92 – ருத்ராதித்யன்
மீண்டும் மகதன் அருகே வந்த யாளி அதனை ஆதூரமாக வருடி கொடுத்து மன்னிப்பு கேட்டது. மகதனும் அதனின் துதிக்கையில் தனது தலையை தேய்த்து நட்பாகி கொண்டான். மகதனும், யாளியும் சிறிது நேரம் அவர்களது சங்கேத பாஷையில் பேசிக்கொள்ள, நரசிம்மன் அந்த குட்டி யாளிக்கு அடிபட்ட இடத்தை மீண்டும் சுத்தம் செய்து மருந்தை வைத்துக் கட்டினான். வலியில் லேசாக சத்தம் எழுப்பிய யாளி, சிறிது நேரத்தில் இயல்பாக கால்களை எடுத்து வைத்து நடந்தது.
அதைக் கண்ட வாலிப யாளி தனது பின்னங்காலில் ஏற்பட்டிருக்கும் காயத்தினை அவனுக்கு காட்டியது. அவனும் காயத்தை சுத்தம் செய்து மருந்தினை வைத்து கட்டிவிட்டான்.
“ஓரிரு நாளில் உனது காயம் ஆறிவிடும்..” என ஒலி எழுப்பி மூலமாக யாளியிடம் கூறினான். பின்னர் குட்டியை ஜாக்கிரதையாக அழைத்து செல்லும்படி கூறி விடைக்கொடுத்தான்.
வாலிப யாளி அவனையும் உடன் வரும்படி ஒலி எழுப்பி அவனைத் தூக்கி தனது முதுகில் வைத்துக் கொண்டது. மகதனையும் அது தூக்கி வைத்துக் கொண்டு, குட்டி யாளியை பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு அவர்கள் கூட்டம் இருக்குமிடம் வந்து சேர்ந்தது.
“மகதா.. அன்னையின் கோவில் எந்த திக்கில் இருக்கிறது? நாம் முழுதாக வடக்கு பக்கம் வந்துவிட்டோம். புதைக்குழிகள் தாண்டிய பின் வரும் உயர்ந்த மலை தானே தேவி வீற்றிருப்பது?”
“ர்ர்.. ர்ர்..”
“சரி பார்த்து கொள்வோம்..” என நரசிம்மனும் அந்த வனத்தினை மனதில் பதியவைத்தபடி, யாளி லாவகமாக எப்படி புதைக்குழிகளை தாண்டி செல்கிறது என்பதையும் மனதில் குறித்துக் கொண்டான்.
சிறிது நேரத்தில் அவர்களை தரை இறக்கிவிட்ட அந்த யாளி, தனது கூட்டத்தின் தலைவனிடம் சென்று தனது கால்களைக் காட்டி பேசியது. அந்த வயதான யாளியும் அந்த மருந்தினை முகர்ந்து பார்த்து கண்கள் விரிய நரசிம்மன் அருகே வந்தது.
மகதன் அவனுக்கு முன்னால் வந்து நின்றதும் அவர்களின் பிணைப்பை உணர்ந்து கொண்ட வயதான யாளி ஒலி மூலமாக தனது நன்றியைத் தெரிவித்தது. தவிர அவர்கள் செல்லவேண்டிய தேவி ஆலயத்திற்கு இப்போதே அழைத்து செல்லுங்கள் என்றும் ஒலியின் மூலமாக கூறியது. அதைக் கண்ட மகதன் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்து நரசிம்மனை முன்னால் தள்ளிவிட்டது.
நரசிம்மனும் ஒலி கடத்திய செய்தி புரிந்து சந்தோஷமும் ஆச்சரியமும் கொண்டு அந்த வயதான யாளிக்கு வணக்கங்கள் கூறினான்.
அதன்பின் அவர்களை சுமந்து வந்த அதே வாலிப யாளியோடு அவர்கள் தேவி ஆலயம் நோக்கி சென்றனர். அத்தனை பெரிய மலை ஏற குறைந்தது 5 நாழிகைகள் ஆகும் என்று நரசிம்மன் கணக்கிட்டு வைத்திருந்தான். ஆனால் ஒரு நாழிகையில் அவர்கள் அந்த மலை உச்சியில் தேவியின் முன்னே இறக்கிவிடப்பட்டனர்.
நரசிம்மன் அந்த யாளியின் தந்தம் பிடித்து நன்றி கூறும் விதமாக கட்டிப் பிடித்தான். மகதனும் யாளியின் கால் உரசி தனது நன்றியையும், அன்பையும் வெளிக்காட்டியது. இருவரையும் அரவணைத்து யாளியும் தனது அன்பினை வெளிப்படுத்தியது.
நரசிம்மன் யாளியிடம் ஏற்பட்ட நட்பில் மலர்களைப் பற்றிய எண்ணமே தோன்றாமல் போய்விட்டது. தேவியைக் கண்டபின் தான் தனது நினைவாற்றலை திட்டிக்கொண்டு மகதன் அருகே சென்று மலர் பறித்து வருகிறேன் எனக் கூறினான்.
அவன் கூறியதை புரிந்துக் கொண்டது போல யாளி வேகமாக பக்கவாட்டில் இறங்கி சில பூ மரங்களை வேருடன் பிடுங்கிக் கொண்டு வந்து அவன் முன்னால் வைத்தது. அதைக் கண்டதும் நரசிம்மன் திகைத்து பின்னர் வாய்விட்டு சிரித்தான்.
“நண்பா.. உனது உதவி கண்டு என் உள்ளம் நிறைகிறது. இந்த மரங்களை பிடுங்காமல் மலரை மட்டும் பறித்து வருவது நல்லது. இவற்றை மீண்டும் மண்ணில் நட்டு வைக்க வேண்டும். இத்தனை அற்புதமான மலர்கள் தேவியின் பாதங்களில் சொறிந்தவண்ணம் இருக்க வேண்டும்..”
யாளி அவனை கண்களை அகலவிரித்து பார்த்துவிட்டு மகதனிடம் சங்கேதமொழியில் பேசியது. மகதன் கூறியதும் தலையை ஆட்டிக் கொண்டு அந்த மரங்களை தேவியின் முன்பு இருந்த இடங்களில் மண்ணை கால்களால் ஆழப்படுத்தி நடுவே நிறக்கவைத்து, மண்ணை மூடியது.
அந்த யாளி செய்வதை எல்லாம் கண்ட நரசிம்மன் அதன் அறிவையும், சமயோஜித சிந்தனையையும் கண்டு மிகவும் வியந்து நின்றான். மனிதனுக்கு எட்டாத பல விஷயங்களை இந்த அடவியில் வாழும் ஜீவன்கள் தான் எத்தனை அழகாய் புரிந்து நடந்துக் கொள்கின்றன? இன்னமும் இந்த இயற்கை என்னென்ன அதிசயங்களை தனக்குள்ளே வைத்திருக்கிறதோ என்று எண்ணாமல் இருக்கவே முடியாது. அப்படியான ஓர் அதிசயம் அவன் கண்முன்னே நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது.
அவனுக்கு தேவையான மலர்களை எல்லாம் அந்த யாளியே மரத்தினை உழுக்கி உதிர்த்துவிட்டு மண்ணில் நட்டுக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அந்த இடமே பூஞ்சோலை போல காட்சியளித்தது. மகதனும் யாளிக்கு உதவ மலர் இருக்கும் மரங்களைக் காட்டிக் கொண்டிருந்தான். மகதனுக்கு எப்படி தெரியும் நீல மலர்களை இங்கே பறிக்கக் கூடாதென்று? அந்த நீல நிற மலர்களைத் தவிர்த்து மற்ற அத்தனை நிறம் கொண்ட மலர்களும் அவன் முன்னே குவிந்திருந்தது.
நரசிம்மன் மலையின் உச்சியில் இருந்த சுனையில் நீராடி விட்டு தேவிக்கு மலர்களால் அலங்காரம் செய்து அவளின் பாதம் பணிந்து எழுந்தான்.
மகதனும் தேவியின் பாதத்தின் அடியில் சிறிது நேரம் தாடையை வைத்து படுத்திருந்தான். இருவரையும் கண்ட யாளி, அவர்களைப் போலவே நிலத்தில் விழுந்து தாடையை நிலத்தில் வைத்து தேவியை வணங்கியது. அதைக் கண்ட நரசிம்மன் அதனை ஆரத்தழுவி கண்களில் முத்தமிட்டான்.
யாளியும் அவனைப் பாதுகாப்பாக தனது தும்பிக்கைக்கு நடுவே இறுத்தி வைத்துக் கொண்டது.
அதன்பின் நரசிம்மன் தேவியின் முன்னே முழு உடலும் தரையில் கிடத்தி அவளிடம் சரணாகதியானான். முழுதாக இரண்டு நாழிகை கடந்தும் அவனுக்கு தேவியின் அருள் கிடைக்கவில்லை. நரசிம்மன் யோசனையுடன் எழுந்து தேவியின் முகம் பார்த்தான். அவள் முகம் எப்போதும் போல சிரித்தமுகமாகத்தான் இருந்தது. ஆனால் இன்னும் அவனுக்கான மலர் அவனுக்கு கொடுக்கப்படவில்லை. ஏன் என்று சிந்திக்கத் தொடங்கினான்.
இந்த நிலத்தில் கால் வைத்த நொடி முதல் நடப்பவை எல்லாம் பெரும் புதிராகவும், அவனின் மனநிலையை சோதிப்பதாகவுமே இருப்பதை உணர்ந்தான். இதுவும் ஓர் சோதனையாக இருக்குமோ என்ற எண்ணம் எழுந்ததும், மகதனைப் பார்த்தான்.
அவன் யாளியுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிருந்தான். யாளியும் படுத்த வண்ணமே மகதனிடம் விளையாடிக் கொண்டிருந்தது. மலர் கிடைக்கும் வரையிலும் இவ்விடம் விட்டு நகரக்கூடாது, அப்படியானால் இங்கே ஏதோ நடக்கப் போகிறது. அதனால் தான் தேவி நம்மை காக்க வைக்கிறாள் என்று முடிவெடுத்து அந்த உச்சியை சுற்றிலும் பார்வையை செழுத்தினான்.
அப்போது காற்று ரூபத்தில் ஏதோ ஒன்று அவ்விடத்தை நோக்கி வருவது அவனுக்கு மங்களாக தெரிந்தது. அதன் வேகம் அதீதமாக தெரிந்தது. நரசிம்மன் நிற்கும் இடத்தில் இருந்து புதைக்குழிகள் ஆரம்பிக்கும் எல்லையில் இருந்த அந்த அருவம் நொடிக்கும் குறைவான நேரத்தில் அந்த ஒரு காத தூரத்தை கடந்து அவன் நிற்கும் மலை அடிவாரத்தில் வந்து நின்றது. உருவம் என்று கண்களுக்கு நேரடியாக தெரியாமல் காற்றில் பறந்து வருவதால் சுற்றியிருக்கும் மரங்களின் கிளைகளில் அது லாவகமாக நுழைந்து வருவதைக் கண்ட நரசிம்மன், மகதனுக்கு ஆபத்திற்கான சீழ்க்கை எழுப்பினான். அதில் கஜயாளியும் சடுதியில் நரசிம்மன் பின்னே வந்து நின்றது. அதன் கண்களுக்கு அங்கே வரும் அருவம் யாரென தெளிவாக தெரிந்தது. ஓர் மனித உடல் காற்றில் மறைந்து, காற்றினும் வேகமாக அவர்கள் இருக்குமிடம் வந்துக் கொண்டிருந்தான். அவனின் உள்நோக்கத்தை அறிய முற்பட்ட யாளி, அவன் உள்ளத்தில் கயமை இல்லையென்று அறிந்து மனதை அமைதியாக்கி அவனை தடுக்க மட்டும் முனைப்பாக நரசிம்மனுக்கு பக்கவாட்டில் வந்து நின்றது. மகதனுக்கும் காற்று ரூபத்தில் ஏதோ வருகிறது என்று தெரிந்தது, யாளியின் செய்கைகளைக் கண்டு ஆபத்தில்லை என்பதை மட்டும் புரிந்து நரசிம்மனை பின்பக்கம் இழுத்து மரத்தின் பின்னே நிறுத்தினான்.
“மகதா நீ கண்டாயா? அந்த காற்று ரூபத்தில் ஏதோ வருவதை? அது என்னவாக இருக்கும்?”
“உர்..” என மகதன் லேசாக உருமியதும் நரசிம்மன் மகதனை பிடித்து கன்னத்தில் கடித்தான். அதில் கோபம் கொண்ட மகதன் அவனை கீழே தள்ளினான்.
அதே நேரத்தில் காற்று ரூபத்தில் வந்த அருவத்தை யாளி தனது துதிக்கையில் பிடித்து நிறுத்தியது. யாளியின் பிடியில் இருந்து விலக அந்த உருவம் முற்படுவது காற்றாக மற்ற இருவருக்கும் கூட தெரிந்தது. மகதனுக்கு மிகவும் பழக்கமான வாசனை அவனது நாசியினை தொட்டதும் அவன் வேகமாக யாளியின் அருகே சென்று அதன் பிடியில் இருந்த அருவத்தை முகர்ந்துப் பார்த்தான்.
அது அமரபுசங்கன்.. ஆம் அவனது வாசனை தான்.. அவன் எப்படி இங்கே இப்படி? என மகதன் நொடியில் யாளியிடம் உறுமி அவனை விடுவிக்க கூறிவிட்டு, நரசிம்மனை அழைத்தான்.
மகதனின் செய்கையை கவனித்தபடி இருந்த நரசிம்மன் அவனுக்கு தெரிந்தவர் எப்படி இப்படி இருக்க முடியும் என்ற யோசனையில் அருகே வந்தான். அவன் அருகே வந்ததும் அமரன் தன் உருவத்தை முழுதாக்கினான்.
“அமரா..” என நரசிம்மன் அவனைக் கட்டிக்கொண்டான். அமரனும் அவனைக் கட்டிக்கொள்ள, இருவரும் மௌனமாக ஒருவரை ஒருவர் ஆறுதல் படுத்திக் கொண்டனர்.
“என்னடா நிகழ்ந்தது உனக்கு? ஏன் இப்படி அரூபமாக திரிகிறாய்? நீ உயிருடன் தானே இருக்கிறாய்?” என நரசிம்மன் அவன் உடலை தொட்டுப் பார்த்தபடி கேட்டான்.
“நான் மிகவும் நன்றாக இருக்கிறேன். உயிருடன் தான் இருக்கிறேன். இது என் அன்னை எனக்கு கொடுத்த வரம் நரசிம்மா.. அவரைக் கண்டுவிட்டேன். அவரிடம் பேசிவிட்டேன். என் தந்தையையும் கண்டு விட்டேன்..” என சந்தோஷ மிகுதியில் அவனைத் தூக்கிச் சுற்றினான்.
அமரனின் அதீத பலமும், அவனின் அதீத உற்சாகமும் அவனுக்கு ஏதோ அதிசயம் நிகழ்ந்து இருக்கிறது என்பதை நரசிம்மன் புரிந்துக் கொண்டான்.
“அன்னையை எப்படி கண்டாயடா? உளறுகிறாயா ?”
“உனக்கு விளக்கமாக கூறினால் தான் தெரியும். இரு அன்னையை வணங்கி வருகிறேன்..” எனக் கூறி அன்னை அருகே சென்றவன், தான் கொண்டு வந்த மாணிக்க மாலையை அவளின் இடையில் கட்டி, அவளின் பாதத்தில் தலை வைத்து மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தான். யாளியும் அவன் செய்வதை எல்லாம் வேடிக்கைப் பார்த்தபடி மகதனை தன்னருகில் நிறுத்தி அவனுடன் விளையாடிக் கொண்டிருந்தது.
சுமார் கால் நாழிகை நேரம் அவன் அன்னையின் பாதத்தில் தலை வைத்து அமர்ந்திருந்துவிட்டு, தரையில் விழுந்து எழுந்தான்.
அங்கிருந்த சுனையில் நீர் எடுத்து குடித்துவிட்டு நரசிம்மன் அருகே வந்து மரத்தின் அடியில் அமர்ந்தான்.
நரசிம்மன் ஏதும் கேட்காமல் அவனை ஆழமாக பார்த்துக் கொண்டிருந்தான். மொத்தமாக ஆளே மாறி இருந்தான் அமரபுசங்கன். முன்பை விட உயரம் கூடி, உடல் மெலிந்து ஆனால் உடல் வஜ்ரமாக மாறியிருப்பது புலப்பட்டது. அவன் நடக்கும் விதமும், உடலை அவன் கையாளும் விதம் என அனைத்துமே மாறி இருந்தது. நரசிம்மன் கோட்டைவிட்டுக் கிளம்பி முழுதாக பதினொரு நாள் முடிந்து இருந்தது. இதில்லாமல் இன்னும் இரு தேவியரை தரிசிக்க வேண்டும். இந்த 11 நாளில் இவன் வாழ்வில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது.
மகாராணியார் இவனைக் கண்டாரா? இந்நிலையில் இவனைக் கண்டிருந்தால் எப்படி உறைந்திருப்பார் என்று அவனால் யூகிக்க முடியவில்லை. மகாராணியார் தன்னை விட அமரனின் மேல் தான் அதிகம் அன்பு கொண்டிருக்கிறார் என்று நரசிம்மனுக்கும் நன்றாக தெரியும். அமரனும் தாயின் பாசத்தை மகாராணியாரிடம் தான் காட்டுகிறான். இருவருக்கும் பிணைப்பு அதிகம் என்று மகாராஜாவும் கூறுவார். தன் ஆருயிர் மகனை இப்படி ஒரு நிலையில் அவர் காணும்பொழுது அவரின் மனம் எத்தனை பாடுபட்டிருக்கும் என்பதை நரசிம்மனால் முழுதாக யூகிக்க முடியவில்லை.
அவனுமே இவனின் இந்நிலைப் பற்றி முழுதாக அறியாமல் என்னவென நினைப்பது என்று புரியாமல் தான் அமைதியாக இருந்தான். அமரனே கூறட்டும் என அவனைக் கவனித்துக் கொண்டு மட்டுமே இருக்கிறான்.
“நரசிம்மா.. விரைவாக நீ தேவி தரிசனங்கள் முடித்துவிட்டால் நாம் முக்கியமான ஓர் இடத்திற்கு செல்ல வேண்டும். நமக்கு நிறைய வேலைகள் காத்துக் கொண்டிருக்கின்றன. உனது ஆராய்ச்சிக்கும் முக்கிய திறவுகோல் கிடைத்துவிட்டது. தவிர ..” என நிறுத்தி சுற்றிலும் பார்த்துவிட்டு, “பைரவக்காட்டின் தடம் கிடைத்துவிட்டது..” எனக் கூறினான்.

