள்ள மாற்றத்தை தெளிவாக மனதில் வைத்து அதற்கு ஏற்ப அவனது நடை உடை பாவனை என அனைத்தும் ஒரே நாளில் மாற்றிக் கொண்டு அதற்கேற்ப அவனது பணியையும் வகுத்து, யாருக்கும் அவனுடல் கொண்டிருக்கும் மாற்றம் குறித்து தெரியாத அளவிற்கு ஒரே நாளில் மாறி இருந்தான்.
அவன் தாய் கொடுத்த குறிப்புகளை ஓர் பகுதி மட்டும் வனயட்சி பார்க்க அமரன் கொடுக்க, சிங்கத்துரியன் அதிலும் பாதியைத் தான் தாயிடம் காட்டவேண்டும் என்று கூறினான். அடுத்து வரும் காலங்கள் அவன் தாயிற்கு இறங்குமுகமாக இருப்பதை உணர்ந்தவன் தங்களுக்கு பாதகம் வராத அளவிற்கு அனைத்தும் செய்து கொள்வதில் முனைப்பாக இருந்தான். அவனின் அர்ப்பணிப்பு அமரனையும் விஞ்சி நின்றது என்று தான் கூறவேண்டும்.
காற்றில் பயணிக்கும் யுக்தியும் அவர்கள் கண்டு அதையும் மூவருக்குள் மட்டும் பகிர்ந்துக் கொண்டனர். அமரன் தனது கோட்டை முழுதும் காற்றாக இரவில் சுற்றத் தொடங்கினான். அப்படி சுற்றும்பொழுது அவனுக்கு ஓர் முக்கியமான தகவல் கிடைத்தது. அதை அறிந்ததும் சிங்கத்துரியன் அவசரமாக ருத்ரக்கோட்டை செல்ல, வனயாத்திரை மகாராஜாவை காணச் செல்ல, அமரன் நரசிம்மனைக் காண இங்கே வந்திருந்தான்.
“சரி அதிருக்கட்டும். நீ இப்படியே தான் இருப்பாயா?” என அடுத்து என்ன கேட்பது என்று புரியாமல் தவிப்புடன் அவனைப் பார்த்தான்.
“ஆம் இளவரசே.. நான் பாதுகாவலன் எனும் ஸ்தானத்தை அடையும் படிகளில் ஏறத்துவங்கிவிட்டேன். இனி அதிலிருந்து பின்வாங்குதல் என்பது இல்லவே இல்லை.” எனக் கூறியபொழுது அவனது கண்களில் தோன்றிய ஜொலிப்பு நரசிம்மனை ஓர் நொடி அசைத்து பார்த்தது.
“மகாராணியாரை சந்தித்தாயா?”
“இல்லை. நீ கோட்டையை அடையும்பொழுது நான் அங்கு வருவேன். அப்போது தான் அவரை சந்திக்க வேண்டும். ஆனால் எனது இந்த மாற்றம் மகாராஜாவிற்கும், மகாராணியாருக்கும் தெரிந்திருக்கும். நான் ருத்ரக்கோட்டையில் இருந்து கிளம்பிய நாள் மாலை அவர் அங்கே சென்றார். வனயட்சி கூறி இருப்பார்.”
நரசிம்மன் மனம் பெரும் பாரத்தை இப்போது சுமந்துக் கொண்டு நின்றது. அதீத எண்ணவோட்டங்களினால் மனம் உலைக்கலன் போல கொதித்துக் கொண்டிருந்தது. பாரம் தாங்காமல் தாயின் மடியில் இறக்கி வைக்க அவளிடம் சென்று அவள் மடியில் தலை வைத்துக் கொண்டான்.
மகனின் எண்ணம் அறிந்த தாயும் அவனுக்கு மூன்று அடர்நீல மலர்களையும், மூன்று வெளிர்நீல மலர்களையும் அவன் தலையில் வைத்தாள்.
அவனது தலையை மறைத்து அவள் மடி நிறைந்து காணப்பட்டன அவள் அருளிய மலர்கள். ஒவ்வொன்றும் ஓர் கை அகலத்துடன் இருந்தது. அதைக் கண்ட கஜயாளி சந்தோஷ பிளிறல் செய்தது. மகதன் வானை நோக்கி அடிவயிற்றில் இருந்து உறுமலை வெளியிட்டான்.
நரசிம்மன் மனதை திடப்படுத்தியபடி அந்த மலர்களை தன் மேலாடை துணியில் ஏந்திக்கொண்டு அன்னை முன்னே விழுந்து எழுந்தான். மகதன் அருகே வந்து ஓர் அடர்நீல மலரை உட்கொண்டான். ஓர் வெளிர்நீல மலரை அமரனின் வாயில் வைத்தான். அமரன் அதை உட்கொண்டுவிட்டான். மற்ற நான்கு மலரை இரண்டு நரசிம்மனிடமும், இரண்டை அமரனிடமும் கொடுத்தான்.
அந்த நொடியில் நரசிம்மனின் பிறவிப்பயனின் பயணம் தொடங்கியது. அங்கே காஞ்சன ரத்னா தேவி ஆத்மாவாக இருந்து அனைவரையும் ஆசீர்வதித்தார். அந்த வாலிப யாளியும் அவரைக் கண்டு வணக்கம் வைத்து விழுந்து வணங்கியது. அவர் ஆசீர்வதித்தால் அந்த வாலிப கஜயாளியும் நரசிம்மனின் பயணத்தில் கலந்துவிட்டது என்று தானே அர்த்தம்..

